Tuesday, July 31, 2018

பெண்மை வாழ்கவென்று...

——    வித்யாசாகர்




பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து
எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து
பாலூட்டி பச்சைமார்பு வெடித்து
பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து
எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே..
எனதுயிர் அம்மாவே!!

தாயாகி மகளுமாகி முதலுமாகி
கடைவரைக் காப்பவளாகி,
கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே
காமம் பிசைந்து;
களங்கமில்லா வாழ்க்கை வாழ
இரண்டாம் வரம் தந்தவளே..
மணம் கொண்டவளே.. என் துணையாளே!!

எனை முழுதாய் விழுங்கி நானாய் தெரிந்தவள்
நானாய் வாழ நல்அப்பனைச் செய்தவள்
பெயரை கடமைக்குச் சேர்க்காமல்
உயிருக்குள் போட்டவள்,
உரிமையைக் கூட யாருக்கோ கொடுப்பதை
எனக்காய் ஏற்றவளே, என் மகளே!!

முத்தத்தால் எனை வளர்த்து முழுமூச்சு
நீ நினைத்து, பித்தென ஆகி என்னால்
பிசைந்த சோற்றோடு பண்புகளூட்டி,
பெற்றவளே தான்போல உன்
பன்மாத தூரத்திலும்
எனைவிட்டகலாத என்னக்காளே, உயிரானவளே!!

அண்ணாவின் அர்த்தத்தில் அப்பாவைச் சேர்த்தவளே
அன்பு அன்பென்று ஈந்து பிறவிப்பிணிக் கொன்றவளே
பொன்னும் பொருளும் கேட்போர் மத்தியில்
அண்ணனை மட்டும் கேட்டவளே,
தாய்மையை முன்பே போதித்தும், என்
தங்கையாய் யானவளே.. பேரன்புத் தங்கையே!!

சுட்டதும் கைவிட்ட இனிப்பல்ல நீ
உயிர் விட்டாலும் மாறாத அறத்தின்
அன்பு நீ,
கண்டதும் கேட்டதும் பார்த்ததுமல்ல;
உடன் வாழ்ந்த உயிர்பூச்சு நீ, உள்ளக்
கோயில் நீ தோழி; உள்ளே சாமியும் நீ தோழி!!

பட்டப்பகலை இருட்டாக்கி
இருட்டின் அழகை உனக்காக்கி, உன்போல்
காணா குருடென்று, இப்பவும்கூட எனையாளும்
எந்தாய் நிலம் போல் என்னுள்
நீக்கமற நிறைந்தவளே
கண்ணுக்குள் காதல் வரைந்தவளே, என்னவளே காதலியே!!

தெய்வம் யார் நீதானென்பேன்
தாயைக் கேட்டால் நீயே என்பேன்
தமக்கை தோழிக்கும் நீயே முதலென்பேன்
ஏற்கவேண்டியதை கற்கப் பணித்தவளே
'அ' எனில் அம்மா என்றவளே
யென் ஆசிரியப் பெரும்பேறே.. குருவே!!

பெண்ணே மொத்தத்தில் உனை
வணங்குதலன்றி வேறென்னச் செய்வேன் ?
“பெண்மை வாழ்கவென்று” புகழாது
பணியென்னக் கேட்பேன்??
தமிழுக்குள் உனையன்றி சிறக்க
சொல்லெங்கே கொய்வேன்? பெண்ணே;

நீயின்றி யில்லை உலகு, நீயே யெம் ஆதி மரபு!!


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)




No comments:

Post a Comment