Monday, June 20, 2016

800 ஆண்டுகள் பழைமையான குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

-- சு.ரவிக்குமார்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆசிரியர் கி.திருநாவுக்கரசு, க.பொன்னுச்சாமி, ரா.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரடிப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் தமிழகத்தில் மிக அரிதாகக் காணப்படும் குதிரைகுத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது : குதிரைப் படை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படைகளில் ஒன்று. குதிரை அரபு நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அரப்பா அழிபாடுகளில் குதிரை இந்தியாவில் இருந்தது என்பதற்குரிய அறிய அகச்சான்றுகள் அகப்பட்டுள்ளன தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று கூறமுடியும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர் ; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப்படையும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும்.

"தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப" (தொல்.பொ.புற.12)

"தானை யானை குதிரை என்ற
 கோனார் உட்கும் மூவகை நிலையும்" (தொல்.பொ.புற.14)

என்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் குதிரை ஊர்தியும், குதிரைப் படையும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்து வருகின்றன  என்பது நன்கு தெரிகிறது. மேலும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களிலும் குதிரை பற்றிய குறிப்பு உள்ளது.

தமிழர்கள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். குதிரைகளுக்கு இலக்கணங் கண்டுள்ளார்கள். குதிரைகளை வளர்க்கும் முறைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறையையும் நன்கு தெரிந்துள்ளார்கள். அவர்கள் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் அசுவ சாத்திரமும் ஒன்றெனப் போற்றப்படுகிறது. அது தமிழர்கள் குதிரைகளைப் பற்றி நன்கறிந்திருந்தனர் என்பதை மெய்ப்பிக்கும். மேலும் கூடலில் இறைவன் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலும் ஒன்றாக இருப்பது இதை உறுதிப்படுத்தும். குதிரைகள் பரிநூலில் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை (1).பாடலம், (2).கோடகம், (3).இவுளி, (4).வன்னி, (5).குதிரை,(6).பரி, (7).கந்துகம், (8).புரவி எனப்படும். மேலும் குதிரைகள் நான்கு நிறங்களில் உள்ளன, அவை  (1).வெள்ளைக் குதிரை, (2).சிவப்புக் குதிரை, (3).கருப்புக் குதிரை, (4).பொன்னிறக் குதிரை. இந்த நான்கு நிறமும் கலந்திருப்பது மிசிரக் குதிரை எனப்படும்.

உயரத்தின் அடிப்படியில் குதிரைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவை (1).உத்தமக் குதிரை, (2).மத்திமக் குதிரை, (3).அதமக் குதிரை. குதிரை ஒட்டம் நாகபந்தம், விருத்தம், நெடு வீதி எனப்படும் இவற்றின் சுழிகளின் இலக்கணங்களும் பலவுள்ளன.அரசர்கள் அசுவலட்சணம் அணுவளவும் குறையாத நல்ல குதிரையைப் பட்டத்துக் குதிரையாகத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அதைப் பேணி வளர்த்து ஆடைகளும், அணிகலன்களும் அணிவித்து அதன் மீது அரசர்கள் பவனி வருவர். அதற்கென்று தனியாக ஆட்கள் வைத்து உணவு, குளிப்பு, நோய் முதலியவை கவனித்து வரப்பட்டன. நல்ல மணமும், வாழைப்பூ மடல் போன்ற அழகிய காதும், கால், மார்பு, கழுத்து, முதுகு ஆகிய உறுப்புகளில் வெள்ளையும் 82 அங்குலம் உயரமும் உள்ள செங்குதிரை அரச குதிரையாவதற்குத் தக்கது. இதனைப் பஞ்சகல்யாணி என்று கூறுவர். தமிழ் நாட்டுக் குதிரைப் படைக்கு எல்லா இலட்சணங்களும் பொருந்திய செங்குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் குதிரைப்படை இந்தியாவிலேயே இணையற்றது, ஒப்பற்றது ; சிறந்த குதிரைகளுக்குச் சிறப்புப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. மலையமான் நாட்டை ஆட்சி புரிந்தவனாகிய திருமுடிக்காரி, காரி என்னும் பெயரிய தன் குதிரையோடு  கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரியின், ஓரிக்குதிரையுடன் புரவிப் போர் புரிந்தனன் என நத்தத்தனார் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றங்கரையில் நமக்குக் கிடைத்துள்ள குதிரை வீரன் நடுகல் எதிரிப்படையின் குதிரையைத் தாக்கி வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எழுப்பிக்கப்பட்ட நடுகல் ஆகும். இந்நடுகல் 80செ.மீ அகலமும், 135 செ.மீ உயரமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்துள்ளது. தலையில் மகுடமும், காதில் காதணிகளும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடையில் நல்ல வேலைப்பாடுகளுடன் ஆடையும்,குறுவாளும் வைத்துள்ளான். வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் தன்னைத் தாக்கும் குதிரையைக்குத்தும் வண்ணமும், இடது கையால் தன்னைத் தாக்கும் குதிரையைத் தடுக்கும் வண்ணமும் நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியை தாக்கும் வண்ணமும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் ஊன்றிய வண்ணமும் உள்ளது. குதிரையின் மேற் பகுதியில் வீரன் அமர்ந்து செல்லும் இருக்கை (சேடல்-Saddle) அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான முனைவர். ர.பூங்குன்றனாரிடம் கருத்துக் கேட்ட போது தமிழகத்தில் எண்ணற்ற புலிக்குத்திக் கற்கள் உள்ளன. ஆனால் குதிரை குத்திப்பட்டான் நடுகல் மிகச்சிலவே உள்ளன. இந்த வகையில் இது மிகவும் சிறப்புடையதாகும். சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இச்சிலை 800 ஆண்டுகள் பழைமையானதாகும் என்றார்


______________________________________________________
பொறியாளர் சு.ரவிக்குமார் BE.,M.I.E.,D.E.G.,
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுமையம்
இயக்குநர்
9842255118
verarajendran1206@yahoo.in      
______________________________________________________

       

No comments:

Post a Comment