Sunday, July 8, 2018

பின்னாலிருந்து ஒரு குரல் ...



——  ருத்ரா இ.பரமசிவன்.




பின்னாலிருந்து
யாரோ கூப்பிடுவது போல் ஒரு குரல்.
திரும்பிப்பார்க்கவேண்டும்
என்று தோன்றவில்லை.
அது கெஞ்சியது.
அப்புறம் கொஞ்சியது.
அதற்கும் அப்புறம் மிரட்டியது.
நடு மண்டையில் ரம்பம் கொண்டு
அறுப்பதாய்
எண்ணெய்க்கொப்பறையில்
என்னை வறுத்து எடுப்பதாய்
கும்பி பாகம்
கிருமி போஜனம்
என்றெல்லாம்
"விஷுவல்"காட்டியது.
அதோடு நிற்கவில்லை.
என் தோளில் உட்கார்ந்து கொண்டது.
என் கண்களை அது
மாயக்கையினால் பொத்தியது.
காதுக்குள் அடைத்தது.
அந்தக்குரல்
என் நாளங்களோடு வந்து
சுருண்டு கொண்டது.
என் வாழ்க்கையில்
அது என்னுடன் தைத்துவிடப்பட்டது போல்
இழைந்து விட்டது.
என் மூளையின் சந்து பொந்துகளிலும்
அது தான்.
என் சிந்தனைக்கதிர்களுக்குள்
அதுவே கோரைப்பல் காட்டி
இளித்தது.
அதன் ஒலி புரியவில்லை.
அதன் பொருள் விளங்கவில்லை.
ஆயினும் அது
மொட மொடவென்று
தட்டாம்பூச்சி சிறகு கணக்காய்
கிர்ர்ர்ர்ரென்றது.
நான் குடித்த தாய்ப்பால் வழியே
என்னை உருவாக்கிய‌
என் உயிர்த்தமிழ் கூட‌
எனக்கு வேறு ஆனது.

கல்யாணம் கருமாதி
பூப்பு விழா
குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா
புதுமனை புகும்விழா
என்றெல்லாம் அது
ஆக்டோபஸ் போல
என் தமிழை அமிழ்த்தி
என் தமிழின் அமிழ்தை
உறிஞ்சி உறிஞ்சி
அது கொல்கிறது.
திருமணம் முடித்து
மனைவியும் நானும்
கலக்கப்போகும் முன்னும் கூட‌
அது விளங்காத‌
மந்திரமாய்
என் விந்துக்குள்ளும்
அது திணிக்கப்பட்டது!
என் அசல் எங்கோ
குப்பையில்
எச்சில் இலைகளாய் கிடக்கிறது.

இந்த நிழலின் நகல்
ரோடு ரோலராய்
என்னை நசுக்கிச்செல்கிறது.
கல் தோன்றி மண் தோன்றும் முன்னரே
ஊற்றெடுத்த‌
என் உயிர் ஊற்று
என் ஒலி ஊற்று
அந்த தத்துப்பித்துக் குழறல்களில்
தினம் தினம்
சமாதி ஆக்கப்படுகிறது.
நான் கட்டிய என் நிமிர்ந்த கோவில்களிலிருந்து கூட‌
அந்தப் பிசாசு ஒலி
என்னைப் பிய்த்து பிய்த்துத் தின்கிறது.
என் தமிழே
நீ எங்கிருக்கிறாய்?
நீ உறுதியாக வருவாய்!
இந்த ராட்சச பிறாண்டல்களை
அழித்து ஒழித்து விட்டு
நீ
சுடர் முகம் காட்டுவாய்!
நீ
வாழ்க!
நீ
வெல்க!!




________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)


No comments:

Post a Comment