Monday, February 1, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 9

-செல்வன். 





பேரா யூகோ: வெற்றிபெற மற்ற சாதியினரின் ஓட்டுக்களும் வேண்டும். அது விடுதலைச் சிறுத்தைகள் அல்லது புதிய தமிழகம் என எக்கட்சியாக இருப்பினும் சரி. நீங்கள் இப்போது தமிழ் தேசியத்தைப் பற்றி அதிகம் பேசி தலித் அல்லாதவர்களைக் கட்சியில் சேர்த்துப் பொறுப்புக்களை வழங்குகிறீர்கள். இது குறித்து கொஞ்சம் கூறமுடியுமா?

சன்னா: நீங்கள் சொன்னதுபோல தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தைப் பார்த்தால் அவர் தலித்துகளை "பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை" எனக் குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆகத் தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரணமாக அம்பேத்கர் துவக்கிய "சுதந்திர தொழிலாளர் கட்சியில்" தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை "எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக" மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுக் கட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

இந்த வேறுபாடுகளைப் பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலாளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கல்லாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளைக் கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையும் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலைச் சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளைத் துவக்கி, பொதுமக்களைத் திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களைத் திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தைத் தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது எனக் கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட போது அனைவரும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்குக் குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% எனக் கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்துத் தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்த்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தைக் கையில் எடுக்கிறார்கள். தமிழ்த் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

இதைச் சொல்கையில் தமிழ்த் தேசியம் பேசும் பிற அமைப்புகளைச் சந்தேகத்துடன் பார்த்து அவை எந்த அளவு இதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டி உள்ளது. அவ்வமைப்புகள் அரசியலில் இறங்கியபின்னரும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள். அரசியலில் இறங்கியபின்னர் தமிழ்த் தேசியம் பேசும் அவசியம் இல்லை எனும் நிலையிலும் அவர்கள் இதைப் பேசுவது நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்த் தேசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு அங்கீகாரத்தையும் மக்களின் ஏற்பையும் பொதுவான அரசியல் தளத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இது அங்கீகாரமும் பெற்றுள்ளது.

1998ல் இருந்து 2008ம் ஆண்டுவரை அவர்கள் தமிழ்த்தேசியத்துடன் ஒடுக்கப்பட்டவருக்கான தலைமையைக் குறித்தும் பேசினார்கள். தொழிலாளர் இயக்கங்கள் எப்படிப் பிற தொழிலாளரைத் தலைமை தாங்க அழைத்தார்களோ அதே போல ஒடுக்கப்பட்டவரே ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவராக இருந்து தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும். அந்தக் காலகட்டத்தில் சில இடைநிலை சாதிகளும் இவ்வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலித் தலைமையை பற்றிப் பேசினாலும் கட்சியில் தலித் அல்லாதவர்கள் இல்லை. இதைப்பற்றிப் பேசினாலும், பேசாவிட்டாலும் கட்சியில் தலித்துகளே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கட்சியை ஜனநாயகப்படுத்தி, தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள தலித் அல்லாதவர்களைக் கட்சிக்கு கொண்டுவந்தாலே தலித்களின் தலைமை என்பது சாத்தியப்படும். இந்த அடிப்படையில் தான் அவர்கள் 2008ம் ஆண்டு ஒரு கொள்கையை முன்வைக்கிறார்கள்

பேரா யூகோ: வேளச்சேரி (விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைமையகம்) பிரகடனமா?

---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment