Thursday, January 10, 2019

முகங்களின் ‘ஒரு ஊர்ல…!?’ நாடகப்பதிவு

  கோ. பழனி




வண்ணங்கள் குழைத்து
வானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம்
எங்கள் கைகள் முடக்கப்படுகின்றன.

குதித்து குதித்து குதித்து
எல்லைத் தாண்டி பறக்க
முயல்கிறோம் – எங்கள்
கால்கள் தறிக்கப்படுகின்றன.

‘ஓ’ வென்று ஓசையிட்டு வீதிதொரும்
ஓட்டமெடுக்கும் எங்களுக்கு
‘இந்த சனியனுங்க ஏன் இப்படிக் கத்துதுங்க….!?’
என்கிற எதிர்க்குரல்கள்
கடிவாளங்கள் இடுகின்றன.

ஏன் இப்படி? ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் எங்கள் உலகில் வாழ ஆசை.

“இந்தப் போட்டி உலகத்தில் நீ எப்படித்தான் பொழைக்கப் போறீயோ?”

என்று சொல்லும் பெரியவங்களுக்கு, ‘நீங்களும் எங்களைப்போல இருந்து, சில காலம் கழித்த பிறகு தானே, இந்தப் போட்டி உலகத்துல வாழுறீங்க? அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே!’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே! வயசுக்கு ஏத்தமாதிரி பேசு’ என்கிற அதட்டல் குரலோ, குட்டலோ, அடியோ எங்களை அடக்குகிறது.

ஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை நீங்கள் எங்களுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ‘வளர்ந்துவிட்டால் எல்லோரும் இப்படி ஆகிப்போகிறார்களே…! நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ!’ என்கிற அச்சம் எங்களுக்கு மேலெழுகிறது.

‘வேண்டவே வேண்டாம்…   இப்படியே இருந்துவிடலாம்’

என்பது போன்ற எண்ணம் எங்களுக்கு எழுகிறது. அது சாத்தியமில்லை தான்.

எங்கள் வயதிற்கேற்ப எங்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி  – மத பேதங்கள், ஏழை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் எங்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள்.

‘எனக்குக் கிடைக்காத அனைத்தையும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்கிற உங்களது உயரிய எண்ணத்தில் தயைகூர்ந்து எங்களது குதூகலமான, கொண்டாட்டமான, சுதந்திரமான உலகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… நாங்கள் நாங்களாகக் கொஞ்ச காலமாவது, எங்கள் உலகத்தோடு வாழ வழிவிடுங்கள்.

ஒரு ஊர்ல…!? சிறார்களின் மேற்கண்ட எண்ணங்களை, ஆதங்கங்களை, வேண்டுகோள்களை முன் வைத்து நகர்கின்றது. சிறார்களின் உள்வெளியில் பொதிந்து கிடக்கும் படைப்புலகம் பெரியோர்களால் (அறிந்தோ அறியாமலோ) நிராகரிக்கப்படுவதையும் அவர்களின் அத்துமீறிய செயல்களால் சிறார்கள் சிதைவுறுவதையும் சித்திரிக்கிறது ஒரு ஊர்ல…!?







No comments:

Post a Comment