Tuesday, February 2, 2016

கடைவெண் மலைக் கோட்டு நடுகல்

--சேசாத்திரி சிறீதரன்.


படம் உதவி: Arunkumar Pankaj
இந்தச் சிலை கச்சிராப்பாளையம் அருகில் வேடியப்பன் என்ற பெயரில் வழிபடும் நடுகல் ஆகும்.
"கடைவெண் மலைக் கோட்டு வேட்டுவரு இருவாய் தொளுக் கொண்டு பட்டான் கம்பாடரு மகன் சாமிக்கல்" - by   Arunkumar Pankaj
 நடுகல் தரும் செய்தி கடைவெண்மலைக் கோட்டு வேட்டுவருடைய இருவாய் (மலைப்பறவை) கூட்டத்தை (தொறு) கைப்பற்றி வீரசாவடைந்த கம்பாடர் என்பானுடைய படையாள் நினைவில் எழுப்பப்பட்ட வழிபாட்டுக்கல் என்பதே. தொறு அடிமைப்படுத்திய (tamed) என்ற பொருளில் இங்கு வழங்குகிறது. ஆநிரையை இச்சொல் இக்கல்வெட்டில் குறிக்கவில்லை

இந்நடுகல் இறந்தவர் நினைவில் வழிபாட்டுக் கல்லாக வைக்கப்பட்டுள்ளதால் இறந்தவர் உட்பட எவருடைய பெயரும் இதில் குறிக்கப்படவில்லை. குறிப்பாக வேந்தர், மன்னர், அதியரைசர் அவர்க்கு  சேவர் கோன் என எவர் பெயரும் இடம்பெறவில்லை. கம்பாடர் என்பது சிலம்பத்தில் வல்லவர் எனப்பொருள்படும். அது ஆள் பெயர் அல்ல  என்பது தெளிவு. சிலம்பாட்டம் > கம்பாட்டம்.

இன்று காடைக் கோழி வளர்ப்பு போல வேட்டுவர் இருவாய் எனும் பறவையை உணவு முதலானவற்றுக்கு வளர்த்திருக்க வேண்டும். அதைத் தான் வழிபடுநடுகல் மறவர் தம் கூட்டத்தாரோடு சென்று கவர்ந்து வந்துள்ளார். இவ்வினையில் ஈடுபட்டபோது இந்த நடுகல் மறவர் வேடுவரின் தாக்குதலுக்கு ஆட்பட்டு இறந்துள்ளார் என்றாலும் இவருடன் சென்ற கூட்டத்தார் தம் கொள்ளைவினையில் வெற்றிபெற்றனர்.

தமிழில் சாமி என்ற சொல் தெய்வத்தைக் குறிக்கும் ஆனால் சமற்கிருதத்தில் சுவாமி தலைவன் என்று பொருள்படும். சாமி என்ற தமிழ்ச் சொல் சுவாமி என்ற சமற்கிருத சொல்லில் இருந்து தான் வந்தது என்கின்றனர். ஆனால் எளியோரின் கல்வெட்டில் சுவாமி > சாமி என்ற சமற்கிருத சொல் இடம்பெறுவது இயலாதது. ஆதலால் 7 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் இச்சொல் இடம்பெறுவது "சாமி" என்ற சொல் சமற்கிருத சுவாமி என்ற சொல்லில் இருந்து வந்ததல்ல என்று தெளிவாக்குகிறது.



___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
 




No comments:

Post a Comment