Monday, October 24, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 1



 - இராம.கி.


[முன்குறிப்பு: அண்மையில் சங்க இலக்கியங்களில் 10 இடங்களில் ஆரியரென்ற சொல் பயில்வதை “மின்தமிழ்” மடற்குழுவிற் குறிப்பிட்டு, ஒவ்வொரு காட்டிலும் 2 வரிகள் கொடுக்கப்பட்டதுடன், அவற்றுக்கு பொருள் விளக்கமும்கேட்கப்பட்டது.  ஆரியர்/திராவிடர் என்ற உரையாட்டில் ஆரியரென்ற கூற்று சங்க இலக்கியங்களில் எப்படிப் பயின்றதென்பது ஓர் தேவையான பார்வையே! (சிலப்பதிகார நூலை சங்க இலக்கியமென்றே நான் கருதுவேன். இருப்பினும் அந்நூலில் பயிலும் சொல்லாட்சிகளை இங்கே நான் குறிப்பிடவில்லை. மணிமேகலையைச் சிலம்பின் இரட்டைக் காப்பியமாய்ப் பார்க்காது சங்கம் மருவிய காலத்திற்கே கொண்டுபோவேன்). இவ்வுரையாடலைப் படித்தபோது, என்பார்வையில் ஏன் பொருள்சொல்லக் கூடாதென்று தோன்றியது தவிர, இதுபோல் 2 வரிகளில் பொருள்சொல்லும்போது ஆரியரின் முழுப்பரிமானம் தெரியாதுபோகலாம். பாட்டுமுழுதையும் பார்த்துப் பொருள்கொள்ளுவதே சாலச்சிறந்தது.]

முன்னுரை:
சங்ககாலத்தை  (பொ.உ.மு.300- பொ.உ.300 என்று நாம்) தவறாகவே சொல்லிப் பழகிவிட்டோம். அண்மைக்கால ஆதிச்சநல்லூர், கொடுமணம், பொருந்தல், பட்டணம், கீழடித் தொல்லாய்வுகளுக்கப்புறம் பொ.உ.மு.600-பொ.உ.150. என்பதே உண்மைக்கு நெருக்கமாகும். 1930-80 வரையிருந்த 2 ஆம்நிலை ஆய்வுகளைக்கொண்டு இனியும் பேசுவது முறையல்ல. தவிர, இன்றுபோல் தில்லி, வடமேற்கைநோக்கி வடபுலமில்லை. அன்று அது கங்கைக்கரைப் பாடலிபுத்தம் நோக்கியது. மகதம், வச்சிரம், அவந்தி, மற்றைய சனபதங்கள் அன்று தமிழர்க்கு முகன்மையானவை. விந்தியமலைக்கு வடக்கிருந்தோரே அன்று ஆரியரெனப்பட்டார். சில சனபதங்கள் (குறிப்பாய் கோதாவரிக்கரை அசகம் Assaka) விந்தியத்திற்குத் தெற்கேயுமிருந்தன. இவற்றாற் பாகதம் தக்கணத்தில் ஓரளவு பரவியது. தமிழும் பாகதமும் ஊடாடிய தேசமே மொழிபெயர்த் தேயமாகும். இற்றை மாராட்டமும், ஒடியாவும், வட கர்நாடகமும், தெலிங்கானாவும், வட ஆந்திரமும் இதனுளடங்கும்.

மொழிபெயர்த்தேயத்தை மாமூலனார் அடையாளங் காட்டுவார். இம்மொழிபெயர்த் தேயத்துள் போகும் வழியிற்றான் பெரிய பாலைநிலம் (இற்றை இராயலசீமை) இருந்தது. சங்க இலக்கியங்களிற் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்களே. பாலைநிலங் கடந்து மகதம் போய்ப் பொருளீட்டுவது அற்றைத் தமிழருக்குத் தேவை. அதே போல வடக்கிருந்த ஆரியர்க்கும் தங்கம், இரும்பு போன்ற மாழைகள், கொங்கிற்கிடைத்த அரிய மணிகள், தென்கடல் முத்து, பவளங்கள், தெற்கே சிறப்புற்ற பருத்திக் கலிங்கம் ஆகியவற்றிற்காக வணிகம் நாடித் தெற்கே வரவேண்டியிருந்தது. ஒரு பக்கம் பொருளியல் ஊடாட்டங்களும் இன்னொரு பக்கம் அதிகார முனைப்புகளும் இதிற் சேர்ந்திருந்தன.

