Wednesday, January 15, 2020

ஏறு தழுவல்

ஏறு தழுவல்

——   மா.மாரிராஜன்


          இன்றைய நாள். மாட்டுப்பொங்கல். ஜல்லிக்கட்டு. களத்தில் காளைகளும், காளையர்களும் ஆடும் ஆட்டத்தை நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் பார்த்துப் பரவசமடைந்தோம். இந்நிகழ்வுகளை அப்படியே நமது சங்க இலக்கியமான கலித்தொகை ஏறுதழுவல் என்னும் பெயரில் பதிவுசெய்கிறது. ஒரு நேரடி வர்ணனை போல் இக்காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது.

          மிகப்பழமையான நமது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று கலித்தொகை. அதில், முல்லைக்கலி பாடலை இயற்றியவர் நல்லுருத்தினார் என்னும் புலவர்.

ஏறுதழுவல் நிகழ்வை அடுத்தடுத்த காட்சிகளாகப் பாடல்கள் விளக்குகிறது. களம்... காளை... வீரர்கள்... களமாடுதல்... என்று நேரடிக் காட்சியாப் பாடல்கள். இப்பாடல்களில் தமிழர்களின் பல பாரம்பரிய வழக்கங்களும், வரலற்றுத் தரவுகளும் பதிவாகியுள்ளன.

          ஆயர் குடி மக்களின் தொன்மை, பாண்டியனின் பெருமை, அவன் நிலத்தைக் கடல் கொண்டமை, குரவைக் கூத்து, என்ற பல வரலாற்றுத்தரவுகள். வழிபாடும் தமிழனது பாரம்பரிய வழக்கமாய் இருந்துள்ளது.  சிவன், பெருமாள், முருகன், இந்திரன், போன்ற தெய்வங்கள் பல பாடல்களில் சிறப்பாகத் தோன்றுகின்றனர்.

          உவமைகளாக மகாபாரத போர் நிகழ்வுகளும் காட்டப்படுகின்றன. 101 - 105 வரை மிக நீண்ட பாடல்கள்; பாடல்களின் வரிசை மாற்றி ஒரு தொகுப்பாகச் சுருக்கி.. சுருக்கி.. சுருக்கி... தொகுத்ததே நீண்ட பதிவாகிவிட்டது.

          இனி, கலித்தொகைக் காட்டும் ஏறுதழுவல் காட்சிகள்; ஆயர் குடி பெருமை மற்றும் தொன்மையைப் பறைசாற்றும் பாடலுடன் துவங்குகிறது.

"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு."

பொங்கிய கடல் வந்து தன் நிலத்தை அபகரித்தது. சினம் கொண்ட பாண்டியன், புலிச்சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வீழ்த்தி தன் மீன் சின்னத்தைப் பொறித்த பாண்டியர் குடி தோன்றிய போதே தோன்றிய தொன்மைக் குடி ஆயர் குடி.

          அடுத்த பாடல் ஏறுதழுவலின் சிறப்பை மிக வீரியமாகப் பதிவு செய்கிறது.

"கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்."

கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் மணக்கமாட்டாள் ஆயர் மகள்.

          ஏறுதழுவல் விழா ஆரம்பமாக உள்ளது. மாடு பிடி வீரர்கள் வந்தனர். அவர்கள் முதலில் வழிபாடு செய்தனர்..

"துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ "

நீர்த்துறையில் இருக்கும் தெய்வம், ஆலமரத்தடி இறைவன் (சிவன்) மராமரத்து இறைவன் (திருமால்) ஆகியோரை வணங்கி ஏறு தழுவும் களத்தில் நுழைகின்றனர்.

          களத்தில் எவ்வாறான மாடுகள் இருந்தன?

" வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,   மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும்."

பனைக்கொடியுடைய குற்றமற்ற பலராமனின் வெள்ளை நிறம் கொண்ட காளை, போர் வெற்றிதரும் சக்கரத்தையுடையவனும், திருமகளை தன் மார்பில் கொண்டவனுமான திருமாலின் கரியநிறம் கொண்ட காளை, ஒளிமிகுந்த சடையில் பிறையைச் சூடி நெற்றியில் ஒரு கண்ணுடன் திகழும் முக்கண்ணனின் நிறம் போல் ஒரு காளை, மாமரமாய் நின்ற சூரனை தன் வேல் கொண்டு வதம் செய்த வேலவனின் செந்நிறத்தில் ஒரு காளை..

          ஆட்டம் ஆரம்பமானது.  எவ்வாறு..?

"மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப .

மாறு எதிர் கொண்டவர்களைத் தாக்கி அழிக்கும் சிவனின் கணிச்சிப்படையினர் போல் கொம்பு சீவப்பட்ட காளைகள் இருக்கும் தொழுவத்தில் வீரர்கள் புகுந்தனர். இடி முழக்கம் போல் பறையொலி எழும்ப ஏறுதழுவல் தொடங்கியது.

தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான்மன்ற,
அவ் ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார்: பகை?

காளைகள் மேல் பாய்ந்து பிடிப்பதற்காக பெரும் ஆரவாரத்துடன் காளைகளின் எதிரே சென்றனர். கொல்லும் வில்லைபோல் வளைந்த காளை அவர்களை எதிர்கொள்ளத் தயாரானது. காளைகளின் கால்கள் தரையைக் கீற புழுதி கிளம்பியது. வீரர்கள் தன் மார்பை விரித்து தயாராக, அவர்களைக் குத்திக் கிழிக்க தன் கொம்புகளைத் தாழ்த்தியது காளை. இதைப் பார்ப்பவர்கள் கலக்கமுற்றனர். மலரும் மணிப்பூண் ஒன்றை தன் தோளில் அணிந்த ஒருவன் பாய்ந்து சென்று காளையின் திமிழைப்பிடித்து காளையை வருத்தினான். இதைக்கண்ட காளையின் சொந்தக்காரிக்கு இவன் பகை ஆவானோ?

          இனி காளைகளின் ஆட்டம்...

மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் 

மேலே சுற்றும் நூற்கண்டின் நிறமும் சிறிய சிவந்த கண்களை உடைய காளை ஒன்று, தன்னை நோக்கிப் பாய்ந்தவனைக் குத்தி தன் கொம்பில் வைத்துச் சுழற்றுவதைப் பாருங்கள். இக்காட்சியானது. அழகியசீர் நடையழகியின் (திரௌபதி)கூந்தல் பற்றி இழுத்தவனின் ( துச்சாதனன்) நெஞ்சம் பிளப்பேன் என்று வஞ்சினம் கூறியவனின் (பீமன்) செய்கையை ஒத்திருந்தது.

தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

காளையை அடக்குவோர் தொழுவத்துள் சுழன்று சுழன்று பாய்ந்தனர். அவர்களைக் காளைகள் பார்த்துப் பார்த்துக் குத்தின. கொம்புகளிலிருந்த மாலையை வீரர்கள் அறுத்தனர். சூலம் ஏந்திய சிவன் சூடிய பிறையில் இருக்கும் மாலையைப்போல் ஒருவனது குடலை தன் கொம்புகளில் வைத்துச் சுழன்றது ஒரு காளை.

ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், 
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ

பெரும் கூச்சலுடன் காளைகள் மேல் பாய, காளைகள் அவர்களை எதிர்கொள்ள, கொம்புகளுக்கிடையே அவர்கள் போராட, இக்காட்சி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற போர்க்களம் போல் இருந்தது.

மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், 
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு

வீரர்களில் சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் திமிலைப் பற்றினர்.சிலர் காளைகளின் தோளில் தொங்கினர்.இவர்களைக் காளைகள் தங்கள் கொம்புகளால் தடுத்து நிறுத்தியது.

"தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், 
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ"

இவ்வாறான ஏறுதழுவல் நடைபெற்று முடிந்தபிறகு காளைகள் மேய்ச்சல் நிலத்திற்கு விடப்பட்டன. ஊரார்களும் மற்றவர்களும் ஊர் மன்றத்தில் கூடி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தழுஉ கூத்தாடினர்.

"ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, 
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே"

இவ்வாறான ஏறுதழுவுதல் நமது மரபாகும்.இதனைப் பாடி குரவைக்கூத்து ஆடி மங்காத புகழ் கொண்ட நம்தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்ட இந்நிலத்தை ஆளும் அரசன் வாழ்க.

          இம்மலர்ந்த உலகமும் வாழ்க.....



தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)





மதுரை திரௌபதி அம்மன் கோயில்

மதுரை திரௌபதி அம்மன் கோயில்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            கிபி 1884இல் வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் அவர்களால் மதுரை தெற்கு மார்ட் வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மதுரை சௌராஷ்டிர தருமராஜர் சபைக்குப் பாத்தியமான கோயில்.  இக்கோயிலின் கும்பாபிஷேகம் 24. 1. 2016 அன்று நடத்தப்பட்டது.


கோயில் அமைப்பு:
            இரண்டு கருவறைகள், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

கருவறை:
            இரட்டை கருவறைகளில் ஒன்றில் இரண்டு அடி உயரம் உடைய நின்றகோலத்தில் திரௌபதி அம்மனும் மற்றொரு கருவறையில் தர்மராஜனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

அர்த்தமண்டபம்:
            அர்த்தமண்டபத்தில் பஞ்சலோகத்தால் ஆன பஞ்ச மூர்த்தியும், காளியம்மன்,கமல கன்னி, சந்தோஷிமாதா மற்றும் விநாயகர் இறை உருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.

மகாமண்டபம்:
            மகாமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன்  காணப்படுகிறது.

            மகாமண்டபத்தில் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர், உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி (குதிரை வாகனத்தில்), ஸ்ரீ நல்லமுடி அரவாண் (ஐந்தடி உயரத்தில் முகம் மட்டும் கொண்ட சுதைச் சிற்பமாக), ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர்,  சித்திரகுப்தர் (பஞ்சலோகத்தில்), குரு (யானை வாகனத்தில்), சனீஸ்வரர் என்று அனைத்து உருவங்களும் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

            கோயிலின் வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் ஒன்றும் தனித்தனியாகச் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ளன.


தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm






Saturday, January 11, 2020

மதுரையில் நடைபெற்ற வட்டெழுத்துப் பயிலரங்கம்


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்

            தமிழ் மரபு அறக்கட்டளை சென்னையில் நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக, பாண்டியர்களின் எழுத்து மொழியாக இருந்த வட்டெழுத்து பயிற்சியினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.  செப்டம்பர் 24, 2019 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினருடன் சந்தித்ததிலிருந்து கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சிக்கான வேலைகள் ஆரம்பமானது.  அதன்படி டிசம்பர் 28, 29, 2019 ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் விளம்பர அறிவிப்பு நவம்பர் 5, 2019 அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பயிற்சிக்கான பதிவுகளும் தொடங்கின.



            இப்பயிற்சியில் மொத்தம் 135 நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அவர்களில் வெளியூரிலிருந்து 40 நபர்கள் என்ற அளவிலும் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலிருந்து 95 நபர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் அமெரிக்கா, ஜெர்மனி, மைசூரு, பெங்களூரு திருச்சி, கோவை, தேனி, சிவகாசி, ராஜபாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் கலந்து கொண்டார்கள். அதேபோல பல துறையைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக வரலாறு, தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தவிர்த்து, கட்டிடப் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், சித்த மருத்துவர்கள், பழங்குடியினர், ஆய்வக நுட்புநர், எழுத்தாளர்கள், தட்டச்சு எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு பிரிவினரும் வட்டெழுத்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

            வட்டெழுத்து பயிற்சியின் முதல்நாளான 28.12.2019 அன்று காலை 10 மணியளவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் பயிற்சியைத் தொடங்கி வைத்ததுடன் சிறப்புரையாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் 'வட்டெழுத்து' எழுத்துகள் குறித்த பயிற்சியினை அளித்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 29.12.2019 அன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் முனைவர் ராஜேந்திரன், முனைவர் கோ. சசிகலா ஆகியோர் முதல் நாள் பயிற்சிக்கு வந்திருந்தவர்களின் பாட நோட்டினை வாங்கி அவர்கள் எழுதியிருந்த வட்டெழுத்து எழுத்துகளைச் சரிபார்த்துத் திருத்தி கொடுத்தார்கள். அன்றே தமிழி எழுத்தின் அறிமுகத்தையும் அவர்கள்  நடத்தியதுடன் பயிற்சி நிறைவடைந்தது. பின்பு பங்கேற்பாளர்களின் ஐயங்களுக்குப் பயிற்றுநர்கள் பதிலளித்தார்கள். இறுதியாக மாலை 3 மணி அளவில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்து நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

            பயிற்சியில்  48 மாணவர்களும்,  பொதுமக்கள் 87 பேர் என்ற அளவிலும் கலந்துகொண்டார்கள். இவர்களில்  5 மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டது. அன்று மாலை 4 மணி அளவில் களப்பயணமாக,   வட்டெழுத்தின் பயிற்சிக்குப் பின் அவ்வெழுத்துக்களை நேரில் பார்த்து வாசிக்கும் விதமாக, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு எதிரில் இருந்த பெருமாள் மலைக்குப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு மதுரை பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களால் மரபு பயணம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. பின்னர் முனைவர் கோ. சசிகலா அவர்களால் அங்கிருந்த வட்டெழுத்து பற்றிய நேரடி விளக்கம் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.



