Tuesday, November 3, 2020

கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும்

கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும்


--- சொல்லாக்கியன் 
  

எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும், மருத்துவமும், கல்வியும் அரசின்  கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஏனெனில், எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதியைக் காப்பதை அடுத்து, குடிமக்களின்  உடல்நலனைக் காக்க வேண்டியதும், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை வழங்க  வேண்டியதும், அறிவார்ந்த அரசின்  தலையாயக்  கடமைகளாக உணரப்படுகின்றன. இந்தியா, வளர்ந்த நாட்டுக்குரிய இலக்கணமான, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். 

இந்தியாவின்  புதிய கல்விக் கொள்கை 2019, தமிழகத்தில் பெரும் பேசும் பொருளானது. ஒரு சாரார் நல்ல கொள்கை என்றும், மற்றொரு சாரார் மோசமான கொள்கை என்றும் கூறிவருகின்றனர். எப்படி இருப்பினும், பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக நிறைவேற்றாமல், மோடி அரசாங்கத்தின்  கொள்கை முடிவாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா அங்கம் வகிப்பதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, வளங்குன்றா வளர்ச்சிக்கு (Sustainable Development Goals) 17 இலக்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில், (SDG4) 4-வது இலக்குதான், “அனைவரையும் உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்புகளை வளர்ப்பது” மற்றும், “கற்பவரை மையமாகக் கொண்ட, கலந்துரையாடல் சார்ந்த, இணக்கமுள்ள அதே சமயம் மகிழ்ச்சிகரமான ஒன்றாக கல்வியை விரிவுபடுத்துவது”. 

பெருந்தரவு (BIG DATA), செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரவழிக் கற்றல் (MACHINE LEARNING) காரணமாகப் பல தொழில்கள், எதிர்காலங்களில், மனிதர்களின்  தேவையின்றி, இயந்திரங்களினாலேயே  நிகழ்த்தப்படும். எனவே, இயந்திரங்களால் முடியாத திறன்களை, மிகுதியான மனிதர்கள் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.  அறிவியல், மானுடவியல், சமூகவியல் ஆகிய துறைகளுடன் கணிதம், கணினி அறிவியல், தரவு அறிவியல் ஆகியவை ஒன்றிணைந்த, புதிய துறைகளை  உருவாக்க வேண்டும். பருவநிலை மாற்றம், தூய்மைக்கேடு, குறையும் இயற்கை வளங்கள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க, உயிரியல், இரசாயனம், இயற்பியல், விவசாயம், பருவநிலை அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றின் கூட்டு ஆய்வுகள் தேவைப்படும். இந்தியா, பெரும் மக்கள் தொகையுடன் வளரும் நாடென்பதால், மானுடவியல் மற்றும் கலை சார்ந்த துறைகளின் தேவைகளும் அதிகரிக்கும்.  

கல்விகற்றல் முறையானது, கூரிய சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், படைப்பாக்கத்திறன் ஆகியவற்றை வளர்ப்பதாய் இருக்க வேண்டும். கலை, திறன், இலக்கியம், பண்பாடு, நற்பண்புகள் ஆகியவற்றுடன் முழுமையான மனிதனை உருவாக்குவதாய் கல்வி இருக்க வேண்டும். 

இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையின் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாய், 2015-லேயே உறுதியளித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தியச் சூழலுக்கேற்ற  கல்விக் கொள்கையை, இந்தியா உருவாக்க முனைந்தது. முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு.டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்தின்  மனிதவள மேம்பாட்டுத்துறை சில உள்ளீடுகளை, 2016-ல் வழங்கியது. அவ்வுள்ளீடுகளைக் கொண்டு  தேசியக் கல்விக்  கொள்கை வரைவை உருவாக்க, பத்மவிபூஷன் முனைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை, 2017 ஜூன் மாதம், மத்திய அரசு உருவாக்கியது. 

அக்குழு, நம் நாடு மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்களுடனும், மாநில கல்வி அமைச்சர்களுடனும் உரையாடி, இப்புதிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால், அதே சமயம், கல்வித் துறையில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளான, பின்லாந்து, டென்மார்க், நார்வே, சுவீடன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கல்வி அமைப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வருந்துதற்குரியது. இக்கொள்கை குறித்து, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின்  உள்ளீட்டுப் பங்களிப்பு, பா.ஜ.க. வின்  குறுகிய அரசியல் அம்சங்களோடு, இருப்பது குறிப்பிடத்தக்கது (https://www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Inputs_Draft_NEP_2016.pdf). 
mobius .jpg
மோபியஸ் பட்டை (Mobius Strip) எனும் இந்த படக்குறி, புதிய தேசிய கல்விக் கொள்கையின்  சின்னமாக உள்ளது. இது, துவக்கமோ முடிவோ இல்லாமல், என்றென்றும் வளர்கின்ற, உயிர்ப்புள்ள அறிவின்  தன்மையைக்  குறிக்கின்றது. நல்ல குறிதான். 

