Thursday, October 18, 2018

தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் கருத்தரங்கம் - நிகழ்வுத் தொகுப்பு

—   இரா.குமரகுருபரன்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று உலகப்பொதுமறை கூறும். தமிழகத்து நாட்டுக்கலைகளில் சதிர் மறைந்து பரதநாட்டியம் வளர்ந்தது.  சமஸ்கிருதம் நல்ல கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வெற்றிகண்டது. பரதக்கலை இதைப்பின்பற்றியது. சரித்திரமற்ற அகதிகளாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருவது போன்று, பூர்வகுடித்தொடர்பின்றி  உள்நாட்டில் தமிழ்மக்கள் அகதிகளானோம்! நம்மை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி ஐடி துறை சம்பாத்தியத்தில் தமது நேரம் சக்தியைச் செலவிடுவதற்குப் பதிலாக தமிழ்ச்சேவை செய்து வருகிறார்!... அவருடன் நானும் அமெரிக்காவின் 'பெட்னா' கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்திய ஆட்சிப் பணி வகிக்கும் திரு. த. உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறை வந்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தை அளித்துவிட்டு, தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு, கீழடி ஆய்வுக்கு நிதியுதவி பெற்றுத் தந்திருக்கிறார்!... தமிழக அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களும் கீழடியில் தனிக்கண்காட்சிக்கூடம் அமைய இடமொதுக்கி உதவிவருகிறார்.

கீழடி மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் நாட்டியப்பெண், கொற்றவை சிற்பங்கள் கிடைத்துள்ளன. வீரமிகு பெண்கள் வழிபாடு  இது. மூத்தோர் வழிபாடு வேறு, மதநம்பிக்கை வேறு. ஆய்வுகள் மூலம் உண்மைகள் வெளிவரும். 

திருவள்ளுவர் சமணத்துறவி என்று ஆய்வுகள் கூறுகின்றன. 'இலக்கியம் இருண்ட காலம்' என்பதாகச் சொல்லப்படும் களப்பிரர் காலகட்டத்தில்தான் திருக்குறள், சமணக்காப்பியங்கள் சிலப்பதிகாரம், வளையாபதி, பவுத்தக் காப்பியமான மணிமேகலை எழுதப்பட்டன!

மொட்டையடித்த சமணத்துறவிகள் சிலைகள் முருகன்- வள்ளி -தெய்வானை என்று மாற்றப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  ஆளுகின்ற அரசு ஆதரவுடன் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல, ரோமிலுள்ள பாந்திய மதக் கோவில், கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது! சமுதாயச் சூழலில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

பல்துலக்க உப்பும் சாம்பலும் உபயோகித்த நமது மக்களைக் கிண்டல் பண்ணிவிட்டு, "உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா?" என்று கேட்டு வசதியாக விற்பனை செய்கிறது நவீன மார்கெட்டிங் தொழில்நுட்பம்!... இதையும் நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம்!... தற்காப்புக் கலையான சிலம்பம் பொழுதுபோக்குக் கலையானது!"புதியன புகுதலும் பழையன கழிதலும்!"... எதை ஏற்பது? எதைக் கழிப்பது? இது எளிதான காரியமல்ல. 

"பாரடைஸ் லாஸ்ட்" காவியக்கவிதை எழுதிய ஆங்கிலக் கவி ஜான் மில்டன்  சொல்வது போல, 'தேர்ந்தெடுத்த அறிஞர்கள்' மூலம் நம்மை நாமே மீட்டெடுக்கும் முயற்சிகள் கட்டாயம் தேவை. மனதில்  உறுதியுடன் பயணிப்போம்." என்ற திருமிகு கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப. (ஓய்வு)  வாழ்த்துரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை, சங்கம் -4 ஒருங்கிணைப்பில் "தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடல் நிகழ்வு, ஆனந்தன் (முரசு) குடும்பத்தினர் பறையிசை முழங்க,  சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையிலமைந்த தமிழ் மையத்தில், அக்டோபர் 14, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

தமது நெறியாள்கையில், "நல்ல தெளிவுடன் தமிழுக்கான சிறந்த முன்னெடுப்பு, நாட்டுக்கலை பற்றிய திருமிகு பாலச்சந்திரன்  அவர்கள் ஆற்றிய உரை" என்று தமிழ்மரபு  அறக்கட்டளைத் தலைவர் முனைவர் சுபாஷிணி குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், "தமிழ்புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை  தமிழகம் மட்டுமின்றி மலேசியா, ஐரோப்பிய நாடுகள், கனடா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஏற்படுத்துவதில் தமிழ்மரபு  அறக்கட்டளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் கிடைக்கும் தமிழ்மரபுச் சுவடுகள் மூலம் முன்னோடிகள் பங்களிப்பை அறியமுடிகிறது. அமெரிக்காவின் பெட்னா நிகழ்வில் பறையிசையுடன் தொடங்கியதைப்போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

