Saturday, January 26, 2019

நார்த்தமலை - பெயர் விளக்கம்



—— நூ.த.லோக சுந்தரம்

source: https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d6/Naarthaamalai-13.jpg

          நார்த்தமலை நார்த்தம்புல் வளரும் மலை.  நாரத்தைப்புல் வளரும் இடம் ஆதலால் நார்த்தமலை எனப் பெயரிட்டனர்.  தமிழ் மக்கள் எப்போதும் இயற்கையை ஒட்டியே வாழ்பவர்கள் ஆதலால் ஓர் திணை எனக் கொண்டு பெயரிடுவர். 

          நரந்தம் ஓர் நறுமணப்பொருள்.  நரந்தம் என்றால் நாரத்தை (683 திவாகரம்) .
நாம் ஊறுகாய்க்கு நார்த்தங்காய் பயன்கொள்கிறோம். நரந்தம் ஓர் நல்மணம் மிக்கு நாறும் புல்லாகும்; எலுமிச்சை வாசனை வீசும்.  ஆங்கிலத்தில் லெமன்கிராசு என்பார்கள் (https://en.wikipedia.org/wiki/Cymbopogon_citratus). 

நார்த்தம்புல்:

source: https://en.wikipedia.org/wiki/Cymbopogon_citratus#/media/File:Gardenology.org-IMG_2892_rbgs11jan.jpg


          நரந்தம் உலக நறுமணப்பொருள் வாணிப நிரலில் பெரும்பங்கு வகிக்கின்றமையை நாம் உணர வேண்டும். தமிழகத்தில் பரவலாக மொட்டைக்குன்றுகள் பாறைகள் உள்ள இடங்களில் இப்புல்லை இயற்கையாகக் காணலாம். பாறைகளின் இடுக்குகளில் குத்துக்குத்தாக வளரும். ஓசூர், வேலூர், வேட்டவலம், திண்டுக்கல் போன்ற  பாறைக்குன்றுகள் உள்ள இடங்களில்  மிக்கு காண்பது தான்  இப்புல்வகை.  நேரடியாகக் கண்டும் உள்ளேன். நான் எப்போதும் இதனைக்கண்டவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வியப்பூட்டுவதற்கு இது புல்தானே எப்படி மணக்கின்றது எனக் கசக்கி முகர்ந்து பாருங்கள் எனக் காட்டுவது வழக்கம்.  தஞ்சையில் நடந்த கல்வெட்டு பயிற்சிப்பட்டறையில், பூலாங்குறிச்சி, திருமயம், சித்தன்னவாசல் முதலியவை சென்றபோதும்  இதனை சித்தன்னவாசலில் கண்டவுடன் பலருக்கும் காட்டினேன். விவசாய மக்கள்/பல்கலைக்கழகங்களும் அவ்வப்போது  ஓர் பணப்பயிராக வளர்க்க விளம்பரம் செய்துள்ளனர். 

          இஃது சங்க நூல்களில்  மிக்கு பரவலாக பேசப்படும் பொருளாவதும் காண்க. இந்தப் புல்லினை மேய்ந்த கவரிமானைக் காட்டும் புறம் 136 வரியினைக் காண்க.  மற்ற 17 வரிகளிலும் நரந்தம் நறுமணப் பொருள்களுடன் தனித்தோ உடனோ வருவது காணலாம்.  இதனை மக்கள் முதல்  அரசர் வரை ஓர் நறுமணப் பொருளாகவே பயன்கொண்டுள்ளமை காண்க.

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - 94 குறிஞ்சிப்பாட்டு 
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக - 553 மதுரைக் காஞ்சி
நறையும் நரந்தமும் அகிலும் மாரமும - 237 பொருநர் ஆற்றுப்படை 
நரந்த நறும்பூ நாள்மலர் உதிர - 141 அகநானுறு 
நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல் - 266 அகநானுறு
 
நரந்த  நறும்புல் மேய்ந்த கவரி - 132 புறநானூறு
 
நரந்தம் நாறும் தன் கையால் - 236 புறநானூறு
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய - 302 புறநானூறு
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது - 54 கலித்தொகை
நரந்த  நாறுங் குவையிருங் கூந்தல் - 52 குறுந்தொகை
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய் - 7 பரிபாடல் வையை 
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே - 16 பரிபாடல் வையை
பரந்திலங் கருவியொடு நரந்தம் - 11 பதிற்றுபத்து
நாகம் நாறு நரந்தம் நிரந்தன - 12 வேட்டுவ வரி, உரைப்பாட்டுமடை, சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்
நரந்தமும் நாகமும் பரந்து அலர்- மலர்வனம் புக்க காதை, மணிமேகலை
நரந்தம் என்பது நாரத்தை நாறும் - சூடாமணி நிகண்டு
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் - 12.78
நாகம் சூதம் வகுளம் சரளம்சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் - 12.239  






தொடர்பு:  மயிலை நூ த லோ சு / நூ.த.லோக சுந்தரம் (selvindls61@gmail.com)



No comments:

Post a Comment