ஐக்கிய நாடுகள் சபையின்  1948- ம் ஆண்டின்  மனித உரிமைகள் பிரகடனத்தின்  “அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது”, எனும் அடிப்படையில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்,  1996 -ம் வருடத்திய, 21-ம் நூற்றாண்டில் கல்வி பற்றிய சர்வதேச குழுவின் அறிக்கையான, “கற்றல் : உள்ளிருக்கும் புதையல்” (https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000109590/PDF/109590engo.pdf.multi) என்பது வரை, புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு கணக்கில் எடுத்திருப்பது, நன்று. 

1. அறிதலுக்கான  கற்றல், 2. உழைப்பதற்கான கற்றல், 3. சேர்ந்து வாழ்வதற்கான கற்றல், 4. தானாய் இருப்பதற்கான கற்றல் என்பன, கல்வியின் நான்கு தூண்கள் என்றும், கல்விப் படிப்புடன், ‘மென் திறன்களாக’ சமூகத்தில் இயங்கும் பல்வேறு  குழுக்களுடன்  இணக்கமாக வாழக் கற்பது மற்றும் மற்றவர் உணர்வு புண்படாமல் பழகக் கற்பது என்பதும் கல்வியின்பாற்படும் என்று அவ்வறிக்கை சுருக்கமாகக் கூறுகின்றது. 

இப்புதிய கல்விக் கொள்கை, இந்தியப் பாரம்பரியக் கல்விமுறையையும், அறிவு வளத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாய் கூறுகின்றது. பழம் இந்தியாவில், குறிப்பாக, பௌத்த, சமணர்கள் காலத்தில், கல்வியின் இலக்கு, தன்னை உணர்தலும் சுயவிடுதலையுமாகவே இருந்தது. அதனால், சமுதாயத்தின் பெரும்பகுதி பொருளாதார இயக்கமின்றிப் போனது. உழைத்த சிலரின் மீது பெரும்பாரம் அழுத்தியது. ஆனால், அவர்களுக்குப்  பின் வலிமையடைந்த சனாதனிகளோ, மொத்த சமுதாயத்தின்  பொருளாதார உபரியை, தங்களின்  உலகவாழ்க்கைக்காக மடை மாற்றிக் கொண்டனர். தனிநபர்களுக்கும் இறைமைக்கும் இடையில் தரகர்களாய் மாறினர். 

திருவள்ளுவர் போன்ற சமூக இலக்கியவாதிகளால்தான், கல்வி, அறவழியிலான, சமத்துவமான, படைப்பாற்றல் மிக்க சமூக இயக்கத்தின் ஒரு அங்கமானது. மனவிடுதலையும், தனி நபரின்  கைகளுக்கு, மீண்டும்   வந்தது. இல்லறவாழ்க்கையின்  ஊடேயே, விடுதலை அடையமுடியும் என  உறுதி செய்தது, திருக்குறள். பல நூற்றாண்டுச் சங்க  இலக்கியங்களின் சாரத்தைப் பிழிந்து, குறளுக்குள் நிறைத்தார், திருவள்ளுவர். அதனால்,  தமிழரின்  தொன்மை வாழ்வியல் தொடர்ச்சியாய் அமைந்தது, திருக்குறள். கல்வி பற்றிய திருக்குறளின் உயர்ந்த  எளிய கருத்துகளை, இக்கல்விக் கொள்கை எடுத்து ஆளாதது பெருங்குறை.  

ஆனால், அதே சமயம், இந்த புதிய கல்விக் கொள்கை, இன்றைய உலகின் அறிவியல்களை முதன்மையாகக் கணக்கில் கொள்ளாமல், பண்டைய சமற்கிருத அறிஞர்களின் படைப்புகளைக் கற்கவும், பரப்பவும் முயல்கின்றது. இதனால், உலக நீரோட்டத்திலிருந்து நாம் விலகிச் செல்லும் வாய்ப்புகள் மிகும்.

ஆனால், ஏழு வகையான நடனங்கள், இரண்டு வகையான இசைகள் இருப்பதையும், அவற்றை ஒன்றுச் சேர்ப்பதன் மூலம், புதிய கலைவடிவங்களை உருவாக்க முடியும் என்று, இந்த புதிய கல்விக் கொள்கை கூறுவது, நன்றே. “நாம் பொதுவில் உருவாக்கும் நிலையான பொருட்களின் மூலம்தான், நிலையில்லாத நாம், அழியா வாழ்வைப் பெறுகிறோம்”, என்று ஐன்ஸ்டீன் கூறியதைச் சரியாக நினைவுபடுத்துகிறது, புதிய கல்விக் கொள்கையின் வரைவுக் குழு..

இந்தியாவில், 1986 மற்றும் 1992-ல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், கல்வி பெறுதல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு  மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தது, கல்வியின் தரத்திற்கு அல்ல என்றும், அக்கொள்கைகள்  முழுமையாக நிறைவேற்றப்படவில்லை  என்றும் குற்றம்  சாட்டுகிறது, இக்கல்விக் கொள்கை. ஆனால், இணையதளத்தை உள்ளடக்கியதாய் அக்கொள்கைகள் இருந்திருக்கவில்லை என்பது உண்மைதான். இனிவரும் காலங்களில், கல்வியோ, வாழ்வோ, இணையம் இன்றி, கற்பனை செய்தும் பார்க்க முடியாது. குறிப்பாக, கல்வி, வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டியதாகிவிடும். இன்றைய இளைஞர்கள், இணையப்பயன்பாட்டைத் தவறவிட்டால், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியதாகிவிடும் என்பது ஏற்கக்கூடிய எச்சரிக்கையே!   

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு, மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேறவும் மீண்டும்  உள்நுழையவும் வசதிகள் செய்யப்படும் என்பது ஒரு நல்ல செய்தி. அவ்வகையில், மேற்கு நாடுகளைப் போன்று, சில காலம் உழைத்து, பணம் மற்றும் அனுபவம் ஈட்டிய பின் மீண்டும் கல்வியைத் தொடர்வது, தனக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற பாரத்தை நீக்கும், நடைமுறை வாழ்க்கையுடன் எளிதாக இணைத்துப் பார்க்க முடிவதால், கல்வியும் அதிக பயனுள்ளதாய் இருக்கும்.

இனி, இப்புதிய கல்விக் கொள்கையின்  அம்சங்களைச் சற்று விரிவாகக் காண்போம்.
1. கல்விக்கட்டமைப்பு: தற்போதுள்ள 10 + 2 = 12 வருடக்  கல்விக்  கட்டமைப்புக்குப் பதிலாக, 5 (3 வருடம் பாலவாடி, 1, 2 வகுப்புகள்) + 3 (3, 4, 5 வகுப்புகள்)  + 3 (6, 7, 8 வகுப்புகள்) + 4 (9, 10, 11, 12 வகுப்புகள்) = 15 வருடக் கல்விக்  கட்டமைப்பாக  மாற்ற முயல்கிறது, புதிய கல்விக் கொள்கை. இரண்டு வயது வரைதான், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள், மூன்று வயது முதல், கல்விமூலம் அரசின் குழந்தைகள். ஆறாவது வயதுக்குப் பதில், மூன்று வயதிலிருந்தே கல்வியைப் புகுத்த முனைகிறது இக்கொள்கை. உலகம் எங்கும், குழந்தைகள் தங்கள் பருவத்தைக் குழந்தைகளாகவே அனுபவம் கொள்ள வேண்டும் என்று முன்வைக்கையில், விளையாட்டுகள் மூலமாக, இயல்பாக மட்டுமே கற்க வேண்டும் எனும்போது, இக்கொள்கை, நடைமுறையில், குழந்தைகளை இளம் வயதிலேயே முறைசார்ந்த கல்வியைக் கற்க வைத்துவிடும். விளையாட்டுகள் மூலமாகக் கற்பிக்கும் கலாச்சாரமும், உள்கட்டமைப்பும், பயிற்சியும் பெரும்பாலும் இந்தியாவில் இல்லை. அந்த  வகையில், இக்கொள்கை, குழந்தைகளின் சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும் எதிராகக் கட்டவிழ்த்துப்படும்  வன்முறையாகி விடலாம். 

2. ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (3-5 வயது): ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில், 85% மேல், 6 வயதிற்குள்ளாகவே நிகழ்ந்து விடுகின்றது. எழுத்துகள், மொழிகள், எண்கள், எண்ணும் திறன், வண்ணங்கள், வடிவங்கள், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு, புதிர்கள் மற்றும் தர்க்கரீதியான சிந்தனை, சிக்கலைத் தீர்த்தல், வரைதல், ஓவியம் மற்றும் பிற காட்சிக்  கலை, கைவினை, நாடகம், பொம்மலாட்டம், இசை, அசைவு ஆகியவற்றைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் போவதாகவும், இக்கல்விக் கொள்கை கூறுகின்றது.     ஆனால், குழந்தையின்  அறிவு வளர்ச்சியை, வழக்கமான  கல்வி முறையில் ஏற்படுத்தக் கூடாது. வெறும் விவரங்களாய் வழங்குவதற்குப் பதில், ஏன் , எதற்கு, எப்படி எனும் கேள்விகளைக் கேட்கும் வண்ணமும், சிந்தனைத் திறனை  வளர்ப்பதாகவும் அமைதல் வேண்டும். இதுவரை, அதற்கான  முயற்சிகள், அரசின் ஆரம்பக்கால கல்வித் துறையில் தொடர்ந்து எடுக்கப்படவில்லை. தனியார்ப் பள்ளிகள் சிலவற்றில், இவற்றில் சில நிகழ்கின்றன. பெற்றோர்களின் மனநிலையிலும், கல்வி பற்றிய சிந்தனை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதுதான் கல்வி எனும் எண்ணத்தை முதலில் ஒழிக்க வேண்டும்.
I. ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி, உபகரணங்கள் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்தல் அவசியம்.
II. மனிதவள மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் ஆகிய துறைகள் இணைந்து, ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியைத் திட்டமிட்டுச் செயலாற்றும் என்பது நற்செய்தி.

