Monday, April 30, 2018

தமிழ் மொழியும் தமிழர்தம் வாழ்வும்

முன்னுரை :
அகரம் தொடங்கி, கல்லும் மண்ணாய்க் கரைந்த வயதாகி, அகத்தியரும், தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்க ஐம்பெரும் காப்பியங்கள் போற்றி , ஔவையிடம் பேசி, வெண்பாக்கள் சூடி, குறள்களால் தழைத்து, இலக்கியங்கள் மலர்ந்து, பக்திப் பாடல்களால் மெய் மறந்து, மூவேந்தர்களின் மடியில் வளர்ந்து, சிற்றிலக்கியங்கள் கண்டு, மேற்கணக்கு கீழ்க்கணக்குகளை ஆய்ந்து, உரைநடைப் பேசி, வள்ளலாரின் சன்மார்க்கம் கண்டு, பாரதியிடம் எழுச்சிப் பெற்று, பாரதிதாசனிடம் புரட்சிக் கற்று, திரைத்துறையில் முத்திரைப் பதித்து, சின்னத் திரையில் நாடகத்தமிழ் பார்த்து, புதுக்கவிதை மோகத்தில் மரபும் மாறாமல் இதழ்களில் பதிந்து, மின் இதழ்களில் புதுமைப் படைத்து, துளிப்பாவில் சுவைத்து முகநூலில் முகமறியாமல் பேசும் தமிழன்னையின் தாள் பணிந்து  கட்டுரையைத் தொடக்குகிறேன்.

மொழியும், தமிழர்தம் வாழ்வும்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.
என்ற தெய்வப் புலவரின் வாக்குக்கு இணங்க அகரத்தை முதலாகக் கொண்டு தோன்றிய காலம் அறிய முடியாத செந்தமிழில் தோன்றிய இலக்கணங்கள் இலக்கியங்கள் போற்றுதற்கு உரியன. செம்மொழியான நம் தமிழ் மொழியின் சிறப்பை நோக்கின் தொட்டணைத் தூறும் ஊற்றாகச் சொல்லிக் கொண்டே செல்லலாம். ழ என்ற சிறப்பெழுத்தைப் பெற்ற ஒரே மொழியாகத் திகழ்வதும், ஓரெழுத்தே பொருள் தருவதும், பொருள் இலக்கணம் பெற்ற மொழியாகவும் ,ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என பகுத்துரைப்பதும் பைந்தமிழில் மட்டுமே.

இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்ட இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தின் சமூக வாழ்க்கை அரசியல்  பொருளாதாரம் ஆகியவற்றைச் செம்மையுற வெளிப்படுத்துகின்றன. தனித்தோங்கும் கன்னித் தமிழ் கால மாற்றத்திற்கு ஏற்ப அழியாமல் நிலைத்து நிமிர்ந்து நிற்கிறது. எழுத்தளவிலும் சில மொழிகள் பேச்சு வழக்கிலும் இருக்கக்கூடிய நிலையில் வரி வடிவிலும், ஒலி வடிவிலும் ஒப்பில்லா மொழியாக விளங்குகிறது.

தமிழரின் வாழ்வு:
தன்மானம் மிக்கவன் தமிழன். தன்னுயிராய்த் தமிழைப் போற்றி வளர்ப்பவன். உடல் மண்ணை முத்தமிட, உயிர் தமிழ் மொழியோடு கலந்து சிறப்பிக்கச் செய்தவன். இதிகாசம் முதல் இக்காலம் வரை வாழ்வியலில் தலைசிறந்து உலகத்திற்கே நாகரிகத்தை எடுத்துச் சொன்னவன்.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. என்ற வாழ்க்கை முறையின் தத்துவத்தை வள்ளுவர் அழகுற எடுத்துரை எப்போதும் நம்மொழியில்தான்.

தொல்காப்பியம்:
தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்களில் நமக்குக் கிடைத்த முதல்நூல் தொல்காப்பியம் ஆகும்.  இதன் அடிப்படையிலேயே இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவுக்கு முன்னால் எழுதப்பட்டவைகளில் 473 புலவர்கள் எழுதிய 2381 பாடல்கள் கிடைத்துள்ளன. புலவர்கள், அரசர்கள், பெண்புலவர்களால் எழுதப்பட்டுள்ளன. அக்காலத்தின் ஆட்சி முறை ,காதல், வீரம் ஆகியவற்றை எடுத்து இயம்புகின்றன.

சங்க இலக்கியங்களின் வகைகள்:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள்:-
நன்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ,
பரிபாடல், கலித்தொகை,
அகநானூறு, புறநானூறு.

பத்துப்பாட்டு நூல்கள்:-
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை ,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப் பாட்டு,
மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை,
மலைபடுகடாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:-
நாலடியார்,நான்மணிக்கடிகை,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
களவழி நாற்பது,
கார்நாற்பது,
ஐந்திணை ஐம்பது,
திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது,
திணைமாலை நூற்றைம்பது,
திருக்குறள்,
திரிகடுகம்,
ஆசாரக் கோவை,
பழமொழி நானூறு ,
சிறுபஞ்ச மூலம்,
முதுமொழிக் காஞ்சி ,
ஏலாதி,
கைந்நிலை.


