Friday, December 28, 2018

“ஐ” எழுத்தை முதன் முதலாகக் கொண்ட திருநாதர் குன்று வட்டெழுத்துக் கல்வெட்டு

—    துரை.சுந்தரம்


திருச்சி பார்த்தி என்பவர் முகநூலில் ஓர் அருமையான கல்வெட்டுப்படத்தைப் பதிவு செய்திருந்தார்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள திருநாதர் குன்றில் பாறைக் கல்வெட்டு ஒன்றின் படம்.  வட்டெழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டு.  கல்வெட்டு அறிஞர்கள் பலரும் சிறப்பாகக் குறிப்பிடுகின்ற ஒரு கல்வெட்டு. தமிழ்த் தொல்லெழுத்தான ‘தமிழி”  எழுத்தின் வடிவத்திலிருந்து வளர்ந்த வட்டெழுத்தின் முதல் கட்ட எழுத்து.  ”தமிழி” எழுத்து முறையில் காணப்படாத ”ஐ”  எழுத்தை முதன் முதலாகக் கொண்ட ஒரு கல்வெட்டு. இக்கல்வெட்டின் படம் இதற்கு முன்னர் சில நூல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரடியாகக் கல்வெட்டு அமைந்திருக்கும் இடத்தில் எழுத்துகளின் மீது வெள்ளைப்பொடி பூசித் தெளிவாக எழுத்துகள் தெரியும் நிலையில் இந்தப் படம் மிக அருமையாக இருந்தது.  கல்வெட்டின் காலம் கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டு. 

மேலே குறித்தவாறு, முதன் முதலில் “ஐ”  எழுத்தின் வடிவத்தை இக்கல்வெட்டில் காணலாம். ஒரு சூலம் போன்ற வடிவில் அமைந்துள்ள எழுத்து. திருச்சி பார்த்தியின் கல்வெட்டுப்படம் கீழே: 

 திருநாதர் குன்று-வட்டெழுத்துக் கல்வெட்டு - முதல் எழுத்து “ஐ”

கல்வெட்டின் பாடம் :
1   ஐம்பத்தேழன 
2  சனந்நோற்ற 
3   சந்திர நந்தி ஆ
4   சிரிகரு நிசீதிகை

விளக்கம் :  
கல்வெட்டுப் பாடத்தைக் கீழ் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.

1   ஐம்பத்து ஏழு  அனசனம்  நோற்ற
2  சந்திர நந்தி ஆசிரிகரு
3   நிசீதிகை

திருநாதர் குன்றில் இயங்கிவந்த  சமணப்பள்ளியின் ஆசிரியருள் ஒருவரான சந்திர நந்தி என்னும் துறவியார் ஐம்பத்தேழு நாள்கள்  உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்னும் செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.  அனசனம் என்னும் சொல் உண்ணாதிருத்தலைக் குறித்தது. அசனம் என்னும் சமற்கிருதச் சொல் உண்ணுதலைக்குறிக்கும். அதன் எதிர்ப்பொருளைக் குறிக்க “அன்”  என்னும் முன்னொட்டு சேர்க்கப்படல் சமற்கிருத மொழி இலக்கண மரபு. எனவே, ‘அன்”+’அசனம்”  என்பது  “அனசனம்”  என்றாயிற்று. 

வட்டெழுத்து வளர்ச்சியுற்று இரண்டாம் கட்டத்தை அடையும்போது, ‘ஐ”  எழுத்தின் வடிவம் மாறவில்லை. மற்ற எழுத்துகள் பெரும் மாற்றத்தைக் கொண்டுள்ளன. மேற்படிக் கல்வெட்டு இரண்டாம் கட்ட எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டால் எவ்வாறிருக்கும் என்பதைக் கீழுள்ள  கல்வெட்டுப் படம் காட்டும்.

கி.பி. 8-9 -ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து வடிவம்


பின் குறிப்பு :
வட்டெழுத்தில் அமைந்துள்ள இக்கல்வெட்டைத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தமிழ் பிராமி எழுத்தில் எழுதியுள்ளதாகப் பிழையாகக் குறித்துள்ளது.  துறையினர் தகுந்த திருத்தத்தைச் செய்யவேண்டும்.  தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம். 

இப்பதிவைப் பார்த்துத்தானோ என்னவோ,  வேலுதரன் அவர்களும் தம் இணைய வலைப்பூவில் மேற்படிக் கல்வெட்டு பிராமியில் எழுதப்பட்டுள்ளது எனப் பிழையாகக் குறிப்பிடுகிறார்.  அவரது பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. 
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156. 






No comments:

Post a Comment