Wednesday, April 13, 2022

அம்பேத்கரின் மனிதர் - நூல் மதிப்புரை



-- முனைவர் க. சுபாஷிணி 




எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில்  சட்டமேதை  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு நூல் இது.  கேள்விகளுக்குப் பதில் விளக்கம் என்ற வகையில் இந்த நூல் அமைந்திருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய சமூக நிலை மாற்றத்திற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்படுத்திய சட்ட மாற்றங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக, அதேவேளை தெளிவாக இந்த நூல் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

நூலின் தலைப்பு வாசிக்கும் நம்மை யோசிக்க வைக்கின்றது. அம்பேத்கர் விவரிக்கும் மனிதர்,  அம்பேத்கரின் பார்வையில் மனிதர், இந்தியாவில் ஒரு மனிதர் எவ்வகையில் உணரப்படுகின்றார் போன்ற செய்திகளைத் தத்துவார்த்த அடிப்படையில், அதேவேளை சமூகவியல் பார்வையில், சமூக நீதி சிந்தனையை இணைத்து நூலாசிரியர் விளக்குகின்றார்.  நூலாசிரியர் கௌதம சன்னா நீண்டகாலமாக அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர் என்பது இந்த நூலில் அவர் வழங்கும் விளக்கங்களின் வழியாக வாசகர்களுக்கு வெளிப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே செயல்பட்டார் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர் என்றும் காணப்படும் குறுகிய பார்வை எவ்வளவுக்கு எவ்வளவு தவறானது என்பதை நூலை வாசிக்கும் வாசகர்களுக்குத் தெளிவு படுத்துகிறது.  நவீன இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்கள், இன்று இந்தியாவில் தொழிலாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சலுகைகள், இந்தியப் பொருளாதாரக் கட்டுமானம்.. அரசியல் அமைப்பு... என நூல் தரும் விளக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரின் சமூகநீதி செயல்பாடுகளை மட்டுமன்றி நவீன இந்தியாவின் கட்டமைப்பில் அவர் ஆற்றிய பணிகளை ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாக இந்த நூல் அமைகின்றது என தாராளமாகக் கூறலாம்.  அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளில் வெறுமனே இரண்டு வார்த்தைகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதோடு மட்டுமல்லாது, அம்பேத்கரின் சிந்தனையை, அம்பேத்கரின் செயல்பாட்டை விவரிக்கும் இந்த நூலை வாங்கி வாசித்து அவரது செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது நிச்சயம் பயனளிக்கும்.

சமத்துவ நாள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நூல் விவரம்:
அம்பேத்கரின் மனிதர் : எளிய தத்துவார்த்த உரையாடலுடன்
நூலாசிரியர்: கௌதம சன்னா
நூல் விலை: 100₹
பதிப்பகம்: எழிலினி
பதிப்பாண்டு - 2022 
நூலைப் பெற: Google pay - 9840696574





No comments:

Post a Comment