Monday, April 2, 2018

சங்ககாலச் சேரர் வரலாறு


——   இராம.கி.



1

  சிலம்பின் "காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று ஒரு கேள்வி எழுந்தது: இதற்கானவிடை சற்றுநீளமானது. அதைச் சொல்லுமுன் சங்ககாலச் சேரர்வரலாற்றையும், அதற்குதவியாய் இணையத்திலுள்ள மகத அரசர் காலங்களையும் சற்று ஆழமாய்ப் பார்க்கவேண்டும்.

சிலப்பதிகாரக் காலத்தில் வடக்கே மகத அரசே பேரரசாய் இருந்தது. (என் ”சிலம்பின் காலம்” நூலையும் படியுங்கள்.) மகதத்தோடு பொருதாதவன் அந்தக்காலத்தில் வடக்கே மேலெழ முடியாது. அல்லாவிடில் மகதத்திற்கடங்கிக் கப்பங்கட்டவேண்டும். தெற்கிருந்து படையெடுத்துப் போனவன் (இந்தப் படையெடுப்பை இதுவரை எந்த வடவரும் ஏற்றதில்லை. பாகதச் சான்றுகள்  ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. வெறுமே “தமிழ் வாழ்க” என்று கூப்பாடு போடுவதிற் பயனில்லை. சிலப்பதிகாரத்தைச் சரியாய்ப் பொருத்தித் தேடவேண்டும். இல்லாவிட்டால், 5/6 ஆம் நூற்றாண்டுப் புதினம் என்று சொல்லித் திரியவேண்டும்) மகதத்தைச் சண்டைக்கிழுக்காது தமிழன் போய்வந்தானென்பது ஒரு கட்டுக்கதையாகிவிடும் ”இளங்கோ வடிகட்டிய பொய்சொல்கிறார்” என்று கருதவில்லையெனில், கதைக்காலம் மகதத்தோடு பொருந்த வேண்டும்.




கதையை 5, 6 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் வஞ்சிக்காண்டத்தையே மறுக்கிறார். “எல்லாமே கப்சா, இதுவொரு புதினம்” என்பார் ஒருநாளும் வஞ்சிக்காண்ட முகன்மை புரிந்தவர் இல்லையென்று பொருளாகும். அவர் தமிழரை இழிவுசெய்கிறாரென்பது இன்னொரு ஆழமானபொருள். அப்படிமறுக்கிறவர் ”சேரன் யாரோடு போர்செய்திருப்பான்?” என்பதை ஆதாரத்தோடு சொல்லவேண்டும். இளங்கோவென்ற எழுத்தாளர் கற்பனைக்கதை சொல்லியிருந்தால், மதுரைக்காண்டத்தோடு முடிப்பதே சரியான உச்சக்கட்ட உத்தியாகும். அதற்கப்புறம் காதையில் ஓரிரு காட்சிகளைச் சொல்லி “சுபம்” என முடித்திருக்கலாம். (அப்படியே சிறுவயதில் இரவெலாம் நான் விழித்துபார்த்த 15 நாள் கண்ணகி கூத்துக்கள் நடைபெற்றன. இக்கூத்துகளை 3,4 முறை பார்த்திருக்கிறேன். கோவலன் கதையெனும் நாட்டுப்புறக் கூத்துப்பாட்டும் அப்படித்தானிருக்கும். வஞ்சிக்காண்டமிருக்காது.)

ஒருகதையை எங்கு முடிக்கவேண்டுமென்பதற்கு உளவியல் தொடர்பாய்க் கதையிலக்கணமுண்டு. அக்கதையிலக்கணம் மீறிச் சிலப்பதிகாரமுள்ளது. கண்ணகி பாண்டியனைப் பழிவாங்கியதும் மதுரையை எரித்ததும் சிலம்பின் முடிவல்ல. மதுரைக்காண்டத்தில் முடிவது சிலம்பு அணிகலனின் அதிகரிப்பால் வந்தது. வஞ்சிக்காண்டத்தில் முடிவது சிலம்பெனும் மலையரசின் அதிகாரம். அது வடக்கேபோய் வெற்றிகொண்டு தமிழகத்திற் தன்னைப் பேரரசனாய்க் காட்டிக்கொள்கிறது. அதனாற்றான் சிறைப்பிடித்த ஆரியவரசரை மற்றவேந்தருக்குக் காட்டச்சொல்கிறான். சிலம்பென்ற சொல்லிற்கு காப்பியத்தில் இருபொருளுண்டு. ”இளங்கோ வஞ்சிக்காண்டத்தை ஏன் தன்நூலில் வைத்தான்? அதிலென்ன சொல்லவிழைகிறான்? உட்கருத்தென்ன? ஒரு காட்சி, காதை, காண்டம் நூலில் ஏன் வருகிறது?” என்பதே கட்டுக்கதைக்கும், காப்பியத்திற்குமான வேறுபாடு.

சிலம்பில் வரும் ஆரியவரசர் பெரும்பாலும் மகதத்திலும், மகத்தைச் சுற்றியுமிருந்தவரே. வடக்கென்றவுடன் நம்மையறியாது தில்லியையும், தில்லிக்கு வடமேற்கையுமே எண்ணிக் கொள்கிறோம். அது பிற்காலப்பார்வை. பழங்காலத்தில் வடக்கென்பது வாரணாசி, பாடலிபுத்தம் சுற்றிய பகுதிகளே. சங்ககாலத்திற் கங்கையே வடக்கின் வற்றாத ஊற்று பாடலிபுத்தத்தை தக்கசீலத்தோடு உத்தரப்பாதையும், தென்னாட்டோடு தக்கணப்பாதையும் கலிங்கத்தோடு கடற்கரைப்பாதையும் இணைத்தன. மூன்றாம்பாதை அக்காலத்தில் தமிழகத்தை இணைக்கவில்லை. பெரும்பாலான பயணங்கள், படையெடுப்புக்கள் உத்தர, தக்கணப்பாதைகளின் வழியே நடந்தன. இற்றை அவுரங்காபாதிற்குத் தெற்கே கோதாவரி வடகரைப் படித்தானத்தில்> பயித்தான்> பைத்தான்) தக்கணப்பாதை முடிந்தது. மோரியருக்கான தண்டல் நாயகராய் படித்தானத்திலிருந்து, பின்பு ஆளுநராகவும் மன்னராகவும் நூற்றுவர்கன்னர் (சாதவாகன்னர்) மாறினார். நூற்றுவர்/ சாத்துவருக்கு, நொறுக்குவரென்ற பொருளுண்டு. நூறென்ற எண்ணிக்கைப் பொருள் கிடையாது. சிலம்புக்காலத்தில் நூற்றுவர் கன்னரும், அவருக்கு வடக்கில் இருந்த மகதக் கனக அரசரும் வலியிழந்திருந்தார்.

