Thursday, May 1, 2014

இன்று பாலிண்ட்ரோம்!


இன்று பாலிண்ட்ரோம்!

இன்றைய தேதி என்ன? 21.02.2012. இதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள். வலது பக்கத்தில் இருந்து படித்தாலும், இடது பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியே வரும். இப்படி இருக்கும் அமைப்பை ஆங்கிலத்தில் ‘palindrome’ என்கிறார்கள். பாலிண்ட்ரோம் அமைப்பு ஒரு வார்த்தையிலோ, ஒரு வாக்கியத்திலேயோ அல்லது சில எண்களின் கூட்டமைப்பிலோ வரலாம்.  பாலிண்ட்ரோம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து எடுக்கப் பட்டது. palin என்றால் மறுபடியும் என்று அர்த்தம். dromos என்றால் way, direction என்று பொருள். இந்த வார்த்தை 17 ஆம் நூற்றாண்டில் பென் ஜான்சன் என்கிற ஆங்கில எழுத்தாளரால் உருவாக்கப் பட்டது.

இந்தப்  பாலிண்ட்ரோம் அமைப்பில் கி.பி. 79 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வார்த்தை சதுரம் ஒன்று ஹீர்குலேனியம் என்ற இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் காணப்படுகிறது. இதுதான் மிகப் பழமையான பாலிண்ட்ரோம் என்று சொல்லப் படுகிறது.

“Sator Arepo Tenet Opera Rotas“  இதை எப்படி வாசித்தாலும் – மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், வல இடமாக, இடம் வலமாக – ஒரே மாதிரி இருக்கிறது பாருங்கள்.

பாலிண்ட்ரோம் என்பதனை தமிழில் ‘மாலை மாற்று’ என்கிறார்கள். முதன் முதலில் இந்த அமைப்பில் பாடல் எழுதியவர் சைவ சமயத்தைச் சார்ந்த சம்பந்தர். அந்தப் பாடல் இதோ:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இந்தப் பாடல் சீர்காழியில் உறையும் சிவ பெருமானைப் பற்றியது. ஈடு இணையில்லாத கடவுள்; வீணையைக் கையில் ஏந்தியவர்;பாம்புகளை மாலையாக அணிந்தவர்; காமனை அழித்தவர்; விஷ்ணு வடிவாகவும் இருப்பவர்; அவரே பக்தர்களின் துயர் களைய வேண்டும் என்று இப்பாடலில் சிவ பெருமானை வேண்டுகிறார் சம்பந்தர். திருஞா னசம்பந்தரின் ‘மாலை மாற்றுப் பதிகம்’ மிகவும் புகழ் வாய்ந்தது.

“ஒரு செய்யுள் முதல்,

ஈறு உரைக்கினும்,

அஃதாய் வருவதை

மாலை மாற்றென மொழி”

தமிழிலும் ஒரு வார்த்தை சதுரம் இருக்கிறது. இதை மேலிருந்து கீழ்,  இட வலமாக மட்டுமே வாசிக்க முடியும்.

க ர டி

ர யி ல்

டி ல் லி

மாதவச்சிவஞானயோகிகள் எழுதிய காஞ்சிப் புராணத்திலும், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய திருநாகைக் காரோணப் புராணம் என்ற நூலிலும் ‘மாலை மாற்று’ பாணியில் பல செய்யுள்கள் உள்ளன.

தமிழில் உள்ள   பாலிண்ட்ரோம் வார்த்தைகள்

விகடகவி, மாமா, பாப்பா, காக்கா.

வாக்கியங்கள்: தேரு வருதே, மோரு போருமோ, மாலா போலாமா சமஸ்க்ருத மொழியில் இந்தப் பாலிண்ட்ரோம் அதிக அளவில் கையாளப் பட்டு வந்தன. சிக்கலான பாலிண்ட்ரோம் வார்த்தைகள், வாக்கியங்கள் கொண்ட கவிதை வரிகள் மகா என்ற கவிஞர் எழுதிய சிசுபால வதம் என்கிற நூலில் இருக்கின்றன. கீழே இருப்பது

நந்தி கண்ட கவி என்பவர் எழுதிய பாலிண்ட்ரோம் கவிதை வரிகள்.

सारस नयना घन जघ

नारचित रतार कलिक हर सार रसा

सार रसारह कलिकर

तारत चिरनाघ जनघ नायनसरसा ! |

ஆங்கில மொழியிலும் பாலிண்ட்ரோம் நிறைய இருக்கின்றன.

“A man, a plan, a canal, Panama”,

”Madam, I’m Adam”

”Madam in Eden, I’m Adam”,

“Doc, note: I dissent. A fast never prevents a fatness. I diet on cod.”

and “Never odd or even.” “Rise to vote sir”

ஆங்கில தேதி மற்றும் ஆண்டுகளை எழுதும்போதும் சில சமயங்களில் பாலிண்ட்ரோம் வரும். உதாரணங்கள்:

21.02.2012, 02.02.2020, 2.10.2012.

டேவிட் ஸ்டீபன்ஸ் எழுதிய ‘satire:veritas’ ,   லாரென்ஸ் லாவின் எழுதிய Dr. Awkward மற்றும்    Olson in Oslo முதலிய இரண்டு ஆங்கில நாவல்கள் பாலிண்ட்ரோம் முறையில் அமைந்துள்ளன.


published in a2ztamilnadunews.com

கட்டுரை ஆக்கம் ரஞ்சனி நாராயணன்

No comments:

Post a Comment