Thursday, January 10, 2019

அன்பான அய்யப்ப பக்தர்களே!

—  ருத்ரா இ.பரமசிவன்



இப்போதெல்லாம்
அந்த பக்தர்களின் இருமுடியில்
இருப்பதெல்லாம்
அந்த நீதிமன்ற தீர்ப்பும்
அதை வைத்து
கேரள ஆட்சிக்கலைப்பும் தானோ
என்ற "ஐயங்கள்" தான்
ஐயன் ஐய்யப்பன் மலை மீது
தவழும் மேகங்களாய்
தோற்றம் தருகின்றன.
ஒரு ஆத்மீக பூமி
என்று மார்தட்டிக்கொள்ளும்
இந்த தேசத்தில்
இப்படியொரு தீர்ப்பு
வரவழைத்திருப்பதிலும்
ஒரு விஷமத்தனமான‌
சாணக்கியத்தனம் இருந்திருக்குமோ
என்று
அச்சமும் திகிலும்
கொள்ளவேண்டியிருக்கிறது.
தேவதுவேஷமும்
ராஜதுவேஷமும்
சிரச்சேதத்துக்குரிய செயல்கள்
என்ற‌
"பாசிச யாகம்" வளர்க்க‌
என்ன தந்திரம் வேண்டுமானாலும்
இங்கே செயல் படுத்தப்படலாம்.

சுதந்திர வேட்கைக்குக் கூட‌
கபாலமாலை போட்டுக்கொண்டு
கோரப்பல் காட்டும்
காளியை முன் நிறுத்தி
பலி கேட்ட கட்சியினரின்
ஆட்சி அல்லவா இது!
அன்பான அய்யப்ப பக்தர்களே
ஐயப்பன் என்பது
புராணக்கதைகளின்
வெறும் உருவம் அல்ல.
அந்த மகர ஜோதி
தூய நெருப்பு.
ஏதோ ஒரு ரிஷியை
ஏதோ ஒரு நடனக்காரி
ரிக்கார்ட் டான்ஸ் ஆடி
மயக்கிவிட்டாள்
என்ற கட்டுக்கதை

அய்யப்பன்  என்ற
பிரபஞ்சப் பிழம்பிடம் பலிக்குமா?
நாம் நம்பும் இறைவனையே
இப்படியா
கொச்சைப்படுத்துவது?
பக்தர்கள் சஞ்சலப்படுவார்கள்
என்ற வாதம் இன்னும் அசிங்கமானது.
லட்சக்கணக்கான பக்தர்களின்
உருண்டு திரண்ட
அந்த "விரதத்தின்"கனபரிமாணம்
வெறும் பஞ்சுமிட்டாயா?
சிந்திப்பீர்.
வசதி வாய்ப்புகள்
மலையேறும் ஆபத்துகள்
என்பதெல்லாம் கூட
வெறும் கதை.

பெண்  சக்தி அவதாரம் எடுத்து
இப்போது தான்
அந்த அசுரர் கூட்டங்களை
வதம் செய்த நவராத்திரியை
பத்து நாளாய் கொண்டாடி விட்டு
வந்திருக்கிறீர்கள்.
நினைத்தால் நம்
"சக்தி பாரதத்துக்கு"
மோடி அவர்கள்
ஒரு மூவாயிரம் நாலாயிரம் கோடிகள்
ஒதுக்கலாமே
கங்கையை தூய்மைப்படுத்த
அத்தனை கோடிகளை
அள்ளிக்கொடுத்தது போல.
அன்பான அய்யப்ப பக்தர்களே !
அந்த இருமுடிகள்
வெறி கிளப்பும் காழ்ப்புணர்ச்சிகளின்
மூட்டை இல்லை என்று
நீங்கள் நிறுவ எண்ணினால்
உங்களுடன்
இந்த தாய்க்குலங்களையும்
அழைத்துச்செல்வதே
உங்கள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு.







தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)







No comments:

Post a Comment