Friday, December 28, 2018

நடுவுல கொஞ்சம் "கடவுளை"காணோம்

—  ருத்ரா இ.பரமசிவன்


நீக்கமற நிறைந்திருக்கும்
கடவுள்
நடுவுல கொஞ்சம் காணவே இல்லையே!
எங்கே?
சபரிமலையில் தான்.

ஆண்பாதி பெண்பாதியாய்
அந்த அர்த்தநாரீஸ்வரன்
அங்கே அந்த படிகளில்
ஏறிக்கொண்டிருந்தான்.
அவன் போய்த் தான் அங்கே
தரிசனத்தைக் காட்ட வேண்டும்.

பக்தர்கள் அவனைத் தடுத்து
நிறுத்தினார்கள்.
"யாரடா நீ! நாடகக்காரனா?
அந்த பெண்வேடத்துக்கு வயது என்ன?
அம்பது வயது தாண்டினாத்தான்
இந்தப்படிகளைத் தாண்ட முடியும்.
பத்து வயதிலிருந்து அம்பது வயது வரை
உள்ள பெண்மைக்கு இங்கே
அனுமதியில்லை."

"ஏனுங்க?
அவன் அடக்கமாய்த்தான் கேட்டான்.

"இது ஐதிகமில்லையடா.
பிறவியை அறுக்கத்தடையாய்
இருப்பது இந்த பெண்மைத் தன்மையே.
அது மோட்சத்தைத் தடுக்கும்"
சமஸ்கிருத ஸ்லோகங்களைக்கொண்டு
அவன்
நீட்டி முழக்கிக்கொண்டிருந்தான்.
வந்தவனோ
அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
"அப்படின்னா
ஆண்கள் பிறப்பிக்கும் தன்மை
இற்று விட்டவர்களா?"

"என்ன கேள்வி கேட்டாய்?
மூல வித்துகளைப் பொழிபவன் அல்லவா
ஆண்?"

"வித்துவைத்திருப்பவருக்கு அனுமதி உண்டு.
விளைய வைப்பவருக்கு அனுமதி இல்லையா?
மோட்சத்தைத் தடுப்பதற்கே காரணமான‌
விதைகளுக்கு இந்த விளைநிலத்தை
தடுக்கும் உரிமை
எங்கிருந்து வந்தது?"

அது கேள்வி அல்ல.
நெற்றிக்கண் திறந்த தீப்பொறிகளின்
பிரளயம்.
அப்புறம் அங்கே எல்லாம்
புகை அடர்ந்த சூனியம்.
பிறகு
எல்லாமே வெறிச்சோடிவிட்டது.

எங்கும் நிறைந்த இறைமைக்கு
இடையில் ஒரு
ஒரு சூனியவெளியை
உண்டாக்கிய அந்த
ஐதிகத்துள் இருந்த ஆதிக்கம்
அரக்கனாய் நின்று அங்கே இடைமறித்தது.

அரக்கனை வதம் செய்ய‌
அவன் சூலாயுதத்தை தேடினான்.
எங்கே அது?
அவனுக்கு இன்னும் அது கிடைக்கவே இல்லை.
அவனைப்பற்றிய புராணத்துக்கு
நடுவுல 
கொஞ்சம் பக்கத்தைக்காணோம்.




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





No comments:

Post a Comment