Wednesday, February 5, 2020

தஞ்சை குடமுழுக்கு கவிதை

தஞ்சை குடமுழுக்கு கவிதை

 ——  திருத்தம் பொன்.சரவணன்




அஞ்செழுத் துடையாய் ஆலமர் செல்வ
நஞ்சினை உண்டோய் நமச்சி வாய
நன்செய் யுடன்நல் அறிஞர் சூழ்ந்திடும்
தஞ்சை சிவமே போற்றி

உலகம் காத்திட உண்டாய் நஞ்சினை
அழலது உன்றன் மிடற்றினில் கறையாய்
கறையதைக் கழுவத் துடித்திடும் கரங்கள்
உறையெனப் பொழிந்திடும் பாலே.

கசந்திடும் உணவை யாவரும் உண்கிலர்
விசமென அறிந்தும் விருப்புடன் உண்டோய்
விசத்தின் கசப்பினை நீக்கிட விழைந்தோம்
இசைவுடன் ஏற்பாய் தேனே.

நீரு லாவிய நீள்சடை முடியினை
காரு லாவிய கறைபடு மிடற்றினை
ஏரு லாவிய தஞ்சைப் பெரியோய்
சோரென வார்த்தோம் நீரே.

பொதுநலம் பேணுமார்க் காமம் தடையென
மதுகையின் நீக்கி மோனத் திருந்தோய்
காமன் கணைவிட கடிந்துடன் எரித்தோய்
பாதம் சூட்டுதும் மலரே.





தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/





1 comment:

  1. அருமையாகப் படத்துடன் போட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete