Monday, November 14, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7


- இராம.கி.


அடுத்தது அகநானூறு 276. இதைப்பாடியவர் பரணர். ஆரியவரசனான பெருகதத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப்பாட்டால் தமிழ்மரபைக் கற்றுக்கொடுத்த கபிலரோடு, உரையாசிரியர் பலரும், பரணரைச் சேர்த்துக் கூறினும், காலத்தாற் கபிலருக்கு இளையராகவே தென்படுகிறார். பெருகதத்த மோரியன் காலம் பொ.உ.மு.187-185. பொ.உ.மு.185 இல் புஷ்யமித்திர சுங்கன் அவனைக்கொன்று தானே முடி சூடுவான். சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் (ஏன் சேரருக்குங் கூட) ஆகாத நிலையில் சுங்கனை எதிர்த்து, நெடுஞ்சேரலாதன் வடக்கே படையெடுத்துப் போனான். பெரும்பாலும் சேரநாட்டாரான பரணர். மாமூலனார் போல், அரசியற்செய்திகளை பாடல்களிற் பிணைப்பார். இவர் பாடல்களோடு, ஆதன் குடியினரை, குறிப்பாய்க் கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனைப் பொருத்தினால், முதிய வயதிற் செங்குட்டுவனைப் பரணர் பாடியது புரியும். செங்குட்டுவன் காலம் பொ.உ.மு. 131 - 77. கபிலரின் காலம் ஏறத்தாழ பொ.உ.மு.197-143 என்றும், பரணரின் காலம் பொ.உ.மு.180-123 என்றுங் கொள்கிறோம். செங்குட்டுவன் பட்டமேறிய 8 ஆண்டுகளுள் பரணரின் ஐந்தாம் பத்து பெரும்பாலும் எழுந்ததென முடிவு செய்யலாம்.

இப்பாடலின் திணை மருதம். தலைவியின் தோழியர் கேட்கும்படியாகப் பரத்தை சொன்னது. ஆரியர் களிறுகளுக்களிக்கும் பயிற்சி இப்பாட்டில் உவமையாய்ச் சொல்லப்படுகிறது. இப்பயிற்சி வடமொழி ஆணைகளால் நடந்ததாய்ச் சங்க இலக்கியக்குறிப்புண்டு. அதைக்கொண்டு ’சங்கதச்சிறப்பு’ சொல்வாருமுண்டு. பொறுமையோடெண்ணின், இதுபோற் கூற்றுக்களெழா. ஆணைமொழி என்பது இலக்கணம் கூடிய மொழியல்ல. சில ஒலிகள், சொற்கள், செய்கைகள் இவ்வளவுஞ் சேர்ந்ததே ஆணைமொழியாகும். வடமொழியெனில், அது சங்கதமா, பாகதமா? கேள்விக்குரியது. இன்றும் தென்கிழக்காசியாவில் யானைப் பயிற்றுவிப்புண்டு. அமெரிக்க விலங்குக்காட்சி சாலைகளிலும், வித்தையரங்குகளிலும் (circus) யானைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை அந்தந்த நாட்டுமொழியிற்றான் நடைபெறுகின்றன. சங்ககாலத் தமிழகத்தில் யானைகள் வடமொழியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டனவா? - என்பதற்கு வரலாற்றில் காரணமிருக்கலாம். பாட்டைப்படித்து விளக்கம் தேடுவோம்..

நீளிரும் பொய்கை இரைவேட் டெழுந்த
வாளைவெண் போத்து உணீஇய நாரைதன்
அடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக்
கடியிலம் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு
ஆவது ஆக இனிநா ணுண்டோ
வருகதில் அம்மவெம் சேரி சேர
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடிபயின் றுதரூஉம் பெருங்களிறு போலத்
தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்தவன்
மார்புகடி கொள்ளேன் ஆயி னார்வுற்று
இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்
பரந்துவெ ளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப்பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வாளை வெண்போத்து உணீஇய
நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை
தன்அடி அறிவுறுதல் அஞ்சிக்
கடிஇலம் பைப்பயப் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு
இனி நாண்ஆவது ஆக உண்டோ
எம்சேரி சேர வருகதில் அம்ம
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி
ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது பொருள்ஈட்டியோன் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
ஓம்பிய நலனே வருந்துகதில்லயாய் .

