Saturday, February 27, 2016

ராஜா தேசிங்கு


 --கோ.செங்குட்டுவன்.

"தேஜ் சிங்”, “ஜெயாசிங்”, “தஜாப்சிங்” - இப்படித்தான் ஆங்கிலேய ஆவணங்கள் உச்சரிக்கின்றன. ஆனால், நாம் அழைப்பது ராஜா தேசிங்கு அல்லது தேசிங்கு ராஜா. இந்த ரஜபுத்திர இளைஞனுக்கு வயதோ 21. செஞ்சி மண்ணில் ஆட்சிசெய்தது, மொத்தமே 10 மாதங்கள்தான். ஆனால் வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார்.

இவனதுத் தந்தை சொரூப் சிங். முகலாய மாமன்னன் ஔரங்கசீபின் புண்டேலா (பன்டேல்கன்ட்) தளபதியாக இருந்தவர். 1700 ஜனவரியில் செஞ்சியின் ஆளுநராக சொரூப்சிங்கை நியமித்தார் ஔரங்கசீப். இப்போது அவரது ஆளுகையின் கீழ் வழுதாவூர், திண்டிவனம், திருவாமாத்தூர், அசப்பூர், திருக்கோவலூர், வேட்டவலம் ஆகியப் பகுதிகள் அடங்கியிருந்தன. நாம் இங்குப் பார்க்கப்போவது ராஜா தேசிங்கு குறித்து என்பதானால், சொரூப்சிங்கை விடைபெற வைக்கலாம் எனக் கருதுகிறேன். 1713 இறுதியில் அல்லது 1714 தொடக்கத்தில் இவர் இறந்திருக்கலாம். அப்போது பேரரசுக்கு இவர் நிலுவையில் வைத்திருந்த வரி 70லட்சம் ரூபாய்.

தந்தையின் மரணச் செய்தியறிந்து, பண்டேல்கன்ட்டில் இருந்து தனது இளம் மனைவி இராணிபாயுடன் செஞ்சி விரைந்து வந்தார் ராஜா தேசிங்கு. தந்தைக்கான இறுதிக் காரியங்களை செய்தக் கையுடன், 1714 ஜனவரியில் செஞ்சி அரசுக்கானப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். “என்ன இருந்தாலும் ஆற்காடு நவாபிடம் அனுமதி பெற வேண்டாமா?” உடனிருந்தவர்கள் தயக்கத்துடன் கேட்டனர். ”என் தந்தைக்கு பரம்பரை அரசுரிமை வழங்கியவர் நவாப் அல்ல. டெல்லிப் பேரரசர். நான் பதவியேற்க யாருடைய அனுமதியும் தேவையில்லை” எனும் அனல் கக்கும் வார்த்தைகள்தான் தேசிங்கிடமிருந்து வந்தது. செஞ்சியின் ஆட்சித் தொடர்ந்தது.

தேசிங்கின் செயல் நவாபிடம் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அவரது எதிர்வினை வேறுவிதமாக இருந்தது. சொரூப்சிங் செலுத்த வேண்டிய வரி இன்னும் நிலுவையில் இருக்கிறதே! இதனை வசூலித்துவர, தனது செயலாளர் தோடர்மாலை செஞ்சிக்கு அனுப்பி வைத்தார். மேலச்சேரியில் முகாமிட்டிருந்த நவாபின் செயலாளரை, ராஜா தேசிங்கு சென்று பார்த்தார். அப்போதும் அவர் குதிரையைவிட்டு கீழே இறங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்க விவரங்களுடன் கோட்டைக்குச் சென்ற தோடர்மால், செஞ்சி அரசரைச் சந்தித்தார்.

“வரியா? நிலுவையா? நான் செலுத்த வேண்டுமா?” இப்போதும் தேசிங்கின் கண்கள் சிவந்தது. தோடர்மால் கொண்டுவந்த கடிதம் தரையைத் தொட்டது. தொடர்ந்து அமைதி காத்த தோடர்மால், கடிதத்தினை பொறுமையுடன் குனிந்து எடுத்துக் கொண்டார். இதுகுறித்தத் தகவலை நவாபிற்குச் சொல்லவும் அவர் தவறவில்லை. தேசிங்கின் செய்கைகள் ஆற்காட்டு ஆட்சியைத் தொடர்ந்து அவமதிப்பதாக இருக்கிறதே என ஆத்திரமடைந்த நவாப் சாதத்துல்லாகான், செஞ்சியின் மீது படையெடுக்க முடிவு செய்தார்.