காந்தி, கவுதம சன்னா  உள்ளிட்ட வழக்கறிஞர்கள்  சான்றுகளுடன் ஆராய்ந்து,  உண்மைகளை வெளிக்கொணர்கின்றனர். இது வரப்பிரசாதம். நாடகக்கலையில் கவுதம சன்னா எழுதிய "மத்தவிலாச மறுப்பு என்னும் சுத்த விலாச விவேகம்" எனும் மறுப்பு நாடகப்பனுவலின் பகுதிவாசிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள மு. புருஷோத்தமன், பேரா. டே. ஸ்டான்லி, க.வெங்கடேசன், கவிஞர் முத்துக்கந்தன் பேரா. பிரபாகரன் ஆகியோரை வரவேற்கிறேன். ஓவியர் 'சந்ரு' வரைந்த ஓவியங்களுடன் எனது முன்னுரையுடனும் தயாராகிக் கொண்டிருக்கும் நூல் அது" என்று தெரிவித்தார். பிரஹசனம் இலக்கியத்தில் கேலி வகைமையில் அமையும். கி.பி. 590-630 ஆண்டுகளில் மகேந்திரவர்மபல்லவன் எழுதிய மத்தவிலாச பிரஹசனம் நாடகப்பனுவலில் காபாலிகர்கள், பவுத்த பிக்குகள், காளாமுக சைவர்கள் பாத்திரங்கள்  இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பனுவல் வாசிப்பு நிகழ்ந்தது.  

"தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடலில்  சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழிலக்கியத் துறை  இணைப்பேராசிரியர் கோ. பழனி, திருப்பூர் எல்ஆர்ஜி. அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ஜா. அமைதி அரசு, சென்னை மாநிலக் கல்லூரிப்பேராசிரியர் இரா. சீனிவாசன், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் மு. செல்லன், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் க.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  

"கண்ணப்பத் தம்பிரான் வழிவந்த சம்பந்தன் இரணியவதம் தஞ்சை மாவட்டப் பதிவு ஆகும்.  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வ. அய். சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்த காலத்தில் கேரள கதகளியானாலும் யக்ஷகானம் ஆனாலும் கலைஞர்களுக்குப் பாகுபாடின்றி ₹ 6000 வழங்கி, கூத்து, அடவுகளை
ஆவணப்படுத்தினார். தப்படிக்கும் ஆதிக்கலை நாடகாசிரியர் சே. இராமானுஜம் முன்முயற்சியில் கல்லூரிகளில் பிரபலமானது. நந்தன் கதை நாட்டார் கலையானது. குடவாயில் பாலசுப்பிரமணியன் பங்களிப்பும் முக்கியமானது.  மனுநீதி ராஜா கதை மீட்டுருவாக்கம் காத்திரமானது.  இழவுவீட்டில் தப்பு அடிப்பவன் காசு கொடுப்பவன் முகம் பார்த்துக் கொண்டே அடிக்கவில்லை என்றால் பிழைப்பில்லை...இது தெரிவது அவசியம்...பிரகலாத சரித்திரம் அமுதுப்படையல், அரவான், அரிச்சந்திரன் குறித்த பதிவுகள் உண்டு. பாடல்கலைஞர்கள் ஏற்பாட்டில்  'தவளை பஸ்கி', கம்பு சுற்றுதல், பின்னல்  ஆட்டம். மார்ஷல் கலைகள், சவுராஷ்டிரர்களின் பஜனைமடம், ருக்மாங்கதன் ஏகாதசிப் பட்டினி (மாமியார் மருமகள்) ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று அமைதி அரசு வலியுறுத்தினார். 

கோ. பழனி கருத்துரையில் "அருகிவரும் லாவணிக்கலை குறித்து அக்கறை தெரிவித்தார். சடங்கிலிருந்து விலகிச் சென்றால் இக்கலையைக் காப்பாற்ற முடியாது. வடிவம் சார்ந்த மாற்றம் புதுப்பித்தலில் கவனம் வேண்டும்.வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்திய பாணிகள் உள்ளிட்ட உட்பிரிவுகள் இதில் உண்டு.  107  கலைஞர்கள் களஞ்சியத்தை நான் தொகுத்துள்ளேன். அறியப்படாத படைப்பாளிகள்,  36  பழங்குடியின மக்கள் மொழிகள் ஆவணப்படுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார். 

