Tuesday, March 27, 2018

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை...



——  ருத்ரா இ.பரமசிவன்.

ஓவியம்: ஷண்முகவேல் - ‘வெண்முரசு’


சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌
அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!
தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.
புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே.



"சுள்ளியம் பேர் ஆறு"  - பாடல் குறித்து

அகநானூறு "களிற்றியானை நிரை" தொகுதியில் 149 ஆம் பாடல் "எருக்காட்டூர் தாயங்கண்ணனார்" என்னும் ஆழ்ந்த புலமையுள்ள‌ சங்கத்தமிழ்  புலவரால் பாடப்பட்டது. அவர் அதில் சேரநாட்டு ஆறான‌ "சுள்ளியம் பேர் ஆறு" அலையெழுப்பிக்கொண்டு வெள்ளிய நுரைப்பூக்களை அகலப்பரப்பிக்கொண்டு ஓடும் "அழகை "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க" என்று சிறப்புற எழுதியிருக்கிறார். அந்தச் சொற்றொடர் ஏதோ நம்மை அந்த ஆற்றில் ஒரு படகில் ஏற்றி அது வெண்நுரைப்படலம் கிழிபடச் சென்று கொண்டிருப்பதைப்போலவே உணர்ந்தேன். அந்த சொற்றொடரைத் தலைப்பாக்கி எழுதிய ஒரு சங்கநடைச் செய்யுட்கவிதையே இந்த "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை" ஆகும்.

இந்தப்பாடலில் தலைவனைப்பிரிந்து வாடும் தலைவியின்"பிரிவுத்துயரம்" தான் விவரிக்கப்படுகிறது.

பொழிப்புரை:

சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய 
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌

தலைவன் பொருள்தேடிச்செல்லும் காடும் ஆறும் தான் தலைவியின் கண்முன்னே வருகின்றன.ஓமை மரங்கள் அடர்ந்த அந்தக்காட்டில் சிலந்திகள் நூல்கள் பின்னும் சுள்ளிகளாய் இருக்கும் கிளைகளேஅதிகம் உள்ளன.அந்த முட்காட்டில் பருக்கைக்கற்கள் காலில் இடறுகின்றன. அந்தக்காட்டில் "சுள்ளியம் பேராறு" வெண் நுரை பூத்து ஆற்றுநீர்ப்பரப்பில் சுருக்கங்கள் போன்ற (திரங்கிய) சிற்றலைகளை உருவாக்குகின்றன.அவை சுழித்து சுழித்து வரி வரிகளாய் அவளைச்சுற்றியே வந்து அலைக்கழிப்பது போல் துயரம் கொள்கிறாள்.

அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!

அகன்ற பேரலைகள் தளும்பும் கடலின் அடி ஆழத்திலிருந்து சுறா மீன்கள் வருகின்றன.கூரிய கொம்பு உடையச் சுறாமீன்கள் வாய்கள் பிளப்பது போல் அந்தக் காதல் நோய் அவளை விழுங்க முனைகிறது என்கிறாள் தலைவி. அந்நோய் அவள் உடலில்ஊறி உள்ளத்துள் சூடு ஏற்றுகிறது.இப்படி இந்நோய் என்னைச் சிதைத்த பின் என் நைந்த உயிரிழைகொண்டு நெய்யப்பட்ட என் எலும்புக்கூடுதான் மிஞ்சும் என்கிறாள்.

தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி 
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.

அவள் சொல்கிறாள்: நெருப்பையே உண்டுவிட்டவள் போல் ஆனேன்.இருந்தாலும் எனக்குள் அவன் நினைவு வானத்தைப் பிளந்து கொட்டும் குளிர்மிக்க மழையாகத்தான் (வான் ஈர் தண்மழை) இருக்கிறது.மணம் பொருந்திய சந்தன மரத்தை வெட்டி எரித்த ஒளிமிக்க நெருப்பின் கொழுந்தாக சுடர் வீசுகிறது."உன்னோடு இன்புற்றுக் களிப்பாக இருந்தது போல் எண்ணி (களிப்பின் செத்து) இந்த இனிய தீயையும் உணர்கிறேன்.இது உன்னைத்தான் எனக்குக் காட்டுகிறது.உன் பெயரின் ஒலி கூட அதில் கேட்கிறது."

புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே.

புல்லில் வேயப்பட்ட சிறு வீடுகள் சூழ்ந்த அந்த மலை உச்சியில் நடு இரவின் நிலா ஒளி பொழிகிறது.அது ஒரு மயக்கம் தரும் இனிய தேன்மழையை தூவுகிறது.அது பூக்களை வருடி ஒளி பூசுகிறது. அதில் என் தலைவனின் காதல் உறவு எவ்வளவு பெருமை மிக்கதாய் மிளிர்கிறது!






படம் உதவி: http://www.jeyamohan.in/61436#.WroYpojwaUk

________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




No comments:

Post a Comment