ஆற்காடு படை செஞ்சியை நோக்கி முன்னேறியது. இதில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். இதையறிந்த ராஜாதேசிங்கு, எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டுவிட்டார். அப்போது அவருடன், உயிர் நண்பனான, வழுதாவூர் கில்லேதார் மகமத்கான் உள்ளிட்ட 800இல் இருந்து ஆயிரம் பேர் மட்டுமே. வராக நதிக்கரையில் கடலி எனுமிடத்தில் இரண்டு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மகமத்கான் வீழ்த்தப்பட்டார்.

இதனால் தேசிங்கின் தாக்குதலில் வேகம் அதிகரித்தது. நவாபின் தளபதியான தௌலத்கான், தேசிங்கின் வாளுக்கு இறையானான். பழிக்குப் பழி! இதனால் அதிர்ச்சியடைந்த ஆற்காட்டுப்படை, தேசிங்கை சூழ்ந்தது. வீரன் ஒருவனது துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டுக்குப் பலியானார் தேசிங்கு. இது நடந்தது 03.10.1714.

முன்னதாக, போருக்குப் போவது பற்றி உத்தரவுக் கேட்க சென்றபோது, சிங்கவரத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், தலையைத் திருப்பிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தேசிங்கு–மகமத்கான் நட்பு, இந்து–முஸ்லிம் ஒற்றுமைக்கானக் கருத்தாக இருக்கிறது. மண மேடையில் அமர்ந்திருந்த மகமத்கான், நண்பன்–செஞ்சி அரசனுக்குப் பாதிப்பு என்றவுடன், மணமாலையை உதறிவிட்டு, போர்க்களத்துக்குச் சென்றதும், வீரமரணம் அடைந்ததும் வியந்து போற்றப்படுகிறது.

நவாபின் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்தபோதிலும், வரி செலுத்த மாட்டேன் எனச்சொன்ன தேசிங்கின் அசாத்திய துணிச்சல் வரலாற்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது. அதே நேரம் மிகப்பலம் பொருந்திய எதிரிப் படையை, சிறிய எண்ணிக்கையிலான வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ராஜா தேசிங்கு எதிர்கொண்டு சென்றது சரியா? எனும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

விவாதங்களும் விமர்சனங்களும், ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம், ராஜா தேசிங்கு (அ) தேசிங்கு ராஜாவின் புகழ்பாடும் கதைப்பாடல்கள் ஏராளம். இந்தக் கதைகளை வரலாறாக எடுத்துக் கொள்வதும், கதையாகவே பார்ப்பதும் அவரவர் விருப்பம்!


இராணிபாயுடன் ராஜாதேசிங்கு சிற்பம்
கோட்டை அருங்காட்சியகம், செஞ்சி

கடலியில் நடந்தப் போரில் ராஜா தேசிங்கு சுட்டுக் கொல்லப்பட்டாலும், அவரை உயிருடன் பிடிக்க வேண்டுமென்பதுதான் ஆற்காடு நவாப் சாதத்துல்லாகானின் விருப்பமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மையுங்கூட!

தந்தைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையைப் பயன்படுத்தி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தேசிங்கின் செயல், ஆற்காட்டை அவமதிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கான எதிர்வினை என்பது உடனடியாக நிகழவில்லையே?

10 மாதங்கள் தேசிங்கின் ஆட்சி அனுமதிக்கப்பட்டுதானே வந்தது?

செஞ்சியின் வரி பாக்கியை வசூலிக்க டெல்லியில் இருந்து வந்துவிட்டார்கள். அவர்களுடன் தன்னுடைய செயலாளரையும் செஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார் நவாப். சென்ற இடத்தில் குதிரையின் மீதிருந்தே, லாலா தோடர்மாலுக்கு வணக்கம் சொன்னது, அவர் எடுத்துச் சென்ற கடிதத்தைத் தரையில் வீசியது – போன்ற நிகழ்வுகள் சாதத்துல்லாகானின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பை விசிறியது என்று சொல்லலாம்.

