Friday, March 8, 2019

அடிமைகள் பற்றிய கொறுக்கை வீரட்டேசுவரர் கோயில் கல்வெட்டு



——   சேசாத்திரி சிறீதரன்


40 குடும்பத்து 105 அடிமைகள் பற்றிய கல்வெட்டு:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொறுக்கை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள வீரட்டேசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்கு சுவர் கல்வெட்டு. இது மூன்றாம் இராசராசனின் 19 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1235) வெட்டிய கல்வெட்டு என்பது எழுத்தமைதியால் கணிக்கப்பட்டுள்ளது. 


இதில் மக்கள் குடும்பம் குடும்பமாக அடிமைகளாகக் கோவிலுக்கும் தனி ஆள்களுக்கும் விற்றுக் கொண்ட செய்தி உள்ளது. இவர்களுக்குள்ள உறவுமுறையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடன்வாங்கித் திருப்பி செலுத்த முடியாமல் ஓட்டாண்டி (திவால்) ஆகி அடிமைசெய்வாராக ஆனார்களா? அல்லது சாதி நீக்கி ஊராரால் ஒதுக்கப்பட்டு அடிமையாக வந்தார்களா? அல்லது ஏதேனும் நேர்த்திக்கடன் செலுத்த அடிமை ஆனார்களா? அல்லது கோவில் சலுகை ஒன்றைப் பெற அடிமை ஆனார்களா? இப்படி எந்த முடிவும் கொள்வதற்கு இடம் தரும்படியாக கல்வெட்டில் எந்த ஒரு துப்பும் இல்லை. சிலர் இறைவனுக்கு அடிமையாய் தாமே ஒப்புக்கொண்டவர், விலைக்கு விற்றுக் கொண்ட அடிமைகள் சிலர், இன்னும் சிலர் விலைக்கு வாங்கி தானம் கொடுக்கப்பட்ட அடிமைகள்.

இதற்கும் முற்பட்ட இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அடிமையானோரும் இக்கல்வெட்டின் பிற்பகுதியில் குறிக்கப்படுகின்றனர். விந்தையாக இந்த அடிமைகளின் பெயர்களை உற்று நோக்கும் போதும்; இதில் குறிக்கப்பட்டுள்ள அகமுடையாள் என்ற பிராமணர் வீட்டில் புழங்கும் சொல்லையும் நோக்க இந்த அடிமைகள் பலரும் பிராமண குடும்பத்தவர் என்று தெரிகின்றது. சில அரசுகுடியோர் பெயரும் இடம்பெறுகின்றது. இணைப்பில் உள்ள 2/1994 கல்வெட்டின் இறுதியில் சில பிராமணர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அதைக் கொண்டு இவர்கள் பிராமணர் என முடிவுகட்டப் பட்டது. கல்வெட்டு பாடத்தைப் படிக்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிக்குவரி விளக்கத்தைப் படித்தால் இதன் பொருளை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். பின்பு கல்வெட்டு பாடத்தைப் படித்தால் எளிதாகப் பொருள் புரியும்.  

