Friday, May 21, 2021

தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...

 தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...


 ——   வித்யாசாகர்





ஒவ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,

கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்குப் பூச்செண்டு என்னும்
அவச்சொல் அழி, 
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று  உணர்;
உயிர்ச்சொல் கொண்டு 
நெஞ்சுக்குள் அடைமழையெனச் சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தைச் சபி;

விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசி விசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே; 
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கவியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்குச் செலுத்தும் முதல் நன்றி;

நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்துவிரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;

இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துகொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசிமூச்சை எடுத்துக்கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;

இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;

மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஏன் ஓர் உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?

அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ; 
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை.

உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா என்ன?
முடியும். 
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை; 
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
துளித் துளியாய் 
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து 
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம், அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்; வாழ்ந்துகாட்டு!!

---

வித்யாசாகர், குவைத்
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
இயற்கையைக் காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!



No comments:

Post a Comment