            வட்டெழுத்து பயிற்சியினை தொடர்ந்து மூன்றாம் நாளான 30.12.2019 அன்று 45 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக மரபு பயணம் ஒன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களுக்கு முக்கியமாக வட்டெழுத்துக்கள் கொண்ட பழமையான இடங்களான யோக நரசிம்மர் கோயில், அரிட்டாபட்டி, லாடன் கோயில் போன்ற இடங்களுக்குச்  சென்று வரலாறு அறியப்பட்டது. அன்று மதியம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்திருந்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் அரங்கத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு, கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவிற்குச் சென்றும்  வரலாற்றுச் செய்திகள் அறியப்பட்டது.  அனைத்து இடங்களிலும் முனைவர் கோ. சசிகலா அவர்கள் அந்த இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும் வரலாற்றினையும் விளக்கமளித்தார். மாலை மரபு பயணமும் இனிதாக நிறைவடைந்தது.




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in 
https://www.facebook.com/devipharm









தென்கொங்கு நாட்டின் தொல்லியல் எச்சங்களைக் காண ஒரு மரபு நடைப்பயணம்



இல. அருட்செல்வம், எம். ஏ. எம். ஃபில்;
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்

          கல்வெட்டு எழுத்துகளின் காலங்களையும், வட்டெழுத்துக்களின் காலங்களையும் வெறுமனே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஏதோ புரியாத குறியீடு போலவே தோன்றலாம். ஆனால் அதற்குள் சென்று ஒவ்வொரு எழுத்திற்கும், அந்த எழுத்திற்குள் இருக்கும் தொடக்கத்தையும் முடிவையும் இன்றைய எழுத்தோடு இணைத்துப் பார்த்தால் நம் தமிழர்கள், மூதாதையர், அல்லது முன்னோர் எவ்வளவு அறிவுள்ளவர்கள் என்பதைத் தெளிவாக   உணரமுடியும்.

          மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புக்கும்  எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். ஏனெனில் இந்த சமூக அமைப்பானது, ஒவ்வொரு நிலையிலும், சூழலுக்கேற்றவாறு தகவமைத்துக்கொண்டு  பாளையங்கோட்டை கல்லூரியிலும்,  சென்னையிலும், என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தமிழ் மரபு அறக்கட்டளை தம் தொல்லியல் பணிகளைச் செவ்வனே செய்து வருவது பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் அதில்  பங்கேற்று ஒத்துழைக்கும் வகையிலும், கல்வெட்டுகளையும், வட்டெழுத்துக்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  2019 ஆம் ஆண்டின்  இறுதி நாட்களில்  தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தொடக்கமான வட்டெழுத்து, கல்வெட்டுப் பயிற்சி மதுரைப் பயிற்சிப்பட்டறையில்  உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கலந்து கொண்டோம்.  பயிற்சி பெற்று களப்பயணமும் சென்றோம்.

          அதன் தொடர்ச்சியாக,  கோவை பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின்  பொறுப்பாளர் கெழுதகை நண்பர் திரு. மணிவண்ணன் அவர்களின் சீரிய முயற்சியில் தென்கொங்கு நாட்டில் தொல்லியல் எச்சங்கள் எனும் மரபு நடைப்பயணம் எதிர்காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் நடத்துவதற்கு முனைவர் சுபாவின் வழிகாட்டுதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக  கோயிற்கலை சமூக ஆய்வாளரின் உடுமலை சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.  வெறுமனே சுற்றுப்பயணமாக இல்லாமல் ஒரு கருத்தரங்குடன் மரபு நடைப் பயணம் திட்டமிடப்பட்டது. அதுவும் உடுமலையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஜி.வி.ஜி. கல்லூரியில் வரலாற்றுத்துறைக் கருத்தரங்கில் முனைவர் சசிகலா பேசினால் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால்,   உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையின் தலைவர் திரு.தி. குமாரராஜா அவர்களின் ஆதரவுடன்,  கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று கருத்தரங்கும் நடைபெற்றது. வரலாற்றுத்துறையின் தலைவர் முனைவர் வி.கே.சரஸ்வதி, மற்றும் முனைவர் செண்பகவள்ளி ஆகியோரையும் நேரில் சந்தித்தும்  கருத்தரங்கு குறித்துப் பேசி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

          இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை  கொங்குப் பகுதி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னின்று  அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கினார். திட்டமிட்டவாறே  ஜனவரி  3ஆம் நாள் ஜி.வி.ஜி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கலைச்செல்வி தலைமையில்  கருத்தரங்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு  துறைத்தலைவர் வி.கே.சரஸ்வதி வரவேற்புரை பேசி தொடங்கி வைத்தார். நிகழ்வில்  முனைவர் கோ.சசிகலா  பவர் பாயிண்ட் எனும் படக்காட்சிகளுடன்  சுமார் இரண்டு மணி நேரம் கொங்கு நாடு சார்ந்தும், கல்வெட்டு சார்ந்து வகுப்பு எடுத்தார்.  கல்லூரி மாணாக்கர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்டறிந்தனர். நிகழ்வின் விளைவாக மறுநாள்  4 ஆம் தேதி  உடுமலையில் மரபு நடைப்பயணம் செல்ல உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, நிகழ்வில் மணிவண்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டது. உடனடியாக வரலாற்றுத் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் இசைவு தெரிவித்து  முனைவர்  ராஜலட்சுமியுடன் ஆய்வு மாணவிகள் ஐவரையும் உடன் அனுப்பி வைக்க இசைவு தெரிவித்தனர். 



          மறுநாள்  சனிக்கிழமை காலை  9 மணிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில்  தொடங்கிய மரபு நடைப்பயணம்,  முதலில்  நிலக்கொடை வழங்கிய  குடிமங்கலத்தில் தொடங்கியது.  குடிமங்கலக் கல்வெட்டு 67 வரிகள் கொண்டதையும் நிலம் அளந்து கொடுத்த வாமண அவதாரத்தோடு இருக்கும்  கல்வெட்டினைப் படித்துக்காட்டி விளக்கிப்பேசினார்.




          அடுத்து சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோயிலையும், அதன் அருகே உள்ள அமரபுயங்க புரத்து ஈசன் கோயிலையும், மேலும் அதனருகே கட்டப்படும் பெருமாள் கோயிலையும் இணைத்துப்பேசினார். இந்த சோமவாரப்பட்டி எனும் அமரபுயங்க புரம் சங்க காலத்தைச் சேர்ந்தது. எனவும், கொங்கு நாட்டுப் பெருவழிகளில் முகாமையானது  என்பதையும், மூவர் கண்டியம்மன் கோயிலின் அமைப்பையும், அதிலிருக்கும் தீபத்தூண் எனும் கம்பத்தையும் அதிலுள்ள முதலை, மீன், யானை புடைப்புச் சிற்பங்களையும் படமெடுத்துக்கொண்டு ஆய்வு செய்தார். அந்த இடத்தைப் பார்த்ததுமே இந்த கோயிலுக்கு அருகில்  பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் இருக்கும் என்றும் சொன்னார். மேலும் இந்த கோயில்களுக்குத் தெற்குப் பகுதியிலேயே ஊரின் வளர்ச்சியும் அமைந்திருக்கும் என்றும் சரியாகச் சொன்னார்.