மொழிபெயர்தேயக் கருநாடக, வேங்கடத்தின் (காடுவிரவிய வேகுங்கடத்தில் மக்கள் வதிவது மிகக்குறைவு) வழி தகடூர் ஊடே மூவேந்தர் நாட்டிற்கு தக்கணப்பாதையின் தொடர்ச்சி இருந்தது. Plus there was a standing Tamil army to protect the language changing country as per Maamuulanaar. மொழிபெயர்தேயத்தைத் ”திராமிரசங்காத்தம் 1300 ஆண்டுகள் காப்பாற்றியதென்றும், தானே சங்காத்தத்தை உடைத்ததாயும்” கலிங்கக் காரவேலன் தன் கல்வெட்டிற்குறிப்பான். மொழிபெயர் தேயத்தை ஒட்டியதால் நூற்றுவர்கன்னர் நாணயத்தின் ஒருபக்கம் தமிழும், இன்னொரு பக்கம் பாகதமும் இருந்தது. நூற்றுவர்கன்னர் தாம் சுருங்கிய காலத்தில் ஆந்திர அமராவதிக்குத் தலைநகரை மாற்றிக்கொண்டார். நூற்றுவர்கன்னர் தொடங்கியது படித்தானம்; முடிந்தது அமராவதி. கன்னருக்குப்பின் படித்தானத்தில் கள அப்ரர்>களப்ரர் அரசேறினார். பின்னாளில் அவரே மூவேந்தரைத் தொலைத்தார். (களப்ரர் என்கிறோமே, அவர் இவர்தாம்.) சங்ககாலத்தில் தொண்டைநாட்டிற்கு மேல் கலிங்கம்வரை கடற்கரை தவிர்த்திருந்தது தொண்டகக் காடு (>தண்டக ஆரண்யம்) எனவாயிற்று. பின் இக்காடழிந்து இற்றை ஆந்திரமானது. காடழித்த காரணத்தால் பல்லவருக்குக் காடவர்/ காடுவெட்டி என்ற பெயர்வந்தது.
      
தகடூரிலிருந்து வயநாடு வழியாகக் குடவஞ்சிக்கும், கொங்குவஞ்சி வழியாக உறையூருக்கும், பொதினி (பழனி) வழியாக மதுரைக்கும் பாதைகளிருந்தன. (இன்றும் பாதைகள் இப்படித்தான்.) குறிப்பிட்ட இக்கூட்டுச்சாலைகள் இருந்ததாலேயே அதியமான்கள் வடக்கே அறியப்பட்டார். காரணமின்றி அசோகன் சத்தியபுத்திரரைச் சொல்லவில்லை. மகதத்திலிருந்து தமிழகம் வர தகடூரின் அதியமானைத் தாண்டி வரமுடியாது. இன்று சிங்கப்பூரை மீறி இந்தியப்பெருங்கடலிலிருந்து பசிபிக்பெருங்கடலுக்குள் எந்தக்கப்பலாவது போகமுடியுமா? அதன் தடந்தகை இருப்பாற் (strategic existence) சிங்கப்பூர்
பெரிதாகப் பேசப்படுகிறது. அப்படியேதான் தகடூரின் இருப்பு தமிழகத்திலிருந்து வடக்கே போவதற்கு இருந்தது.

(சங்கப்பாடல்களில் பாதிக்குமேல் பாலைத்திணைப் பாடல்கள். அவற்றிற் பெரும்பகுதி வணிகத்திற்போன செய்திகள்தான். வணிகரெல்லாம் எங்குதான் போனார்? முடிவில் எல்லாமே மகதத்திற்குத்தான். அதேபோல மகதத்திலிருந்தும் தமிழகம் வந்தார். அவருக்கு வேண்டிய பொன் (வடகொங்கிற்-பிற்காலத் தென்கருநாடகம்-கிடைத்தது. எவன் கொங்கைக்கவர்ந்தானோ அவனே தமிழரிற் பெருவேந்தன்.), மணிகள் (தென்கொங்கிற் கிடைத்தன. கொங்குவஞ்சி இதனாலேயே சிறப்புற்றது.), முத்து (நித்தில்>நிதி என்றசொல் முத்திலெழுந்தது. பாண்டிநாடு முத்திற்குப் பெயர்போனது), பவளம் (சோழநாட்டிற் கிடைத்தது.) இன்ன பிற செல்வங்கள் (குறிப்பாய்ச் செலாவணிச் சரக்குகள்-exchange goods) கிடைக்கவேண்டுமெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வராது முடியாது. எந்த நாடு செலாவணிச் சரக்குகளை அதிகம் கொண்டதோ, அதுவே அக்கால வணிகத்தில் வென்றது. மகதத்தைவிடச் சிறுபரப்பே கொள்ளினும், செலாவணிச் சரக்குகளால் தமிழர் அக்காலத்தில் தனிப்பெரும்நிலை கொண்டார். இவ்வணிகத்திற்குக் கொங்குவஞ்சியும், தகடூரும் முகன்மையாயிருந்தது உண்மைதான். அதையாரும் மறுக்கவில்லை. தொல்லியல் வெளிப்பாடுகள் அதைத்தான் காட்டின. மணிகளுக்கும், மாழைகளுக்கும் கொங்குமண்டலம் பெயர்பெற்றது. அதைவைத்துச் ”சேரர்தலைநகரே இங்குதான் இருந்தது” என்பது சற்று அதிகம். வானத்திற்கும் புவிக்குமாய் கோட்டைகட்ட முயல்வதாகும். கொங்குவஞ்சி என்றுமே குடவஞ்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வேண்டுமென்றே கொங்குவஞ்சியைத் தூக்கிப்பிடிப்பவர் ஆய்வின்றிப் பேசுகிறார்.  (எவ்வளவு தான் பாண்டியர் மதுரையைப் பேசினாலும், கொற்கை தான் பாண்டியரின் தோற்றுவாய். கொற்கையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டார்.)

(ஒவ்வொருவரும் தம் வாழிடங்களைத் தூக்கிப்பிடிப்பதற்காய் ஏரணத்தைத் தூக்கிக் கடாசுவது பொருளற்றது. ”திருச்சியிலிருந்து மதுரைக்கு காரைக்குடி வழியேதான் எல்லோரும் போனார்” என்று நான் சொன்னால் பலருஞ் சிரிப்பார். விராலிமலை வழிதான் குறைத்தொலைவுப் பாதை என்பது உள்ளமை நடைமுறை. மக்கள் மதிப்பார்.) கொங்குவஞ்சி வாணிகத்தில் தகடூரோடு தொடர்புற்றது இயற்கையே. ஆனால் சிலம்பை ஆழப்படித்தால் குடவஞ்சியின் சிறப்புப் புரியும். (கொஞ்சம் பொறுக்கவேண்டும். இப்பொழுதுதானே 4,5 ஆண்டுகள் முன்னே தொல்லியலார் முசிறிப்பட்டணத்தைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து சிறுதொலைவிற் குடவஞ்சி கிடைத்துவிடும்.)

இனி மகதத்தின் பல்வேறு அரசர் காலங்களுக்கு வருவோம்.

அலெக்சாண்டர் இந்தியாவின்மேற் படையெடுத்தது பொ.உ.மு.327/326 என்பர். (இது ஒரு வரலாற்று முற்றைப் புள்ளி. இதைவைத்தே இந்தியவரலாற்றைக் கணிக்கிறார்.)

சந்திரகுத்த மோரியன் காலம் பொ.உ.மு.321 - 297 (இவனுக்கு முந்தைய நந்தர் காலத்தைக் குறிக்கும் சங்கப்பாடல்களும் உண்டு. குறிப்பாய் மாமூலனார் பாடல்கள். சங்க இலக்கியத்தை ஒழுங்காகப் பொருத்தாத காரணத்தால் சங்ககாலத் தமிழர் வரலாற்றை, இன்றுங்கூடத் தப்பும் தவறுமாய்ப் புரிந்துகொள்கிறோம். கமில் சுவலபில் கணிப்பிலிருந்து வெளியே வந்தாலொழிய இது புரியாது.)

பிந்துசார மோரியன் காலம் பொ.உ.மு. 297 - 273 (இவன்தான் தென்னகத்தின் மேல் படையெடுத்தவன். இவன் படையெடுப்பைப் பற்றிச் சுற்றிவளைத்துச் சங்கப்பாடல்கள் உண்டு. தமிழ் மூவேந்தரைத் தோற்கடிக்க முடியாமல் இவன் படைகள் திரும்பிப் போயின.)

தேவானாம்பியதசி அசோகன் காலம் பொ.உ.மு. 268 - 232 (இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4 ஆண்டுகள் ஒரே குழப்பம் மகதநாடு வேந்தனில்லாது இருந்தது. கணக்கின்றித் தன் சோதரரைக் கொன்றே அசோகன் பட்டத்திற்குவந்தான். இந்தியவரலாற்றில் முகன்மையான மன்னன். தமிழ்மூவேந்தரின் இருப்பையும் அதியமான்களின் இருப்பையும் தன் கல்வெட்டுக்களிற் பதிவுசெய்தவன். இவன் செய்த கோத்தொழில் தமிழ்மூவேந்தரால் பாராட்டப்பட்டது போலும். ஏனெனில் தேவானாம்பிய தசி என்ற பட்டம் அப்படியே தமிழாக்கப் பட்டுச் சேரருக்கு முன்னொட்டாக்கப் பட்டதென்பார். மயிலை சீனி வேங்கடசாமியார். இமையவர அன்பனென்பது திரிந்து இமையவரம்பனாகிப் பின் ”இமையத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. அதேபோல; வானவரன்பனும் வானவரம்பனாகி ”வானத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது.. இமையவரம்பனும், வானவரம்பனும் மாறிமாறிச் சேரருக்கு முன்னொட்டாயின. தேவானாம்பிய என்ற பாகதமுன்னொட்டை இலங்கையரசன் தீசனும் அப்படியே வைத்துக்கொண்டான். சேரரோ அதைத் தமிழ்ப்படுத்திச் சூடிக்கொண்டார். There must have been a mutual admiration society. வேத, சிவ, விண்ணவ நெறிகளும், வேதமறுப்புச் சமயங்களும், பல்வேறு மெய்யியல்களும் விரவிக் குடவஞ்சியில் சமயப்பொறை இருந்தது சிலம்பாலும் மேகலையாலும் தெரிகிறது. வேதமறுப்புச் சமயங்களை ஆய்ந்தாலொழிய தமிழர்வரலாறு புரிபடாது.)
    
தசரதன் காலம் பொ.உ.மு. 231 -224 (இவன் அசோகனின் முதல் மகனல்லன். அடுத்த மகன். அசோகனின் இரண்டாவது அரசி முதல் மகனைச் சதிதீட்டிக் கொன்றுவிடுவாள். எப்படி இராசேந்திர சோழனுக்கு அப்புறம் ஒவ்வொருமகனும் ஏதோ வகையில் கொல்லப்பட்டு சோழர் குடிவழியழிந்து தெலுங்குச் சோழராட்சி ஏற்பட்டதோ, அதே போல ஆழமான சூழ்ச்சி அசோகனின் மகன்களுக்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு புத்தம், செயினம், அற்றுவிகங்களுக்கு நடுவே இந்தவிதக் கொலைகளும் அசோகனுக்குப் பின் நடந்தன. வரலாறு மருமமானது.)

சம்பாதி காலம் பொ.உ.மு. 224 - 216 (இவனும் அசோகனின் மகன். தசரதன் இருக்கும்போதே இவன் ஒருபக்கம் ஆளுநனாய் இருந்து பின்னால் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொள்வான்.)

சலிசுகா காலம் பொ.உ.மு. 215 - 202 (இவன் சம்பாதியின் மகன்)
தேவ வர்மன் காலம் பொ.உ.மு.202-195
சடாதன்வன் காலம் பொ.உ.மு.195-187

பெருகதத்தன் காலம் பொ.உ.மு.187-185 (இவனைத்தான் சேனையதிபதி சுங்கமித்திரன் கொலைசெய்து தன்குடியை மகத அரசிலேற்றினான். இந்தப் பிரகதத்தனுக்குத் தான் பெரும்பாலும் கபிலர் குறிஞ்சிப்பாட்டைச் சொல்லியிருக்கலாமென ஊகிக்கிறோம். கபிலர் போன்றவர் ஒரு குறுநில மன்னனுக்காகக் குறிஞ்சிப்பாட்டை பாடினாரென்பது ஐயமாக உள்ளது. சேர, சோழ, பாண்டியருக்கு இணையான வேந்தர் அக்காலத்திற் சிலரே இருந்தார். மகதமே எல்லாவற்றிற்கும் தலைமையானது. அந்தப் பெருகதத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டு சொல்லுவது கபிலருக்கு நன்மை பயக்குமல்லவா?)


இனிச் சுங்கருக்கு வருவோம்.



2


புஷ்யமித்ர சுங்கன் காலம் பொ.உ.மு. 185-149 (பெருகதத்த மோரியன் ஒரு படையணி வகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சூழ்ச்சியால் அவனைக் கொன்று, அவனிடம் சேனைத்தலைவனாயிருந்த புஷ்ய மித்திரன் ஆட்சிக்கு வந்தான். அவந்தியின் பெருமானர் குலத்தைச் சேர்ந்த இவன் தான் இந்தியாவில் வேதமறுப்புச் சமயங்களின் ஆளுமையைத் தடுத்து நிறுத்தி, வேதநெறிக்கு முன்னுரிமை கொடுத்து, மீண்டும் தழைக்க வைத்தவன். இவனையும், இவன் மகனையும் வேதநெறியார் சிறப்பாகவே கருதியிருக்கவேண்டும். ஏனெனில் குப்தர் காலத்திய அரசவை இவரைப் போற்றியிருக்கிறது. புஷ்ய மித்ரன் காலத்தில் புத்தமதம் ”மத்தியதேசத்தில்” இல்லாது போய், வடமேற்கே இற்றை ஆப்கனித்தானுக்குத் துரத்தப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் அதேபொழுது வேதமறுப்புச் சமயங்களுக்கான ஆதரவை இவன் முற்றிலும் நிறுத்திவிடவில்லை. இந்த அரசனின் ஆளுமை நருமதையாறு வரைக்கும் இருந்தது.)

அக்னி மித்ரன் காலம் பொ.உ.மு. 149-141 (இவன் புஷ்ய மித்ரனின் மகன். வேதநெறியைத் தூக்கிப்பிடித்த பிற்காலக் குப்தர்களின் அவைசேர்ந்த காளிதாசர் எழுதிய ”மாளவிகாக்னிமித்ரம்” நாடகத்தின் நாயகன் இவனே. புஷ்ய மித்ரனின் நடவடிக்கைகளுக்கு இவனும் பொறுப்பானவன். வேதநெறிக்கு மறுமலர்ச்சி கொடுத்தவனென்பதால் இவன் காளிதாசனின் நாயகன் ஆனானோ, என்னவோ? )

வசுஜ்யேஷ்டன் காலம் பொ.உ.மு. 141-131
வசுமித்ரன் காலம் பொ.உ.மு. 131-124
பத்ரகன் காலம் பொ.உ.மு. 124-122
புலிந்தகன் காலம் பொ.உ.மு. 122-119

வஜ்ரமித்ர பாகபத்ரன் (இவன்காலத்தில் மகதம் ஆட்டங்கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்கே அசோக மோரியன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சி புரிவார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சுருங்கியது. மகதப்பகுதிகளைக் கவர்ந்துகொள்ள கலிங்கர், நூற்றுவர்கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசரென்று பலரோடு சண்டைகள் தொடங்கிவிட்டன. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயி” இலக்கணத்திற்கு பதஞ்சலி மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சிமுடிவில் நூற்றுவர்கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயலத்தொடங்கிவிட்டார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் தான் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சேரன் வந்துள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். சிலம்பில் 2 படையெடுப்புகளும் குறித்துக் காட்டப்படுகின்றன.

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்”

இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகள் நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசியாய் இருக்கும். இன்றும் தெற்கிலிருந்து அலகாபாத், கயை, வாரணாசி போயாடுவதில் தமிழர் பலரும் அளவற்ற ஆர்வங் கொள்கிறோமே? அது அன்றும் நடந்திருக்கலாம். சேரன் சிவநெறியாளன். விண்ணவப் பெருஞ்சோற்றை (ப்ரசாதம் என்று சங்கதப்படுத்துவர். அதையே சொல்லி நம் தமிழ்ப்பெயரை மறந்துவிட்டோம்.) தலையில் வாங்க மறுத்தவன். தோளிலேற்க ஒருப்பட்டவன். மகதக் குழப்பத்திற் தான்புகுந்து விளையாட முடியும் என்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையை தன் அரச முயற்சிக்குப் பயன்படுத்தினான். (வடக்கிலிருந்து intelligence information வந்ததும் வஞ்சிக்காண்டத்திற் சொல்லப்படும்.) There must have been an empire building politics with these expeditions. We should not be very naive to these aspects. Cheran was as intelligent as our modern leaders are.

தேவபூதி காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்க அரசன். அளவுக்கு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இந்த அரசனை இவனுடைய முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்றுவிடுவான். அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதி என்ற பெயரும் இருந்திருக்கலாம். பாகதச் சான்றுகளைக் கொண்டு அதை உறுதி செய்யவேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்லமுடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயமாய் எழுகிறது.

செங்குட்டுவன் பொ.உ.மு.80 இல் படையெடுத்து வரும்போது பெரும்பாலும் இவ்வரசனுடன் போர்புரிந்திருக்கலாம். மகதம் தமிழர்க்குப் பகைநாடு என்பதை இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்” என்ற வரிகள் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கப்புறமே ”யாரைநோக்கிச் செங்குட்டுவன் படை எடுத்திருப்பான்?” என்பது எனக்கு விளங்கியது. மகதம் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டமாய்ச் செருகி உராய்ந்துபார்க்க உள்ளிருக்கும் படம் விளங்கிற்று. செங்குட்டுவனின் படைபலம் தெரிந்து அவனைத் தம் கைக்குள் வைத்து அவன்மூலம் மகத அரசிற்கு ஊறுவிளைவித்துப் பின் தாம் கைப்பற்றிக்கொள்ள முற்பட்டே நூற்றுவர்கன்னர் செங்குட்டுவனுக்கு உதவியிருக்கிறார். ”இமயத்திலிருந்து பத்தினிக்குக் கல்லெடுக்க நீங்கள் போகவேண்டுமா? நாங்கள் செய்யமாட்டோமோ?” என்பதெல்லாம் சரியான அரசதந்திரம் (tactics). தடந்தகை (strategy). தவிர நூற்றுவர்கன்னருக்கும் சேரருக்கும் நெடுநாள் உறவு இருந்திருக்கலாம். புறம் 2 இல் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது, ”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்தொழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக் குறிக்காது நூற்றுவர் கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு.

தவிர, செங்குட்டுவன் படையெடுப்பின்போது பெயருக்கு தேவபூதி மகத அரசனாயிருந்து கட்டுப்பாடெலாம் முதலமைச்சனிடமே இருந்திருக்கலாம். சேரன் போரிறுதியில் பிடித்துப்போனது வசுதேவக் கனகனா, அன்றி அவன் தந்தையா என்பது தெரியவில்லை. ஆரியஅரசர் என்போர் மகதங் காக்க இவனுக்குப் பின்னிருந்தோராவர். அவர் ஆயிரம்பேர் என்பது ஒருவிதப் பேச்சுவழக்கு. (“இவனுக்குப் பின்னால் ஆயிரம்பேர் நின்றார் தெரியுமா?” என்று இன்றும் உரையாடலிற் சொல்கிறோமில்லையா? அதைப்போல் இதைக் கொள்ளவேண்டும். உறுதியான எண்ணிக்கையென்று கொள்ளக்கூடாது.)

(கனக அரச குடியினர், இவரைக் கனவர் என்றுஞ் சொல்லலாம். பொதுவாக வடவரின் பெயர் அப்படியேவா நமக்கு மட்டுப்படுகிறது? கன்வன் என்று பிராமியில் எழுதுவது கனவன் என்றே தமிழியிற் படிக்கப்படும். வகரமும் ககரமும் தமிழிற் போலிகள் நாவற்பழம் நாகற்பழம் ஆகிறதே? எனவே கனவன் கனகனாவது இயற்கையே.)

வசுதேவன் காலம் பொ.உ.மு.75-66 (விசயன், வசுதேவனென்று பெயர்வைப்பது மகாபாரதத் தாக்கத்தால் இயல்பாயிருந்தது. கனக அரசர் விண்ணவப் பெயரையே கொண்டிருந்தார். சிங்கள அரசன் விசயனின் மகன் வசுதேவன் என்பதையும் இங்கு எண்ணிப்பார்க்கவேண்டும். சிலம்பில் கனகன் விசயன் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் என்பதுபோல், இனக்குழுப்பெயர் முதலிலும், இயற்பெயர் முடிவிலும் வந்திருப்பதாய்க் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர் இது புரியாது கனகன், விசயன் என்று இரண்டு பெயராகவே சொல்லித் தருவர். இதுவென்ன குப்பன், சுப்பன் போலவா? சேரன் ஒருவன், செங்குட்டுவன் இன்னொருவனா? சிறைப்பிடித்துவந்த ஆரிய அரசர் எல்லோரையும் கண்ணகி கோயில் குடமுழுக்கின் போது சேரன் விட்டுவிடுவான். எனவே அதற்கப்புறம் வசுதேவக் கனகனோ, அன்றி அவன் தந்தையோ வடக்கே விதிசா/பாடலிபுத்தம் போய் தேவபூதியைக் கொன்று கனக அரசை நிறுவ முயற்சி செய்திருக்கலாம்.

பாகதச் சான்றில்லாமல் சிலம்பாற் கொண்ட கருதுகோள்களை நிறுவிக்க இயலாது. சுங்க, கனக அரசரின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னுங் கிடைக்கவில்லை. பாகத நூல்கள் குறைந்தே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. சங்கத நூல்களே எங்குப் பார்த்தாலும் இழைகின்றன. மோரியர் வரலாறு எழுதினால், அதற்கப்புறம் குப்தர் வரலாற்றிற்கு, பொதுவான வரலாற்றாசிரியர் ஓடி விடுகிறார். இடையில் பெருத்த இடைவெளி யாருக்கும் தோன்றவில்லை. சங்ககால வரலாறு எழுதவேண்டுமானால் இந்த இடைவெளி பாகத வாயிலாய் நிரப்பப்படவேண்டும். அன்றேல் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்கவேண்டும்.

பூமிமித்ரன் காலம் பொ.உ.மு.66-52
நாராயணன் காலம் பொ.உ.மு.52-40

சுசர்மன் காலம் பொ.உ.மு.40-30 [பஞ்சதந்திரம் எழுந்த காலம் இவன் காலமே. “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற கட்டுரைத்தொடரை என் வலைப்பதிவிற் படியுங்கள். பஞ்சதந்திரத்தை வைத்தும் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்தால் தமிழர் வரலாறு “காலி” என்றெண்ணி திரு நாகசாமியும் அவர் சீடர்களும்  முயல்கிறார் போலும். ”சிலம்பு 6 ஆம் நூற்றாண்டு நூல்” என்ற தன் கருத்தை வலியுறுத்தி, அவர்சொன்னார், இவர்சொன்னாரென வழக்கம்போல் இலக்கியக் காணிப்பை மட்டுமே தொகுத்துத் தற்குறிப்பேற்றஞ் செய்யாது ஏரண வரிதியோடு (with logical flow) ”இவ்விவற்றால் இப்படி, இதுபோல் அமைகிறதென்று” தானே அலசிச் சான்றுகள் கொடுத்து ஒரு கட்டுரையாக அது அமைய வேண்டும்.

