Saturday, September 8, 2018

சங்க இலக்கியத்தில் காசு


—  முனைவர்.ப.பாண்டியராஜா


              சங்க இலக்கியத்தில், காசு என்ற சொல்லைப் பற்றிய குறிப்புகள் 14 இடங்களில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளின் மூலம் சங்ககாலத்தில் காசு என்ற சொல் எந்தப்பொருளில் வழங்கப்பட்டது என்பதைக் காண்போம்.

                இந்தப் பதினான்கு குறிப்புகளில் ஏழு இடங்களில், காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஓர் அணிகலத்தில் கோக்கப்படும் உறுப்பாகவே கூறப்பட்டிருக்கிறது. அவை:

          1. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திரு 16

          2. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் - நற் 66/9

          3. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங் 310/1

          4. உடுத்தவை, கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் - கலி 85/3

          5. பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 75/19

          6. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 269/15

          7. பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புறம் 353/2

                இங்கே, அல்குல் என்பது இடுப்பைச் சுற்றி, இடுப்புக்கும் சற்றுக் கீழான பகுதியைக் குறிக்கும். இன்றைக்குப் பெண்கள் இடுப்பில் ஒட்டியாணம் அணிந்திருப்பது போல, சங்க காலத்துப் பெண்கள் தம் இடுப்புக்குச் சற்றுக் கீழே, காசுகளைக் கோத்துச் செய்த ஓர் அணிகலனை அணிந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. 



இந்தக் காசுகள் என்ன வடிவத்தில் இருந்தன என்பதனையும் இந்தக் குறிப்புகளினின்றும் அறியலாம்.

இந்தக் காசுகள் முட்டை அல்லது உருண்டை வடிவில் இருந்ததாகவும் பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டதாகவும் பல குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

[1] இந்தக் காசுகள் குமிழம்பழம் போல் இருந்தன என்கிறது நற்றிணை.

            இழைமகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் - நற் 274/3-5

அணிகலன் அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகள்

                எனவே, இந்தக் காசுகள் குமிழம்பழம் உருவில் இருந்தன. குமிழ் என்றாலே உருண்டை என்று பொருள்.


[2] இந்தக் காசுகள் நெல்லிக்காய் போல் இருந்தன என்கிறது அகநானூறு.

அ.
          கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் - அகம் 363/5-8

திரண்ட அடிமரத்தையும்
சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடு அற்ற பசிய காய்கள்
கற்களையுடைய நெறிகளில் கடிய காற்று உதிர்த்தலால்
பொன்னால் செய்த காசுப் போல அழகுறப் பரவிக்கிடக்கும்.

ஆ.
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப - அகம் 315/10-12

புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லியின்
மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள்
அறுந்து போன நூலிலிருந்த உருண்ட பளிங்கின் துளையிட்ட காசுகளை ஒப்ப

                இந்தக் காசுகள் பளிங்கினால் செய்யப்பட்டு நூலால் கோக்கப்பட்டவை.



நெல்லிக்காய்கள் துளையிட்ட காசுகளைப் போன்று இருந்தன என்ற ஒப்புமை எவ்வளவு சரியாக இருக்கிறது என்று பாருங்கள்.


[3] இந்தக் காசுகள் வேப்பம்பழம் போல் உருண்டு இருந்தன என்கிறது குறுந்தொகை.

           கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் - குறு 67/2-4

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலில் கோப்பதற்காக முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்.




[4]  இந்தக் காசுகள் கொன்றையின் மொட்டுக்கள் போல் இருந்தன என்கிறது இன்னொரு குறுந்தொகைப் பாடல்

காசின் அன்ன போது ஈன் கொன்றை - குறு 148/3

காசைப் போன்ற மொட்டுக்களை ஈன்ற கொன்றை





[5] சில காசுகள் மணிகளால் செய்யப்பட்டிருக்கும்.

குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் - அகம் 293/6-8

குயிலின் கண்ணைப் போன்ற நிறமுள்ள காய்கள் முற்றி
மணியினால் செய்யப்பட்ட காசுகளைப் போன்ற கரிய நிறத்திலான பெரிய கனிகள்
உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும்



[6] சில காசுகள் வட்டமாகத் தட்டை வடிவிலும் இருந்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது.

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங் 310/1

பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுகளை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குல்

 பாண்டில் என்பது வட்டம் என்ற பொருள் தரும். இது இன்றைய காசுமாலையை ஒக்கும்.



பாண்டில் என்பது பெண்கள் அணியும் ஓர் அணிகலன் என்பார் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்.

அப்படியெனில் பாண்டில் காசுவும் ஏனைய காசுகளைப் போல் உருண்டை வடிவினதாகவே இருந்திருக்கலாம்.


[7]  இதுவரை காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையில் கோப்பது என்று அறிந்தோம்.

ஆனால் சிறுவர்கள் காலில் அணியும் கொலுசு என்ற கிண்கிணியிலும் காசுகள் கோக்கப்படும் என்று குறுந்தொகை கூறுகிறது.

செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை - குறு 148/1-3

செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை






எனவே, சங்க காலத்தில் காசு என்பது முட்டை வடிவத்தில் அல்லது உருண்டையாக இருந்திருக்கிறது.

மிகப் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது.

பளிங்கு, மணிகள் ஆகியவற்றாலும் காசு செய்யப்பட்டிருக்கிறது.

பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையிலும், சிறுவர்கள் காலில் அணியும் கொலுசிலும் காசுகள் கோக்கப்பட்டிருக்கின்றன.

காசு என்பது பணமதிப்பு உடையது என்றோ, கொடுக்கல்வாங்கலில் பயன்படுத்தப்பட்டது என்றோ சங்க இலக்கியங்கள் தெரிவிக்கவில்லை.


குறிப்பு: என்னுடைய இணையதளமான sangacholai.in என்பதில் சேர்க்கப்பட்டு உருவாகிவரும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற பகுதியில் கா என்ற எழுத்துக்குரிய காசு என்ற சொல்லுக்கான விளக்கவுரை இது.





___________________________________________________________
தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/

No comments:

Post a Comment