Saturday, February 16, 2019

நாற்பது பேர்



—  ருத்ரா இ.பரமசிவன்



நம் "இனியவை நாற்பது"க்கெல்லாம்
அடித்தளமாக‌
படுத்துக்கிடப்பது
ஒரு தேசிய சோகத்தின்
இந்த "இன்னா நாற்பது" தான்.
கம்பீரமாய் இந்த அசோகசக்கரம்
இப்படி மீசை முறுக்கி நிற்பதன்
மாறாத வீரத்தையும் துணிவையும்
மண்ணுக்குள் கிடந்தாலும்
செதுக்கிக்கொண்டிருப்பவர்கள்
இந்த நம் தவப்புதல்வர்களே.
அழுது புலம்பும் தன் மனைவி 
எனும் தாயின்
அந்த கர்ப்பத்துக்குள்ளும்
ஒரு எரிமலைப்பிஞ்சை
பதியம் செய்து இருக்கிறோம்
என்ற நினைப்பில் அல்லவா
அவன் அந்த சவப்பெட்டியில் கிடக்கிறான்.
ஏதோ
தீபாவளிக்கு அப்பா தைத்துத்தந்த‌
புதுச்சட்டையை அணிந்து கொண்டது
போல் அல்லவா
அந்த பெட்டிக்கு ஒரு மூவர்ண சட்டையை
போட்டுக்கோண்ட திருப்தியில்
படுத்துவிட்டான்.
வாளோடு வாள்மோதும்
யுத்தம் எல்லாம் செய்யத் திராணியற்ற‌
மலட்டு மிருகங்களின்
இந்த சதிகள் எல்லாம்
தவிடு பொடியாக நொறுக்கப்படவேண்டும்.
பாரதத்தின்
எல்லாமொழியும் உருண்டு திரண்டு
இப்போது
தீப்பிழம்பாக வெளிச்சம் ஏற்றுகிறது.
நம் மண்ணின் நாடி நரம்புகளின்
பின்னல் எல்லாம்
நம் எல்லா மாநிலங்களிலும்
மூவர்ணத்தின் ஒரே அக்கினி வர்ணத்தை
உயர்த்திக்காட்டுகிறது.
நம் தேசியக்கனலின் அதன் 
ஒரே மொழி
இதோ ஒலிக்கிறது

"வந்தேமாதரம்"




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




No comments:

Post a Comment