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். வாளை வெண்போத்து உணீஇய = வெள்ளிய ஆற்றுவாளைப் (Wallago attu) போத்து உண்பதற்கு; வாளையை ஆற்று வாளை என்றுமழைப்பர். உற்றுப்பாருங்கள் தமிழ்ப்பெயரே தலைகீழாய் மீனியற் பெயராகிறது. தெற்காசியா/தென்கிழக்காசியாவில் பரவலாக ஆறு, ஏரி, குளங்களில் இவ்வெள்ளைமீன் கிட்டத்தட்ட 1 மீ. நிரவல் நீளத்தோடும், 18-20 கி.கி. எடையோடும் வளர்கிறது. ஆண்மீன் பெண்மீனைவிடப் பெரியது; ”போத்து” ஆணைக் குறிக்கும். கடல்வாளையோடு ஆற்றுவாளையைப் பலருங்குழப்புவர்..கடல்வாளை குமரிக்கடற்கரைகளில் பெரிதுங்கிடைக்கும். மருதத்திணை என்பதாலும், நீர்நிலையில் நாரை சாப்பிடமுயல்கிறது என்பதாலும் இது நந்நீர் மீனையே இங்கு குறிக்கிறதெனலாம்.

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை = நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை; ”நீள்பெரும்” பெயரடை செவ்வகக் குளத்தைக் குறிக்கிறது. பொள்ளிச்செய்த குளம் பொய்கை..தன்அடி அறிவுறுதல் அஞ்சி = ”எங்கே தன்னடை (மீன்களுக்கு) அறிவுறுத்திவிடுமோ?” என அஞ்சி; கடிஇலம் பைப்பய புகூஉம் கள்வன் போல = காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் கள்வனைப் போல; ’பைய’ என்பது இன்று திருச்சிக்குத் தெற்கேதான் புழங்குகிறது. வடதமிழகத்தார்க்கு இச்சொல் புரியாமற் போகலாம். ஆனால் சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியுள்ளது. சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு = சாய்ந்தொதுங்கும் துறைநிறை ஊர்த்தலைவனோடு; ஆற்றோர துறையனாதலின் துறைகேழ் ஊரன். இனி நாண் ஆவது ஆக உண்டோ = இனியும் நாணப்படுவதில் பொருள் உண்டோ? எம்சேரி சேர வருகதில் அம்ம = பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்; இது ஒருவிதமான வல்லமைப் போட்டிக்கான கூவல். 

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் = செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண; இங்கே ஊரன்கிழத்தி மட்டுமின்றி, அவன்வீட்டு அனைத்துப்பெண்களும் பேசப்படுகிறார். தாரும் தானையும் பற்றி = அவன் மாலையையும், ஆடையையும் பற்றி; இன்றும் சேலை முன்’தானை’ பயில்கிறோம். வேட்டியின் ஒருபக்கமும் தானைதான். ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல = ஆரியர் பெண்யானைகொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல; இங்கே 2 உண்மைகள் பேசப்படுகின்றன. ஒன்று யானையின் உடற்கூறு, யானையின் வாழ்க்கை, யானையைப் பழக்கும் நடைமுறை ஆகியவற்றோடு தொடர்பானது.. இதை முதலிற் பார்ப்போம். இன்னொன்று வரலாற்றின் பாற்பட்டு, வடமொழிவழிப் பயிற்றுவிப்பு பற்றியது. இதை இரண்டாவதாய்ப் பார்ப்போம்..

யானைகள் பொதுவாய்க் குடும்பங் குடும்பமாய்த் திரியும் இயல்புடையன. ஆணோ, பெண்ணோ ஓரொரு யானையும் 50, 60 ஆண்டுகள்கூட வாழலாம். யானைக்குடும்பம் பெண்ணையே தலைவியாய்க் கொள்ளும். அகவைமுற்றிய ஆண்யானைகள் இதில் அடங்கியே வாழும். அதேபொழுது ஆண்யானைகளுக்குக் குடும்பங்களில் அழுத்தமில்லாதில்லை. குறிப்பாக விடலை யானைகள் குடும்பத்தோடு ஒட்டிவாழ்ந்தாலும், 14-15 வயதில் இனப்பெருக்க ஊறுமங்கள் (hormones), குறிப்பாய்த் தடித்திரமம் (testosterone), ஊறுவதால், குடும்பத்திலிருந்து விலகித் தனியாகவோ, வேறு ஆண்யானைகளுடன் சேர்ந்தோ அலையும்.. அப்போது வேறுகுடும்பப் பெண்யானையால் ஈர்க்கப்பட்டு, உடலுறவுகொண்டு, அக்குடும்போடு சேர்ந்துவிடலாம். (கிட்டத்தட்ட சேரலத்து மருமக்கள் தாயமுறை போன்றது தான்.)

