Saturday, August 29, 2020

வணிகமும் தமிழும்

வணிகமும் தமிழும்

முனைவர்.ப.பாண்டியராஜா


வணிகமும் தமிழும் - 1:
ஒரு பெட்டிக்கடையை எடுத்துக்கொள்வோம். அதில் சில நூறு பொருள்கள் இருக்கும். ஒருவர் கடையின் முன்பகுதியில் அமர்ந்துகொண்டு விற்பனை செய்துகொண்டிருப்பார், எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றனவோ, அவற்றைக் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்திருப்பார். எப்போதாவது விற்பனையாகும் பொருள்களைச் சற்றுத் தள்ளியோ, உயரமான இடத்திலோ வைத்திருப்பார். அவரைப் பொருத்தமட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் பொருள்களே மிக மதிப்பு வாய்ந்தவை. அவற்றில்  தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்.

இப்பொழுது ஒரு பெரிய விற்பனை நிலையத்தை (departmental store) எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஆயிரக்கணக்கான பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எனினும் எந்தெந்தப் பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றனவோ அவற்றை மக்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வண்ணம் வைத்திருப்பார். எனவே ஒரு கடைக்காரருக்கு எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன என்று தெரிந்துகொள்வதில் மிகவும் அக்கறை இருக்கும். ஒரு பொருள் விலை குறைந்ததாக இருந்தாலும் மிக அதிகமாக விற்பனையானால் அது வைக்கப்படும் இடத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அது மதிப்பு மிக்கதாகக் கருதப்படும். மிகவும் அதிகமான விலையுள்ள பொருளாக இருந்தாலும், அதிகம் விற்பனை ஆகாவிட்டால் அது பின்னுக்குத் தள்ளப்படும். அதற்கு அதிக மதிப்பு இல்லை. எனவே கடைக்காரரைப் பொருத்தவரையில் ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை மட்டுமல்ல, அது விற்பனையாகும் எண்ணிக்கையையும் பொருத்தது. இங்கே மதிப்பு என்பதை value என்கிறோம். விலை என்பதை Price என்கிறோம். எண்ணிக்கை என்பதை frequency என்கிறோம். இங்கு value = Price x frequency. காட்டாக, 500 ரூபாய் விலையுள்ள பொருள் 200 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 500 x 200 = 100000. ஆனால் 50 ரூபாய் விலையுள்ள பொருள் 2500 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 50 x 2500 = 125000. எனவே 50 ரூபாய்ப் பொருள் அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும். 

ஒரு மிகப் பெரிய கடைக்காரருக்குத் தன் கடையில் எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன, எவையெவை விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன என்று அறிந்துகொள்வதில் மிகுந்த நாட்டம் இருக்கும். இதற்குக் கணிதம் ஒரு வழி செய்திருக்கிறது. 
ஆமாம்,  இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுத்திருங்கள். அடுத்துச் சொல்கிறேன்.


வணிகமும் தமிழும் - 2:
ABC பகுப்பாய்வு - ABC Analysis
சென்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

விலை குறைந்த பொருள்கூட அதிகமாக விற்பனை ஆனால், உரிமையாளர் அதன் மீது மிக்க கவனம் செலுத்துவார் இல்லையா? அந்தப் பொருளை எங்கே வைக்கவேண்டும், எவ்வளவு வைக்கவேண்டும், தேவையான இருப்பு கைவசம் உள்ளதா என்பதில் அவர் மிக்க கவனம் செலுத்துவார். அத்தகைய பொருள்கள் A வகைப் பொருள்கள் எனப்படும். அவற்றை அடுத்து, ஓரளவு கண்காணிப்பில் இருக்கவேண்டிய பொருள்கள் B வகைப் பொருள்கள் ஆகும். ஏதோ இருக்கட்டும் என்று வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் C வகைப் பொருள்கள் ஆகும். 

ஒருவர் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் தன் கடையில் வைத்திருந்தால், சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஒரு கடையில் உள்ள பொருள்களின் மொத்த மதிப்பில் சுமார் 80 விழுக்காடு பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 விழுக்காடு பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 விழுக்காடு பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். இவற்றில் A வகைப் பொருள்கள் மீது கடைக்காரர் தனிக்கவனம் செலுத்துவார். இந்த வகையாகப் பகுப்பதற்காகச் செய்யப்படும் ஆய்வே ABC Analysis எனப்படும். ஒருவரின் ஆய்வுநிலைக்கு ஏற்ப இந்த விகிதங்கள் வெவ்வேறு விதமாகக் கொள்ளப்படும்.