          அடுத்து மசராயப்பெருமாள் கோயில்  பார்த்து, அந்த காலகட்டத்தையும் பார்த்து கன்னிமார் கோயில், ராயருடன் பொருந்தி வரும் நாயக்கர் கால வரலாற்று நிகழ்வுகளையும் பொருத்திப் பேசினார். இவருடன் முனைவர் ஜெயசிங் இந்தப் பகுதியின் சிறப்புகளையே எடுத்துரைத்தார். அடுத்து  பதினைந்து அடிக்கும் உயரமாக உள்ள  சங்ககாலம் அல்லது பெருங்கற்காலத்தில் இருப்பதாகச் சொல்லக்கூடிய நெடுங்கல்லைப் பார்வையிட்டோம். இந்த உடுமலைப்பேட்டை பகுதியில்  மிகப்பழைமையான நெடுங்கல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இது ஒன்று மட்டுமே. இது போல்  நெடுங்கற்கள் கோட்டமங்கலம் பகுதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு நேரமின்மையால்  செல்ல இயலவில்லை. இருப்பினும் கோட்டமங்கலத்தில் இருக்கும் வீரகம்பம்,  வல்லக்கொண்டம்மன் கோயிலையும் பார்வையிட உடன் வந்த ஆய்வாளர்களும், மாணவிகளும்   மயக்க நிலைக்குச் செல்லவே அங்கேயே மதிய உணவு முடிக்க, மணி 2:30 ஆகிவிட்டது.

          அடுத்து  ஓய்வு இல்லாமல் உடனடியாக மதகடிப்புதூர் கிளம்பினோம். உடுமலை ஜக்கம்பாளையம் வழியாக  எலையமுத்தூர், கல்லாபுரம் வழியாகச் செல்ல மணி 4.மணி ஆகிவிட்டது.  மலையேற்றம் செல்ல உடன் வந்த  பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் நின்று நின்று  பாறை ஓவியம் இருக்கும் பகுதிக்கு  மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வமாக வந்து சேர்ந்துவிட, அதே இடத்தில் முனைவர் சசிகலா வகுப்பு எடுத்தார். அவ்விடத்திலேயே உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வ நடுவத்தின் சார்பில்  வெளியிடப்பெற்ற பாறை ஓவியங்கள் குறித்த குறுநூலை ஆய்வு மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும்,  வழக்குரைஞர் பழ.முருகேசனுக்கும்.  உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  உடுமலை வி.கே.சிவகுமார், உடுமலை அருட்செல்வன், கண்டிமுத்து ஆகியோர் வழங்கினர்.

          அவ்விடத்திலிருந்து சற்று இறங்கி வந்து  மீண்டும் மேற்குத்தொடர்ச்சிமலைகளுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு நேரம் போதாமையால் அடுத்த மரபு நடையில்  மீண்டும் தொடரும்  பிரிய மனமில்லாமல்  வருத்தத்துடன் பிரிய நேரிட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும், உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையினருக்கும்  ஜி.வி.ஜி. கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்தனர்.





Monday, January 6, 2020

சமூகப்பிரிவினைக்கு வித்திட்ட பிரம்மதேயங்கள்


சமூகப்பிரிவினைக்கு வித்திட்ட பிரம்மதேயங்கள்

  முனைவர் எஸ்.சாந்தினிபீ


            நம் சமுதாயம் வாழும் பல பகுதிகளில் சிலர் ஊருக்கு உள்ளேயும் சிலர் வெளியேவும் வாழும் அவலம் தொடர்கிறது. யாதும் ஊரே யாவரும் உறவினராக வாழச் சொன்ன பரந்த நோக்கமுடைய மூத்தோர்களின் வாரிசுகளுக்கு இப்படி கீழ்த்தரமான சிந்தனையும் வாழ்க்கையும் எப்போது, எப்படி ஏற்பட்டது என நம்மில் பலர் ஆலோசித்திருக்கலாம். இதற்காக நம் வரலாற்றைப் புரட்டினால் விடை கிடைக்கும். வரலாறு என்பது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்வைச் சொல்லும் கதைதானே.

            ஓர் இடத்தில் வாழ்ந்த மனிதஇனம் பல்வேறு காரணங்களுக்காக பன்னெடுங்காலமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இதற்குத் தமிழகம் விதிவிலக்கல்ல. இத்தகைய காலச் சுழற்சியில் தென்னகத்தில் வடபுலத்தோர் வாழ வந்தனர். குறிப்பாகத் தமிழகத்தில் கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் கிடைக்கும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் இத்தகைய மாற்றத்தை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன. வெவ்வேறு கலாச்சார மக்கள் ஓரிடத்தில் இணைந்து வாழும்போது, கலாச்சாரக் கலப்பு ஏற்படுவதும் இயற்கையே. அதுவும் ஆட்சியாளர்களின் ஆதரவு எந்த கலாச்சாரத்தின் பக்கம் சாய்கிறதோ அதுவே மேலோங்கி செழிக்கும் என்பது நமக்கு வரலாறு சொல்லும் செய்தி.

            பல்லவர்கள் வடபுலத்து மொழியையும் பார்ப்பன கலாச்சாரத்தையும் ஆதரித்து வளர்த்தனர் என்பதே வரலாறு. இக்காலத்தில் வளரத் துவங்கியதில் முக்கியமாக இன்றும் நம்மிடையே இணைந்திருக்கும் கோவில் கலாச்சாரம் ஆகும். இந்த நிலை கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடித்தது. அதுவரையிலும் ஆள்பவர்கள் மாறினார்களே தவிர, கோவிலுக்கான கொள்கையில் மாற்றமில்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கூட கோவில்களுக்கு நிலமும் பொருளும் தானமாகக் கொடுத்தனர். உதாரணமாக இன்று சேலத்திலுள்ள சுகவன ஈசுவரன் கோவிலுக்கு திப்பு கொடை அளித்துள்ளார்.

            கடந்த காலத்தில், பெரும்பாலான பார்ப்பனர்கள் தானாக வந்தாலும், அரசனால் குடியமர்த்திய போதும் நம் தென்னகச் சமுதாயத்தோடு ஒன்றி வாழவில்லை. இதைக் கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் தெளிவாகச் சொல்கின்றன. இதன்றி, பார்ப்பனர்கள் பல சலுகைகளும் பெற்று நாடாண்ட மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாய் வாழ்ந்தனர். இப்படிப் பார்ப்பனர் மட்டுமே தனித்து வாழ அரசாண்டோர் உண்டாக்கிய புது ஊர்களே பிரம்மதேயங்களாகும். சில நேரங்களில் பல ஊர்களை ஒன்றாக இணைத்து புதிய பெயருடன் ஒரு பிரம்மதேயம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் அரசகுலத்தோரின் பெயர்களும் பட்டங்களும் இப்புதிய குடியேற்றங்களுக்குச் சூட்டப்பட்டது. இதற்கு உதாரணமாக அருண்மொழிதேவ சதுர்வேதி மங்கலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம், இராஜஸ்ரீய சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களைக் கூறலாம்.