3. தொடக்கக் கல்வி (1-3 வகுப்புகள், 6-8 வயது): படித்தல், எழுதுதல், எண்ணுதல் ஆகிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவது இக்காலக் கல்வியின் நோக்கமாகும். தற்சமயம், தொடக்க வகுப்புகளில் படிக்கும் ஐந்து கோடி மாணவர்களில் பெரும்பான்மையினர், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடையாதவர்களாக உள்ளனர், என்று கணக்கெடுப்புகள் எச்சரிக்கின்றன. 
I    ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்கப்படும்.
Ii.   ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும். 
Iii எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். 
Iiv. சகமாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு  எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பாடங்களைக் கற்பிக்கலாம் என்கிறது, புதிய கல்விக் கொள்கை. 

மீண்டும் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி, மேற்கூறிய நல்லெண்ணங்களை நிறைவேற்ற முடியாது. மேலும், தன்னார்வலர்கள், அரசியல் சாயம் இல்லாதவர்களாய் இருப்பின் நன்று. காவல்துறை நண்பர்கள் போலில்லாமல் இருப்பது அவசியம்.

4. பாடத்திட்டம்: மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து, உண்மையான புரிதலுக்காகப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று கூறுகின்றது, இப்புதிய கல்விக் கொள்கை. கூர்மையான சிந்தனை, படைப்பாற்றல், தருக்கவகையில் உய்த்தறிதல், கூட்டு முயற்சி, சமூகப் பொறுப்புணர்வு, பன்மொழித்துவம், அளவியல்வகையில்  காரணமறிதல், எண்ம அறிவு போன்றவற்றில், உயரிய திறன்களை அடையும் வகையில், பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்கிறது. 

A பாடத்திட்டத்தின் சுமை குறைக்கப்பட்டு, நுண்ணிய சிந்தனையை வளர்க்கும் விதமாய் மாற்றியமைக்கப்படும். 

B அனுபவம், கலந்தாலோசித்தல் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையிலான கற்றல் முறை உருவாக்கப்படும். 

C பலவகை பாடங்களை, தங்கள் விருப்பப்படி, மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

D கலைகள் மற்றும் அறிவியல்கள், பாடக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவை கறாராகப் பிரிக்கப்படாது. 

E குழந்தை வளர்ச்சி மற்றும் மொழி பயின்றல் பற்றி அறிவியல் என்ன  கூறுகிறதென்றால், குழந்தைகள் இளம் வயதில், மொழியைக் கற்பதுடன் பிற பாடங்களையும், தங்கள் தாய் மொழியில் மிகச் சிறப்பாக கற்கிறார்கள். மேலும், 2 முதல் 8 வயதுவரை, குழந்தைகள் பலமொழிகளை எளிமையாக கற்கிறார்கள். எனவே, குறைந்தது ஐந்தாவது வரையிலும், இயன்றால் எட்டாவது வரையிலும் தாய்மொழியில் அல்லது உள்ளூர் மொழியில் கற்பிக்கப்படும். கல்வி மொழி, தாய்மொழியிலிருந்து வேறுபட்டால், இரண்டு மொழிகளிலும் கற்றலுக்கான வசதிகள் உருவாக்கப்படும். முன்-ஆரம்பப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல், மூன்று மொழிகளில் பேசவும், எழுத்துகள் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். மூன்றாம் வகுப்புவரை, தாய்மொழியில் எழுதக் கற்பிக்கப்படும். பிறகு, மற்ற மொழிகளிலும் எழுதக் கற்பிக்கப்படும். மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது, எல்லா மாநிலங்களுக்கும் ஏற்புடையதாயில்லை. 

F அன்னிய மொழியான ஆங்கிலத்தை விடுத்து, நாம் இந்தியத் தேசிய மொழிகளை வளர்க்க வேண்டும். தேவையான துறைகளில், இந்திய மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகிய இரண்டிலும் கற்கலாம். பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீனம் மற்றும் ஜப்பானியம் ஆகிய அன்னிய மொழிகளையும் விருப்பப் பாடங்களாக கற்கலாம்.

G இந்திய மொழிகள் வளம் நிரம்பியவை, அறிவியல் பூர்வமானவை, அழகானவை. அவற்றினுக்கிடையிலான ஒற்றுமைகளைக்  கண்டறிதல் மிகவும் ஆர்வமூட்டுவதாகும்.