இனி சேரர் குடிக்கும் காட்சிக்காதை 156-164 வரிகளுக்கும் வருவோம்.



3

முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம் (செங்குட்டுவனைப் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்).

சங்ககாலச் சேரரில் சுள்ளியம் பேரியாற்றங்கரையில் குட வஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன் குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரையில் கொங்கு வஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சி புரிந்தார். குட வஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுது பிரிந்தன? தெரியாது. அதே பொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வக் கடுங்கோவிற்கு வாழியாதன் என்ற பெயர்முடிவும் உண்டு.) நமக்குக் கிடைத்த பாடல்களின் படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன். (மாவலியாதன்/ மகாபலி, பெருகலாதன்/ ப்ரஹ்லாதன் என்ற தொன்மக் கதையாரும் இவர் குடியினரே என்றுசிலர் சொல்வர்.) 2 கிளையினரின் ஆட்சிக் காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியப்படும். ஒரு சேரன் காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச்செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். 

பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்று கொண்டு மற்ற சேரரின் காலத்தைச் சிலம்புக் கால ஆய்வின் மூலம் குறித்தேன்.

மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு மூவேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிராண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்த வரை ”த்ராமிரசங்காத்தம்” நீண்டகாலந் தொடர்ந்தது. என்றைக்குக் கொங்கு வேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவு கொண்டாடிச் சேரர் தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அந்நேரத்தில் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இது நடந்திருக்கலாம். கொங்குக்கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார். காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அகநானூறு 31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்கவேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப்படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistensy) நாடுவதால் நான் செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிது சிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப்பத்திலில்லாத சேரர் காலத்தை இன்னும் நான் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப் பிரிவுகளை ஒருவித முன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம் (It has still not reached a definitive stage). 

வானவரம்பன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190 - 143 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்திலேயே அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே சுங்கர்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத்தொடரையும் படியுங்கள்.

இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர், நூற்றுவர்கன்னர் தான். பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புபவனில்லை. அப்படிச்சொல்வது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. காலப் பொருத்தமின்றிக் கௌரவருக்குச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதங் கொடுத்தாரென்பது விழுமியங்கள் வழியாகவும் பொருந்தவில்லை. ”தம்நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர்நினைத்து, போரிலிறந்தவருக்காகச் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத்தான்” என ஊருக்கேயுணர்த்திச் சேரன் நட்பும் சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன்குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.

உதியன்சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப்பழனியே பழம்பொதினி. அதனடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர்குடியோடு சேரர்குடியினர் கொடிவழிதோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ்சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு கொங்குவஞ்சியில் இவன் ஆண்டான் என்பது நம்பக்கூடியதாய் இல்லை.) இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. இவனுக்கு 2 மனைவியர். தன்தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) மூத்த மகள் பதுமன்தேவியை முதல் மனைவியாகப் பெற்றான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென 2 மக்கள் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச்சோழன் மகள் நற்சோணை. (=சோணாட்டுக்காரி; பொன்போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. பொன்னிறத்திற்கும் சோழருக்குமான இனக்குழுத்தொடர்பை நாம் இன்னும் உணர்ந்தோமில்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைப் பார்த்தால் ஐயை என்பது விதுப்பெயராயும், நற்சோணை பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்படவில்லை. அக்காதை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ செங்குட்டுவனின் தம்பியென நம்பமுடியவில்லை. (நான் அப்படிக் கொள்ளவில்லை.) 

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். மணக்கிள்ளி யார்? மருவல்= தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage - போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒருகுடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங்கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். (சிவகங்கைப் பக்கம் மருவீடு என்ற சொல் உண்டு.) மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப்பெயரைப் பதிகம் பாடியோர் காரணம் புரியாது இயற்பெயராக்கி விட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலே யுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும். 

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச் சோழன் தித்தனாவான். யா, இருளைக்குறிக்கும் இற்றல்=போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/போக்குகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்>ஆயிற்றன்>ஆதிற்றன்> ஆதித்தன்> ஆதித்த என்பது வடபுலமொழிகளில் சூரியனைக்குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப் பெயர்கள் சங்ககாலத் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர் பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்தவஞ்சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச் சோழனாவான். 

அதேபொழுது தித்தனின் மகன் பட்டஞ் சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோகாரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம்வேறாகி உறையூரை விட்டு விலகித் தந்தையின் வளநாட்டுத்துறையான கோடிக்கரையில் வீரவிளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சிலகாலங்கழிப்பான். தித்தனுக்குப்பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/வழிகளில் வேல்வீசுந் திறன் கொண்ட கிள்ளி) என்றபெயரில், வெளியன் உறையூராண்டான். நெடுஞ்சேரலாதன் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் தித்தன்வெளியனெனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப்படும் போர் மச்சான்-மைத்துனன் இடையெற்பட்டதாகும். பெருவிறற்கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச் சண்டைகூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு மாமன்மகனைப் (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக் காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்தபிறகாவது, சிலம்பைச் சங்கம்மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பாது ஒழியலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. வேந்தனாகாததால், வானவரம்பனெனும் பட்டமுங்கொள்ளாதவன். நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டுக் காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்தபோதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்தைத்தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்கு அப்புறம் இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப்பொறுப்புக் கொண்டவரே நீண்டகாலம் ஆட்சிசெய்தார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்பான முறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலம் வேந்தனாகியிருக்கிறான்.  