கல்வெட்டு பாடம்:
1.   ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர [வளநாட்டுக்] குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு[டை]யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ[ற்]கு [திருவாய்மொழிந்]தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டினபடி திருமுகப்படி   ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன்,  இவன்  அகமுடையாள் சோழி. இவன் மகன் எழுவடியான் இவந் தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடு டையான் இவந் தம்பி வள்
2.   ளல். இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள். இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன். இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம். வீரவிநோத வேளான் இவந் தம்பி சிங்க பிரான். இவன் தங்கை மண்டையாண்டி அழ[கி]யாந் மகந் வ _ _ _ [த]ங்கை செல்வம். இவள் மகன் பெருமாள். இவன் தங்கை ஆண்டாள். சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந்தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள். இவள் _ _ _  உடையாந் இவன் தங்கை பெரியாள். இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை. இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள். இவந் தங்கை பெரியாள். இவள் மகள் ஆண்டாள் இ
3.   ப்பெரியான் தங்கை செல்வம். இவள் ம[க்]கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை. இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி. தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான். கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி. இவள் மகள் செல்வம். இவள் மகந் திருவெண் காடுடையாந். இவந்தம்பி செல்வந் இவந்தம்[பி உய்]யவந்தாந் இவந் தம்பி இருள்நீக்கி. கவிணிந உத்தம சோழந் சூரிய தேவர் தாநம் பண்ணி[னபே]ர், ஆடவலாந் கொத்தில் செல்வி. இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து. இவள் தங்கை திருச் சிற்றம்பல முடையாள். சடையன் அகமுடையாள் செல்லகொத்து. வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி. மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்[கை] மந்றமுடையாள் கொத்து. இவ
4.   ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சந் அகமுடையாள் நங்கை கொத்து. சந்திரந் அ[க]முடையாள் திருவிந் கொத்து. கீர்த்தி நாராயணஞ் சிங்கப் பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை. இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றாள். கவிணியன் சூரியதேவந் தெக்ஷணாமூர்த்தி  பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடனந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி. தில்லை நாகந் பெரியநம்பி பக்கல் கொண்டுடைய வீரட்டந் சொறி. இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்காடு தேவந். சோமாசி _ _ _ மா[றனும்], கண்ணுவநந் கருமாணிக்கம் சீரிளங்
5.   கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள். கவிணியந் சூரிய தேவந் திருச்சிற்றம்பல முடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்காடந் சோறுடையான். தவுமியந் வெண்காடு தேவந், திருச்சிற்றம்பல முடையாந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டன் திரு. இவள் மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை. பிரமதேச ராஜராஜச் சருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும், இவந் தம்பி உ[மா சகி]தந் திருச்சிற்றம்பல முடையானும் பக்கல் கொண்டுடைய கூத்தாடி சூற்றிய தேவி இவள் மகள் மண்டையாண்டி. இவள் தம்பி கண்ணந் இவள் தங்கை
6.   பெற்றாள். இவந்தம்பி இராம தேவந். இவந் தங்கை உமையாண்டாள் இவள் தம்பி திருநட்டப் பெருமான். பெற்ற கோவில் சோழ விழுப்பரையன் பக்கல் கொண்ட கேசவந் சீ _ _ _ _. இவன் மகந் பெற்றாந் கேசவந் வேதம் உடைய பிரான். இவன் தங்கை அவையம் புக்காள் இ _ _ _ _ கள் கூத்தாடி நங்கை. இவன் தங்கை _ _ _  க்குடுத்தி. திருமங்கலத்து அரயந் அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந குலோத்துங்க சோழக் கெணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி. இவள் மகள் அம்மச்சி. நித்தந் திருவடியும், நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில் கொண்டு இவன் பக்க
7.   ல் பெற்ற நித்தந் னம்பி. இவந் தம்பி சிங்கப்பிரான். தவுமியந் வெண்காடு தேவந், ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள். இவள் மகள் ளாசு பாரத்துவாசி. இரவிதாஸந் சக்கரபாணி, பிராம்மணி வாழ்வி தாட்சானி  பக்கல்   கொண்ட பிராந்தக தேயந் ஸ்ரீகிருஷ்ணந். திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது கவினிய நாகனூர் ஆதி சண்டேசுர தேவர்கு விற்ற அடியாள் ஆவாள். இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச் சிற்றம்பல முடையான் பக்கல் விலை கொண்டுடையநாய் இத்தேவர் சிவநாமத்து இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற மகள் உ  
8.   டையள். இவன் தங்கை பெரியாள். இவள் தம்பி சூற்றி. இவன் தங்கை சோறாண்டி. இவன் தம்பி தியம்பகன்.இ பெண்களில் பெரியாள் மகன் சூற்றி. இஎவாண்டை நாளில் வரகூரான ஜயஸிம்ஹ குலகாலச் சருப்பேதி மங்கலத்து காஸ்யபந் தவதேவிசந் _ _ _ _ பட்டநாந அருமாரி  நம்பி  ஆதிசணேடேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடிமையாளாவாள் பொற்ப்பா _ _ _ யும், இவள் மகள் உய்யவந்தாளும். இவள் தங்கை செல்வமும் [கல்வெட்டு எண் 2] திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜாயிராஜ தேவற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றூராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திருபுவன மாதேவிச்சேரி குரவிசிரின வீரட்டந்
9.   பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவிநாராயண பட்டநை  முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் [சா]நி பக்கல் காசு 60 காசு அறுபதுக்கு  விலைகொண்ட நங்கை மகள் அம்மையாண்டாள். இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த[கல்யா]ணப் பிச்சந் _ _ _ _ இவள் தங்கை குளுந்தாள், இவ[ள்] தங்கை னங்கை. திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவற்கு யாண்டு பத்தாவது செயங்கொண்டு சோழ வளநாட்டு விளைநாட்டு விளைநகரான நித்த விநோதச் சருப்பேதி மங்கலத்துப் பாலாசிரி[ய]ந் இளைய சங்[கர]ச் சிவனும், இவந் பிந்நோ நாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட [அடிமை] அரை
10. யா நாகமுடையாள். இவள் மகள் சோறுடையாள் செல்வி. இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை. இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங் _ _ _ _ ள் மகன் சோறுடையான் பெருங்காடன். இவன் மகன் சோறுடையாந் புற்றிடங் கொண்டான்.

