Monday, February 11, 2019

இசையாய், இசை தரும் பொருளாய் ...


——    தேமொழி


            மொழியின் சொற்களால் இருபொருள்பட சொல்லி மொழிநயம் கூட்டுவது போல, இசையின் சுவரங்களால் இருபொருள்பட சொல்லி இசைநயம் கூட்டுவதும் உண்டு.  இதற்கு மொழியறிவும் இசையறிவும் தேவை.

மொழியின் சொற்களால் இருபொருள்பட சொல்லி மொழிநயம் கூட்டுவது:
            ஒரு பாடலில் ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இரட்டுற மொழிதல் (சிலேடை); இரண்டு +உற +மொழிதல் = இரட்டுற மொழிதல், அதாவது  இரண்டு பொருள்படப்பாடுவது. 

நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நான் வரலாமா ஒருக்காலும் இல்லை 
ஒருகாலும் இல்லை ... ஒருக்காலும் இல்லை 
(- கண்ணதாசன்)

என்று ஒரு காலிழந்து ஊனமுற்ற பெண் தன்னைக் காணவராத காதலனிடம் தான் அவனைத் தேடிச் செல்லமுடியாத தனது  நிலைமையை விளக்குவாள். ஆணைத் தேடிச் செல்ல அவள் பெண்மை இடம் கொடுக்கவில்லை, அதனால் அது ஒருக்காலும் நடவாது.  மேலும், அவள் ஒரு கால் இழந்தவள் என்பதால் அவளால் நினைத்தாலும் முடியாது.   ஒருக்கால் என்பதை வைத்து இதுபோல நயமுள்ள வகையில் எத்தனைப் பேரால் பாடல் தர இயலும். 

            மற்றொன்று பலரும் அறிந்தது. 
எனக்கு "மதம்" பிடிக்கவில்லை .. எனக்கு "மதம்" பிடிக்கவில்லை ...
என்று இருபொருள்பட (சமயம்/ வெறி) சொல்வது மொழி நயத்துடன் அமைகிறது.


இசையின் சுவரங்களால் இருபொருள்பட சொல்லி இசைநயம் கூட்டுவது:
            அவ்வாறே,  இசையில் சுவரங்கள் வழி மொழித்திறமையைக்  கையாளுவதும் உண்டு, அது  ஸ்வராட்சரம் எனப்படும். 

ஸ்வரம் + அக்ஷரம் = ஸ்வராக்ஷரம் / ‘ஸ்வராட்சரம் (swaraksharam)’
ஸ்வரம் = ச ரி க ம ப த நி என்ற இசையின் அடிப்படையான ஏழு சுவரங்கள்  
அக்ஷரம் =  எழுத்து  (எ.கா.: அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி;   பஞ்சாக்ஷரம் - ந ம சி வா ய என்னும் ஐந்து எழுத்தான பஞ்சாட்சரம்)

            இசையின்  சுவரங்களையே மொழியின் எழுத்துக்கள் போல பாவித்து,  அந்த எழுத்துக்களை இணைத்து ஒரு பொருளுள்ள சொல்லும் வருவது போல அமைப்பது.

            'ச' என்ற சுவரத்தையும்,  'ரி' என்ற சுவரத்தையும் ஒரு பண்ணில் இணைத்து 'சரி'  என்று சுவரங்களாகவும் பாடுவதும், அதே நேரத்தில்  அவ்வாறே 'சரி' என்று ஒப்புக்கொள்ளும் பொருளிலும் குறிப்பது. பாடலின் வரி சாகித்தியம் என்று  சொல்லப்படும். 

            இங்கு ச என்பதும் ரி என்பதும் இசையின் சுவரமாகவும் இருக்கிறது அவ்வாறே மொழியின் எழுத்தாகவும் அமைகிறது, அதனால் பொருள் கொண்ட செய்தியாக மாறுகிறது. சுருக்கமாக, வரியின் அக்ஷரமும் அது இசைக்கப்படும்  ஸ்வரமும் ஒன்றாக அமைவது ஸ்வராக்ஷரம்.  ஆகவே 'சரி' என்பது பாடலில் ஸ்வராக்ஷரம் என்ற தகுதியைப் பெறுகிறது.

            இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் பாடல் அகத்தியர் படத்தில் 'வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்' என்று இராவணனுக்கும் அகத்தியருக்கும் இடையில் நடக்கும் ஒரு போட்டிப்பாடலின் இறுதியில் வருகிறது (https://www.youtube.com/watch?v=z5wZVG_oJiI&feature=youtu.be&t=352)
பாடலில் சுவரங்கள் பாடும் இறுதிப் பகுதியில், பாடும் சுவரவரிசையின் இறுதியில் வரும் சுவரங்கள் ஒரு பொருளைக் குறிப்பதாக அமையும்.

இராவணன்:  ...........................  சமமா (அகத்தியரே நீ எனக்கு சமமா?)
அகத்தியர்:  ...........................  சமமா நீ சமமா (இராவணனே சமமா நீ எனக்கு சமமா?)
இராவணன்:  ...........................  நீ சரிசமமா (நீ எனக்கு சரி சமமா?)
அகத்தியர்:  ...........................  நிதாநி மதமா நீ சதமா (நிதானம் தேவை, உனக்கு மதமா? நீ நிலையா?)
இராவணன்:  ...........................  மநிதா நீ பாதக  மநிதா (மனிதனே நீ பாதகம் செய்யும் மனிதன்)
அகத்தியர்:  ...........................  பரிகாசமா சாகசமா  (என்னை பரிகாசம் செய்கிறாயா? சாகசம் செய்கிறாயா?)

இங்கு மேலே கூறப்படும் இசையின் சுவரங்கள் அதன் குறிப்பிட்ட இசைநிலையைத் தாண்டி மொழியின் எழுத்தாக மாறி ஒரு பொருளைக் குறிப்பதால் இவை ஸ்வராக்ஷரம் ஆகிறது.

மேலும் இது போன்ற சில திரையிசைப் பாடல்களிலும் வரும், மற்றொன்று...

நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா - https://youtu.be/b3ku7VgUi30?t=292)
மா... மா.... (என்ற சுவரங்கள் இணைந்து 'மாமா' என்ற உறவைக் குறிக்கும்)
ப நி மா மா (பணிந்து போ மாமாவே என்ற பொருள்)
நீ மாமா (நீ மாமன் என்ற பொருள்)

சரி = சரி 
மநிதா = மனிதா 
மாமா = மாமன் 
சநி = சனியன் 
மகா = மகா(பெரிய)
கநி = கனி

என்பது போன்று இசையின் சுவரங்களை பொருள் பொதிந்த எழுத்துக்கள் கொண்ட சொற்களாக  ஸ்வராக்ஷரம் என்ற வகையில் மாற்றலாம். இசை விற்பன்னரின் கற்பனைக்கு எல்லை இல்லை. 



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)





No comments:

Post a Comment