Sunday, April 20, 2014

வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்



வள்ளுவரின் பொதுநோக்கும் சமயாதீதமும்

இயற்றியவர்: பேராசிரியர் உலகன்

இனி திருகுறளின்  முதல் அதிகாரத்திற்கு பொருள் கூறப்புகும் முன், உலக வரலாற்றில் சிறப்புமிக்க இப்பெருநூலின் சில தனிச் சிறப்புக்களை எடுத்துரைப்பது மிகவும் தேவைப்படும் ஒன்று. அதில் முதலாக நாம் இந்நூலை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்றவாறு முப்பால் நூலாக கருததப் படுவது ஏற்புடைத்தா? என்ர கேள்வி எழுகின்றது. இது பிற்காலத்தில் உரையாசியர் யாரோ ஒருவர் பிழையாகத் தந்த பாகுபாடு என்று தெரிகின்றது. இது திருகுறளிற்கும் சங்க இலக்கியப் பண்பாட்டிற்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை காட்டாது போகின்றது.

முப்பால் பாகுபாடு யாருடையது?

இந்தப் பாகுபாடு மிகப் பழமையானது என்றாலும் பிழையான ஒன்றாகவேப் படுகின்றது, முதலில் நாம் கவனிக்க வேண்டியது முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்ல-  இறைவனைப் போற்றித் துதித்து நூல் இனிதே முடிய இறைவனது அருளைவேண்டிப் பாடுவது அல்ல.  மாறாக இங்கு இறைவனைப் பற்றி  ஆய்ந்து பல  மெய்ஞானக் கருத்துக்களை தெரிவிக்கும் ஓர் அதிகாரமாகும்.   ஆக இதனை ‘இறையுண்மை அதிகாரம்’ என்று கூறுதல் பொருந்தும்

மேலும் இந்நூலையே தொல்காப்பிய மரபு வழி வந்து இன்னும் பல புதுமைகளையும் செய்யும் நான்கு திணைகள் கொண்டுள்ள ஓர் பெருந்நூல் என்று கொள்வதே பொருந்தும்

எவ்வாறு எனின் கூறுவோம்

காமத்துப்பால் உள்ளபடியே காமத்தைப்பற்றி அல்லாது காதல் அன்பினைப் பற்றியது ஆகும். தொல்காப்பியத்தின் ‘ஐந்திணை அன்பினையே” காதல் என்று கணித்து அதன் ஆழத்தையெல்லாம் ஓர் அழகிய நாடகம் போல் விளக்குவதாகும். ஆகவே இந்த காமத்துப்பாலை நாம் வள்ளுவர் கருத்துப்படி ‘அகத்திணை’ என்று கூறுவதே ஒக்கும்.

இதேப்போன்றுதான் பொருட்பால் என்பதும் இது தொல்காப்பிய மரபில் வரும் புறத்தினை யாகும்.

இவ்வாறெனின் அறத்துப்பால் தான் யாது?

இது அகத்திணையும் அல்ல புறத்திணையும் அல்ல, மாறாக அவற்றால் எழக்கூடிய சங்காலப் புறத்திணையில் புதைந்து கிடந்த  மேலான மெய்யறிவுச் சிந்தனையின்  உகத்திணையாகும். உகத்திணையாவது மெய்யுணர்வுத் தேடலை அடிப்படையாக கொண்ட இல்லறம் என்றும் துறவறம் என்றும் இயங்கும் வாழ்க்கையாகும்

சங்க இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனார் கூறும் ‘யாது ஊரே யாவருங் கேளிர்’ முதுகண்ணன் சாத்தனார் கூறும் ‘உண்டி கொடுத்டோர் உயிர் கொடுத்தோரே” என்பன போன்ற மெய்யறிவு விசாரனை சார்ந்த ஒழுக்கமாகும், இத்தகையப் புலவர்கள் வாழ்ந்த வாழ்கையாகும்.

திருவள்ளுவர் இதனை தனியொருத் திணையாக வடித்து ஓர் புரட்சி செய்கின்றார்.

இனி இதனால் எழுவதே ‘சிவத்திணை’ எனக் கூறவரும் ‘செம்பொருள்’ எனும் இறைவனைப் பற்றிய ஞான விசாரனையின் ஒழுக்கமாகும். இது இறையுண்மையும் இறைவனது குணங்களும் கருதப்படும் ஓர் திணையாகும்

இந்தத் திணையே பிறகாலத்தில் இறை நம்பிக்கையை வற்புறுத்தி எழுந்த பத்தி எழுச்சியின் வித்தாக  அமைந்துள்ளது. இதன் விருத்தியே பத்தி இயக்கத்தின் எழுச்சிக்கு வித்திட்டு பாரதம் எங்கும் பரவி இறைவனைப் போற்றிப் புகழும் வாழ்க்கையே வாழ்க்கையாக ஓர் புரட்சி செய்து இறையுண்மையை ஏற்காத  உலகாயதம் சாங்கீயம் புத்தம் போன்ற சமயங்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இனி திருவள்ளுவர் இறையுண்மை வாழ்க்கையை வாழ்ந்தவர் எனினும்  சமயச் சார்பு அற்றே விளங்கியுள்ளர். சமயங்களில் சார்பு சமயங்கள் என்றும் சார்வற்ற சமயநிலை என்றும் இருவகை உண்டு.  சார்புச் சம்யங்கள் ஓர் மறைநூலையோ புத்தன் தீர்த்தங்கரர் போன்ற மகான்களின் வாக்குகளையோ யாராலும் எழுதப்படாத வேதங்களே மெய்ய்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்துள்ள பிரமாணியம்    சைவாகமங்களை வைணவ ஆகமங்களை சுருதி ஆதாரமாக் கொண்ட சம்யங்கள் எல்லாம் சர்புச் சமயங்கள் ஆகும். (sectarian religions)

இவ்வாறான சார்புச் சமயங்களில் பட்டு சிறையுண்டு கிடக்காது மெய்யுணர்தலையே அடிப்படையாகக் கொண்டு  அறிவியல் முறையில் மெய்ஞானத்தையே தேடி செல்லும் நூலிய அறிவியல் வாழ்க்கையே வாழ்க்கை என வாழ்ந்தவர் திருவள்ளுவர் என்பதின் அவர் அழகிய சமயதீதர் ஆகின்றார்.

இந்த சமயாதீதத்தை பிறகால சைவசித்தாந்த மரபும் போற்றி வளர்த்துள்ளது.

இவ்வகையிலேயே திருவள்ளுவரின் பொதுநோக்கைப் புரிந்துகொண்டு முதல் அதிகாரத்தை சிவத்திணையின் ‘இறையுண்மை’ அதிகாரமாகக் கொண்டு உரையை விரிப்போம்

திருவள்ளுவரின் ‘சிவத்திணை’ எனும் பகுதி ‘இறையுண்மை’ அதிகாரம் எனும் ஒரே அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று கொண்டு நம் உரை விளக்கம் செல்லும்

1 comment:

  1. Read an explanation of Chapter 1 of Thirukkural in
    www.tamilinkural.blogspot.in
    which is in accordance with Dravidian tradition.Also my blog
    www.philosophyofkuralta.blogspot.in

    ReplyDelete