Sunday, August 28, 2016

என்னை உரித்துக்கொண்டு...

-- ருத்ரா இ.பரமசிவன்



எனக்குள் நான் இயல்பாய் இல்லை.
யார் என்னை பிதுக்கி க்கொண்டு   வெளியேறுகிறார்கள்.?
நாலு தலைமுறைக்கு முந்திய ஏதோ ஒரு பிறவி
தலை விரிகோலமாய் வெளியே வருகிறது.
வயது முடியாமல் எங்கோயோ ஒரு புளிய மரத்துக்கிளையில்
கயிற்றில் தொங்கி விட்டு
இப்போ சர  சரவென்று கீழே இறங்கி ஓடுகிறது.
என் எதிரில் உட்கார்ந்து சாவதானமாய் கேட்கிறது.
சமணத்துறவிகளை குடைந்து குடைந்து கேட்கிற
சங்கராசாரியார் பாஷ்யம்போல்
வாதராயணர் போல் கேட் கிறது.
காரணம் எது?காரியம் எது?
இரண்டுமேயாகவும் இரண்டுமே இல்லாமலும்
பரமாத்மாவுக்கு முந்திய ஜீவாத்மாவும்
ஜீவாத்மாவின் யோனிக்குள் தங்கியிருக்கிற பரமாத்மாவும்
.................
இன்னும் வாய்க்குள் நுழையா சம்ஸ்கிருத கொத்து கொத்தான
சொற்றோடர்கொண்டு
அது துளைத்துக்கொண்டே இருந்துது.
காலம் பின்னோக்கிக்கொண்டே போய்
காலம் காலத்திலிருந்தே கழன்று கொண்டது போல்
காலம் அறுந்து விழுந்தது.
யார் அது? எது அது?
திடீரென்று நாமக்கல் கோவில் தெய்வம்
கனவில் வந்து
எலிப்டிக் ஃ பங்க்ஷனின் க்யூப்த் ரூட் சொல்யூஷன்
சொல்லிசென்றதே அந்த தியரம் சொல்லு
என்று ராமானுஜனாய் ஒரு விஸ்வரூபக் குரல்  கேட்கிறது!
அது 2105 ஆம் ஆண்டின் நுணுக்கமான "ப்ரேன் காஸ்மாலாஜியின்"
கணித விவரம்..
என்ன இது? எதுவும் புரிய வில்லை.
நான் ஹீப்ருவில் கூட ஓல்டு டெஸ்டமெண்டை
அப்படியே ஒப்பிக்கிறேனாம்.
என்னை உரித்துக்கொண்டு
நிர்வாணமாய் ஓடியது யார்?
கோடி பறக்குது! கடல் துடிக்குது!ஒலி பெருக்கி வலியை பெருக்கியது.
ராவெல்லாம் என் நாக்கில் கோடாங்கி அதிர்ந்ததாம்.
அப்பா பதறி விட்டார்.அம்மா அழுது புரண்டாளாம்.
விடிந்தது.
முக்கு வீட்டு சாமியாடி பூதப்பாண்டிக்கு
ஆள் போயிருக்கிறது.





______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment