Tuesday, March 29, 2016

வாசம் வீசும் ரோஜாவும் தமிழ் எழுத்தாளர்களின் புண்ணிய பூமியும்

--திவாகர்.


ரோஜாவின் வாசம் பற்றி எழுதினால்தான் தெரியுமா என்ன.. ஆனாலும் எழுதத்தான் வேண்டும்.. விஷயம் இருக்கிறது ஏராளமாக.
ஆனால் அதற்கு முன்னர் யாழ் நூலகத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை, சுமார் ஒரு லட்சம் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை 1981 ஆம் வருடம் மே மாதத்தில் தீக்கிரையாக்கி அழித்தனர் சில கயவர்கள். தீக்கிரையானது அந்த நூலகக் கட்டடம் மட்டுமல்ல.. அறிவும் ஞானமும் உள்ளடக்கிய காமதேனுவை சுரக்கும் நூல்களும் கூட.
அறிவே தெய்வம் என்பார்கள்;. கல்வியே செல்வம் என்பார்கள்; படித்துக் கொண்டே இருந்து அனுபவிப்பவனால் ஞானியாக முடியும் என்பார்கள்; பெரியோரின் புத்தகங்கள் வருங்கால சமூகத்துக்கு வழிகாட்டி என்பார்கள், அப்படிப்பட்ட செல்வத்தை, அறிவு தரும் தெய்வத்தை, தெளிவு தரும் ஞானத்தை சில தீயசக்திகள் அன்று யாழ்ப்பாணத்தில் அழித்து விட்டனர். யாழ் நூலகம் என்றல்ல, பாரதத்தின் புராதன ஓலைகள் கூட இப்படி ஏராளமாக அழிக்கப்பட்ட சரித்திரங்கள் இங்கே உண்டு. ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்த அமரசிம்ஹர் எனும் பேரறிஞர் மிகச் சிறந்தஞானி எனப் போற்றப்பட்டவர். இவர் எழுத்துகள் வெகு எளிதாக மனனம் செய்யக் கூடிய அளவில் எழுதப்பட்டு ஞானங்களை அள்ளி வழங்கிய நூல்கள். ஆதிசங்கரருடன் ஏற்பட்ட வாதத்தில் தோல்வியுற்ற விரக்தியில் இவர் தாம் எழுதிய பத்தொன்பது நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டாராம். ஆனால் ஆதிசங்கரர் பதறிப்போய் தடுத்து நிறுத்திய முயற்சியால் ஒரே ஒரு நூல் மட்டும் காப்பாற்றப்பட்டது, அதுதான் அமரகோசா எனும் அரிய வடமொழி நூல். இது உதாரணம்தான்..
மொகலாயப் படையெடுப்பால் அழிக்கப்பட்ட பழைய நூல் சேகரிப்புப் பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கவே முடியாது. நூலகங்கள் என ஏற்பட்டதே நூல்களைப் பாதுகாக்கத்தான். ஆனால் மனிதர்களின் அறிவீனத்தால் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்களால், கவனிப்பே இல்லாமையால் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூலகங்கள் எத்தனையோ உண்டு. பாரதநாடு பழம்பெரும் நாடு, பாரதத்தில் தோன்றிய ஞானிகள் எத்தனையோ தீபங்களை ஏற்றி உலகுக்கே வழி காண்பித்தார்கள். அந்த ஞான வார்த்தைகள் கூட ஏராளமாக காலத்தின் கோலத்தில் அழிந்து போய்விட்டனதாம்.
ஆனால் அதெல்லாம் ஒரு காலம்.. இன்னும் கேட்டால் ஞான தீபத்தை மிகப் பிரகாசமாக ஏற்றிவைக்க இப்போது கனிந்து வரும் காலம் கூட. மேலை நாடுகளில் பலவித இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் மூலம் நூல் பாதுகாப்புத் தன்மையை இந்த கால மனித சமுதாயம் கண்டுபிடித்துக் கொண்டே வருகிறது. ஆனால் நமக்காக நம் மொழியைக் காக்க அதைப் பயன்படுத்தவேண்டுமே.. அப்படிப் பயன்படுத்தி நூல்களைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது சென்னை தரமணியில் இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
eb6a29e6-4490-4ae0-84a0-7db4c4cfd8d3
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – இப்படிப்பட்ட நூலகம் ஒன்றினை இந்தியாவில் அதுவும் நம் தமிழ் மொழிக்காக தோற்றுவித்த அந்தப் பெரியவர் ரோஜா முத்தையா செட்டியாரை முதலில் தாள் பணிந்து வணங்கவேண்டும். ’கற்க, கசடறக் கற்க’ என்பார் திருவள்ளுவர், ஆமாம்,தமிழ் மொழியைப் பொறுத்தவரை கசடறக் கற்கவேண்டுமானால் ரோஜா மணம் வீசும் இந்த நூலகத் தோட்டத்துக்குதான் வரவேண்டும்.
df5c6636-932f-4c27-8829-a7e1c978c764
வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் குழுமம் தன் முதல் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று திட்டமிட்டபோது திரு பாலா (ஆர். பாலகிருஷ்ணன், ஐஏஎஸ்) இந்த நூலகத்தில்தான் கூடப் போகிறோம் என்ற சொன்னபோது தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்கத்துறை முதன்மை ஆணையர்) முதற்கொண்டு அனைவரும் ஒருமனதாக வரவேற்றோம். பாலா ஏற்கனவே சில வருடங்கள் தன் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக இந்தநூலகத்தில் செலவிட்டுள்ளார். இங்கு சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக தனி அறையே உண்டு. ஏராளமான ‘ரெஃபெரென்ஸ் மெடீரியல்ஸ்’ சேகரித்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சிக்காக பெரிய உதவி புரிந்து வருகிறது.
தரமணியில் இயற்கை சூழலின் மத்தியில் குளிர்ச்சியான நிலையில் இந்த கட்டடத்தை தமிழக அரசு இரவலாகக் குத்தகை அளவில்தான் முப்பத்து மூன்று   வருடங்களுக்குத்தான் தந்துள்ளது. ஆனால் குத்தகை என்ற சொல்லை ஏன் இங்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. தமிழுக்காக தன்னலமில்லா சேவையில் ஈடுபடும் இந்த ஆராய்ச்சி நூலகத்துக்கு இந்தக் கட்டடத்தினைக் கொடையாக அல்லவா தந்திருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்வி ஆட்சியாளர்கள் காதில் விழவேண்டுமென்று விரும்புகிறோம். ஏனெனில் இங்கே பாதுகாக்கப்படுகின்ற முக்கியப் புத்தகங்கள் அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் தமிழகத்தில் என்றல்ல தெற்காசியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு நுண்ணிய தொழில்நுட்பம் மூலமாகப் பாதுக்காக்கப்படுகிறது என்பதே தமிழனுக்குப் பெருமை அல்லவா.
முதலில் இந்த நூலகத்தின் சில சாதனைகளை விவரித்து விடுவோம்.
தமிழகத்தில் கிபி 1713 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியான முதல் தமிழ் நூலின் பிரதி ’அக்கியானம்’ (பைபிளின் ஒருபகுதி தமிழில்) இங்கே பாதுகாக்கப்படுகிறது.
bbf1f794-806e-4ba6-b44b-3d7ec450062e
தமிழில் முதன் முதலாக புத்தகத்தில் எழுதப்பட்ட திருக்குறள் பதிப்பு இங்குதான் பாதுகாப்பாக உள்ளது (பதினேழாம் நூற்றாண்டு),
bb02c120-7c25-4cd6-9942-67fac0fd5ab4
கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துக் கணக்குப் புத்தகம் அப்படியே இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள்.
53f88019-ad67-49be-b037-9d51d27faafd