கொடுமணலிலும், பொருந்தலிலும், கீழடியிலும் பாகதச் சொற்கள் பொறித்த பானையோடுகளும், அடையாளங்களும் காணப்படுவதில் வியப்பேயில்லை. சங்ககாலத்தில் பாகதம் நமக்குப் பழகியது தான். பாகதங் குறைத்துச் சங்கதத்தை மேலேற்றுவது குத்தர் (குப்தர்) காலத்திற்கப்புறம் எழுந்த கதை. மொழிபெயர்த் தேயத்தின் மேல் மூவேந்தர் கட்டுப்பாடிருந்தது மாமூலனார் பாட்டால் நன்றாகவே தெரிகிறது. சங்ககாலத்தில் படித்தானத்தைத் (மராட்டிய அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) ஒருபக்கம் மகத அரசிற்கு காவலாளியாயும், இன்னொரு பக்கம் தமிழ்வேந்தரோடு நட்புப் பாராட்டியுமிருந்தார். அவர் நாணயத்தில் ஒருபக்கம் தமிழ்; இன்னொரு பக்கம் பாகதம் இருந்ததே அவர் அரசின்தன்மையை விவரிக்கும். [சிலம்புநூல் மட்டும் நமக்குக் கிடைத்திராவிடில் சங்க இலக்கியப் பின்புலம் நமக்கு விளங்கியிருக்காது.]

அற்றைக்காலத்தில் எல்லாவகையினும் ஆரியருக்கும் தமிழர்க்கும் போட்டி இடையாட்டம் இருந்தது. ஆரியர் எதிராளி, ஆரியரிற்சிலர் (குறிப்பாக நந்தருக்குப் பின்வந்த மோரியர், சுங்கர், கனகராகிய மகதர்) பகைவரெனப்பட்டார். அக்கால வடபுலத்தில் மகதப்பேரரசே எல்லாவற்றையும் நிருணயித்தது. அதேபொழுது வச்சிரம் மூவேந்தர் படையெடுப்பிற்குப் அவ்வளவு பகையின்றிப் பணிந்துபோனது. அவந்தியோ தமிழரோடு உவந்தவண்ணம் நல்லுறவு கொண்டது. இத்தனைக்கும் நடுவில் காசிக்குச் சென்றுவரும் வழக்கம் அன்றும் தமிழர்க்கிருந்ததைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டும்.

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்         
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்


என்று சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் 99-104 ஆம் வரிகள் சொல்லும். எனவே ஆரியரோடு அன்று பகையுமுண்டு; நட்புமுண்டு. இப் பின்புலத்தோடு இனிக் காட்டுகளுக்கு வருவோம். இவற்றில் ஆரியர் பற்றிய தனிப்பட்ட குறிப்புக்களும், வரலாற்றுக் குறிப்புக்களுமுண்டு. இவற்றை  ஓரளவு காலவரிசையில் இந்தக்  காட்டுக்களை இங்கே விளக்குகிறேன். 


முதற்பாட்டு:
முதற்பாட்டு முதற்பாட்டு குறுந்தொகையில் வருவது. பாடியவர்: பெரும்பதுமனார்; திணை:பாலை; துறை: செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது; .

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே

 

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வில்லோன் காலன கழலே
தொடியோள் மெல் அடி மேலவுஞ் சிலம்பே
நல்லோர் யார் கொல்?
ஆரியர் கயிறு ஆடு கால் பொரப் பறையில்
கலங்கி வாகை வெள்நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவ முன்னியோரே
அளியர் தாமே

இனி ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். வில்லோன் = தலைவன். தொடியோள் = தோள்வளையணிந்த தலைவி. வீரத்தின் அடையாளமாய். ஆண் காலிலணிவது கழலாகும். கழலணிந்த கால் உரம்பெறும். பெண்பருவத்திற்கு ஏற்பச் சிலம்பென்பது அக்கால வாழ்வில் வெவ்வேறு வகைப்படும். மணத்தின் முன் அணியும் சிலம்புக் கூட்டுள் பரல்களைச் சொரிந்ததால் கலகலவெனச் சிலம்பும் (ஓசையெழுப்பும்). [இக்காலத்திற் சிலம்பிற்குப் பகரியாய்க் கொலுசிடுகிறோம். திருமணஞ்செய்த இற்றைப்பெண்கள் கொலுசுபோடுவது அரிதிலும் அரிது.] இச்சிலம்போசையே பருவப்பெண்ணுக்குக் காப்புமானதால் காப்புச்சிலம்பாயிற்று. திருமணத்தின் பின் அணிவது பரல்கள் பதித்த தண்டை. அவ்வளவு ஒலியெழுப்பாது..

