Thursday, December 20, 2018

கோவிலிலே குதிர் — ஆதித்திருவரங்கம்



  —   திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தென்பெண்ணையாற்றின் தென் கரையில் போய்க் கொண்டிருந்தோம், ஆதித்திருவரங்கம் நோக்கி. சாலையில் வாகனங்கள் அதிகமில்லை என்றாலும், வளைவுகள் அதிகம். வண்டி மெதுவாகவே பயணித்தது.   பச்சைப் பட்டாடை  விரித்தது போல் பறந்து கிடந்த வயல் வெளியில் மாலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் மாயாஜாலம் செய்து கொண்டிருந்தன. கஜாப் புயலின் கோரக் காட்சிகளால் புண்ணாகிப் போயிருந்த கண்கள் புத்துணர்வு பெற்றன.  ஊரைத் தாண்டி வலது பக்கம் திரும்ப, பிச்சைக்காரர்களின் பின்னணியில் கோவில். பார்த்தாலே தெரிந்தது, பழமையான கோவில் என்று. சனிக் கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. விறகடுப்பில் குழிப் பணியாரம் செய்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கிராமத்துப் பெண்மணி.

மிகவும் பெரிய கோவில் என்று சொல்ல முடியாது, ஆனால் சிறிய கோவிலும் இல்லை. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. தூய்மையாகவே இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும்,   ராஜகோபுரம் தெரிந்தது.  வலதுபுறம், வட்டவடிவமான உருளைகள்  இரண்டை ஒன்றின் மேல் ஒன்று நிற்க வைத்து அதன் மேலே ஒரு கூம்பினை வைத்தது போல் செங்கல்லால் ஆன  ஒரு வித்தியாசமான கட்டிடம்.  பராமரிப்பு இன்றி புதர்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. பக்கத்தில் பெயர்ப் பலகை ஒன்றுமில்லை. அங்கிருந்து வந்த இளைஞரிடம், “ இது என்ன” என்று கேட்டதற்கு, “ ஏதோ, தியானமண்டபம்ன்னு சொல்றாங்க, பாத்துப் போங்க, பாழடஞ்சி கெடக்கு” என்றார். பார்த்து பார்த்து மெதுவாக உள்ளே சென்றோம். புல்லும் பூண்டும் மண்டிக் கிடந்தன. கற்களும் கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. ம்ஹூம், இது தியான மண்டபமாக இருக்க வாய்ப்பே இல்லை என எண்ணிக் கொண்டேன்.



இல்லம் திரும்பி இணையத்தில் பார்த்தபோது அந்தக் கட்டிடம், தானியங்களைச் சேமித்துவைக்கும் குதிர் என்று தெரிந்தது. .மேலே நான்கு புறமும் தானியங்களைக் கொட்ட வாயில்கள், கீழே தானியங்களை அள்ள ஒரு வழி, ...இருக்கும்..... இருக்கும் இது குதிராகத்தான் இருக்கும்.

வளமான தென்பெண்ணைக் கரையில், இந்தத் திருக் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் இருந்தது, இப்போது அது  100 ஏக்கராகக் குறைந்து விட்டது., அறுவடை செய்து வரும் நெல், கம்பு போன்ற தானியங்களில் ஆறில் ஒரு பங்கினை கோவிலுக்குக் கொடுத்துவிடுவார்கள். அவற்றைச் செமித்து வைக்கவே இந்தக் குதிர்கள் பயன்பட்டன, இந்தக் குதிரில் சுமார் 2,500 மூட்டை, அதாவது 5,000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றெல்லாம் பலப் பல செய்திகள்  இணையத்தில் கிடைத்தன. ஆனால், இன்று பாழ்பட்டுக் கிடக்கும் இதனைப் புனரமைக்கவோ, காப்பாற்றவோ நாதியில்லை என நினைக்கும் போது உள்ளம் கசிகிறது.


கோவில்களில் உள்ள குதிர்கள் பற்றி இணையத்தில் கிடைத்த பிற தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  ஆதித் திருவரங்கத்தில் உள்ளது போன்றே, திருவரங்கத்திலும் குதிர்கள் உள்ளன என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது. இங்கேயும், பராமரிப்பின்றி, குதிர்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்பது. வேதனைத் தரும் செய்தி.

மாறாக, குடந்தைக்கும் தஞ்சைக்கும் இடையே பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைவனம் திருக்கோவிலில் உள்ள குதிர் முறையாகப்  பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் குதிர் 17ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், அச்சுத நாயக்கரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டதென்றும்,  சுமார் 35 அடி உயரமும்  80 அடி விட்டமும் கொண்ட இந்தக் குதிரில் 3,000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

செஞ்சிக் கோட்டையில் குதிர் / நெற்களஞ்சியம் ஒன்று இருப்பதைக் கல்லூரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆதித்திருவரங்கம் ஆலயத்தில் உள்ள குதிர், செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு யூகம் தான். தொல்லியல் / இந்து அறநிலையத் துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு  மிக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க இந்த நிதி பயன்படுத்தப் படவேண்டும்.


தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

No comments:

Post a Comment