செய்முறை: 
1. ஒவ்வொரு பொருளின் மதிப்பும் கணக்கிடப்படவேண்டும். ஒரு பொருளின் விலை, ஒரு மாதத்தில் அல்லது வருடத்தில் விற்பனை ஆகும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பெருக்க அந்தப் பொருளின் மதிப்பு கிடைக்கும். value = Price x frequency.
2. பின் அவற்றின் மதிப்பின் இறங்கு வரிசையில் அடுக்கவேண்டும். அதாவது, மிக அதிகமான மதிப்புள்ள பொருள் மேலே முதலில் வரவேண்டும். அதற்குக் கீழே அடுத்த மதிப்புள்ள பொருள் வரவேண்டும். இப்படியாகக் கடைசிவரை எடுக்கவேண்டும். கடைசியில் இருப்பது மிக மிகக் குறைந்த மதிப்புள்ள பொருள்.
3 பின்னர் இந்த எண்களுக்குரிய கூட்டு மதிப்பு (cumulative value) கணக்கிடப்படுகிறது. முதலாவது பொருளுக்குரிய கூட்டு மதிப்பு அதுவேதான். அடுத்த பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் இரண்டு மதிப்புகளுக்குரிய கூட்டுத்தொகை ஆகும். மூன்றாம் பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் மூன்று பொருள்களுக்குரிய மதிப்புகளின் கூட்டுத்தொகை ஆகும். இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்கும் உரிய கூட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. 
4. பின்பு இவை விழுக்காடாக மாற்றப்படுகின்றன.

இவற்றில் 80% வரை உள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் ஆகும். 
95% வரை உள்ள பொருள்கள் B வகை பொருள்கள் ஆகும். 
மீதமுள்ளவை C வகைப் பொருள்கள்.
கீழே ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

1.பொருள்  விலை எண்ணிக்கை
 1. 46.00 200
 2. 40.00    10
 3. 5.00        6680
 4. 81.00 100
 5. 22.00   50
 6. 6.00         100
 7. 176.00 250
 8. 6.00         150
 9. 10.00    10
 10. 4.00            50

2.பொருள் விலை   எண்ணிக்கை   மதிப்பு (விலை x எண்ணிக்கை)
 1 46.00 200 9200.00
 2 40.00   10 400.00
 3 5.00       6680 33400.00
 4 81.00 100 8100.00
 5 22.00   50 1100.00
 6 6.00         100 600.00
 7 176.00 250 44000.00
 8 6.00         150 900.00
 9 10.00   10 100.00
 10 14.00   50 700.00
 மொத்தம் 98500.00

3.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு (இறங்கு வரிசையில்) 
 7 176.00 250 44000.00
 3 5.00        6680 33400.00 
 1 46.00 200 9200.00 
 4 81.00 100 8100.00 
 5 22.00   50 1100.00 
 8 6.00          150 900.00 
 10 14.00    50 700.00 
 6 6.00          100 600.00 
 2 40.00    10 400.00 
 9 10.00    10 100.00 
            மொத்தம்    98500.00

4.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு (cumulative value)
 7 176.00 250 44000.00  44000.00 
 3 5.00       6680 33400.00  77400.00 
 1 46.00 200 9200.00          86600.00 
 4 81.00 100 8100.00          94700.00 
 5 22.00 50 1100.00          95800.00 
 8 6.00        150 900.00          96700.00 
 10 14.00   50 700.00          97400.00 
 6 6.00         100 600.00          98000.00 
 2 40.00    10 400.00           98400.00 
 9 10.00    10 100.00           98500.00
            மொத்தம் 98500.00

5.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு    விழுக்காடு தரம்
 7 176.00 250 44000.00 44000.00  44.67   A
 3 5.00       6680 33400.00 77400.00  78.58  A
 1 46.00 200 9200.00  86600.00  87.92   B
 4 81.00 100 8100.00  94700.00  96.14   B
 5 22.00 50 1100.00  95800.00  97.26   C
 8 6.00         150 900.00  96700.00  98.17   C
 10 14.00 50 700.00  97400.00  98.88   C
 6 6.00        100 600.00  98000.00  99.49   C
 2 40.00 10 400.00  98400.00  99.90   C
 9 10.00 10 100.00  98500.00        100.00   C
            மொத்தம் 98500.00   100.00

அதாவது மொத்த மதிப்பான 98500.00 என்பதை 100 எனக் கொண்டால் ஏனையவற்றின் மதிப்பு மொத்த மதிப்பின் விழுக்காடாகக் கிடைக்கும். நாம் A-வகுப்பு பொருள்கள் 80% எனக் கொண்டுள்ளதால், விழுக்காடு 78.58 வரையிலான பொருள்களான முதல் இரண்டு பொருள்கள் A வகையைச் சேர்ந்தவை. மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டியவை. அடுத்து, 95% வரையிலான பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. எனவே, கூட்டு மதிப்பில் 87.92, 96.14 என்ற விழுக்காடுகளைக் கொண்ட 1, 4 ஆகிய பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. இவை அடுத்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன. மீதமுள்ள 5, 8, 10, 6, 2, 9 ஆகியவை C வகையைச் சேர்ந்தவை. பொருள் 3 விலை மிகக் குறைவாக இருந்தாலும், தேவை மிக அதிகமாக இருப்பதால், கடைக்காரரைப் பொருத்தமட்டில் மிக மிக முக்கியமான பொருள் ஆகிறது
அட்டவணை 6.(படம் பார்க்க)



இங்கே பாருங்கள், பொருள் 7, பொருள் 3 ஆகியவைதான் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. பொருள்கள் 5,8,10,6,2,9 ஆகியவை எப்போதாவது விற்பனை ஆகின்றன. எனவே மிகக் குறைந்த அளவுப் பொருள்களே அதிகமாக விற்பனை ஆகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் எப்போதாவது விற்பனையாகின்றன. எனவே உரிமையாளர் தன் விற்பனைத் திறத்தை மேம்படுத்தவேண்டும். இங்கு 10 பொருள்களே எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான பொருள்கள் இருந்தால் இம்முறையின் சிறப்பு எளிதில் புரியும். அதிலும் கணினியின் பங்கு இங்கு அபாரமானது. விற்பனையையும், விலையையும் கொடுத்தால் அனைத்தையும் நொடியில் கணினி கணக்கிட்டு முடித்துவிடும்.

மீண்டும் நினைவில் கொள்வோம்: A பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் அதிகமாக இருக்கின்றனவோ, C பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் குறைவாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு உரிமையாளர் மகிழ்ந்துகொள்ளலாம். 
இதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கு நேர் எதிரிடையான சூழலை இலக்கியத்தில் பார்க்கப்போகிறோம்.
இலக்கிய ஆய்வில் இதன் முக்கியத்துவத்தை அடுத்துக் காண்போம். 

இந்த ABC பகுப்பாய்வைச் சங்க இலக்கியங்களுக்குப் புகுத்திப்பார்க்கலாம். 
அதற்கு முன் சங்க இலக்கியத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் - அறிமுகம் இல்லாதவர்க்கு - அடுத்த கட்டுரை


வணிகமும் தமிழும் - 3:
இந்தத் தலைப்பிலான முதல் இரண்டு கட்டுரைகளில் ABC பகுப்பாய்வு (ABC Analysis) என்றால் என்ன என்று பார்த்தோம். இப்போது அதனை எவ்வாறு இலக்கியத்துக்குப் பொருத்துவது எனக் காண்போம். 
இந்த ABC பகுப்பாய்வினைச் சங்க இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கப்போகிறோம். 
எனவே முதலில் சங்க இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தரப்போகிறேன். 
இது சங்க இலக்கியம்பற்றித் தெரியாதவர்களுக்கு மட்டுமே. 
அடுத்த கட்டுரையில் அதனை ABC பகுப்பாய்வு செய்வோம்.

சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்:
தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கிய நூல்களே ஆகும். இந்த நூல்கள் அனைத்தும் செய்யுள்கள் அல்லது செய்யுள்களின் தொகுப்புகளாகும். இந்த நூல்களிலுள்ள மொத்தச் செய்யுள்களின் எண்ணிக்கை 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இந்தப் புலவர்களில் வணிகர், குயவர் போன்ற பலவகையான தொழில்களைச் செய்வோர் உண்டு. நாடாளும் மன்னர்களும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாகும். இந்தச் சங்க நூல்களின் பெரும்பாலானவை கி.மு 300-க்கும் கி.பி.200 -க்கும் இடைப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்டவை.

