Tuesday, February 12, 2019

தந்தைமை




— முனைவர் ச.கண்மணி கணேசன்  


என்னைச் சுமப்பதே சுகம் என்று நீங்கள் தூக்கித் திரிந்த காலம்  
உங்கள் தோளில் நாடியைப் பதித்துக் கொண்டு உலகைச் சுற்றிப்பார்த்த காலம்
இரண்டு கைகளிலும் இரண்டு மிட்டாய்கள் கொடுத்துத் திண்ணையில் இறக்கிவிட்ட காலம் 
முதன்முதலாய்த் தெருப்புழுதியில் கால்பதித்த போது உங்கள் சுண்டுவிரலைப் பிடித்த காலம்
எனக்குப் பிடித்த குளோப்ஜாமூன் வாங்கிக்கொடுத்து குஷியாக்கிய காலம்
வணிகப்பயணம் மேற்கொள்ளும் முன்னர் அண்டன்பேக்கரி வரை உடனழைத்துச் சென்ற காலம் 
கைநிறையப் பொட்டலங்கள் கொடுத்து டாடா  காட்டிய காலம்      
அம்மாவுக்குப் பயந்து உங்களிடம் ரகசியமாய்ப் பேனா வாங்கிய காலம் 
'எம்பொண்ணுக்குப் படிப்பெல்லாம் தேவையில்லை' என்று கொடிபிடித்த காலம்
சென்ற தீபாவளிக்கு எடுத்த அதே கலர்; அதே டிசைன்; அதே ரகதாவணியை இந்தத் தீபாவளிக்கும் கொடுத்த காலம்
எனக்குப் பரிசாகக் கிடைத்த 'பாரதியார் கவிதைகள்' புத்தகத்தைக் கடைத்தெரு முழுதும் காட்டித் திரிந்த காலம்
சொந்தக்காலில் நான்நிற்க நீங்கள் தவித்த காலம்
'மாப்பிள்ளைக்குத் தலைக்கறி தாண்டா பிடிக்குமாம்; சமைத்துப் பழகிக்கொள்' என்று வற்புறுத்திய காலம்   
கைப்பிடித்துக் கொடுத்தவேளை மருண்டகோலம்; 'சம்பளத்த முழுசா மாமியார் கையில குடுத்துருப்பா' என்று பதறிய காலம் 
என்னிடம் வாங்குவது மானக்கேடு என்று ஒதுங்கிய காலம்
நான் வெய்யிலில் வாடாதபடி; 'ஐயா அலைஞ்சி வாங்கிட்டு வந்துர்ரேண்டா; நீ வீட்டுக்குப் போடா' என்று என்னைப் பொத்திய காலம்     
'மாங்காய் போட்டு மீன்குழம்பு; எங்கம்மா சமைத்தமாதிரி' என்று ருசித்த காலம்
'கண்ணா'... என்று வாய்நிறைய அழைத்து; அந்தக்குரலில் அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்திய காலம்  
இன்று என்கையைப் பற்றிக்கொண்டு எத்தனையோ சொந்தங்கள்;
எனக்குப் பிடித்துக்கொள்ள தந்தையின் சுண்டுவிரல்.......?
                                                                                                                                   
    

தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)



                                                                                                                                                                                                           

No comments:

Post a Comment