Tuesday, October 22, 2019

இலங்கை மலையக ஊவா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் - அரசாணை

இலங்கை மலையக ஊவா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் - அரசாணை


            இலங்கை மலையகத்தில் உள்ள மாநிலங்களில் ஊவா மாகாணமும் ஒன்று. இம்மாநிலத்தில் 167 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள 140 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள் சிங்களத்திலேயே அமைந்துள்ளன. மீதமுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் அப்பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை இங்கே சிங்களப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், இசுலாமியப் பள்ளிகள் என்ற மூன்று வகை பள்ளிக்கூடங்கள் உள்ளன.

            இன்னிலையில், இம்மாநில கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வந்தார்; தமிழ் மொழியினை அசலான வகையில் நிலைநிறுத்துவதற்கான பணிகளையும் தொடங்கியிருந்தார். இக்கட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆவணப்படுத்துதல் தொடர்பான பணிகளை அங்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் முக்கியமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டிருந்த சிங்களப்பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்பதும் ஒன்று. இந்த கருப்பொருள் உடனடியாக ஊவா மாநில சட்டமன்றத்தில் வழங்கப்பட்டு விவாதப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஊவா மாநிலத்தின் அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் கம்பன், வள்ளுவன், செம்மொழி, மலைமகள், பெரியார், இளங்கோ, மாணிக்கவாசகர், திருக்குமரன், கலைமகள் என புதிய பெயர்களைப் பெறுகின்றன.

            இந்த அரசாணை இதுகாறும் சிங்கள மொழிப் பெயர்களாக இருந்த 140 தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் அமைவதை சட்டப்படி நிறுவும் அரசாணையாகும் மேலும் இம்மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத சில தமிழ்ப்பள்ளிகளும் இந்த அரசாணையின் படி அங்கீகாரம் பெறுகின்றன.








            இலங்கைக்கான 1964 சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளும் வித்தியாலயா என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்தச் சமஸ்கிருத சொல் சிங்களச் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. மேலும் பள்ளிகளின் பெயர்களும் சிங்களம் மற்றும் எஸ்டேட்களின் பெயரைச் சார்ந்து ஆங்கிலத்திலும் அமைந்துள்ளதைக் கல்வி அமைச்சு அங்கீகரித்திருக்கின்றது. இந்த அடிப்படையில் ஊவா மாகாண தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள் தமிழில் தான் அமைய வேண்டும் என்ற கருத்தில் இவற்றைத் தமிழ்ப்படுத்திக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இம்மாநில கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் முன்னெடுத்த செயல்பாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனைகளும் இணைந்தது. 

            தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கிய 60 பெயர்கள் கொண்ட பெயர் பட்டியலையும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த பெயர் பட்டியலையும் இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்களிடம் வழங்கி அவர்கள் விரும்பும் தமிழ்ப்பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கினார். அது மட்டுமன்றி தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்திருந்த பெயர்களையும் அவர்களின் தேர்வுக்கு அனுமதித்தார். இதன் அடிப்படையில் 140 தமிழ்ப்பள்ளிகள் இன்று தமிழ்ப்பெயர்களுக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதிது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு என்பதில் ஐயமில்லை.

            இலங்கை சட்டப்படி School என்பது வித்யாலயா என்று வழங்கப்படுகின்றது. இதனைத் தமிழ்ப்படுத்தி பள்ளிக்கூடம், பாடசாலை, கல்விக்கூடம் ஆகிய மூன்று பெயர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பரிந்துரைத்தது. இதில் பள்ளிக்கூடம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் மத ரீதியான சொல் என்றதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு பாடசாலை என்ற பெயர் ஏற்கப்பட்டது. ஆயினும் இப்பெயர் இலங்கை கல்விச்சட்டத்தின் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தற்கால கல்விச்சட்டத்தின் அடிப்படையில் வித்தியாலயம் என்றே அழைக்கப்படும். எனினும் எதிர்காலத்தில், வெகு விரையில் சட்டத் திருத்தத்திற்கான முயற்சிகள் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

            இன்று வழங்கப்பட்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கான பெயர் பட்டியலில் சமஸ்கிருதச் சொற்களும் இடம்பெறுகின்றன. பொதுவாகவே இலங்கை மலையகத் தமிழர்களின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் மணிப்பிரவாள நடையில் அதிகமான சமஸ்கிருத சொற்கள் கலந்திருக்கின்றன. அது மட்டுமன்றி அச்சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்றே இலங்கை மலையகத் தமிழ் மக்கள் பெருவாரியாகக் கருதுகின்றனர். ஆக, பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் சமஸ்கிருத பெயர்களும் இடம்பெற்று இருப்பதைக் காண முடிகின்றது. இதனைச் சீர்செய்வது பற்றி இப்போது கலந்துரையாடத் தொடங்கியிருக்கின்றோம். இதுபடிப்படியாக அடுத்த கட்ட மேம்பாட்டுப் பணியாக முன்னெடுக்கப்பட்டு தூய தமிழ்ப் பெயர்கள் அமையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

            கடந்த ஏறக்குறைய 50 ஆண்டுக் காலத்தில் இலங்கையில் நடந்த போர் மற்றும் மலையக மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலான வாழ்வியல் நிலைப்பாடுகளில் அவர்கள் பெருவாரியாகத் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழகம் போலச் செயல்படக்கூடிய சாத்தியங்கள் நிகழவில்லை. தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கமும், திராவிட இயக்கங்களும், ஏனைய தூய தமிழ் செயல்பாட்டு அமைப்புக்களும் முன்னெடுத்த மணிப்பிரவாள நடை மாற்றம் மற்றும் தூய தமிழ் பயன்பாடு இலங்கையைப் பொறுத்தவரை நிகழாத நிலையில், இனிமேல் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாம் காண முடிகின்றது. போருக்குப் பிந்தைய மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்தத் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சி, தூய தமிழ் நடை பயன்பாடு போன்றவையும் அமைச்சர் செந்தில் தொண்டமான் போன்றோரால் முன்னெடுக்கப்படும் என்பது அவர்களது செயல்பாடுகளிலிருந்து காணக்கூடியதாக இருக்கின்றமை நம்பிக்கையளிக்கின்றது.

            இலங்கையைப் பொறுத்த அளவில் அதிலும் மலையகப் பகுதியில் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டதாரி பொறியாளர்களும் வழக்குரைஞர்களும், மருத்துவர்களும் ஏனைய திறன் படைத்தோரும் உருவாகும் காலம் இது. அங்கு மிகப் பெரிய அளவில் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகத் துரிதப்படுத்தப்பட்டுள்ள சூழ் நிலையில் இந்த தமிழ்ப்பெயர்கள் சூட்டல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வானது இலங்கை தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணியில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரிய முயற்சியை உலகத் தமிழர்கள் வரவேற்று வாழ்த்துவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு








No comments:

Post a Comment