சுமார் 20 லட்சம் பக்கங்கள் உள்ள மிகப் பழையப் புத்தகப் பெட்டகங்களை டிஜிடல் மூலமாக எதிர்காலத்துக்காக சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.
நூல்கள் மட்டுமல்ல, ஓலைச்சுவடிகள், கிராமபோன் ரிகார்ட்கள் கூட இங்கே சேமிக்கப்பட்டு, தக்கமுறையில் நவீன தொழில் நுட்ப வசதிகளோடு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது.
பழைய காலத்து உடைந்து போகும் நிலையில் உள்ள புத்தகமா.. கவலை வேண்டாம்.. உடனே இங்கு கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
1713 முதல் தமிழில் எழுதப்பட்ட அத்தனை நூல்களின் பிரதிகள் இங்கு உண்டு. உடைந்து போகுமே என்ற கவலை இல்லாமல் டிஜிடல் மூலமாக நாம் படிக்கமுடியும்,.
இறக்குமதி செய்யப்பட்ட தரமான இயந்திரங்கள் மிகக் கவனமாக கையாளப்பட்டு இங்குள்ள புத்தகங்களையெல்லாம் டிஜிடல் மயமாக்கம் செய்கிறது.
13790ec6-6c27-4246-8c34-86914a12999a
நூலகத்தின் இயக்குநர் திரு சுந்தர் அவர்கள் பழைய நூல் பாதுகாப்புகள் எப்படியெல்லாம் செய்யப்படுகின்றன என்று விளக்கும்போது நாம் சற்று ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அன்னை தமிழுக்கு, அன்னையின் பிள்ளைகளுக்கு, வருங்கால தமிழ்ச் சமுதாயத்துக்கு இது ஒப்பில்லாத சேவையாக கண் முன்னே படுகிறது. ஒவ்வொரு பழைய நூலையும் அவர் எடுத்துக் காண்பித்தபோதும் சரி, அதைக் கையாளும்போதும் சரி, இதை எழுதியவர்கள் மட்டும் இன்றிருந்தால் அந்த ஆத்மாக்கள் எத்தனை ஆனந்தப்படுமோ என்று வியக்கவும் வைத்தது. அதுவும் உடைந்து சுக்கு நூறாகும் பக்கங்களை பதப்படுத்தி நாம் கையாளும் வகையில் ஒரு புத்தகமாக உருவாக்கி வருகிறார்கள். சுந்தர் குழுவினரின் அயராத உழைப்பு இந்த நூலகத்தை உலகம் முழுதும் உள்ள பேரரறிஞர்களையும் இங்கே எட்டிப்பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஜான் ஹாரிஸ் எனும் இங்கிலாந்து அறிஞர் இவர்கள் திறமையைப் பாராட்டி, ’இந்த வகையான பாதுகாப்பு மிக உயர்ந்த உன்னத நிலையில் உள்ளது, இதே போன்று உலகம் முழுதும் செயல்பட்டால் உலகம் மிக வேகமாக கல்வியில் முன்னேறும்’ என்று தன் கைப்பட எழுதிப் பாராட்டியுள்ளார்.
ஆஹா, இத்தனை உன்னதமான தமிழ்ப்பணியை ஏற்றுச் செய்யும் இந்த நூலகத்துக்கு வரவு எங்கிருந்து என்று கேள்வி கேட்கலாம்..தமிழக அரசாங்கம் கட்டடத்தை மட்டும் கொடுத்து, அதுவும் குத்தகையில் விட்டு விட்டு கையைக் கழுவிக் கொண்டது. சில காலம் முன்பு வரை சிகாகோ பல்கலைக்கழகம் ஆதரித்துவந்தது. இப்போதும் டிரஸ்டி மூலம் சில நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்கின்றன.
ஆனால் சுந்தர் குழுவினரின் முன்னே இருப்பது மாபெரும் மலையளவு வேலைக்கு இந்த பொருளுதவி எல்லாம் சுண்டைக்காய் போலத்தான்.. போதவே போதாது. நூலகத்தின் தேவைகள், வாசகர்களின் வருகையைப் போல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மென்மேலும் புதிய கருவிகள் மேலை நாட்டிலிருந்து தருவித்துப் பெற வேண்டிய சூழ்நிலையில் பழைய இயந்திரங்களும் மேல்நிலைப்படுத்தும் தேவையும் அதிகரிக்கிறது. உதிரிபாகங்கள் கூட மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே உள்ள படிக்கும் இடங்களில் பார்வையாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் இன்னும் அதிகமான வசதிகள் செய்யவேண்டிய நிலை., வெகு முக்கியமாக ஆவணப் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டி ‘கம்பாக்ட் வகை ஸ்டீல் அலமாரிகள் தேவைப்படுகின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய அளவிதான் இங்கே எடுத்துரைத்துள்ளேன். மேலும் மேலும் தேவைகள் அதிகரிக்கும்போது அதன் சுமைகள் மிகப் பலமாகத்தான் நூலகத்தார் மீது வந்து விழுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இது நூலகம் மட்டுமல்ல. ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கூடமாகத்தான் நாம் பார்க்கவேண்டும். மேலை நாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அவர்கள் அரசாங்கமும் கொடையாளர்களும் தேவையான பொருளுதவியை தாராளமாக வழங்குவதால் மட்டுமே அவர்களால் இந்த புதிய நாகரீக உலகுக்கு ஏற்றவாறு பலவித வசதிகளையும் புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேற்றம் பெறுகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இந்த வகையில் சேர்க்கப்படத்தான் வேண்டும்.
தமிழர்கள் பொதுவாகவே மிகச் சிறந்த அறிவாளிகள் என்ற பெயரெடுத்தவர்கள். உலகெங்கும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் தமிழர்களின் உன்னதப் பணி பல சேவைகள் மூலம் வெளிப்படத்தான் செய்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழர்களில் அறிவுச் செல்வத்தோடு பொருட்செல்வத்தையும் மிக அதிக அளவில் பெற்றவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் இங்கே தமிழ் எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். நம் வருங்காலம் மிகச் சிறப்போடு தமிழை எதிர்நோக்குகிறது என்ற நம்பிக்கையும் பெறுங்கள். அப்படிப்பட்ட தமிழ்ச்சேவை புரியும் இந்த நூலகத்தின் உங்கள் சேவையின் பங்கு என்னவென்று உங்களையே கேட்டுக் கொண்டு அதற்கான விடையயும் அந்த நூலகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் தமிழன்னை உங்களைப் போன்ற மக்கட்பேறு பெற்றதற்காக பெரும்பாக்கியம் செய்திருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.
விடைபெறும்போது சுந்தரிடம் சற்று தயக்கத்தோடு கேட்டேன் – என் புத்தகங்களும் இங்கே இருக்கின்றனவா.. அவர் உடனடியாக புன்னகைத்து ஐந்தே நிமிடத்தில் என் புத்தகங்களின் லிஸ்ட் ஒன்றைக் காண்பித்தார். புல்லரித்தது. எத்தனையோ அறிஞர்கள் பேரறிஞர்கள் எழுதிய புத்தகங்களோடு அடியேனின் எழுத்துகளும் கலந்துவிட்டதில் ஆனந்தம், ஒரு பெருமை..
எழுத்தாளர்களின் புண்ணிய பூமி மணம் வீசும் இந்த ஆராய்ச்சி நூலகம் என்றுதான் சொல்லவேண்டும்.. ரோஜா மலருக்குக் கூட வாசத்தின் கால அளவு குறைவுதான்.. ஆனால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாசம் எள்ளளவும் குறையாத வாடா மலர்.. தமிழன்னை தன் கூந்தலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மலர்.
தமிழைப் பாதுகாக்கும் இந்த மலரைத் தக்கபடி பாதுகாப்பது நம் தமிழர்களின் தலையாய கடமை.