திருமணம் முடிந்தபின், அக்காலத்திற் தாய்வீட்டிற் காப்புச்சிலம்பைக் கழற்றித் தண்டைச்சிலம்பையும், (காற்பெருவிரலுக்கு அடுத்தவிரலில்) கால்மோதிரத்தையும் (மிஞ்சியையும்) அணிவிப்பர். திருமணம் முடிந்து மருவீட்டிற்குப் (மணஞ்செய்தவீடு மருவீடு. மருவுதல் = தழுவுதல், மணஞ்செய்தல் மேலைமொழியில் மருவுகை marriage ஆனது.) போகுமுன் இன்றும் சிலகுடிகளிடம் இச்சடங்குண்டு. ”காப்புக் கழற்றிக் கால்மோதிரமிடுவது” என இன்றும் நகரத்தார் மரபிற் சொல்வர். (கண்ணகி கதைக்குப் பின் தண்டையணிவது இவரிடம் அறவே நின்றது.) இப்பழக்கம் தமிழர் எல்லோரிடமும் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். மேலே தண்டையும், கால்மோதிரமும் அணியாது காப்புச்சிலம்பைத் தலைவி அணிந்தது சுட்டி மணம்புரியா உடன்போக்கைப் பெரும்பதுமனார் குறிப்பாலுணர்த்துவார். ”நல்லார் யார் கொல்?” என்னும் அவதானம் இன்றும் நாட்டுப்புறங்களில் வெள்ளந்தியாயுண்டு. “பார்த்தா நல்லவங்களாய்த் தெரியுறாங்க.” முன்பின் தெரியாரை ஐயத்தோடு பார்க்கும் நகர நாகரிகம் அன்றில்லை.

தமிழரைப் பொறுத்தவரை கழைக்கூத்து வடநாட்டிலிருந்து வந்தது. கயிற்றின்மேல் கால்பொருத்தி நீளக் கழைபிடித்து தன்னை நிலைப்படுத்தியாடும் இக்கூத்தை நாட்டுப்புறங்களில் ஆரியக்கூத்தென்பார். “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காசு காரியத்திற் கண்வையடா, தாண்டவக்கோனே” என்பது பேர்பெற்ற திரைப்பாட்டு. இக்குறுந்தொகைப் பாட்டிலும் ஆரியக்கூத்தே சொல்லப்படுகிறது. ஆரியக்கூத்தின் போது பறையடிப்பது உள்ளூர்ப்பழக்கத்தை உட்கொண்ட செயலாகும்.

வாகை (Siris, Woman;s ongue, East Indian Walnut, Albicia Lebbeck) என்பது வறண்ட பறந்தலைகளில் நிழலுக்காக வளர்க்கப்படும் மரம். இக்காலத்தில் தூங்குமூஞ்சி மரமென்பாரே, அது வாகைக்கு நெருங்கியது. அகன்ற கிளைகள், பச்சிலைகளோடு வாகையின் வளர்ச்சி விரைவானது. இளந்தளிர்கள் சற்று நச்சோடிருப்பதால், கால்நடைகள் சாப்பிடா. தளிர்வளர்ந்து அடர்பச்சையானபின், நச்சுமை போகும். வாகைப்பூவைத் தலையிற்செருகின், சிறகுவைத்தது போலவே தலைமைகாட்டும். (சிறகு/இறகு வைத்தவன் பழங்குடி மரபில் தலைவன்/இறைவன். http://valavu.blogspot.in/2011/05/blog-post.html). இதனாலேயே பறந்தலைப் போர்க்களங்களில் வெற்றிபெற்றவர் வாகைப்பூ சூடுகிறார். மகளிர் காதில் அணிந்துகொள்கிறார். வாகைப்பூக்கள் உண்மையில் கொத்துக்களே. கொத்துக் காய்கள்/நெற்றுக்கள் ஒவ்வொன்றும் தகடையாய் 2 தோடுகள் சேர்ந்தாற்போல் 9 - 12 அணுங்குழை (அங்குலம்) நீளத்தோடு தொங்கும். ஒவ்வொரு வெளுத்த நெற்றிலும் 6 இலிருந்து 12 விதைகள் வரை இருக்கும்.

