Sunday, February 28, 2016

குறுந்தொகையில் புதுக்கவிதை படைக்கலாம்

 --திருத்தம் பொன்.சரவணன்.


இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே
-- குறுந்தொகை 123


நீ வரல, அவிங்கெ வந்துட்டாய்ங்கெ

நடுராத்திரி இருட்டு மாதிரி ஒரு நெழலு
நெலாவே காயறமாதிரி வெள்ள மணலு
புன்னமரச் சோலையில பூத்திருக்கு உன்ரோசா
அண்ணனுங்க வாராய்ங்க படகுல வெரசா
இன்னமும் நீஏன் வரல என்ராசா?




பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122


எப்போது விடியும்?

வெள்ளக்கொக்கு முதுகு மாதிரி ஆம்பலு
வாடுறத பாக்கையிலே நோவலு
பொழுது போயி வந்துடுச்சே சாந்தரம்
அதுவும் போயி விடிவதெப்போ சீக்கிரம்?




யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே  
-- குறுந்தொகை 40


செங்காட்டு மழத்தண்ணி

எங்கம்மாவுக்கு ஒங்கம்மா என்ன சொந்தம்னு தெரியல
எங்கப்பாவுக்கும் ஒங்கப்பாவுக்கும் என்ன பந்தம்னும் புரியல
நீ யாரோ இங்க நான் யாரோ அதுவும் தெரியல ஆனா
செங்காட்டுல பேஞ்ச மழத்தண்ணி மாதிரி சேந்து
ஒண்ணா கலந்துருச்சி நம்ம மனசு இப்பலேர்ந்து.




யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே   
-- குறுந்தொகை 54


உசுரு மிச்சமிருக்கா?


கட்ட மட்டுந்தான் இங்கிருக்கு என்ராசா தோட்டத்துல
கவட்டச் சத்தங்கேட்ட காட்டுயானை பயத்துல
கைவிட்ட மூங்கிமரம் நிமிந்தது சுருக்கா
சுண்டிவிட்ட மீன் தூண்டில் கணக்கா
கொண்டுபோனியே என்உசுர மிச்சந்தான் இருக்கா?




பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து           
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே 
-- குறுந்தொகை 57


உடம்பு ரெண்டு உசுரு ஒண்ணு


உடம்பு ரெண்டா உசுரு ஒண்ணா இருந்ததே
கடம வந்து நம்மள வேறாப் பிரிக்குதே
நீந்துறச்சே பூவொண்ணு நடுவுல வந்தாலும்
தாந்துணையக் காணாமே அன்றிலு தவிக்குமாம்
உன்ன விட ஒண்ணும் எனக்கில்ல பெருசாவே
என்ன நீ பிரிஞ்சா உசிரில்ல ராசாவே !




இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
-- குறுந்தொகை 58


என் உசிரும் போயிருமே


கரும்பாற மேலத்தான் கண்கூசுற வெயில்லதான்
காயவெச்ச வெண்ணெக் கருவாட்டுத் துண்டத்தான்
கையில்லா ஊமையன் காப்பாத்த முடியுமாலே?
என்னக் காப்பாத்த ஏங்குறஎன் நண்பர்களே
கருவாட்டுத் துண்டெல்லாம் காக்கா தின்னுருமே
காதல் நோயாலே என்உசிரும் போயிருமே !!!




கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே
-- குறுந்தொகை 103


ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்

ஆத்துத் தண்ணியில ஓடுகிற மீனத்தான்
சேத்து மண்ணுமேல நின்னுக்கிட்டு புடிக்கத்தான்
முருக்கம் பூவாட்டம் முதுகுள்ள நாரப்புள்ள
பொறுத்துக் கெடக்கையிலே பேஞ்சதடி சாரமழ
பாவம் அந்நார நடுங்குனதப் போலஎன்
ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்!!!




புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே
-- குறுந்தொகை 105


கண்ணீர் பெருகுதடி

தோட்டக் காவலுக்கு இருந்துவந்த சாமிக்கி
தெனமு படச்சிவந்த தெனயத்தான் வெளாட்டுக்கி
தின்ன மயிலொண்ணு சாமியாடி போலத்தான்
முன்னும் பின்னுமா ஆடுனதே நடுங்கித்தான்
இன்னும் இருக்குதடி அந்நெனப்பு போகலியே
கண்ணீர் பெருகுதடி காதலனக் காணலியே. !!!




குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே
-- குறுந்தொகை 107


இது என் சாபம் !