நன்றி: வல்லமை

___________________________________________________________
 

திவாகர்
dhivakarvenk@gmail.com
___________________________________________________________
 

மது விலக்கு நாயகர்


-- கரந்தை ஜெயக்குமார்.

     ஆண்டு 1947, மார்ச் 23.

      தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் மகத்தான ஆதரவுடன், அம்மனிதர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்ற நாள். நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

     பதவி ஏற்றவுடன் கட்சிக்காரர்களை அழைத்தார். உத்தரவு போட்டார்.

    பாராட்டு விழாக்கள் கூடாது, கூடவே கூடாது.


   அப்படியும் தொண்டர்களும், கட்சிக்காரர்களும் அழைக்கத்தான் செய்தார்கள்.

நான் அரசாங்கத்தை நடத்துவதா? இல்லை இம்மாதிரிக் கூட்டங்களில் கலந்து பேசிக்கொண்டே இருப்பதா? திடமாக மறுத்தார்.

       ஒரு முறை உயர் நீதி மன்ற நீதிபதியைக் கூட சந்திக்க மறுத்தார்.

    சந்திப்பதற்காக எழுதிக் கொடுத்த அனுமதிச் சீட்டில், சந்திக்க விரும்புவதன் காரணம் என்ற இடம் நிரப்பப் படாமலேயே இருந்தது. அதனால் தவறான சிபாரிசுக்காக வருகிறார் என முடிவு செய்து, அவரைச் சந்திக்க மறுத்தேன். அமைச்சர்களும் நீதிபதிகளும் மற்றவர் கடமைகளில் குறுக்கிடாமல் இருந்தால்தானே, அரசு இயந்திரம் செம்மையாக, நேர்மையாக இயங்கும்.

      மக்களுடைய நன்மைக்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும், நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்கு அல்ல.

     எத்துனை நேர்மையான மனிதர்.

     இவர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்னமே, ஒரு திடமான முடிவில் இருந்தார்.

மது விலக்கு.

     மது விலக்கினை அமல் படுத்தியாக வேண்டும்.

     மதுவின் பிடியில் இருந்து, நாட்டு மக்களை, போதையின் கரம் பற்றித் தள்ளாடும் இளைஞர்களை மீட்டே ஆக வேண்டும்.

     மதுவில்லா தேசமாக மாற்றிக் காட்டியே ஆக வேண்டும்.

      இப்படிப்பட்ட உயரிய மனிதர், மக்களின் மகத்தான ஆதரவுடன், பிரதம மந்திரியாகவும் ஆகிவிட்டார். பிறகென்ன.

      25 மாவட்டங்களைக் கொண்ட நாட்டில், எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு, பெயரளவில் இருந்த காலம் அது.

      குடிகாரர்கள் மதுவைத் தேடி, மற்ற மாவட்டங்களுக்கு நடையாய் நடந்து, தள்ளாடியபடி, திரும்பிக் கொண்டிருந்த காலம் அது.

25 மாவட்டங்களிலும் மது விலக்கு.
இன்று முதல் அமல் படுத்தப் படுகிறது.

      அரசு அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துரைத்தனர். பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல. குடிகாரர்களைத் திருத்த முடியாது. அவர்களின் மனதை மாற்ற முடியாது.

     முயன்றால் முடியாதது இல்லை. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சிற்றூரிலும், சிற்றூரின் ஒவ்வொரு தெருவிலும், மதுவின் வாடை கூட வீசக் கூடாது.

   கண்டிப்பாய் உத்தரவு போட்டார்.

    அன்றே தேயிலைக் கழகத்தாரை அழைத்தார். கலந்து பேசினார். அடுத்த நாள் அடுத்த அறிவிப்பு வந்தது.

    இனி அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து சிற்றூர்களிலும், நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேநீர் இலவசம்.

     ஊரெங்கும் தேநீர் கடைகள் திறக்கப் பட்டன. விரும்பும் மக்கள், ஒரு நாளைக்கு எத்துனை முறை வேண்டுமானாலும், இலவசமாகவே தேநீர் அருந்தலாம்.

மதுவை மனம் நாடுகிறதா?
வா, வா, வந்து தேநீர் குடி. எவ்வளவு வேண்டுமானாலும் குடி.

     நண்பர்களே, எப்படி இந்தத் திட்டம். குடிப் பழக்கத்திற்கு மாற்றாக, தேநீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

     அனேகமாக இதுதான், இந்நாட்டின் முதல் இலவசத் திட்டமாக இருக்கும்.