ஆழ்வாரடிமை – இறைஅடிமை; அகமுடையாள் – மனைவி (பிராமணர் வழக்கு); பட்டன் – சமஸ்கிருத அறிஞனான வேத பிராமணன்; வேளான் – அரசன், அரசமரபினர்; பிடாரன் – ஆசிரியர், மருத்துவர்; பக்கல் – சார்பாக, on behalf; சாநி – பிராமணப் பெண் பெயர்ப் பின்னொட்டு; முதுகண் – supervisor, caretaker, கங்காணி; 




விளக்கம்: 1 - 2 வரிக்கு > பிராமணன் ஆச்சபிடாரன் குடும்பம் அவன் மகள் குடும்பம் என இரு குடும்பத்தில் பேரன், பேத்திகள் உட்பட 7 ஆடவர், 4 மகளிர் இறைவனுக்கு தம்மை அடிமை ஆக்கினர். வீரவிநோத வேளான் அரசகுடியினர் ஆவார். இவரது பேரன், பேத்திகள் உட்பட இரு குடும்பத்தில் 4 ஆடவர், 3 பெண்கள் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். பிராமணர் சிவசரணத்தின் பேரன் பேத்திகள் உள்ளிட்ட 5 குடும்பத்து உறவினர் 6 ஆடவர், 9 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர்.

விளக்கம்: 3 – 4 வரிக்கு > 1 மருமகன். பிராமணர் ஆச்சபிடாரன் உடன்பிறந்தாள் பேரன், பேத்தி உட்பட 3 குடும்பத்து 5 ஆடவர் 2 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். சூரியதேவர் தானமாகக் கொடுத்த அடிமைகள், கொத்தில் செல்வி குடும்பத்தில் 3 மகளிர். சடையன் மனைவி ஒருத்தி. வெண்ணைக் கூத்தன் 2 குடும்பத்தில் 2 ஆடவர், 2 மகளிர். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சன் மனைவி குடும்பத்தில் இருவர். சந்திரன் குடும்பத்தில் மனைவி ஒருத்தி. சிங்கப் பிராந் சார்பாக ஒரு குடும்பத்து 1 ஆண், 2 மகளிர் தானமாகத்  தரப்பட்டனர். தக்ஷிணாமூர்த்தி சார்பாக விலை கொடுத்துப் பெற்ற ஒரு குடும்பத்துப் பிராமண அடிமைகள் 2 ஆடவர். பெரியநம்பி சார்பாக விலைக்குப் பெற்ற அடிமை ஒரு குடும்பத்து 1 ஆண், 1 பெண். 