இரா. சீனிவாசன் கருத்துரையில்,  "நாட்டுப்புறக் கலை ஆய்வுகள் பனுவலாகவும் காட்சிவடிவக் கலைகளாகவும் பதியப்படவேண்டும். கோட்பாட்டுச் செல்நெறிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். எம்.டி. முத்துக்குமாரசாமி (நாட்டாரியல் மையம்) பங்களிப்பு காத்திரமானது. நரிக்குறவர் குடும்பங்களுக்குப் பயிற்சி, ஒப்பனை, கலைவடிவக் கருவிகள் செய்ய ஏற்பாடு, ஆபரணப் பனுவல்த் தொகுப்புருவாக்கம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் தேவை. வட்டார அளவில் கலைகள் பராமரிப்பது அவசியம். லாவணியில் 100  பாணிகள்  உண்டு. அறிவுபூர்வமாக அறிவார்ந்த புலமை தானாகத் தோற்றுவாயிலிருந்து உருவாக வேண்டும். எனது ஆய்வு  தொண்டை மண்டல கதைப்பாடல்களில்தாம். முத்துப்பட்டன் கதை, கதைப் பாடல்களாக (ballads) வழங்கப்படுகிறது. தோற்பாவைக்கூத்துக் கலைஞர்கள் இரவு பத்து மணிக்குத் தொடங்கி, காலை ஐந்து மணிக்கு முடிப்பதுண்டு...ஒரே கலைஞரும் இதைச்செய்வதுண்டு!  பெண்கள் பகுதிக் கதைப்பாடல்களில் மூக்குச்சந்திரன் உருப்பாட்டு முக்கியமானது.  இதில் பனுவலை  உளவியல் ரீதியாக  மேம்படுத்துவது (improvisation) பெண்களே" என்று குறிப்பிட்டார்.

செல்லன் தமது கருத்துரையில், "உள்ளூர்க்கதை மறைக்கப்படுதலைப் பாளையங்கோட்டை நாட்டாரியல் மையம் கூத்துக் களஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சமகாலச் சிந்தனை மாற்றம் முக்கியமான விஷயம். தோலினால் பறைசெய்யப்படுவது மறைந்து, செயற்கைத்தோலினால் (fibre) ஆக்கப்படுகிறது. கூத்து 'காஸ்ட்யூம்' ஆய்வில் வைக்கோல் ஆடைகள், கஞ்சிப்பசையிட்ட பருத்திச்சேலைகள் வரவு ஆகியவற்றால் அரை கிலோவாகக் குறைந்து பிளாஸ்டிக் வடிவில் வந்து விட்டது தெரியவருகிறது. இனக்குழு வகைமை பரிணாமம் 
( Ethnic type evolution) ஏற்பட்டுவிட்டது.  ஆற்காட்டுப் பாணி தெருக்கூத்துக்கலை திரௌபதையம்மன் கோவில் இருக்குமிடங்களில் ஜீவிக்கிறது. பத்தாயிரம் கலைஞர்கள் உண்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், புதுவை, அரியலூர் (ஒருபகுதி ), ஆந்திரா, ஈழம்(வடமொழி,தென்மொழி, மலையகத்தமிழர் கூத்துகள் ) உள்வேறுபாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இதில் கல்வராயன் மலைக்கூத்துக் குழுக்கள் கோவையிலும், கன்னடம் பேசும் கலைஞர்கள் நிகழ்த்தும் கூத்துகளில் இரணியன் கூத்திலும் வேறுபாடு ஏற்பட்டது. குரும்ப இளைஞர்கள் ரத்தத்திலேயே கூத்து கலந்துள்ளது. ஒருசிலரே பெண் கலைஞர்கள்;  அரவாணிகள் பெண்பாத்திரங்கள் தாங்கி நடிக்கின்றனர்!" என்று குறிப்பிட்டார். 

நாட்டார் பாடல்களைப்பாடி விளக்கத்துடன் தகவல்களை வழங்கினார் க.வெங்கடேசன். 

தகவல் வங்கி, இணைந்தவகைச் செயல்பாடு (Network), கல்லூரிகளில் நான்கு அல்லது ஐந்து துறைகள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்துவது, வாட்ஸப் குழு அமைப்பு, 'தமஅ' தொழில்நுட்பப் பயிற்சி நடத்துவது, புலம்பெயர்ந்தோருக்கான குழு அமைப்பு, விழிப்புணர்வுக் கருத்தரங்கம், கருவிகள்/காட்சிப்படுத்துதல், மரபுவிளையாட்டுக் கலைக்கண்காட்சி, பேருந்து ஏற்பாடு ஆகிய முதல்கட்ட நடவடிக்கைகளை எடுக்க, தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி முன்மொழிந்தார்.  இன்னம்பூரான், சந்திரபோஸ், சவுந்தரராஜன்,  குமரகுருபரன், லோகநாதன் ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்கினர். ஸ்ரீதேவி உதயன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.  காந்தி, கவுதம சன்னா ஆகியோர் ஏற்பாடு உதவி செய்தனர். அசோக்,  சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோர் அரங்கப்பணியில் உதவினர்.

அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய ஜகத் கஸ்பர், நிகழ்வுக்கு உதவிய கோ. பாலகிருஷ்ணன், இஆப உள்ளிட்ட ஆளுமைகளுக்கும் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும்  முனைவர் சுபாஷிணி நன்றி கூறினார். 





No comments:

Post a Comment