Thursday, March 25, 2021

கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து சர்ச்சை

 கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து சர்ச்சை


-- மா.மாரிராஜன்



கடந்த ஆண்டு  மதுரை செக்காணூரனி அருகே உள்ள கிண்ணிமங்கலம் என்னும் ஊரில் உள்ள மடம் ஒன்றில் தமிழி எழுத்துக்களால் எழுதப்பட்ட துண்டு கற்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் காந்திராஜன், ஆனந்தன், இராசவேல் என்னும் மூவரால் வெளி உலகத்திற்கு அறிமுகம் ஆனது.




" ஏகன் ஆதன் கோட்டம் "
என்று படிக்கப்பட்டு ..
கல்வெட்டின் காலம் கி.மு. 2 என உறுதி செய்தார் தொல்லியல் ஆய்வாளர் சு.இராசவேலு அவர்கள்.  தமிழக வரலாற்றில் மிகப்பெரும் தொல்லியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டது இக்கல்வெட்டு.

அதே மடத்தில் 7 -8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இறையிலியாக..
ஏக நாதன்...
பள்ளிப்படை..

என்று தொடங்கும் அந்தக்கல்வெட்டுச் செய்தி தமிழிக் கல்வெட்டுச் செய்தியுடன் ஒத்துப்போனது.

தமிழகத்தின் முதல் பள்ளிப்படைக் கல்வெட்டு. தமிழி எழுத்துக்களில் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்ற ஆகச் சிறந்த தொல்லியல் ஆவணமாக கிண்ணிமங்கலம் பதிவு செய்யப்பட்டது. தமிழகத் தொல்லியல் துறையும் அங்கிகாரம் செய்து அறிக்கை வெளியிட்டது.  ஒட்டு மொத்த வரலற்று ஆர்வலர்களும் கொண்டாடத் தொடங்கினர்.

இதே மடத்தில் உள்ள 17 -18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலக் கல்வெட்டு ஒன்றும் மேற்கண்ட செய்தியை ஒத்துள்ளது.

மிகப்பெரும் வரலாற்று ஆய்வறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள், கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து ஒரு சில சர்ச்சைகளைப் பதிவு செய்கிறார்.

முனைவர் சாந்தலிங்கம்  அவரது பதிவில் ... கிண்ணிமங்கலம் கல்வெட்டு போலியாகத் தயார் செய்யப்பட்டது என்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்கிறார். இதற்காக அவர் எழுப்பும் கேள்விகளில் கருத்து விவாதம் இல்லை; தனிமனிதத் தாக்குதல் போல் இருக்கிறது.

அவர் முன் வைக்கும் கேள்விகள்:
மலைமுகடுகளிலும், குகைத்தளங்களிலும் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகள், தனித்த ஓர் எண்பட்டை கற்தூணில் எவ்வாறு இருக்கும்? 
சங்ககாலத்தில் கற்தூண் கொண்ட கோவில்கள் இருந்ததா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.

ஆண்டிபட்டி அருகே புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டு தமிழி எழுத்துக்களால் எழுதப்பட்டது. இது கிடைத்தது மலை முகட்டிலோ, குகைத்தளத்திலோ அல்ல. ஊர் மக்கள் வசிப்பிடத்தில் தரைத்தளத்தில் கிடைத்த துண்டு கல்வெட்டு.

முனைவர் சாந்தலிங்கம்  கூற்றுப்படி, கிண்ணிமங்கலம் தூண்  5 அல்லது 6 ஆம்  நூற்றாண்டு என்றுகூட இருக்கட்டும். ஆனால் இவர் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எழுத்து என்கிறார். மடத்து நிர்வாகிகள் தங்களது உரிமையை நிலைநாட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்கிறார்.

இது வேடிக்கையாக உள்ளது. போலியாகச் செப்பேடுகள் செய்யலாம். போலியாக ஓலைகள் செய்யலாம். போலியாகத் தமிழ் பிராமி கல்வெட்டு எழுதுவார்களா?  அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பாம். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் ஒரு துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதும் அளவுக்கு ஒருவர் ஞானம் பெற்றிருப்பாரா?

முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றால்.... தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழிக் கல்வெட்டுகளையும் போலி என்று வாதிடுவார்களே. அதற்காகவே ஒரு கூட்டம் உள்ளதே. இது எவ்வளவு பெரிய அபாயத்தை விளைவிக்கும்??!!
புள்ளி இருந்தது..  புள்ளி இல்லை.. என்றொரு சர்ச்சை.. 
புள்ளி இருந்தால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்கு மேல். 
புள்ளி இல்லையென்றால் கி.மு. 2  நூற்றாண்டு 
எப்படியாயினும் காலம் கி.மு. 2 அல்லது கி.பி.6 நூற்றாண்டு.
ஆனால் முனைவர் சாந்தலிங்கம் சொல்வது;  கல்வெட்டின் காலம் 18 ஆம் நூற்றாண்டாம்!

" ஏகன் ஆதன் கோட்டம் "
என்ற கல்வெட்டில் கோட்டம் என்னும் சொல் முதன்முதலாக பூலாங்குறிச்சி கல்வெட்டில்தான் வருகிறது. அதன்காலம் கி.பி. 5 என்கிறார். இருக்கட்டுமே. இதை எப்படி 18 ஆம் நூற்றாண்டு என்கிறார். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கோட்டம் என்னும் சொல் வருகிறதே? இச் சொல் கல்வெட்டில் இடம்பெறுவது சரிதானே.

ஜம்பை தமிழிக் கல்வெட்டில் வரும் "அதியநெடுமான்" மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் வரும்  "நெடுஞ்செழியன் " என்னும் சொல் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது. வேறு எந்த கல்வெட்டிலும் இல்லை. அதற்காக ஜம்பைக் கல்வெட்டையும், மாங்குளம் கல்வெட்டையும் போலி என வாதிடலாமா?

கிண்ணிமங்கலத்தில் இருக்கும் 7 - 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இருக்கும் "பள்ளிப்படை " என்னும் சொல் தவறாம். பாண்டிய நாட்டில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பள்ளிப்படை என்னும் சொல் கிடைக்கிறது என்கிறார். வேடிக்கையாக உள்ளது. 10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக 8 ஆம் நூற்றாண்டில் பள்ளிப்படை என்னும் சொல் கல்வெட்டில் கிடைக்காதா?

அப்படியானால்  10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பான முதலாம் ஆதித்தன் பள்ளிப்படை, பிரித்வி கங்கரையன் பள்ளிப்படை...  இந்தக் கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் போலியா?

பிற்கால நாயக்கர் கல்வெட்டு.. காந்தளூர்சாலை.. மடத்துத் தலைவர் பேச்சு.. இவை பெரிதாக எங்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழிக் கல்வெட்டின் காலத்தை 18 ஆம் நூற்றாண்டு என்று கூறியதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.

18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒன்றை முனைவர் ராஜவேலு போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்யாமல் இருப்பார்களா? 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒன்றை 2000 வருடப் பழமை என்று கூறும் அளவிற்கு ஞானமற்றவர்களா? தமிழகத் தொல்லியல்துறையும் அங்கிகாரம் செய்துள்ளதே? அவர்களும் ஞானமற்றவர்களா?

முனைவர் சாந்தலிங்கம் அவர்களின்  கட்டுரை தனது சக ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆய்வவாளர்களே உங்களுக்குள் ஏற்பட்ட மோதலில்...தயவு செய்து தமிழர்களின் பழமையையும் பெருமையையும் களங்கப்படுத்தாதீர்கள். உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம்...



No comments:

Post a Comment