தடித்திரம ஊறல் மாந்தரைப்போல் யானைகளுக்கு சீராகவமையாது. பருவம்பொறுத்துக் கூடக்குறைய அமையலாம். எக்கச்சக்கமாய் அளவுகூடிய யானைகளுக்கு மதம் (musth) பிடிக்கிறது. மிதமிஞ்சிய ஊறுமஞ் சுரந்த நிலையே மதமாகும். இதன் விளைவால், நெற்றித்தும்பில் (தும்பு=ஓரம்; temple of the forehead. நெற்றிப்பொட்டென்றுஞ் சொல்வர்.) பொக்குளந் தோன்றி அதுவெடித்துச் சீழ்வடியலாம். இச்சீழைத்தான் மதநீரென்பார். இது வடியும் நேரத்தில் இன்னதென்றறியாமல் சினங்கூடி, யானை வெய்யழிப்புத் (violent) தோற்றமுங் காட்டும். மதங்கொண்ட யானையை அடக்குவது கடினம். மதத்தை இறக்கி வழிக்கொணர்வது ’கலை,கொடுமையென எல்லாஞ்’ சேர்ந்தது. (இக்காலத்தில் ஊசிகள்போட்டும் மதங்குறைப்பர்.) சில ஆண்யானைகளுக்கு அடிக்கடி மதம்பிடிக்கலாம். சிலவற்றிற்கு எப்போதோ நடக்கலாம். சிலவற்றிற்கு நடக்காமலே போகலாம். எல்லாநேரமும் யானைக் கூட்டங்களில் அவற்றைக் கட்டுள் கொணர்வன பெண் யானைகளே. அதேபோல, தனித்துத் திரிந்த விடலை யானைகளைப் பிடித்துவந்து பழக்கும்போதும் பாகர்கள் பெண் யானைளை வைத்தே ஒழுங்கு நடைமுறையைச் சொல்லிக் கொடுப்பார்.           .

இனி இரண்டாம் கேள்விக்குப் போவோம். இற்றை மக்கள்திரள் ஈனியலின் (population genetics) படி, ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பழங்குடிமாந்தர் 70000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வந்தார்;  வந்தவரில் ஒருசாரார் இங்கிருந்து பர்மாபோய், பின் ஒவ்வொரு நாடாய்க் கடந்து ஆசுத்திரேலியா போய்ச் சேர்ந்ததாய் அறிவியல் கூறும். நெய்தலார் (coastal people) என்றழைக்கப்பட்ட இன்னொரு சாரார் இங்கேயே தங்கிக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் வாழ்ந்தார். வரும்போது இவர் ஏதோவொரு மொழியைக் கொண்டுவந்தாரென்றே அறிவியல் கூறும். அம்மொழி எது என்ற சிக்கலுக்குள் இப்போது போகவேண்டாம். ஆனால் அதிலிருந்து பல்வேறு காலங்களில் கிளைத்தவையே தமிழிய (திராவிட) மொழிகளாகும். பாகதமும் இதிலிருந்து தான் கிளைத்தது, அது வட திராவிடம் தான்  என்று ஒரு சாராரும், ”இல்லை வேறொரு மாந்தப்பெயர்வில் அது உள்நுழைந்தது” என்று இன்னொரு சாராருஞ் சொல்வர். இன்றுள்ள நிலையில் இந்தப்புதிரையும் விடுவிக்க முடியாது. 

அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்நெய்தலாரே நாட்டின் உட்பகுதிகளுக்குள் நுழைந்தார். முல்லைவாழ்க்கையும், குறிஞ்சிவாழ்க்கையும் அதன்பின் ஏற்பட்டன. (நம்மிற்பலரும் குறிஞ்சியே முதலென்று எண்ணிக்கொள்கிறோம். அப்படிக் கிடையாது.) இன்னும் காலங் கழிந்து, முல்லை/நெய்தல் ஊடாட்டத்தில், நுட்பியல் மாற்றங்கள் ஏற்பட்டு மருதவாழ்க்கை உருவானது. குறிஞ்சி, முல்லையில் குறுநில மன்னர் தோன்றினார். மருத வாழ்க்கையில் பேரரசரும், வேந்தரும் தோன்றினார். பொ.உ.மு.1000-800 களில் வடக்கே 16 கணபதங்களிருந்து அவையே பொ.உ.மு. 600 களில் 3, 4 வேந்தர்களாய் மாறி, முடிவில் பொ.உ.மு.500-450 களில் மகதமே பேரரசு என்னும் நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட இதேகாலத்தில் தமிழகத்திலிருந்த இனக்குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து சேர, சோழ, பாண்டியர் எனும் பெரும் இனக்குழுக்கள்வழி மூவேந்தரமைந்தார். இக்காலத்தில் தமிழகத்தினூடே குறுநிலவேளிர் இருந்தது போலவே வடக்கிலும் மகதத்தைச் சுற்றியும் ஊடேயுமிருந்தார். மகத நாகரிகத்திற்கும், தமிழ நாகரிகத்திற்கும் பல்வேறு ஒப்புமைகளும் போட்டிகளும் இருந்தன. (அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். என் ”சிலம்பின் காலம்” நூலில் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.)

தமிழகத்தைப் பார்க்க, மகதம் பென்னம்பெரிய நிலம். மக்கள்தொகைக் கூடக்கூட கங்கைக்கரையை ஒட்டிய காடுகளை அழித்து அவ்விடங்களில் மருதத்தை ஏற்படுத்தும் தேவை மகதத்திலெழுந்தது. போர்க்கைதிகளாலும், வரிச்சலுகைகளால் தூண்டப்பெற்ற மக்களாலும் பெருவாரியான மக்கள் நகர்த்தப் பெற்றனர். மரங்களை அழிப்பதும், வெட்டிய மரங்களை அகற்றுவதும் தேவை என்றபோது யானைகளே கதியென்றாயிற்று. தவிர, 16 கணபதங்களும் ஒன்றுக்கொன்று பொருதி, சில அழிந்து சில பிணைந்து முடிவில் மகதத்தின் படை விரிந்தது. எந்தக் கோட்டையின் பாதுகாப்பும் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புக்களே. வலுவெதிர்ப்பைச் (defence) [தொடர்புள்ள மற்ற சொற்கள் சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police)] சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் ஒரு சொல் பரிந்துரைத்தேன். கி.மு.462-446 இல், மகதவரசன் அசாதசத்துவிற்குப் பின்வந்த, உதயபட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில்மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர்நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் ?! - என்று சற்று எண்ணிப்பாருங்கள். இவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய படைவேண்டும்? யானையில்லாது கோட்டைகளை எப்படிக் காப்பாற்றமுடியும்? தகர்க்கமுடியும்?

அலெக்சாந்தர் இந்தியாவந்த நேரத்தில், நந்தரிடம் 9000 யானைகள் இருந்ததாய்ச் சொல்வர். அதேபொழுது, மற்ற அரசரிடம் (தெற்கேயிருந்த மூவேந்தரிடமுங் கூட) அவ்வளவு யானைகளில்லை. 1000 தேர்ந்தால் அதிகம். பரப்பளவிற்குறைந்த அரசுகளில் யானையிருப்புக் குறைவு. அரசின் பொருளாதாரம், வலுவெதிர்ப்பு போன்றவை வளர, யானைகளை அடக்குவதும், பழக்குவதும், பயன்படுத்துவதும் தேவையாயிற்று. எண்ணிக்கையிற் கூடிய யானைகள் தேவைப்பட்டன. எனவே மகதத்தில் யானைப்பாகர் மிகுத்துப் போனார். அந்நாட்டின் பலமருங்கிலும் யானைப்பயிற்சி மையங்கள் இருந்திருக்கலாம். அருத்த சாற்றம் (Arthasastra) இதை விரிவாகப் பேசும். (சங்க இலக்கியம் புரிய அருத்தசாற்றப் பின்புலம் தேவை.) பின்னால் மகத அரசுகள் சிதைந்தபோது யானைப்படைகளுஞ் சுருங்கின.