H சமற்கிருதம் மிகவும் செம்மையான மொழி. அதில் ஏராளமான துறைகளில், படைப்புகள் உள்ளன. மற்ற மொழிகளின்  வளர்ச்சியில், சமற்கிருதம் ஆற்றியுள்ள பங்கின்  காரணமாக, அம்மொழியும், அம்மொழியின்  படைப்பாக்கங்களும் பரவலாகக் கற்பிக்கப்படும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற பிற செம்மொழிகளையும், பாலி, பெர்ஷியன், பிராகிருதம் போன்ற மொழிகளையும் எதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாக்க வேண்டும். 

மீண்டும், மீண்டும் சமற்கிருத மொழியையும் அதன் படைப்புகளையும் முன்னிறுத்துவதாகவே, இந்த புதிய கல்விக் கொள்கை இருக்கின்றது. திரு. கஸ்தூரி ரங்கன், கன்னடராயினும், கன்னடமே திராவிடக் கிளை மொழி என்று அறிந்திருந்தும், சமற்கிருதம்தான், இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்பது போல் கூறியுள்ளது, அறிஞர்க்கு அழகல்ல.  

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழிகள். புதிய கல்விக் கொள்கையின் பல இடங்களில், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமாக்கப்பட்ட, உயர்தரமான கல்வி என்று கூறிக்கொண்டே, இந்திய அரசியல் அமைப்புச்  சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில்,  சமற்கிருத மொழிக்கு மட்டும் அபரிதமான முக்கியத்துவம் தந்திருப்பது, ஒருதலைப்பட்சமானதும், தான்தோன்றித்தனமானதும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும் ஆகும்.

I உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளும், அடிப்படைக்கல்வி முதலே பயிற்றுவிக்கப்படும்.

J அரசியல் அமைப்புச் சட்டத்தின் அருமைகள் கற்பிக்கப்படும். 

K நான்காவது தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2005 (NCF 2005) மீளாய்வு செய்யப்பட்டு, 2020-க்குள் திருத்தியமைத்து, எல்லா வட்டார மொழிகளிலும் வெளியிடப்படும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம், தேவையெனில், சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். 

L மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், கணக்கீட்டுக்கான தேர்வுகள் நிகழ்த்தப்படும். அவை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவிற்கு, பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தவும், கற்பித்தல்-கற்றல் முறைகளை  மாற்றியமைக்கவும் உதவும். இத்தேர்வுகள், அடிப்படையான கருத்துருவங்கள் மற்றும் அறிவை சோதிக்கும். 

குறிப்பாக, மூன்றாம் வகுப்பு கணக்கீட்டுக்கான தேர்வு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் பிற அடிப்படையான திறன்களைச் சோதனை செய்யும். சில தமிழ்க் கல்வி விமர்சன வாதிகள் குற்றம் சாட்டியது போல், இத்தேர்வுகள் மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, தொழிற்கல்வி அளிக்க அல்ல.  
  
5. இடைநிற்றல்: இடைநிற்றல், கல்வியின் எல்லா காலகட்டங்களிலும் ஏதோ ஒரு காரணத்தால் நிகழ்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக, 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பிறகு, இடைநிற்றல் மிகுதியாக நிகழ்கிறது. காரணம் ஒன்று, உயர்நிலைப் பள்ளிகள் இல்லாமை. இரண்டு, அப்படி இருப்பினும், வெகு தொலைவில் உள்ளது அல்லது  போய்வருவதற்குப்  பாதுகாப்பில்லாமல் இருக்கின்றது.

மாணவர்களின் போக்குவரத்தில் உதவி, அவர்களுக்குப் பாதுகாப்பு, விடுதி வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம், இடைநிற்றலை வெகுவாக குறைக்க முடியும் என இக்கல்விக் கொள்கை சரியாகவே பரிந்துரை செய்கின்றது. 

பல வகுப்பு நிலைகள் கொண்ட பள்ளி வளாகத்தை (School Complex) நிறுவும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றது, இக்கல்விக் கொள்கை. கல்வியின்   தொடர்ச்சிக்கும், இடைநிற்றல் பிரச்சனைக்கும், இதுவும்  ஒரு  நல்ல தீர்வாகலாம். ஆனால், பெரும்பாலான  இடங்களில், இதை உருவாக்குவதுதான்  கடினம்.

6. கலைகள் மற்றும் அறிவியல்: உலகின் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கணிதம் (Mathematics) ஆகியவை உள்ளடக்கிய STEM அமைப்பே முன்வைக்கப்படுகின்றது. கூடவே, கலைகளையும் (Arts) சேர்த்து, STEAM அமைப்பை, இக்கல்விக் கொள்கை முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏனெனில், இலக்கியம், இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள், மனதை மென்மையாக்கும், மேன்மையுமாக்கும். அன்பு, பரிவு, நட்பு, பாசம், காதல், பிறரை மதித்தல் போன்ற மென்திறன்களை, கலைகள்தாம் சிறப்பாக வளர்க்கும். 