அகமும்,புறமும்:
வாழ்வியலை அகம், புறம் எனப் பிரித்து அகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தலைவன், தலைவி என குடும்பப் பாங்கை உயர்வாகப் போற்றி காதல் வாழ்வைப் படம் பிடித்து அகத்திணை இலக்கியங்கள் உணர்த்தின. நிலம் ஐந்தென்றும் , பெரும்பொழுது , சிறுபொழுது எனப் பகுத்து நெறிகளை உண்டாக்கியவன். குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை எனப் பிரித்து ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், தலைமக்கள், மக்கள் ,பறவை, விலங்கு ,ஊர், நீர்நிலை, பூ ,மரம், உணவு ,பறை, யாழ், பண், தொழில் என கருப்பொருள்களாகப் பிரித்தவன்.

இளவேனில் , முதுவேனில், கார் ,குளிர் ,முன்பனி, பின்பனி என மாதங்களை வகைப்படுத்தியவன். வைகறை ,காலை ,நண்பகல் , எற்பாடு ,மாலை, யாமம் என ஒரு நாளைச் சிறு பொழுதுகளாகப் பிரித்தவன். புறத்திணையைப் பன்னிரண்டாகப் பிரித்துப் போர் செய்யும் முறைகளை வகைப்படுத்தியது பெரும் சிறப்பாகும்.  வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,  நொச்சி, உழிஞை, தும்பை, வாகை,  பாடாண்,பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனவும் பிரித்தமை சிந்தனைக்கு உரியதாகும்.

ஒப்பற்ற பொதுமறை:
தெய்வப் புலவர் அருளிய திருக்குறள் வாழ்வில் பொருளீட்டும்  முறையினையும், அறத்தோடு வாழ்தலையும், இன்பத்தோடு வாழ்தலையும் அழகுற இயம்புகிறது. நம் தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவாக எடுத்துரைப்பது சிறப்பாகும். எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வாழும் வகையினை வழிப்படுத்துவதோடு அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக எடுத்துரைப்பது சிறப்பாகும். ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்.

நீதி வழுவா நெறிமுறை:
நீதிவழுவாத் தமிழர் நெறியினிலே சிறப்பாகும். நெஞ்சினிலே கொள்வாரே நேர்மையிலே நெருப்பாகும். ஆதிமுதல் வகுத்திட்ட ஐம்பெருங்குழுவினர் அன்றாடம் வழங்கிட்டார் ஆராய்ந்தே தீர்ப்பாகும். தீதிலா கோமகனின் தீர்ப்புகளும் வியப்பாகும். தெள்ளுதமிழ் இலக்கியங்கள் தெளிவுறவே கோர்ப்பாகும். மேதினியில் வியந்திட்டார் மேன்மையின் பகுப்பாகும். மீளாத நடுவுநிலை மிளிர்ந்திடவே படைப்பே ஆகும்.

மூச்சும், பேச்சும் :
மொழியினிலே தமிழென்றே முழக்கிடுவோம். மூச்சினிலே கொண்டிடுவோம் முத்தமிழும் தேனாய். வழியினையே தேடிடுவோம் வாய்ப்புகளும் பெருக. வறுமையையும் போக்கிவிட்டு வளமுடனே வாழ்வோம். பழியென்றால் அஞ்சிடுவோம் பாசத்தால் நனைந்தே. பாறைகளும் தூளாகும் பார்வையிலே கனிந்தே. விழிகளிலே எரிமலையாய் வீறுகொண்டே எழுவோம். விதைத்திடுவோம் சிந்தனையை வெற்றிகளைப் பெற்றிடுவோம்.

வரலாறு படைப்போம்:
சிங்கமாக நடந்திடுவோம் சீறித்தான் பாய்ந்து சினமென்னும் குன்றேறி செருக்கோடு நடந்து தங்கமாக மின்னித்தான் தனித்துவமும் பெற்றுத்  தயங்காமல் அநீதிகளைத் தட்டித்தான் கேட்டே. மங்காதப் புகழ்பெறவே மாடாக உழைத்து மக்களுக்குத் தொண்டுசெய்வோம் மனிதநேயம் கொண்டே. சங்கநாதம் முழங்கிடுவோம் சரித்திரமாய் வாழ்ந்தே. சாதனைகள் படைத்திடுவோம் சக்கரமாய்ச் சுழன்றே.!

முடிவுரை:
காற்றினிலே இன்னிசையாய்க் கலந்த கீதம் காதினிலே தேனமிழ்தாய் கேட்கும் நாதம். ஊற்றாக உள்ளத்தில் உதய மாகி ஒலிக்கட்டும் எத்திசையும் உறவாய் வேதம். கூற்றாக முன்னோர்கள் குவித்த பாக்கள் குறையில்லா வாழ்வுதரும் குறைகள் போக்கி. போற்றிடுவோம் நம்தமிழைப் பொன்போல் காத்து புதுமைகளைப் படைத்திடுவோம் பொங்கி வாரீர்.




கவிஞர். கோவிந்தராஜன் பாலு
7/126 கவுண்டர்  தெரு,
சுந்தரபெருமாள் கோயில் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்-614208.
அலைபேசி:9443484316.




No comments:

Post a Comment