    எத்துனை பயனுள்ள, பொருள் பொதிந்த இலவசத் திட்டம்.

    இது மட்டுமல்ல, மது அருந்துவதைக் கைவிடுவதால், ஏற்படும் பயன்கள் பற்றி ஊர் தோறும் நாடகங்கள், கதாகாலேட்சபங்கள், பஜனைகள் நடத்தப் பெற்றன.

      இதற்கே வியக்கிறீர்களே இன்னும் இருக்கிறது.

      சடுகுடு, பிள்ளையார் பாண்டு, கிளித் தட்டு, தெருக் கூத்து முதலிய கிராமிய விளையாட்டுக்களும், கலைகளும் கிராமப்புற மேம்பாட்டு அலுவலர்கள் மூலமாக கிராமம் தோறும் மீண்டும் உயிர்பிக்கப் பெற்றன.

      மக்கள் மதுவை மறந்தனர்.

     உடல் நலனில் தேறினர்.

      குடும்பமே உயர்வென்று போற்றத் தொடங்கினார்.

      குடும்பங்கள் செழித்தன. நாடு தழைத்தது.

     நண்பர்களே, படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கிறது அல்லவா, வாசிக்க வாசிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா, நினைக்க நினைக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது அல்லவா.

     இதைச் சாதித்துக் காட்டிய பிரதம மந்திரி எந்த நாட்டைச் சார்ந்தவர் தெரியுமா?

     நமது நாட்டைச் சார்ந்தவர்.

     என்ன என்ன, நமது நாட்டைச் சார்ந்தவரா?

     நமது நாடேதான். இம் மாமனிதர் அரியனை ஏரிய காலத்தில், அதாவது, நமது நாட்டு விடுதலைக்கு முன், மாநில முதல்வர்களை பிரதம மந்திரி என்றுதான் அழைத்தார்கள்.

     நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான், மத்தியில் ஆள்பவரை பிரதம மந்திரி என்றும், மாநிலத்தை ஆள்பவரை பிரிமியர் என்றும் அழைக்கத் தொடங்கினார்கள்.

     1950 ஆம் ஆண்டு சனவரி 26 இல், அரசியல் நிர்ணய சபை, நிறைவேற்றிய சுதந்திர இந்தியாவின், அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்த பிரிமியர்கள், முதலமைச்சர்கள் ஆனார்கள்.

     நமக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனாலும் நம்மில் பலர் மறந்து போன செய்தி.

     அப்படியானால், அடுத்த கேள்வி, நம் முன்னே தோன்றுகிறது அல்லவா? நாட்டின் பிரதம மந்திரி இல்லை என்றால், இவர் மாநிலத்தின் பிரதம மந்திரி அல்லவா?

      ஆம், அப்படியானால், எந்த மாநிலத்தின் பிரதம மந்திரி இவர்.

     சொல்லட்டுமா? சொன்னால் நம்புவீர்களா?

      நம்பித்தான் ஆக வேண்டும்.

     ஏனெனில் இது வரலாற்றின் பக்கங்களில் உளி கொண்டு, செதுக்கப் பெற்ற உண்மை.

      ஒரு முறை மூச்சை, இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்.

இவர், நம்
சென்னை மாகாணத்தின்
பிரதம மந்திரி

ஆம்
சென்னை இராஜதானியின்
பிரிமியர்

நம் பெருமைமிகு தமிழ் நாட்டின்
முதலமைச்சர்


இவர்தான்

ஓமந்தூரார்

ஓ.பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூரார், பெரிய வளைவு, ராமசாமி ரெட்டியார்.

ஓமந்தூராரின் நினைவினைப் போற்றுவோம்.



நன்றி: 
கரந்தை ஜெயக்குமார் வலைத்தளம்
http://karanthaijayakumar.blogspot.com/



___________________________________________________________
 

கரந்தை ஜெயக்குமார்
karanthaikj@gmail.com
அலைபேசி எண் 94434 76716
___________________________________________________________