7. தேசிய ஆராய்ச்சி நிறுவனம்: அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன், சமூக அறிவியல், கலைகள் மற்றும் மானுடவியல் பற்றியும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு, இத்தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வழிவகை செய்யும் என்று புதிய கல்விக் கொள்கை முன்வைப்பதும் வரவேற்புடையதே! ஆனால், மிகைப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட மைய அமைப்பு, நடைமுறையில், மாநிலங்களில் சுணக்கத்தை ஏற்படுத்தி விடலாம். பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்புகள் அவசியம். அதே சமயம், பொறுப்புகள் கொண்டதாயும், அவை இருக்க வேண்டும்.     

8. ஆசிரியர் பயிற்சி: புதிய கல்விக்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது அவசியம். பல துறைகளின் அறிவைப் பெற்றவராயும், கல்வி நிறுவன நிர்வாகம், மாணவர்நிலை போன்றவற்றை அறிபவராயும், ஆசிரியரை  உருவாக்குதல் நன்று. உயர்கல்வி பெறுவதற்கு ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் நன்றே. கற்பித்தல் அல்லாத நிர்வாகம் மற்றும் அரசாங்க வேலைகள், ஆசிரியர்களுக்குத் தரப்படாது என்பதும் நன்றே. கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது மிக நன்று. ஆசிரியர்கள் அடிக்கடி பணியிடம் மாற்றம் செய்வது தவிர்க்கப்படும். இதுவும் நன்றே. பல இந்திய மொழிகளில், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தகவல்கள் வழங்கப்படும். அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கான கல்வியும் பயிற்சியும் வழங்கப்படும். தகுதியில்லாத ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் மூடப்படும். 

9. தேசிய கல்வி நிறுவனம்: மாறி வரும் உலகச்  சூழல்களை முன்கூட்டி அறியவும், அவற்றிற்கு ஏற்ப கல்வித் திட்டங்களை வகுக்கவும், நடைமுறைப்படுத்தச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தவும், இவ்வமைப்பு பயன்படும் என்பது, எதிர்கால சிந்தனை  நோக்குள்ளது. . மேலும், தேசிய கல்வி நிறுவனம், இக்கல்விக் கொள்கையின் தொடர்ச்சியான வளரச்சிக்கும் உதவும்.

10. மத்திய கல்விப் புள்ளியியல் பிரிவு: ஒழுங்கான புள்ளி விவரங்கள் இல்லாமல், சரியான கல்வித் திட்டங்களை வகுக்க முடியாது. எனவே, மத்திய நிறுவனமான கல்வித்  திட்டம் மற்றும் நிர்வாகத்தின் ஒரு சுதந்திரமான பிரிவாக, மத்தியப் புள்ளியியல் பிரிவை உருவாக்க, இக்கல்விக் கொள்கை பரிந்துரை செய்கிறது. இம்முன்மொழிவும் நன்றே. 

11. தேசிய வளர்ச்சிக்கு வழிவகுத்தல்: அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து,  மூன்றாவது பெரிய பொருளாதாரமாக, இந்தியா வர நினைக்கின்றது. அப்பொழுது, நம்முடைய பொருளாதாரம், இயற்கை வளங்களை (மட்டும்) சார்ந்து இருக்காது, மாறாக அறிவைச் சார்ந்தே இருக்கும். சூழல் அமைப்பு நம்மை வேறுவகையில் சிந்திக்க நிர்ப்பந்திக்கிறது. 

இது, ஒரு தவறான எதிர்பார்ப்பாகும். அமெரிக்கா, சீனா இரண்டின் பொருளாதாரப் பாதைகளும் பின்பற்றத் தக்கவையல்ல. அமெரிக்கா, மற்ற நாடுகளை (ஆப்கானித்தானம், ஈராக், சூடான், இன்னபிற. )  அவ்வப்பொழுது ஆக்கிரமித்து, தனக்கு வேண்டிய பொம்மை ஆட்சிகளை நிறுவி, காலமெல்லாம் கப்பம் வசூலிக்கின்றது, ஆயுதங்களை உற்பத்தி செய்து, விற்பதற்காகவே, உள்நாட்டுக்  கலகங்களைத் தோற்றுவிக்கின்றது. சீனமோ, மிகவும் மோசமான உழைக்கும் சூழலில், மக்களைச் சுரண்டுகின்றது. இந்தியாவும் அத்தகைய பாதைகளைப் பின்பற்ற முயல்கின்றது. தனியார் ஆயுத உற்பத்தி, உழைப்பாளர்களுக்கு எதிரான சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சூழலைக் கெடுக்க உதவும் சட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அமெரிக்கா, சீனம் போல் வளர்தல் அவசியமா? இவற்றால், இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு உயரலாம். ஒருசில முதலாளிகள் பெருமுதலாளிகளாகலாம்.  ஆனால், மக்கள் மேலும் வறுமையடைவார்கள் என்பது மட்டும் உறுதி. சுற்றுச்சூழல் மேலும் மாசுபடும், உழைப்பில், மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழப்பார்கள், நவீன  கூலிகளாக்கப்படுவர். பிற நாடுகளில், இந்திய ஆயுதங்களால், அப்பாவி மக்களைக் கொன்றுதான், இந்தியா வளர வேண்டுமா? பொதுமக்களை வறுமையாக்கி, ஒரு சிலரை பெரும்பணக்காரர்களாக்கி, இந்தியா வளர்ந்துவிட்டது என மார் தட்டிக் கொள்ள வேண்டுமா?