அடுத்தது களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன்காலம் பொ.உ.மு. 131-107. இவன் இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்தபின்னால், மூத்தாள்மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப்பட்டஞ் சூட்டியிருக்கவேண்டும். இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரல் வானவரம்பனென்ற பட்டஞ் சூடி அரசுகட்டிலேறியிருக்கலாம். இவனுக்கு இன்னொருபெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம்.   

புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால்வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற்கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பாலறிவோம். முதற்கரிகாலனையும், அடுத்தவனையும் குழப்பித் தமிழாசிரியர் தடுமாறுகிறார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு. ஆழ ஆய்ந்தால் 62 ஆம் பாட்டில் இறந்ததாய் விவரிக்கப்படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனென விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதைவைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதனென்றும், கடைத்தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பு வரும்.  

செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பார்ப்போம். ஆடுகோட்பாடு என்பதற்குப் பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டுவந்தவனெ”னப் பொருள்சொல்லும். பழங்காலப்போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டுவருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.


பெரும்பாலும் இவன்காலம் பொ.உ.மு. 106 - 75 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வந்திருக்கிறான். அதுவுமல்லாது வானவரம்பனென்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.


சேரர்குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தியைச் சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு இருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயரும் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் செங்குட்டுவன் என்றாரோ?) ஆதன்குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவனாவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரே செய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரல் எனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என் செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கியிருக்கிறார். அதேபொழுது ஒருவருக்கு ஒருவர் முரணிப் பொருதியுமிருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், மைத்துனன் என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவதாயிற்றே?



4
 
இனி இரும்பொறைக்கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைதான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்கு முன் சேரர் கருவூரில் இல்லாதது தெரியும் (சங்ககாலமென்றாலே கொங்குவஞ்சியை வலிந்திழுப்போருக்குத்தான் புரியமாட்டேனென்கிறது.) அடுத்து அந்துவன் சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-147. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திலிருந்த போது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங் காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” எனவரும். பலரும் ஒருதந்தையை அடையாளங்காண்பதிற் சரவற்படுவர். பெருமுயற்சிக்கப்புறம் அது விளங்கியது.

தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக்குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண்விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்று குறிப்பார். வலியுள்ள ஆண்மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும் போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்று அமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டிவைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச்சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.

”வேளிரைத் தொலைத்து நிலஞ்சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன் பட்டன. சங்ககால முடிவில் கொஞ்சங் கொஞ்சமாய் வேளிர் ஒழிக்கப்பட்டார் (Eventually the segmentary states were unified into 3 large states) . சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்றுவரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழுவரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப்பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினாலும், உச்சக்கட்டம் நடுவிலிருந்த காலந்தான்.

[. . .  இப்புரிதலை அடையாமற் செய்வதற்கே பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டு என்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத் தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான். இந்த நிகழ்ப்பிற்குள் பல தமிழாசிரியரும் சிக்கிக் கொண்டார். நிகழ்ப்புக் கொண்டோர், மோரியர் பங்களிப்பையும் குறைத்தே பேசினார். குப்தரையே தூக்கி வைத்தார். தொல்லியல் செய்திகள் இவற்றைக் குப்புறத் தள்ளி மோரியர் பங்கை உணரவைத்தன. தமிழர்ப் பங்கும் வெளிப்படும். கீழடி, பொருந்தல், கொடுமணம், பட்டணம் போன்றவை தொடர்ந்தால்...... இந்த ஆய்வுகள் நடைபெறாது தடுக்கவே நிகழ்ப்பாளர் முயல்கிறார்.] 

அடுத்துச் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் சேரலப் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே

என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் காரவேலன் சூறையாடியதற்குப் பழிவாங்கும் ...முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம். மொத்தத்தில் வாழியாதன், அவன் மகன், பேரன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனையும், செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்தகாலமே ஆண்டார். ஆனாற் சேரர்குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையிலும் உறுதி செய்யப்பட்டது புகளூர்க் கல்வெட்டின் மூலமாகும்.

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்

என்றுவரும் புகளூர்க்கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறை குறித்தது. பெருங் கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலமென்பது கற்பனையில்லை.

[. . .  “சங்க இலக்கியமென்பது ரூம்  போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற்செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் அதே). அதேபோற்றான் “சிலம்பு கற்பனைப்புதினம். 6 ஆம் நூற்றாண்டில் ரூம்  போட்டுயோசித்தார்” என்று திரு.நாகசாமியும், திரு. திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார்கள். மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகளென்று இவர்கள் சொல்கிறார்கள். தேமேயென்று நாமுங் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.]

“இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக்காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவனோ பொ.உ. 3 ஆம் நூற்றாண்டென்பார். பொதுவாகத் திரு.ஐராவதம் மகாதேவனுக்கும், மற்ற கல்வெட்டாய்வாளருக்கும் சங்ககாலக் கல்வெட்டுக்களில் 2.3 நூற்றாண்டுகள் வேறுபாடுண்டு. பொருந்தல் ஆய்விற்கு அப்புறம் தான் மகாதேவனிடம் சில மாற்றங்கள் தென்படுகிறது. ஆனால் நிகழ்ப்பாளர் மகாதேவனின் பழைய கூற்றையே பிடித்துக்கொண்டு தொங்குவர். அது அவர்களுக்கு ஏந்து இல்லையா?

அடுத்து வருவது வாழியாதன் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப் பாதையின் காணிப்பரான (Supervisor) அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதிசெய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கு அடையாளம் ஆகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.

மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமானஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்துகிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ்சேரல் இரும்பொறையுடன் போருடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.

கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.

என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒருதம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச் சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம் பத்தின் பதிகம் அடையாளங் காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம் பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப் புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல்பான தந்தை குட்டுவன்சேரல் இரும்பொறையே.

இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசிகீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ்செய்து உழிஞைப் போருக்குப்போய் வெற்றிபெற்று மண்ணுமங்கலஞ் செய்து வரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்தநான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். ஆயினும் உன்வீரர் குற்றமாய்க்கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத்தீரக் கவரிவீசிச் சிறப்புச்செய்தாய். முரசைப்பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார் (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரையும் படியுங்கள்).

அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம்பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர் மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.

இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இருவேந்தரையும், விச்சிக்கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன்பின், சோழவளநாட்டில் பங்காளிச்சண்டை பெருகியது. உறையூர்மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித்தவிப்பதை என்னால் ஏற்கவியலாது. கோப்பெருஞ்சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொரிடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழ் இருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்களைக் கவர்ந்து பலருக்கும் பிரித்துக் கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டுவந்தவன் சிலம்பின்படி செங்குட்டுவனேயாவான்.).

தவிரக் கொங்குவஞ்சியில் சதுக்கபூதத்தை நிறுவிச் சாந்திவேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம் (சாந்திசெய்தலென்பது குறிப்பிட்ட படையல்கள்மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள் மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச்சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்கபூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்கபூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்கபூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
 
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.



5


இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப்பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர்பெற்றவனைப் பார்ப்போம். இவன் காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார்.

[. . . வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குமே தெரியாது. இன்றுங் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் ஒருவன் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும் கூடப் பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் உண்மையில் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் ஈழமெங்கும் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன்= வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்; செங்குட்டுவன்= செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை சில பெயர்கள் மக்கள் வழக்காற்றில் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.  ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே.இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ என்று சொல்லக்கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்லவேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் இதுபற்றி அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக்கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு.சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு.வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம், ஏராளம்.]

சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணமுண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான ஊன்றுகோள்களில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்குவரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத் தரவுகளை வறட்டுத் தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகரமுடியாது.

சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.  குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப்பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல்பிறக்கோட்டிய செயல் அடுத்தசில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச்சொல்வார். கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயதுவரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறென்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடுநாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார்.

என் கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” பின் எப்படி நம்புகிறீர்கள்? அதையும் தூக்கி எறியலாமே? இந்த ப்ரசத்திகளை நம்புவீர்கள், பதிற்றுப்பத்தின் பதிகங்களை நம்பமாட்டீர்கள் என்றால் அது ஓர் ஓரவஞ்சனை தானே? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லிச்சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச் சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட்படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவு தான் காரணம். 

இன்னொருபக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக்கூட்டிச் செங்குட்டுவன்வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச்சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்த நூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன்பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர் போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலைபடுகிறது.

இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம்.

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒருமுறையே செங்குட்டுவன் வடக்கேபோனதாய் எண்ணிக்கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக்காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டியநாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன்மகனை சோழவளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச்சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக்கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாயிருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.

சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைச் சேரர் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்குமேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர் கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்யமுடியாத நிலையே இருந்தது. அந்தக் காலத்தில் கடல்வணிகம் தமிழர்க்கு முகன்மையானது. கொங்கணரை அடக்கியதற்கும் அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக்கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா?

அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்குமேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர்வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர்பார்வையில் அதைப்படித்த அறிஞர் மிகக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்து வந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகல் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராயவேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக்கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவென்பது என் கருத்து] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்குவஞ்சியைத் தொலைத்து அந்துவஞ்சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.

அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ்சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலிலிருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம் பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு..112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும். 

சசிகாந்த் போல ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்தவுடன் கன்னபெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கத்தை ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத்துத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை சோழர் ஒப்புக்கொள்ளார். தவிர, இவரையும் கடந்து வந்தால் கல்வெட்டில் சோழரைக் கடந்ததாய்ச் செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர்கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழியேதான் காரவேலன் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங் கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோன்ற உழிஞைப்போர் அற்றை நிலையில் கடல்வழியே படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா? மிகுந்த ஐயம் வருகிறது.

கொடுங்கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ்பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப்பகுதிகளில் ஆட்சிசெய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்கநாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.

கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ்கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனி வேங்கடசாமியும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்காலத்தில் தமிழ் பேசினார். பின் கொஞ்சங் கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர்தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசிவரை (1950 வரை) தமிழராகவே தங்கிப்போனார். இந்தியவிடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப்பட்டார். இப்பகுதிகளுக்கு வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபொழுதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார். 

கொங்கணர், கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைகளுக்குத் தெற்கேயிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்தியமலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடமெஞ்சியது. காரவேலன் தன் பாகதக்கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக்குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகதகுமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவுபடுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.

”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன்செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்டமுடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரியமன்னருக்கு எதிரே நீயொருவனேநின்ற போர்க்கோலம் என்விழியில் அப்படியேநிற்கிறது” என்று வில்லவன்கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பது அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம்பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று சொல்வதில்லையா?

[. . . ஆயிரமென்பது தமிழ்வேர்கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங் கொண்டவர்  தலைகீழாய்  ஸஹஸ்ரம்>ஸாஸிரம்>ஸாயிரம்>ஆயிரம் என்பார். இத்தகையோருக்கு  மறுமொழி சொன்னால் நீளும். வேறொருமுறை பார்ப்போம்.]

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான்.

  "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரியர் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் மகதத்தை ஆண்டார்கள்? அக்காலத்தில் பெருநகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல்லெடுத்தாவெனில், கிட்டத்தட்ட அவ்விடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர்கன்னர் யார்? நூற்றுவர்கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவன் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?"

  இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை. 
 





மேலும் தகவலுக்கு:
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்:
http://valavu.blogspot.in/2013/02/1.html
http://valavu.blogspot.in/2013/02/2.html
http://valavu.blogspot.in/2013/02/3.html

புறநானூறு:
http://valavu.blogspot.in/2010/08/2-1.html
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

மோசிகீரனார்:
http://valavu.blogspot.in/2010/09/1.html
http://valavu.blogspot.in/2010/09/2.html
http://valavu.blogspot.in/2010/10/3.html


________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com



No comments:

Post a Comment