ராஜா தேசிங்குப் படையில் இருந்தவர்கள் சில நூறு பேர்கள்தாம். ஆற்காட்டுப் படையிலோ பல ஆயிரம் பேர். ஆனாலும் தேசிங்கை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுதான் நவாபின் ஆணை. அதற்கானக் காரணம்? தெரியவில்லை!

படைத்தளபதிகளுள் ஒருவரான தௌலத்கானை, தேசிங்குக் குத்திக் கொன்றார். அப்போதும்கூட, “அவரைக் கொல்லுங்கள்” என்று நவாப் கட்டளையிடவில்லை.

இந்தப் போரில் நவாப்புக்கு மிகவும் கைகொடுத்தவர் வெங்கடகிரி (நெல்லூர் மாவட்டம்) கில்லேதாரான பங்காரு யச்சம நாயக்கர். அவரும்கூட, தன் படையினரிடம் “தேசிங்கை உயிருடன் பிடிக்க வேண்டுமென்று”தான் ஆணையிட் டிருந்தாராம். ஒருகட்டத்தில் தேசிங்கின் குதிரையின் கால்கள் வெட்டப்பட்டன. இதனால் தரையில் நின்று ஈட்டியைச் சுழற்ற வேண்டிய நிலை. இப்போதும்கூட தேசிங்குக் கொல்லப்பட வில்லை.

யச்சம நாயக்கரின் படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவன், கேடயத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, தேசிங்கை உயிருடன் பிடிக்க நெருங்கினான். அப்போது அவனைத் தனது ஈட்டியால் குத்திக் கொன்றார் தேசிங்கு. இப்போதுதான் “கொல்லுங்கள்” எனும் உத்தரவு யச்சம நாயக்கரிடம் இருந்து வெளியானது. துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்த வீரன் ஒருவன் தேசிங்கை சுட்டுக் கொன்றான்.

செஞ்சி அரசாங்கம் நவாபின் கைகளில் வெகுசீக்கிரத்தில் விழுந்தது. கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தேசிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ரஜபுத்திர வழக்கப்படி, கணவன் உடலுடன் உடன்கட்டையேறுவதற்கு ராணிபாய் அனுமதிக்கப்பட்டாள். ராஜா தேசிங்கு உடல் எரியூட்டப்பட்டதாகச் சொல்லப்படும் செட்டிக்குளக்கரையில், அரச, வேப்ப மரங்கள் நடப்பட்டு பூங்கா ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இராணிபாயின் நினைவாக, ஆற்காடு அருகே உள்ள ஒரு ஊருக்கு ராணிப்பேட்டை எனும் பெயரை வைத்தார் நவாப். செஞ்சியின் ஆட்சியில் இருந்த தேசிங்கின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். விருப்பமில்லை என்றவர்கள், பண்டேல் கன்ட்டுக்கு அனுப்ப ப்பட்டனர். தேசிங்கு வீழ்ந்த இடத்தில் வெற்றி நகரம் எனும் பொருள் வழங்கும் “பதேபட்” என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டது. தேசிங்கு, அவரதுக் குதிரை, மகமத்கான் ஆகியோருக்குக் கல்லறைகள் ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. போரில் உயிர்நீத்த மகமத்கானின் நண்பர்கள் இருவருக்குக் கோட்டைக்கு வெகுஅருகில் கல்லறைகள் ஏற்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.


இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியிலும், “தேசிங்குடன் போர் புரிவதற்கு, டெல்லி பேரரசிடம், நவாப் சாதத்துல்லாகான் அனுமதி பெற்றாரா?” - இதுவரை விடை தெரியாத ஒரு வினா இது! ராஜாதேசிங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றதன் நினைவாக எழுப்பப்பட்ட சாதத்துல்லா கான் மசூதி, செஞ்சிக் கோட்டை வளாகத்தில் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இங்குப் பொறிக்கப்பட்டிருந்த பெர்ஷியன் மொழிக் கல்வொட்டொன்று இவ்வாறு சொல்கிறது:
“மேன்மைக்குரிய சாதத்துல்லாகானுக்கு ஹைதரின் ஆசிகள் கிடைக்கட்டும். எல்லாம் வல்ல இறைவனின் இணையற்ற கருணையினால் செஞ்சிக் கோட்டையை இவர் கைப்பற்றினார்”.

___________________________________________________________
கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com ___________________________________________________________

No comments:

Post a Comment