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அப்பாவி மக்களும் நினைப்பது வேதனைக்குரியது. இது வரையில், வல்லரசு என்றால், மற்ற நாடுகளை நேரிடையாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தல் என்பதாகும். இந்தியா வல்லரசானால், பாவம்தான், சாபந்தான் இந்தியாவைச் சூழும். திரு. அப்துல் கலாமே கூறியிருப்பினும், வல்லரசு என்பது அருவருப்பானது. இந்தியா வளமான அரசாகலாம், நல்ல அரசாகலாம். வல்லரசாகக் கூடாது. வல்லரசு எனும் நினைப்பால், வலிமையைக் காட்ட போர் மூளும், படைகளுக்கான செலவுகள் நீளும். மக்கள் பயத்தால் சாவர். வரிகளால், வறுமை மிகும். எனவே வல்லரசு என்பது, பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, முடிவில், நம் இந்திய நாட்டு மக்களுக்கே பெருங்கேடாய் முடியும். 

12. உயர்கல்வி நிறுவனங்கள்: இவை சுதந்திரமாகச் செயல்படும். குறிப்பணி நாலந்தா மற்றும் குறிப்பணி தட்சசீலம் ஆகியவை தேசியக் கல்விக் கழகத்தின்கீழ் அமைக்கப்படும். குறிப்பணி நாலந்தா மற்றும் குறிப்பணி தட்சசீலம் ஆகியவற்றின் கீழ், பல மத்திய பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும். சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழகமும், அவ்வாறு கொண்டுவர முயலப்பட்டது. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் போய்விட்டால், சமூக நீதியை நிலைநிறுத்தும் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும். இதை அறிந்து கொடுத்த அரசியல் அழுத்தத்தால், அம்முயற்சி கைவிடப்பட்டது. பல்துறைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் புதிதாய் தோற்றுவிக்கப்படும் என்பது நன்று.

13. நிதி ஒதுக்கீடு: 2017-2018 ஆண்டில், கல்விக்கான  நிதி ஒதுக்கீடு, இந்தியாவின்  தேசிய உற்பத்தி மதிப்பில் வெறும் 2.7% தான். 1968, 1986, 1992-ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட 6% ஐ, இதுவரை எந்த அரசாங்கமும்  எட்டவில்லை. ஆனால், ஒவ்வொரு அரசாங்கமும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு, பல்லாயிரம் கோடிக்கணக்கில், கடன்களைத் தள்ளுபடி செய்கின்றன. 2017 – ல், பிற நாடுகளின்  கல்விக்கான செலவு கீழ் வருமாறு:
பூடான், சிம்பாவே, ஸ்வீடன் — 7.5%
கோஸ்டாரிகா, பின்லாந்து — 7%
கிரைகிஸ்தான், தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில் — 6%
இங்கிலாந்து, நெதர்லாந்து, பாலஸ்தீனம் — 5.5%
மலேசியா, கென்யா, மங்கோலியா, தென் கொரியா, அமெரிக்கா — 5%

கல்விக்கான  முதலீடே  மிகவும் சிறந்த முதலீடு. அறிவுப் பொருளாதாரத்திற்கு, தரமான கல்வி அவசியம். தரமான கல்வியை அடைய, போதுமான நிதி ஒதுக்கீடு அவசர அவசியம். நெடுங்காலமாகப் பரிந்துரைக்கப்பட்டு வரும் இந்தியாவின் தேசிய உற்பத்தி மதிப்பில் 6% ஐ, கல்விக்காக உடனடியாக ஒதுக்க வேண்டும். 

அடிப்படையில், இப்புதிய கல்விக் கொள்கை தொலை நோக்குடன், நல்ல எண்ணங்களுடன், புதிய திட்டங்களுடனும் நிறுவனங்களுடனும், இந்தியக் கல்வியை மேம்படுத்தக் கருதுவது நல்லது. ஆனால், இடையிடையில், சில தவறான  கருதுகோள்களைக் கொண்டு, தவறான  பரிந்துரைகளைச் செய்வது வேதனைக்குரியது. குறிப்பாக, சமற்கிருத மொழி பற்றிய முக்கியத்துவம் மற்றும் வளரச்சிக்காகச் சுற்றுச் சூழலைப் பலியாக்க முயல்வது ஆகியவை.

