Wednesday, April 4, 2018

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்...



——    வித்யாசாகர்





பாலையின் சுடுமணலில்
வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்;
குளிர்காற்றில் ஆசைகளைக் கொய்து
விடுமுறையில் மட்டுமே கொஞ்சம்
வாழ்ந்து கொண்டவர்கள்..

போர்வைக்குள் சுடும்
கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்;
ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி
கனவுகளுள்
வயதைத் தொலைத்தவர்கள்..

வரிசையில் நின்று நின்றே
வானத்திற்கு
ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்;
கைப்பேசிக்குத் தெரிந்த முத்தத்தில்
கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..

பெண்ணெனும் மந்திரச் சொல்லுள்
புன்னகையை ஒளித்தவர்கள் நாங்கள்;
அத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..
பக்கத்து வீடோ.. காதலியோ,
அழுகையை மட்டுமே
மரணம் வரை சுமப்பவர்கள்..

வலிக்குமொரு பாடல் வந்தால்கூட
துடி துடிக்கும் பித்தர்கள் நாங்கள்;
அழுக்குத் தலையணையோ
அன்றைய சினிமாவோ
கதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ
எதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..

உறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே
வழுக்கையானவர்கள் நாங்கள்;
வாட்சப்பில் காதலியையும்
மின்னஞ்சலில் அம்மா பெயரையும்
வங்கிக் கணக்கில் அப்பாவும்
கைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து
தனைமட்டும் முழுதாய் இழந்தவர்கள்..

பிரிவெனும் துயரில் நொந்து
பாதி இரவில் பலமுறை எழுந்தழுது
பேருக்கொருமுறை
மீண்டுமிறப்பவர்கள் நாங்கள்;
அம்மாவைத் தேடி மனைவியைத் தேடி
பிள்ளைகளைப் பிரிந்து
மௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..

கூலிக்கு வேலையின்றி
மேலே படிக்க வாய்ப்புமின்றி
திறமைதனை
அரபிகளுக்கு அடகுவைத்தவர்கள் நாங்கள்;
கூரைவீட்டிற்கு ஓலை முடையவும்
கிழிந்த காற்சட்டைக்கு சன்னலை மூடவும்
சாய்ந்த சவுக்குக் குளியலறைக்கு
ஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே
கடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..;

ஆம்.......
நாங்கள் பாலைமண்ணின் சுடுமணலில்
எங்களின் வாழ்வையும் சுட்டவர்கள்..


படம் உதவி: http://www.telanganaheadlines.in/

________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)






No comments:

Post a Comment