Saturday, October 21, 2017

கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்

முனைவர்.சுபாஷிணி



கொங்கற்புளியங்குளம். பண்டைய தமிழ் மக்களின் தொல் மரபுகள் தொடர்ச்சியாக இன்றும் பேணப்பட்டு வரும் ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பகுதி. இன்று காண்பதற்குப் பாறையும் புதர்களும் தானே இருக்கின்றன என நினைப்போர் உள்ளே சென்று பார்த்தால் வளமான தமிழர் தொல் பழம் மரபுகள் இன்று உயிர்ப்புடன் இங்குத் தொடர்வதை அறியலாம்.

மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.


பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புற வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.

ஒரு செங்குத்தான கல்லை வைத்து அக்கல்லைக் கடவுளாக உருவகித்து மாலைகள் பூசைப் பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த மாயன் வழிபாட்டினை நினைக்கும் போது நம் சிந்தனையில் தென் அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற நாடுகளில் இன்றைக்கு 4000 ஆண்டு வாக்கு எனக் கணக்கிடப்படும் மாயன் கலாச்சாரம் நினைவுக்கு வரலாம். பண்டைய மரபுகளில் இருக்கும் பல சடங்கு முறைகளில் இத்தகைய ஒற்றுமைகளை அதிகம் காணலாம். இவை ஆராயப்பட வேண்டியவை.

அத்தோடு சங்ககால இலக்கியத்தில் நாம் அறியும் மாயோன் என்ற கடவுளின் ஒரு கூராக இது அமைய வாய்ப்பிருக்கலாம் என்பதும் ஆராயப்பட வேண்டியதே.

இங்குள்ள மாயன் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் இறந்தோரை எரிக்கும் ஒரு சுடலை இருக்கின்றது. இங்கு மக்கள் இறந்தவர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் எடுத்துச் செல்லும் மரபு இன்றும் தொடர்கின்றது.

இந்தக் கோயிலுக்கு பின்னால் உள்ள பாறையில் தான் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சமண முனிவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வியும் கலையும் செழிக்கச் செய்துள்ளனர். அவர்களின் வாழ்விடமாக இங்குள்ள குகைத்தளம் அமைந்திருக்கின்றது. அங்கு முனிவர்கள் தங்க இடம் அமைத்துக் கொடுத்த நல்லுள்ளங்களின் பெயர்களை பண்டைய தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்.

உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.

முதல் கல்வெட்டின் பாடம்

குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)

இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.

2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்

குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.

மூன்றாவது கல்வெட்டுப் பாடம்

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.

இந்த முக்கியப் புராதனச் சின்னத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள் இங்கே பாறை உடைப்புப் பணிகளைத் தொடங்கி சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர். ஆயினும் இது தடுக்கப்பட்டு, இன்று கொங்கர்புளியங்குளம் புராதனச் சின்னங்கள் நாம் பார்த்து நம் வரலாற்றின் பழமையை நினைத்துப் பெருமைகொள்ளும் வகையில் இங்குள்ளன.

இங்கு வந்து செல்வோர் தங்கல் பெயர்களை கீறியும், கற்படுக்கைகளைச் சிதைத்தும் இச்சின்னங்களை அழிப்பது வேதனைக்குரிய விசயமாகும். இவை நம் சொத்துக்கள் என்று மனதில் உணர்ந்தால் இவற்றைச் சேதப்படுத்தும் எண்ணம் மனதில் எழாது. இதனை மனதில் கொண்டு இந்த வளம் மிக்க பகுதியை நமது பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றென உணர்ந்து பெருமை கொள்வோம்.

குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்

No comments:

Post a Comment