சங்கம் என்ற சொல்லுக்கு அவை அல்லது சபை என்று பொருள். தமிழ் அறிஞர்களின் சபை தமிழ்ச்சங்கம் எனப்பட்டது. தமிழ் இலக்கிய ஆய்வும் செய்யுள் இயற்றுதலும், வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களைத் தொகுப்பதுவும் இதன் பணி. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் சங்க நூல்கள் கடைச் சங்க நூல்கள் எனப்படும். இதற்கு முன்னர் முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற இரண்டு சங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் தொகுக்கப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிக்கப்பட்டன என்றும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அவற்றுள் முதற்சங்கம் என்பது தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தன என்றும் அறிகிறோம். மூன்றாம் சங்கமான கடைச்சங்கம் இன்றைய மதுரையிலிருந்தது. இந்தச் சங்கங்களை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள்.

இந்தச் சங்கப்பாடல்களுள் நெடும்பாடலாக இருக்கும் பத்துப் பாடல்களைத் தொகுத்து அதனைப் பத்துப்பாட்டு என்று பெயரிட்டனர். அவை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை என்பன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை காலத்தால் மிகவும் பிற்பட்டது என்பர் ஆய்வாளர். இவற்றுள் மிகச் சிறியது 103 அடிகளைக் கொண்ட முல்லைப்பாட்டு என்ற பாடலாகும். மிகப்பெரியது 782 அடிகளைக் கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடல். 

அடுத்து நூற்றுக்கணக்கான குறும்பாடல்களைப் பல்வேறு தலைப்புகளில் பிரித்து அவற்றை எட்டுத்தொகுதிகளாக ஆக்கினர். இவை எட்டுத்தொகை நூல்கள் எனப்படும். அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. இவற்றுள் பரிபாடலும், கலித்தொகையும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பர்.

இந்தச் சங்க நூல்கள் எதைப்பற்றிப் பாடுகின்றன? மிகப்பெரும்பாலும் அவை மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றிப் பாடுகின்றன. அதிலும் பெரும்பாலான பாடல்கள் காதல்வயப்பட்ட ஆண்/பெண்ணின் அக உணர்வுகளை மிக அழகாக எடுத்தியம்புகின்றன. அவற்றின் மூலம் பண்டைத் தமிழரின் அன்றாட வாழ்க்கைமுறைகளை அழகிய சொல்லோவியங்களாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  புறநானூறு என்ற ஒரு நூல் மன்னர்களைப் பற்றியும் அவர்களிடையே நடந்த போர்களைப்,பற்றியும்,  வள்ளல்களைப் பற்றியும், பெருமையுடன் விவரிக்கிறது. ஆங்காங்கே மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் சொல்லிப்போகிறது. 
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (Every city is my city, Every person is my relative)
என்ற உலகம் வியந்து பாராட்டும் ஒற்றை வரி இந்தப் புறநானூற்றில் உண்டு. 

சங்க இலக்கியங்கள் சொற்செறிவு மிக்கவை. குறைந்த அளவு சொற்களில் மிகுந்த பொருளைத் தரக்கூடியனவாய்த் திகழ்கின்றன. பொதுவாக இயற்கையை ஒட்டிய விவரணங்களே சங்க இலக்கியத்தில் உண்டு. புனைவுச் செய்திகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. உவமைகளைக் கையாளுவதில் சங்கப் புலவர்கள் பெரும் திறன் வாய்ந்தவர்கள். ஒரு பறவையைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் மூக்கு, சிறகு, கால்கள், கால்நகங்கள் என நுணுக்கமான வர்ணனைகளைக் கொடுப்பதில் வல்லவர்கள். 

சங்க இலக்கியங்களில் மதக் கோட்பாடுகள் குறிப்பிடப்படவில்லை. இவற்றில் மிகவும் பிற்பட்ட காலற்றவை என்று கருதப்படும் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களில் பல இந்து மதக் கடவுளர்களும், புராணச் செய்திகளும் அதிகமாகக் காணப்பட்டாலும், சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் மதச்சார்பற்றவை - non-religious - என்றே கூறலாம். 

பொதுவாக, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம், மத நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்வியல்நெறிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் காண உதவும் பலகணி அல்லது ஜன்னல் என்று சங்க இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.

A.K.Ramanujan என்ற ஆய்வாளர் கூறுவார், “These poems are not just the earliest evidence of Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better".