            இவ்வூர்களில் குடியேறிய பார்ப்பனர்களுக்கு விலையின்றி நிலம் தானமாக வழங்கப்பட்டது. பல சமயங்களில் அதற்கு நிலவரியும் ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கு முன்பாக அங்கு வாழ்ந்தோர் வேறு ஊர்களுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர். பல வேளைகளில் குடிகள் எனப்பட்ட விவசாய கூலிகளும் வெளியேற்றப் பட்டு புதியவர்கள் நில உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பிரம்மதேயங்களில் பார்ப்பனர் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர். இந்த பிரம்மதேயம் எனும் ஊர், சேரிகள் எனும் உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. முறையான திட்டமிடப்பட்ட தெருக்கள், குடியிருப்பு, தோட்டம், ஊரின் நடுவே விஷ்ணு கோவில், ஏரி குளம் போன்ற நீராதாரம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. சில பிரம்மதேயங்களில் வணிகர்களும், நெசவாளர்களும் பிற்காலத்தில் ஊருக்குள் வாழ்ந்துள்ளனர். இதற்கு, தஞ்சாவூர், உத்திரமேரூர் ஆகியவை உதாரணம் ஆகும். கோவில் நடப்புகளுக்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களின் அன்றாட தேவைக்கான உணவு, உடை, பாத்திரம், பண்டங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு ஒரு திட்டம் நடைமுறையில் வந்தது. அதுவே ‘’உள்ளே வெளியே” என்ற விபரீதத்திற்கு வித்திட்டது.

            பிரம்மதேயத்தின் எல்லையை ஒட்டியிருந்த ஊர்கள் கோவிலுக்கும் பார்ப்பனர்களுக்குமான நன்கொடைகளாக மாறின. இவற்றைப் பிடாகை என்றழைத்தனர். சில பிரம்மதேயங்கள் பத்துக்கும் மேற்பட்ட பிடாகைகளைக் கொண்டிருந்தன. பிடாகைகள் பிரம்மதேய ஊருக்குச் சொந்தம் என்றாலும் நடைமுறையில் பிரம்மதேயமும், பிடாகையின் செயல்பாடுகளும் இருவேறுவிதமாக இருந்தன. பெரும்பாலான விளைநிலங்கள் பிடாகையிலிருந்தன. இவர்களுடன் பயிர் செய்யும் தொழிலாளிகள், குயவர்கள், கால்நடை மேய்ப்போர், வண்ணார், தச்சர், கொல்லர் போன்ற தொழிலாள குடும்பங்கள் பிடாகையில் வாழ்ந்தனர். இவ்வாறாக, ஊர் எனும் பிரமதேயத்திற்கு வெளியே தொழிலாளர்களைக் குடியமர்த்தல் பார்ப்பனர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

             உதாரணமாக திரிபுவனியில் பல நெசவாளர் குடும்பங்கள் இவ்வூரின் தென் பிடாகையில் குடியமர்த்தப்பட்டனர்(கல்வெட்டு 208/1919). திரிபுவனிக்கு தெற்கே இருக்கும் புத்தூர் பார்ப்பனர்களின் பிடாகையாக பிரம்மதேயத்துடன் இணைகிறது. இந்த இணைப்பிற்குப் பின் புத்தூர் எனும் பெயர் ஜனநாத நல்லூர் என மாற்றப்படுகிறது. இந்த தென் பிடாகையில்தான் ஜனநாத வில்லிகள் எனும் வில் படை வீரர்களும் இருந்தனர்(கல்வெட்டு 199/1919). இதே பிரம்மதேயத்தின் கிழக்கு பிடாகையான வீரசோழ நல்லூரில் வாழ்ந்த ஒரு பெண்பணியாளர்  திருபுவனி ஆழ்வார் கோவிலுக்கு 12 ஆடு கொடை அளித்ததையும் அறியமுடிகிறது(கல்வெட்டு193/1919). இன்றைய புதுச்சேரியில் உள்ள பாகூர் சோழர்காலத்தில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியது. இதை, அழகிய சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தனர். இந்த பிரம்மதேயத்தின் மேற்கில் அமைந்த பிடாகை அவியனூர் சேரியில் வாழ்ந்தவன் பள்ளி கேசன். சேந்தனின் மகனான கேசன், பாகூர் ஆழ்வார் கோவிலுக்கு விளக்கு ஒன்று தானமாகக் கொடுத்துள்ளார். இப்படி பிரம்மதேயங்களின் பல பிடாகைகள் குறித்துச் சொல்லலாம்.

            தொழிலாளர்கள் பிடாகைகளில் வாழ்ந்ததற்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்குப் பார்ப்பனர்கள் எப்படி காரணமாவார்கள்? என்ற ஐயம் தோன்றுவது இயல்பே. இதற்கும் கல்வெட்டுகளே விளக்கம் சொல்லும். மன்னனின் ஆணைகள் மூலமாகவே பிரமதேயத்திற்குச் சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அரசாணைகள் நாட்டார் எனும் நாடு பிரிவு நிர்வாக அமைப்புக்கு அனுப்புவார்கள். நாட்டார்கள் பிரம்மதேய நிர்வாகத்தைக் கவனிக்கும் அமைப்பான ’சபை’க்கு கொடுப்பார்கள். இந்த சபையில் பிரம்மதேயவாழ் பார்ப்பனர்களே அங்கத்தினராவார்கள். இந்த சபையோரே மன்னனிடம் சலுகைப் பெற்று இடம்பெயர்ந்து பிடாகைகளில் வரும் தொழிலாளர்களுக்கு வாழ்விடங்களை ஒதுக்குவார்கள்.

            அரங்கன் கொமாரன் என்னும் ஒரு தட்டானுக்கு(தங்க நகை செய்பவன்)  மன்னன் முதலாம் ராஜாதிராஜன், திரிபுவனியில் தட்டார் பணி செய்யும் உரிமையும் அதற்கான சன்மானமாக தட்டார்காணியான நில உரிமையும் பெறக் கட்டளையிடுகிறார். இவன் மன்னனின் பெயரைப் பட்டமாகப் பெற்று ராஜராஜப் பெருந்தட்டான் என்று அழைக்கப்பட்டான். வழக்கப்படி மன்னனின் கட்டளை வரப் பெற்ற சபையோர் இவனுக்கு நிலம் ஒதுக்குகிறார்கள் (கல்வெட்டு 210/1919). இப்படி தங்கள் பிரமதேயத்திற்குக் கிட்டும் வசதி வாய்ப்புகள் எதுவாக இருப்பினும் அதனைச் செயல்படுத்தும் விதமும் முறையும் இந்த சபையே முடிவு செய்தது. இப்படித்தான் நெசவாளர்களைச் சபை குடியமர்த்தியது.

            இந்த உழைப்பாளிகளுக்கும் பிரம்மதேயத்திற்கும் தொடர்பு இருந்தது. இவர்களின் உடலுழைப்பால் விளைந்த பொருட்கள் கோவிலுக்கும் பிராமணருக்குமான அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்தது. அதே நேரத்தில் நெசவாளர்களின், குயவர், வண்ணார், தச்சர், தட்டான் மற்றும் விவசாய கூலிகள்  போன்ற அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான தொழிலும் பொருளாதாரமும் பிரம்மதேயத்தின் மூலம் கிடைத்தன. ஒருவரின் தேவை மற்றவருக்குப் பயன்பட்டு இருவரும் இணைந்தே அல்லது சார்ந்தே வாழ்ந்தபோதும் பிடாகைவாழ் தொழிலாளர்களுக்கு ஊருக்குள் வாழும் உரிமை மறுக்கப்பட்டது. இதற்குச் சாத்திரங்கள் என்றழைக்கப்பட்ட வடமொழி நீதி நூல்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டன.  

            இதன் அடிப்படையில், பதினோராம் நூற்றாண்டில் சிலருக்கு ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இன்றைய புதுவையில் உள்ள திரிபுவனியில் குயவர்களுக்குச் சாத்திரத்தின் அடிப்படையில் ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்டது. பிரம்மதேயத்திற்க்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிடாகைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இதன்படி, பிரம்மதேயங்களில் இணைக்கப்பட்டதால் தாம் அந்த ஊருக்குள் வாழ்வதாக பிடாகையினர் எண்ணினர். ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை பிரம்மதேய எல்லைகளில் அமைந்த பிடாகைகள் ஊருக்கு வெளியே அமைந்தவை ஆகும். தனது சபை என்னும் நிர்வாக அமைப்பை பிரம்மதேயத்தில் பார்ப்பனர்கள் அமலாக்கி இருந்தனர். அதேசமயம், பிடாகைகளின் நிர்வாகம் சபைகளின் கீழ் அன்றி ஊர் என்னும் அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால், பிடாகை வாசிகளுக்குச் சொந்தமான நிலங்களில் போதிய வருவாய் இல்லாததால், ஊர் எனும் நிர்வாகம் வலிமையற்றதாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் போல் பிடாகைகள் பிரம்மதேயங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தன.

            பிரம்மதேயங்கள் முறையாகத் திட்டமிடப்பட்டு தெருக்கள் கோவில்கள் வாழ்விடங்கள் என அமைக்கப்பட்டன. ஆனால் இத்தகைய திட்ட முறையைப் பிடாகைகளில் பின்பற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. நாட்டின் வருமான நிர்வாகத்தின் வரி புத்தகங்களில் பிரம்மதேயமும் அதைச் சார்ந்த பிடாகைகளும் ஒரே ஊராகக் காட்டப்பட்டாலும் இவை இரண்டும் தனித்தனியாகவே செயல்பட்டன. பிடாகைவாழ் மக்கள் தாங்கள் ஊருக்குள் வாழ்வதாக நினைத்தார்கள் ஆனால் பிரம்மதேயத்தோர் இவர்களை ஊருக்கு வெளியே வாழும் நிலைக்குத் தள்ளி இருந்தார்கள். இப்படியாக ஒரே ஊரில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் கட்டமைக்கப் பட்டன. ஒருவரை மற்றொருவர் சார்ந்திருந்தும் பிரமதேயத்துப் பார்ப்பனர் முதலாளிகளாகவும், இவர்களது வேலையாட்களாக பிடாகைவாழ் மக்கள் வேறுபட்டனர். இந்த வேறுபாடு காலப்போக்கில் மோசமாகி பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும், பிடாகையினர் தாழ்ந்தவர்களாகவும் அவதரித்தனர். இதற்குச் சோழத் தலைநகர் தஞ்சையும் விதிவிலக்கல்ல. இடையர், யானை மற்றும் குதிரைப் படைகளில் பணிசெய்தவர் பலரும் ஊருக்கு வெளியே வாழ்ந்ததைத் தஞ்சை கல்வெட்டுகள் சொல்கின்றன. நெசவாளர்களின் குடியிருப்பு மட்டுமே தஞ்சை நகருக்குள் இருந்த தகவலைக் கல்வெட்டுகளில் காணலாம். இதற்கு நெய்தல் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.

            இதுபோன்ற வேறுபாடுகளை மக்கள் வழிபடும் கோயில்களிலும் பார்ப்பனர்கள் விட்டுவைக்கவில்லை போல. பிடாகைகளில் பெரும்பாலும் சிவன் மற்றும் துர்கையின் கோவில்களே இருந்தன. ஆனால் பார்ப்பனர்களின் முக்கிய கடவுள்களில் ஒன்றான விஷ்ணு கோவிலைக் காணவில்லை. திரிபுவனியின் கிழக்குப் பிடாகையில் ஒரு துர்கைக் கோவிலிருந்தது எனக் கல்வெட்டு மூலம் அறிகிறோம் (கல்வெட்டு 207/1919) திரிபுவனி ஊருக்கு வெளியே தெற்கு திசையில் ஒரு சிவன் கோவிலும் துற்கை கோவிலும் இருந்தது (கல்வெட்டு 175/1919).  இப்படி வேறுபாடுகள் பல இருந்த போதும், பிடாகை வாழ் மக்கள் பிரம்மதேயக் கோவில்களுக்கு ஆடு, மாடு, நிலம் மற்றும் பொருள் எனப் பல தானங்களைச் செய்த தகவல்களையும் கல்வெட்டுகள் தருகின்றன.

            எல்லையில் அமைந்த ஒரு ஊர் பிரம்மதேயங்களுடன் இணைக்கப்பட்டதும் அங்கே வாழ்ந்த மற்றும் குடியமர்த்தப்பட்ட தொழிலாளிகள் ஊருக்கு வெளியே வாழ்பவர்கள் ஆனார்கள். காலப்போக்கில் இதுவே வழக்கமாகி எல்லா ஊர்களிலும் தொழிலாளிகள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். கைவினைஞர்கள், மற்றும் தொழிலாளிகளின் உடலுழைப்பு தனது பெருமையை இழந்து பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டது. ஒரே ஊரிலிருந்த பின்பும் அதன் உள்ளே, வெளியே எனப் பார்ப்பனர்களின் மக்களை வேறுபடுத்தும் திறமையினால் சமூகம் பிரிக்கப்பட்டது.