செங்காந்தள் பூப்போல கொண்டையுள்ள சேவலே
கொக்கரக்கோ என்றுநீ செய்துவிட்டாய் கூவலே
என்காதல் கணவனுடன் நானிங்கு மகிழ்ந்திருக்க
இன்பம்தான் போனதிங்கே விடிந்ததென்று நீயுரைக்க
எலியைப் பிடித்துண்ணும் பூனையின் கைகளிலே
வலுவாய் அகப்பட்டுத் துன்புறவே இரவினிலே
ஒழிவாய் இரையாகி இது என் சாபம் !




குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
-- குறுந்தொகை 127


இங்கிருந்து கெளம்புநீ

நாரஒண்ணு கெண்டமீனக் கொத்தித்தின்னப் பாத்துச்சாம்
நீருக்குள்ள கெண்டமீனு முழுகிஓடிப் போய்டிச்சாம்
போனமீனு தலையதூக்கி மேலஎட்டிப் பாத்துச்சாம்
பாத்தமீனு பக்கத்துல இருந்தவொரு தாமர
நாரமூக்கு போலிருக்க பயந்ததாம் உள்ளார
நாரபோல ஒம்பாணன் கூறுகெட்ட புளுகுணி
வேறபாணன் வேண்டாமய்யா இங்கிருந்து கெளம்புநீ.




காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே
-- குறுந்தொகை 136


கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!

காதல் ஒருநோய் என்பார் சிலர்
காதல் ஒருபேய் என்பாரு முளர்
உண்மையான காதல் இவ்விரண்டு மன்று
மென்மையான காதல் கூடிக்குறைவ தன்று
மதம்பிடித்த யானை மரத்திலையைத் தின்று
மகிழ்ந்தருகே தங்கும் காதலதைப் போன்று
கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!




அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடுஒல்லாவே. 
-- குறுந்தொகை 5


காதலொரு நோவே தான் !!!

புன்னமரக் கெளமேல ஒறங்குதடி குறுநார
மன்னவனக் காணாமே கலங்குதடி உள்ளார
கடலுதண்ணி தெறிக்குதடி புன்னமர இலமேல
கண்ணீரு வழியுதடி அந்தமர இலபோல
ராவெல்லாம் முழிச்சிருக்கேன் ராசாவக் காணத்தான்
சும்மா சொல்லலடி காதலொரு நோவேதான் !!!




நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே 
-- குறுந்தொகை 202


நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில

நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில
நெருஞ்சிப் பூவெல்லாம் அழகாத் தெரிஞ்சாலும்
நெருங்கிப் பறிக்கயிலே முள்ளு குத்திடுமாம்
நெருஞ்சிப் பூவாட்டம் எனக்கு இனிச்சவரே
நெருஞ்சி முள்ளாட்டம் நோவும் கொடுத்தாரே
நெஞ்சு நோவுதடி நெனக்காமப் போனாரே !!!




யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே
-- குறுந்தொகை 152


குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!

அடகாக்க முடியாத முட்டையப் போலத்தான்
அவிஞ்சே போயிடுமோ என்னோட காதலுந்தான்
ஆத்தா மொகம்பாத்தே வளருமடி ஆமக்குஞ்சு
அத்தான் மொகம்பாக்க ஏங்குதடி என்நெஞ்சு
குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!




காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே 
-- குறுந்தொகை 204


காதலுக்கு பேதம் கிடையாது !!!

காதலொரு நோயென்பார் பேயென்பார் அறியார்
காதலொரு விருந்தாகக் களிப்பாரே பெரியார்
கரிந்த மேட்டினிலே முளைத்த புதுப்புல்லை
கிழட்டுப் பசுநக்கித் தின்பதில் வியப்பில்லை
காதல் எப்பொழுதும் புதுப்புல் போலத்தான்
பேதம் அதற்கில்லை இடத்திலும் வயதிலுந்தான் !!!




செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
-- குறுந்தொகை 207


ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!

சொல்லிட்டுப் போனாக்க பிரிஞ்சிவர முடியாதுன்னு
சொல்லாமப் போனாரே என்ஆச ராசாக்கண்ணு
ஓம மரத்துமேல ஒத்தப் பருந்தோட
ஓச வழித்தொணயா ஒதுங்கி நடக்கையில
காலு சுட்டுடுச்சாம் காஞ்ச பூமியில
காலு சுட்டதுல கொப்புளிச்சுப் போனதால
காட்டு வழியெல்லாம் காலுவெக்க மாட்டாம
தாவிப் போனாராம் தங்கமான என்ராசா
ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!




No comments:

Post a Comment