வணிகமும் தமிழும் - 4:
சென்ற பகுதிகளில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

இதன் அடிப்படையில் ஓர் அங்காடியில் உள்ள பொருள்களை எவ்வாறு A வகைப் பொருள்கள் என்றும் B வகைப் பொருள்கள் என்றும் C வகைப் பொருள்கள் என்றும் பிரிக்கலாம் என்பதனை ஓர் எடுத்துக்காட்டுடன் கண்டோம். இப்போது இந்தப் பகுப்பாய்வை எவ்வாறு இலக்கியத்திற்குப் பயன்படுத்தலாம் என்று காண்போம். இந்த ஆய்வுக்குச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 

ABC பகுப்பாய்வு - இலக்கியத்தில் பயன்பாடு:
இலக்கிய ஆய்வுக்கு இந்த ABC பகுப்பாய்வு எந்தவகையில் பயன்படுகிறது என்பதைக் காண்போம்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்கள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக் கொள்வோம். சங்க இலக்கியங்களில் மொத்தம் 172902 சொற்கள் இருக்கின்றன. சொற்களைப் பிரிக்கும் முறையைப் பொருத்து இந்த எண்ணிக்கை ஓரளவு மாறலாம். இவற்றில் பல ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வரலாம். இந்தச் சொற்களைப் பிரித்து அவற்றை அகரவரிசையில் அடுக்கி, அவற்றில் தனிச்சொற்களை மட்டும் அவற்றின் எண்ணிக்கையுடன் கணக்கிடவேண்டும். நமது கணக்கீட்டில் சங்க இலக்கியங்களில் 25078 தனிச் சொற்கள் இருக்கின்றன. இவைதான் நமது ‘பண்டகசாலையிலுள்ள' பொருள்கள். இவற்றில் விலையுயர்ந்தவை, விலை குறைந்தவை என்ற பாகுபாடு கிடையாது. எனவே எல்லாச் சொற்களின் விலையையும் 1 என எடுத்துக்கொள்ளலாம். எனவே, இந்தச் சொற்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கைதான்(frequency) இவற்றின் மதிப்பும் ஆகிறது. 


இந்த மதிப்புகளின் இறங்கு வரிசையில் இந்தச் சொற்களையும் அவற்றின் எண்களையும் எழுதுகிறோம். பின்பு இந்த மதிப்புகளின் கூட்டு மதிப்பையும் காண்கிறோம். பின்னர் அவற்றின் விழுக்காடுகளையும் காண்கிறோம். 

இந்த 25,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட நீண்ட அட்டவணையில் முதல் 20 சொற்கள் இவைதான்.
1. 1248 (0.70%)( 0.70%) - என
2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
6. 683 (0.38%)( 3.01%) - என்
7. 644 (0.36%)( 3.37%) - நீர்
8. 629 (0.35%)( 3.72%) - அம்
9. 608 (0.34%)( 4.07%) - பல்
10. 568 (0.32%)( 4.38%) - இரும்
11. 540 (0.30%)( 4.69%) - பூ
12. 526 (0.30%)( 4.98%) - மா
13. 511 (0.29%)( 5.27%) - நீ
14. 506 (0.28%)( 5.55%) - இல்
15. 497 (0.28%)( 5.83%) - வாய்
16. 494 (0.28%)( 6.11%) - தோழி
17. 494 (0.28%)( 6.39%) - போல
18. 486 (0.27%)( 6.66%) - கால்
19. 484 (0.27%)( 6.93%) - உடை
20. 460 (0.26%)( 7.19%) - தலை

அதாவது, சங்க இலக்கியங்களில் ’என’ என்ற சொல் 1248 முறை வருகிறது. இதுதான் சங்க இலக்கியங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வருகின்ற சொல். மொத்தத்தில் இதன் விழுக்காடு 0.70% அடுத்துள்ள எண் விழுக்காடுகளின் கூட்டு மதிப்பு (Cumulative value). அது கூடிக்கொண்டே வருவதைக் காணலாம். இந்த நீண்ட அட்டவணையில் இறங்கிக்கொண்டே சென்றால் 6 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 81.01% . இந்தச் சொல்லின் வரிசை எண் 4526. எனவே இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் 4500க்கு மேற்பட்ட சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 18%. இந்தப் பதினெட்டு விழுக்காடு சொற்கள்தான் சங்க இலக்கியங்களில் எண்பது விழுக்காட்டளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே மிகக் குறைந்த அளவிலான சொற்களே சங்க இலக்கியங்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சங்க இலக்கியங்களின் சொல்வீச்சின் சிறப்பை உணர்த்தும். 

நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல, ஒரு அங்காடியில் A வகைப் பொருள்கள் மிக அதிகமாக இருந்தால் உரிமையாளர் மிகவும் மகிழ்வார். ஆனால் இலக்கியத்தில் A வகைச் சொற்கள் மிக அதிகமாக இருந்தால் அது சொல் வறட்சியைக் குறிக்கும். அந்த வகையில் இங்கு A வகைச் சொற்கள் மிகக் குறைவாக இருப்பது சங்க இலக்கியங்களின் சொல் வளத்தைக் குறிக்கும்.

அடுத்து, இதே அட்டவணையில் மேலும் இறங்கி வந்தால், 2 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 92.21% . இந்தச் சொல்லின் வரிசை எண் 14465. எனவே A வகைச் சொற்களை அடுத்து இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் சுமார் 10,000க்கு சொற்கள் எல்லாம் B வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 40%. இந்த நாற்பது விழுக்காடு சொற்கள் சங்க இலக்கியங்களில் 2,3,4,5 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

14,466 -ஆவது சொல்லிலிருந்து கடைசிச் சொல்லான 25,329-ஆவது சொல் வரையுள்ள அத்தனை சொற்களும் சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 10,000 -க்கும் அதிகமான சொற்கள்தான் C வகைச் சொற்கள் ஆகின்றன. இவை 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள். ஒரு கடையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருள்கள் வருடத்திற்கு ஒரே ஒரு முறை விற்றால் கடைக்காரர் நொந்துபோய்விடமாடாரா? ஆனால் இலக்கியத்தில் அப்படியில்லை. சங்க இலக்கியத்தில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று காணும்போது இது சங்க இலக்கியத்தின் சொல்வளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. 
எனவே, இந்த ABC பகுப்பாய்வு மூலமாக சங்க இலக்கியத்தின் சொல் வளமும், சொல் வீச்சும் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்கள் - For ABC Analysis Graph
1. 1248 (0.70%)( 0.70%) - என

2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
-------------------------------------------
-------------------------------------------
4520. 6 (0.00%)(80.99%) - மேக்கு
4521. 6 (0.00%)(80.99%) - மைந்தின்
4522. 6 (0.00%)(80.99%) - மொழிந்து
4523. 6 (0.00%)(81.00%) - மொழியும்
4524. 6 (0.00%)(81.00%) - மொழிவல்
4525. 6 (0.00%)(81.00%) - யாங்ஙனம்
4526. 6 (0.00%)(81.01%) - யாணர்த்து
-------------------------------------------
-------------------------------------------
11461. 2 (0.00%)(92.21%) - வைப்பவும்
11462. 2 (0.00%)(92.21%) - வையக
11463. 2 (0.00%)(92.21%) - வையகத்து
11464. 2 (0.00%)(92.21%) - வையமும்
11465. 2 (0.00%)(92.21%) - வையா
-------------------------------------------
-------------------------------------------
25324. 1 (0.00%)(100.00%) - வௌவினர்
25325. 1 (0.00%)(100.00%) - வௌவினன்
25326. 1 (0.00%)(100.00%) - வௌவினை
25327. 1 (0.00%)(100.00%) - வௌவுநர்
25328. 1 (0.00%)(100.00%) - வௌவுபு
25329. 1 (0.00%)(100.00%) - வௌவும்_காலை

இந்த அட்டவணைப்படி எண்ணிக்கை 6, அதாவது 81.01 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. அதன் பின்னர், எண்ணிக்கை 2, அதாவது 92.21 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் B வகைச் சொற்கள் ஆகின்றன. அடுத்து வருபவை எண்ணிக்கை 1 உள்ளவை. இவை C வகைச் சொற்கள்.

முடிபாக, ஏறக்குறைய 1,70,000-க்கு மேற்பட்ட சொற்களில் 25,000-க்கு மேற்பட்ட தனிச்சொற்களுள்ள சங்க இலக்கியங்களில் 18 விழுக்காடு அளவுக்கான சுமார் 4500 சொற்கள் மட்டுமே 80 விழுக்காடு அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே சங்க இலக்கியங்களில் ஒரு கட்டுக்கோப்பான சொற்பயன்பாடு இருப்பது தெரிகிறது. மேலும் 90% - 100% பயன்படுத்தப்படும் சொற்கள் மிகவும் அரிதான சொற்கள். அவை மொத்தத்தில் 40%. அதாவது 40% சொற்கள் அருஞ்சொற்களாக இருக்கக் காண்கிறோம். இது, சங்க இலக்கியங்களின் சொல்வளத்தைக் காட்டுகிறது.



No comments:

Post a Comment