Thursday, August 27, 2020

திருக்குறளில் நகைச்சுவை!

திருக்குறளில் நகைச்சுவை! 

-- சொ.வினைதீர்த்தான்


திருக்குறளில் உவகையளித்து சிந்திக்க வைக்கும் சில குறட்பாக்கள். 

முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?
கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
மற்றொருத்தி கூறினாளாம் சூடாக எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.

பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!
விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!
தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம்; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!

ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!
உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.

தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்! வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;" எதுவரை? கற்றறிந்தவர்கள் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம். ஆதலால் நிறுத்திக்கொண்டு மேற்கண்ட விளக்கங்களுக்கான குறட்பாக்களை நண்பர்கள்  பார்வைக்கு இணைத்துள்ளேன்.

//முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?//
இதை விளக்கும் குறட்பா...
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (குறள்: 839)

//கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!//
இக்கருத்துக்களைப் பிரதிபலிக்கும் குறள்கள்...
"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்: 1073)
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)

//ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள்: 1127)
//மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.//
"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து" (குறள்: 1128)

//பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!//
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள்: 1115)

//விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!//
"மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்" (குறள்: 1116)
//தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம் ; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!//
"காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று" (குறள்: 1114)

//ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!//
"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்" (குறள்: 1123)

//உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.//
இச்செய்திகளை உள்ளடக்கிய இரண்டு குறளமுதங்கள்...
"உள்ளினேன் என்றேன் மற்ற என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்" (குறள்: 1316)
"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"  (குறள்: 1315)

//தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்!.//
"வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று" (குறள்: 1317)

//வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;’ எதுவரை? கற்றறிந்தவர் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம்.//
"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்" (குறள்: 403)





No comments:

Post a Comment