விளக்கம்: 5 -6 வரிகள் > சோமாசி & கண்ணுவந் ஆகிய இருவர் சார்பாக விலைக்கு வாங்கிய ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். கவிணியன் விலையால் கொண்ட ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். பட்டசோமாசியார் சார்பாக விலைக்குப் பெற்ற ஒரு குடும்பத்துப் பிராமண அடிமைகள் 2 ஆடவர், 1 மகளிர். பிராமணர் திருவிக்கிரமன், தம்பி உமாசகிதன் இருவர் சார்பில் ஒரு குடும்பத்து 4 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டனர். அரசகுடி விழுப்பரையன் விலையாகக் கொண்ட 2 குடும்பத்து அடிமைகள் 3 ஆடவர், 2 மகளிர். அரசகுடி அரயன் பிள்ளையாழ்வான் ஒரு அரசகுடும்பத்து அடிமைகளான 2 பெண்ணை விலைக்கு வாங்கினான்.

விளக்கம்: 7 – 8 வரிகள் > நித்தன்திருவடி & சிங்கனூரன் இந்த இருவர் சார்பாக கோயில் பெற்ற அடிமைகள் ஒரு குடும்பத்து 2 ஆண்கள். தவுமியன் & ஆதித்தன் இந்த இருவர் சார்பாக பெற்ற அடிமை ஒரு பிராமண குடும்பத்து 2 பெண்கள். சக்கரபாணி & பிராம்மணி என்ற பிராமணர் சார்பாக 1 குடும்பத்து அடிமை 1 ஆண். இதற்கு முன்பு மூன்றாம் குலோத்துங்கன் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1187) விலைக்கு வாங்கி இறைவனுக்கு உரிமையாக்கி விடப் பட்டவர் குறிக்கப்படுகின்றனர். நாகனூர் கவுணியன் ஒரு குடும்பத்து ஒரு பெண்ணை இறைவனுக்காக விற்றான். சூரியதேவன் சார்பாக பெற்ற அடிமை 2 குடும்பத்து 5 ஆடவர், 2 மகளிர் ஆவர். அருமாரி நம்பி இறைவனுக்கு விற்றுக் கொடுத்த அடிமை 1 குடும்பத்து 3 மகளிர் ஆவர்.

விளக்கம்: 9 – 10 வரிகள் > இரண்டாம் இராசராசனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1153) பிராமணி சாநி சார்பாக கோவிலுக்குத் தானமளிக்க அவள் மகன் மேற்பார்வையில் 1 குடும்பத்து 5 மகளிர் 60 காசுக்கு வாங்கப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்கன் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1188) பாலாசிரியன் & சங்கரசிவன் சார்பில் 19 காசுக்கு 3 குடும்பத்து 2 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டு கோவிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டனர்.

ஆக நான்கு வெவ்வேறு காலங்களில் மூன்று வேந்தர் ஆட்சியில் 40 குடும்பத்து 48 ஆடவர், 57 மகளிர் என 105 அடிமைகள் கோவிலுக்கு தம்மைத் தாமே தானமாகத் தந்தும், பிறரால் பணம் கொடுத்து வாங்கப் பெற்று கோவிலுக்குத் தானமாகத் தரப்பட்டவர்களும் ஆவர். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு நம்பிக்கையின் காரணமாக நடந்தேறியதாகவே தோன்றுகிறது. எண்ணிப் பார்க்கையில் சிறுபிள்ளை விளையாட்டாகவே உணரமுடிகிறது. ஆனால் பலரும் இக்கல்வெட்டுகளைப் பலவராகப் புரிந்துகொண்டு திட்டிதீர்த்து வெறுப்பை உமிழ்கிறார்கள்.



பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பக். 202-205, 2004, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.





தொடர்பு: சேசாத்திரி சிறீதரன் - Seshadri Sridharan (sseshadri69@gmail.com)






No comments:

Post a Comment