Sunday, April 23, 2017

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்

இசையும் சொல்லும் கலந்து வருவதுதான் பாடல். தமிழர் பாரம்பரியத்தில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தமிழர் நாட்டாற் வழக்காற்றியலில் உள்ள பாடல்கள் தான் எத்தனை எத்தனை?  அவற்றை எல்லாம் நாம் இன்று விரும்பி ரசிக்காமல் ஒதுக்கி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு தனித்துறை. தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் வானமாமலை, பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் போன்றோரின் ஆய்வுகள் இத்துறைக்கு பலமும் வளமும் சேர்ப்பனவாக இருக்கின்றன. மேலும் சில சிறந்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவருகின்றன  என்றாலும் கூட, விரிவான வகையில் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய களம் இது. தமிழகத்திலே கூட நாட்டார் வழக்காற்றியலைப் பாடமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையே இருக்கின்றன.

நம் குடும்பங்களில் இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவ்வகைப் பாடல்களைப் பாடுவோர் இருப்பார்கள். அவர்களைப் பாடச் செய்து பதிவுகள் செய்து அப்பாடல்களில் வரும் சொற்களை ஆய்வு செய்வதும், கதை வர்ணனைகளை ஆய்வு செய்வதும் தமிழ் மக்கள் பண்பாட்டினை அறிந்து கொள்ள நாம் செய்யக்கூடிய  மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாக அமையும்.  பாடல்களை இட்டுக் கட்டி பாடும் போது நாட்டுப்புறக்கலைஞர்கள் சொல்லும் கதைகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் காணலாம். சில பாடல்கள் வழி வழியாய் வந்த செய்திகளைக் கூறும். சில  பாடல்கள் தற்கால நிகழ்வினைக் கூறும். இவை எதுவாகினும், ஒரு செய்தியானது பாடல் வழியாகப் பதியப்படும் நிகழ்வாகவே நாட்டுப்புறப்பாடல்கள் அமைகின்றன.

No comments:

Post a Comment