புதிய கல்விக் கொள்கை மட்டும் போதாது. நடைமுறைப்படுத்துகையில், கீழ் வருவனவற்றை உறுதி செய்தல் அவசியம்:
1. ஏற்கனவே தீட்டிய கல்விக்கொள்கையின் நடைமுறைப்படுத்தலை  நிறைவு செய்திட வேண்டும். குறிப்பாக, அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு.
2. பாடத்திட்டங்கள் நாடு முழுவதும் சமமாவதை உறுதி செய்தல் மிக மிக அவசியம், அவசரம்.
3. பின்லாந்து நாட்டுக்கல்விமுறை, உலகநாடுகளால் மிகவும் பாராட்டப்படுகின்றது. படைப்பாக்கத்தை (Creativity) இலக்காகக் கொண்டு,  நிகழ்வுகளை அடிப்படையாகக்  (Phenomenon based)   கொண்ட கற்றல் முறைகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய கற்றல் முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். 
4. பின்லாந்தில், கல்விக்காக போதிய நிதிகளும் ஒதுக்கப்படுகின்றன. கல்விக்கான நிதி என்பது செலவு அல்ல, அது பெரும் முதலீடு என்பதை அரசியலாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வியால் உடனடி பலன்களைத் தர முடியாது. ஆனால், எதிர்காலத்தில், அது பெரும் சமூக சொத்தினை உருவாக்கும் என்னும் ஆழ்ந்த கனவுகள் வேண்டும், நடைமுறைப்படுத்தும் உறுதி வேண்டும். நாட்டையும், மக்களையும், குழந்தைகளையும் நேசிப்பவர்களால் மட்டுமே அது சாத்தியம்.
5. ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை பரிந்துரைத்த இலக்குகளை நேர்மையாகப் பின்பற்றும் வகையில், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலின  மக்கள், விளிம்பு நிலையில் உள்ளோர், பெண்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான  கல்வியைத் தருதல் வேண்டும்.  தரமான  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அளவுக்கு, அனைவரையும் உள்ளடக்குவதையும், சமமாக்கப்படுவதையும் விவரிக்கவில்லை, இக்கொள்கை. 
6. இந்திய அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் வளர்க்கும் கல்விக்கொள்கையாக, இதைத் திருத்த வேண்டும். சமற்கிருதம் மட்டுமே இந்திய மொழி எனும் வகையில் அமைந்த, ஒருதலைபட்சமான கல்விக்கொள்கை அம்சங்களைக் கைவிட வேண்டும். 
7. கல்வி அமைப்பில், இப்புதிய கல்விக் கொள்கை விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்த தேசிய வருமானத்தில் குறைந்தது 6% ஐ, கல்விக்காக, ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். இல்லையெனில், இப்புதிய கல்விக் கொள்கை,  வெறும் காகிதங்களாகவே மிஞ்சும் அல்லது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகளை மட்டுமே சாதித்துக் கொள்ள வழிவகுக்கும். மற்ற கல்வி சீர்திருத்தங்களும், முன்மொழிவுகளும் மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருப்பினும், போதிய நிதியை ஒதுக்காவிட்டால், அவை எவற்றையும் சாதிக்க முடியாது. நிதி ஒதுக்குவதைப் பற்றிய உறுதியான நிலைப்பாடு இல்லாதவரை,  இவையெல்லாம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை கொடுப்பதற்காக எழுதப்பட்ட சுவாரசியமான ஆவணமாக மட்டுமே இருக்கும்.  
8. அனைவரையும் உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான  கல்வியை அளித்தப்பின்புதான் , தேசிய அளவிலான  நீட் (NEET) போன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை நடத்துவது நியாயமாய் இருக்கும்.
9. சமூகநீதி குலையா வண்ணம், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

இக்கல்விக் கொள்கைகளின்  குறைபாடுகளை இந்திய அரசாங்கத்திற்குச் சுட்டி தகுந்தவாறு திருத்த முயல்வதோடு, ஐ. நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் மற்றும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலும் முறையிட்டு, இந்திய அரசாங்கத்திற்கு  அழுத்தம் தரலாம். 

இறுதியாக, அம்பேத்கர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றிக் கூறிய அதே வாசகம் இப்புதிய கல்விக் கொள்கைக்கும் பொருந்தும். இப்புதிய கல்விக் கொள்கையின்  இயல்பு பெரிதல்ல. இது, கெட்டவர்கள் கைகளில் சேர்ந்தால், மக்களுக்குத் தீமையாகும். நல்லவர்கள் கையில் சேர்ந்தால், (இன்னும்) நல்லதாக மாறும். யார் கையில் இருக்கின்றது, இருக்க வேண்டும் என்பதை மக்கள்தாம்  உறுதிப்படுத்த வேண்டும்.






No comments:

Post a Comment