பொரிந்துகாய்ந்த நெற்றுக்களில் விதைகளுக்கும் தோடுகளுக்குமிடையே வெளி ஏற்பட்டு, நெற்றைக்குலுக்கினால் வித்துகள் ”சிலுசிலு”வென ஓசையெழுப்பும். தவிர, கொத்தாய்த் தொங்கும் நெற்றுக்கள் (nuts) காற்றில் ஒன்றையொன்றுயுரசி வெட்டோசையெழுப்பும். வல்லோசையை வக்கென்று தமிழிற்சொல்வர். (வக்கு நிறைந்தது தமிழில் வாக்கு/பேச்சு ஆயிற்று.) வக்கோசையால் வக்கு>வாக்கு>வாகை என்ற பெயரேற்பட்டது. வாகையை வகத்திரமென்றும் கதிரைவேல்பிள்ளையின் சங்கத்தகராதி அடையாளங் காட்டும். வாக்கொலி குறித்தே ஒரு குறும்புக்காரர் ”பெண்நாக்கு (woman's tongue)” என்று பெயரிட்டார். உலகின் எல்லாப் புதலியற்குறிப்புக்களிலும் இச்செய்தி காட்டப்பட்டுள்ளது. இதன்தொடக்கம் இப்பாடலிலுள்ளது. அவ்வகையில் இப்பாட்டுச் சிறப்பானது. சங்கதத்தில் சிலுத்தல்>சிரற்றுதல் வினையைக் குறித்தே Shirisha என்று பெயர்சொல்வார். தமிழ்முலங்கொண்ட சொல். வாகையின்தொடக்கம் தெற்காசியா. பாண்டிலென்பது வாகையின் மரத்தோற்றத்தைக் காட்டும் இன்னொரு பெயர்.  .
   
வில்லோனும், தொடியோளும் போகும் பாதையில் மூங்கிலும் (வேயும்) இருக்கிறது. அழுவம் = நடந்து நடந்து அழுந்தியழுந்தி ஏற்பட்ட அடிப்பாதை. முன்னுதல் = முன்னே செல்லுதல். “ஆரியக்கூத்தின் போது பறையொலிப்பதுபோல், வாகைநெற்றுக்கள் சத்தமெழுப்புகின்றன. உடன்போக்கில் நடந்துசெல்லும் இந்த ஆணும் பெண்ணும் யாராயிருந்தாலும் இரக்கத்திற்கு உரியவரே!  இங்கே ஆரியக்கூத்து என்பது பாடுவோரின் மனத்திலுள்ளது. வாகைநெற்றொலியும், காதலர் நடையொலியும் உள்ளபடி கண்ணுக்கெதிரே எழுகின்றன. பார்ப்போருக்கும் கேட்போருக்கும் படிப்போருக்கும் நெஞ்சம் படபடக்கிறது. சங்க இலக்கிய வாசிப்பின் சிறப்பு மனத்திலெழும் குறும்படம் தான்.

“கயிற்றின்மேல் ஆடும் ஆரியக்கூத்து”.

பாட்டின் மொத்தப்பொருளை ஓர் உரைவீச்சாகவே தருகிறேன்.

வில்லோன் காலிலோ கழல்!
தொடியோள் மெல்லடி மேலோ சிலம்பு!
இந்த நல்லோர் யாரிவர்?
கயிற்றின்மேற் கால்பொருத்தி
ஆரியர் ஆடுகையில்
பறையொலிக்க,
வாகைக்(கிளைகள்) காற்றுப்பொருந்த
வெள்நெற்றுக்கள் கலங்கிச் சிலுசிலுவென வொலிக்கும்
அகன்ற மூங்கிற்பரப்பில்
முன்னியுள்ளவர்
இரக்கத்திற்கு உரியவர் தாம்.


[தொடரும்] 

__________________________________________________________________











இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

No comments:

Post a Comment