அக்காலத்தில் யானைகளைப் பழக்க மிகுந்த ஆண்டுகள் பிடித்ததால், போர் முடிந்தவுடன், எதிரி யானைப்படையைத் தம்படையோடு சேர்த்துக்கொள்ளும் விந்தைப் பழக்கமும் இருந்தது. (யானையைப் பிடித்துச் சிலவாண்டுகள் பழக்கிவைக்கும் செலவும், முயற்சியும் குறைந்துபோகுமே? சட்டென்று சேர்த்துக்கொள்ளலாமே?) எனவே நாளாவட்டில் நாடெங்கணும் யானைப்பாகர் நடுவில் வடமொழியான ஆணைமொழி பொதுவாகிப்போனது.

19 ஆம் நூற்றாண்டு நடைமுறையை நான் சொல்லலாம். இங்கிருந்து சுரினாம், ப்வ்யூஜி போன்ற நாடுகளுக்குப்போன இந்தியக்கூலிகள் தமிழ், தெலுங்கு போன்ற தம் மொழிகளை மறந்தே போனார். பெயரிலும் சில பழக்கங்களிலும் மட்டுமே தமிழிருக்கும். தங்களோடு அங்குவந்த பீகாரிகளின் மொழியான 19 ஆம் நூற்றாண்டு இந்துசுத்தானியே இவருக்கும் நாளடைவில் பொதுமொழியானது. அது நம்மூர் ”சர்க்கார்” சங்கத இந்திக்கும் வேறுபட்டது. இன்று சென்னையின் பலவிடங்களில் குறிப்பாக நான் 4 ஆண்டுகளிருந்த சோழிங்கநல்லூரில், ஞாயிற்றுச் சந்தையின் பொதுமொழி இந்தியாயிருக்கிறது. அங்கே பெரிதும் வாங்க வருவது பீகார், சார்க்கண்ட, சட்டிசுக்கர், ஒடிசா மாநிலங்களிருந்து வந்த கட்டிடத்தொழிலாளர். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலிருக்கும் பல்வேறு வடகிழக்கு மாநில மக்களால் அந்தூர்க் கடைவீதியில் இந்தியே பெரிதும் புழங்குகிறது. அதேபோல் சென்னை சவுகார் பேட்டையில் இருக்கும் மார்வாரிகளால், இந்தியே பெரிதாகிப் போனது. திராவிடம் பேசும் கட்சிகளே அங்கு இந்தியில் நுவலிகளை (notices) அளிக்கின்றன. எல்லாம் தேவை (demand) - அளிப்புத் (supply) தான். ஆரியர் வடமொழி வழியே சங்ககாலத் தமிழகத்தில் யானை பயிற்றுவித்தது ஒரு விலங்கியல், பொருளியல் ஊடாட்டம். அதற்கும் மொழிவிதப்பிற்கும் தொடர்பைக் காண்பது பொருளற்றது. இனி பாட்டிற்குள் போவோம்.

தோள்கந்தாகக் கூந்தலின் பிணித்து = என்தோளைத் தறியாக்கி என்கூந்தலால் கட்டிப்போட்டு; அவன் மார்பு கடிகொள்ளேன் ஆயின் = என்மார்பில் அவனைச் சிறைகொள்ளேனாயின்; ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் = ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது ஈட்டியவன் பொருள்போல்; பரந்து வெளிப்படாதாகி = பரந்து வெளிப்படாதாகி, ஓம்பிய நலனே = (இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு; வருந்துகதில்லயாய் = வருந்தி அழியட்டும்.  .

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

வெள்ளிய ஆண்வாளை உண்பதற்கு,
நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை,
”எங்கே தன்னடை (மீன்களுக்கு)
அறிவுறுத்திவிடுமோ?” என அஞ்சி
காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும்
கள்வனைப்போல சாய்ந்தொதுங்கும்
துறைநிறை ஊரனொடு
இனியும் நாணப்படுவதில் பொருளுண்டோ?

பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்!

செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண
அவன் மாலையையும், ஆடையையும் பற்றி,
ஆரியர் பெண்யானையை கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல
என் தோளைத் தறியாக்கி என்கூந்தலாற் கட்டிப்போட்டு
என்மார்பில் அவனைச் சிறைகொள்ளேன் ஆயின்
ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது
பொருளீட்டியான் போல்
பரந்து வெளிப்படாதாகி
(இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு
வருந்தி அழியட்டும்.


[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________




No comments:

Post a Comment