Monday, May 24, 2021

அவர்கள் என்ன செய்வார்கள்??!!!!


 --கோ.லீலா


கொத்துமல்லி கறிவேப்பிலை
மணக்கும் புதினா
பூண்டோடு வெங்காயம்
சிறியதும் பெரியதும்
நாட்டு தக்காளி
பாத்து வாங்கியாச்சு
முட்டையும் ரொட்டியும்
அவசியமாய் இஞ்சி
கூடவே எலுமிச்சை
பல பழ வகைகள் கேட்டு
வாங்கியாச்சு...
பாலோடு வெண்ணெய்
திரளான நெய் பார்த்து
பனீரும் கூடையில் போட்டாச்சு
டீதூள்காஃபிதூள்
நாட்டு சர்க்கரை  உப்பு
சுக்கு மசாலா வகையோடு
குறைவில்லா பருப்பு வகை
செலவுப்பெட்டி நிரப்பிடலாம்...
பட்டை இலவங்கம் ஏலக்காய்
ரோஜா மொக்கு கடல்பாசி
நட்சத்திர பட்டையோடு 
மங்களூர் மொக்கும் இருக்கு
சமையலறை மணக்க
வத்தல் வடக வகைகள்
முந்திரி திராட்சை பாதாம்
பிஸ்தா குங்குமப்பூ
பச்சரிசி பாசுமதி
சீரக சம்பாவோடு தினசரிக்கு
விக்கிரவாண்டி அரிசி
பாத்து வாங்கியாச்சு
பதப்பட்ட பட்டாணி கொண்டக்கடலை
நிலக்கடலை கடலை வகை
சரிபார்த்தாச்சு...
பச்சையும் சிவப்புமாய்
வகையாய் காய்கறிகள்
குவிச்சாச்சு...
மருந்து தைலம் நாப்கின் இருக்கா
தேடிப்பார்த்து வாங்கியாச்சு
ஒரு வாரத்துக்கு யாரையும்
கூப்பிட முடியாது தண்ணீரை
மேல்தொட்டிகீழ்தொட்டி
நிரப்பியாச்சு...
பூ தோட்டத்திலேயே பூக்குது
சுமை கொஞ்சம் குறைச்சாச்சு...

அடடா !
பற்றில்லா மனசு இதுவா?

தந்திரமாய் எல்லாம் முடித்து
சாவகாசமாய் யோசிக்கிறது
மானங்கெட்ட மனசு 
என்ன செய்வார்கள் 
சாலையோரத் தோழர்கள் !

-கோ.லீலா



No comments:

Post a Comment