நன்றி: கணையாழி இலக்கிய மாத இதழ்,  ஏப்ரல், 2019






தொடர்பு:
முனைவர் எஸ்.சாந்தினிபீ (chandnibi@gmail.com)
வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்
உபி  அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
அலிகர்-202002


Wednesday, December 25, 2019

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

——   மா.மாரிராஜன்


          சங்க இலக்கிய தமிழ்ப் பாடல் வரிகள் கல்வெட்டுகளில் இடம் பெறுவது சற்று அபூர்வமான ஒன்றாகும். சிற்றிலக்கியத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டில் இடம்பெறுவது  சிறப்பு. அப்பாடல் வரலாற்றுச் செய்திகளை ஒட்டி இருந்தால் அது இன்னும் சுவாரசியம். 

          பிற்காலச்சோழ இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரின் பங்கு அபரிதமானது. விக்ரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் என்று மூன்று சோழ அரசர்களின் காலத்திலும் இருந்தவர். இவர் எழுதிய மூவருலா, தக்காயப்பரணி போன்ற நூல்கள் தனித்தமிழ் இலக்கியச்சுவை வாய்ந்தவை. சோழர் குலப் பெருமையைப் போற்றி பாடுவதில் வல்லவர்.

          ஒட்டக்கூத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் புகழேந்திப்புலவர். பாண்டியனது அவைப்புலவர். ஒட்டிப் பாடுவதிலும் வெட்டிப்பாடுவதிலும் இவரது தனிச்சிறப்பு. பாண்டிய குலப் பெருமையைப் போற்றிப் பாடுவதில் புகழேந்திப்புலவர் பெரும் சமர்த்தர்.

          சோழர்களின் பெருமையை ஒட்டக்கூத்தர் பாட, அதை வெட்டி பாண்டியர் பெருமையைப் புகழேந்தி பாட என அமைந்த பாடல்கள் வெகு பிரசித்தம். இருவரியும்  விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்பார்கள்.

          ஒருபாடலைப்பாருங்கள்;  ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாடுகிறார், 
                    “இன்னம் கலிங்கத்தில் வேந்தர் உண்டென்றோ
                    தென்னவன் தமிழ்நாட்டை சீறியோ - சென்னி
                    அகளங்கா உன் தன் அயிராவதத்தின்
                    நிகளங்கால் விட்ட நினைவு”

          புகழேந்திப் புலவர் இப்பாடலை அப்படியே வெட்டிப்பாடுகிறார்.
                    “தென்னவன் தென்னர்பெருமாள் திறல்மதுரை
                    மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் - பொன்னிநா
                    டாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர்
                    தாலிக்கும் ஒன்றே தளை”

          அதாவது, சோழனது பட்டத்து யானையின் காலில் கட்டியுள்ள சங்கிலி அவிழ்க்கப்பட இரண்டு காரணம் உண்டு. கலிங்கத்தில் பகை இன்னும் மிச்சமிருக்கலாம் அல்லது பாண்டிய நாட்டை சீரழிக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஒட்டக்கூத்தர் பாட;

          இதற்குப் பதிலாகப் புகழேந்தி, தெற்குப் பகுதி மக்களின் தலைவனான பாண்டியனது மதுரையில் இருக்கும் பாண்டிய பட்டத்து யானையின் காலில் உள்ள கயிற்று முடிச்சும், பொன்னி நாட்டில் இருக்கும் கற்புடைய சோழ மகளிரின் கழுத்தில் உள்ள தாலி முடிச்சும் ஒன்றேயாகும் (பாண்டியனது யானையின் காலில் உள்ள முடிச்சு அவிழ்ந்தால், சோழப் பெண்களின் தாலி முடிச்சு அவிழும் என்பது இப்பாட்டின் பொருள் ஆகும்) அதாவது, போரில் சோழ வீரர்கள் இறந்து அவர்களது தேவியர் தாலியை இழப்பார்களாம்.

          இம்மாதிரியான பாடல்கள் ஏராளம். இப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் சிற்றிலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள புகழேந்தியின் பாடல்கள், அப்படியே குடுமியான் மலையில் கல்வெட்டாகவும் உள்ளது. தென்னவன் செய்யப் பெருமாள் என்று தொடங்கும் புகழேந்தியின் பாடலை கல்வெட்டில் காணலாம்.






நன்றி:  படம் உதவி - திருச்சி பார்த்தி. 



தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)

Sunday, December 22, 2019

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி


செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி 

——    தேமொழி


          பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும்,  வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும்  உள்ளனர்.  அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று  நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர். 

          தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் 'செம்பியன் மாதேவி - வாழ்வும் பணியும்' என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது.  பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019  வெளியீடு கண்டது  இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள். 

          நூலின் முன்னுரையைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் அறப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றுக்குச் சான்றுகளாகத் திகழும் 1. கோனேரிராஜபுரம், 2. திருக்கோடிக்காவல், 3. ஆடுதுறை, 4. குத்தாலம், 5. செம்பியன்மாதேவி, 6. ஆனாங்கூர், 7. திருவாரூர், 8. மயிலாடுதுறை, 9. திருவக்கரை, 10. திருமுல்லைவாயில், 11. திருமுதுகுன்றம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சிலைகளையும், கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவற்றில்  இணைந்துள்ள செம்பியன் மாதேவியின் அறப்பணிகளையும் கலைப்பணிகளையும் விரிவாக நூல் எடுத்துரைக்கிறது. இச்செய்திகள் நூலின் முதல் பாகமாக 50 பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகுதியில் செம்பியன்மாதேவியின் பிற கோயில் பணிகள், அன்னாரின் கலைப்பணி, அவர் வழங்கிய செப்புத் திருமேனிகள், சோழ அரசர்க்கும் அவர்தம் தேவியரும் குறித்து இரண்டாம் பாகத்தில் 25 பக்கங்களுக்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாகச் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இணைக்கப்பட்டுள்ளது. 

          கோயில்களில்  எந்தெந்த பகுதியில் எந்தெந்த  திருவுருவங்கள் அமைக்கப்பட்டன என்ற செய்திகளைத் தரும் அட்டவணை நூலின் இரண்டாம் பகுதியில் இணைத்திருப்பது சிறப்பு.  சோழர்கால கோயில் கட்டுமான கலை வளர்ச்சியையும் மாற்றத்தையும்  அறிய இப்பகுதி உதவுகிறது. இப்பகுதிக்கு உதவும் வகையில் அவை பற்றியும்,  சிலைகள் குறித்த  படங்களும் கொடுக்கப்பட்டால் கோயில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியையும்  அறிந்து கொள்ள உதவும். செப்புச் சிலைகள் குறித்த  பட்டியல் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறந்த இணைப்பு.  செம்பியன் மாதேவியின்  கவின்மிகு இச்செப்புச் சிலையே இந்த நூலின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளது. 



          வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படுபவர் மதிக்கப்படுபவர் செம்பியன் மாதேவி.  இவர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்களும் முன்னரே வெளிவந்துள்ளன.  நூலின் முன்னுரைச் செய்தியானது, இந்நூலை வெளியிட்ட பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் முன்னர் அவர்கள் வெளியிட்ட வரலாற்று நூல்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன என்கிறது . அவ்வாறே இந்நூலும் வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படும் வகையிலேயே அமைந்துள்ளது, அதனால் மறுபதிப்பு வெளியிடும் தேவையும் ஏற்படலாம்.  மேற்கொண்டு அடுத்த பதிப்புக்கு எடுத்துச் செல்கையில் நூலில் சிற்சில மாற்றங்கள் செய்யலாம். முதலாவதாக நூலில் ஆங்காங்கே தலைகாட்டும் தட்டுப்பிழைகளைச் சீர் செய்யலாம். செம்பியன்மாதேவி வரலாற்றுக்கு எவ்வகையிலும் தொடர்பு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கும்,  நூலின் மூன்றாம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நூலில் இடம் பெறும் கோயில்கள், அவற்றின் சிலைகள், கல்வெட்டுகள்  போன்றவற்றின் படங்களை இணைக்கலாம். அவை நூலின் செய்தியை விளக்கமாக அறிந்து கொள்ளவும் களத்திற்குப் பார்வையிடச் செல்வோருக்கு ஒரு கையேடாகவும் துணைபுரியும்.

செம்பியன் மாதேவியார்
          "செம்பியன் மாதேவி" (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூர் என அறியப்படும் செம்பியன் கிழானடி நல்லூரில் அமைந்துள்ளது.   'மழவரையர் மகளார் கண்டராதித்தர் தேவியார் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த  பராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்' என்று கல்வெட்டுகளில் செம்பியன் மாதேவியார் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். மழவர் நாட்டின் திருக்கோயிலூரில் மழவர் குலப்பெண்ணாகப்  பிறந்து,  மிக இளம் வயதில் (முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகனான) கண்டராதித்த சோழரின்  இரண்டாவது மனைவியானவர் செம்பியன் மாதேவியார். இவர் குறித்த முதல் கல்வெட்டு 941 ஆம் ஆண்டில் பராந்தகச்  சோழனின் காலத்தைய கல்வெட்டாகத்  திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில்  கிடைத்துள்ளது. அதில் இவர் நந்தா விளக்கெரிக்க ஆடுகளைக் கொடையாக அளித்துள்ளார் என்ற செய்தி உள்ளது.  

          இவரை மணந்த கண்டராதித்தர் 949 ஆம் ஆண்டில் முடிசூடி எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து 956 ஆம் ஆண்டில் மறைந்துவிடுகிறார்.  பதினைந்து ஆண்டுகளே நீடித்த இவரது திருமண வாழ்விற்குப் பிறகு சிறுவனான தமது மகன் மதுராந்தகன் என்ற உத்தமசோழனை  வளர்த்து அவன் முடிசூட்டி  ஆண்ட பொழுதும், அவனும் மறைந்து அவனுக்குப் பிறகு ராஜ ராஜ சோழன் முடி  சூட்டி ஆளத் துவங்கிய பிறகும் என 60 ஆண்டுகள் இவர் இறைப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தைய  1001 ஆம் ஆண்டின் கல்வெட்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆக, இவர் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், இராஜ இராஜ சோழன் எனச் சோழ அரசர்கள் பலரின்  அரசாட்சிக்  காலங்களைக் கண்ட சோழ அரசகுல முதுபெரும் தேவியாவார்.   செம்பியன் மாதேவி என்பது இவருடைய பட்டப் பெயராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிற்காலத்தில் 'மதுராந்தகன் மாதேவடிகள் ஆன செம்பியன் மாதேவியார்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். 

          இவர் ஆற்றிய இறைப்பணிகள்;  
                    1. செம்பியன் மாதேவியார் புதியதாகக் கட்டிய கோயில்கள், முன்னர் செங்கல் தளிகளாக (கோயில்களாக) இருந்தவற்றை அவர் கற்றளிகளாக மாற்றியவை,
                    2. முன்னர் இருந்த கோயில்களில் செய்த திருப்பணிகள், அவற்றில் புதியதாக இணைத்த பகுதிகள் மற்றும் சிற்பங்கள், 
                    3. அவர் தான் எடுப்பித்த கோயில்களுக்கும் முன்னர் இருந்த கோயில்களுக்கும் வழங்கிய பொருட்கொடைகள்  
என மூன்று வகையில் பிரித்தறியப்படுகிறது.

          செங்கல் தளியிலிருந்து செம்பியன் மாதேவியரால் முதலில் கற்றளியாக மாற்றப்பட்ட கோயில் கோனேரிராஜபுரம் கோயில். அவரது மகன் உத்தம சோழனின் மூன்றாம் (கிபி 972 இல்) ஆட்சி யாண்டில் அவரது தந்தை  கண்டராதித்தர் நினைவாகக் கட்டப்பட்டது.  இக்கோயிலில் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியும் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பமும் அதுகுறித்த கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில் கண்டராதித்தர் லிங்கம் முன் அமர்ந்து வணங்க, அவருக்குப் பின்னர் இருவர் வெண்சாமரமும், வெண் கொற்றக்குடையும் ஏந்த, லிங்கத்தின் அருகாமையில் அதற்கு மாலை சூடும் வகையில் செம்பியன் மாதேவி வணங்கியபடி நிற்பார் (பார்க்க: பக்கம் 14). 


          தரையில் அமர்ந்து வணங்கும் கண்டராதித்தரைத் தவிரச் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள மற்றவர் குறித்து அடையாளம் காணுவதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வெட்டில் காணப்படும் செய்தி: 
                    "ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன்  திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம்  உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்" 
என்று கல்வெட்டு கூறுகின்றது. திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கோயிலின் கருவறையின் தென்சுவரில் இச்சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோனேரிராஜபுரம் கோயில் கட்டிய சிற்பிக்கு 'இராசகேசரி மூவேந்த வேளாண்' என்ற பட்டமும் கொடுத்து  கருவறைச் சுவரிலேயே சிற்பம் அமைத்தும் பெருமை செய்துள்ளார் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவியாரின்  பணிகளைப் போற்றும் வகையில் நாகபட்டினம் அருகிருக்கும் ஊர் ஒன்றுக்கு செம்பியன்மாதேவி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 

          சோழர் கால கட்டிடக்கலை முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் என மூன்று கட்டங்களில் அறியப்படுகிறது;  இடைக்காலமான  செம்பியன் மாதேவி காலத்தில் கருவறை அர்த்த மண்டபங்களில் உள்ள தேவகோட்டங்களின் (மாடங்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும் முறை துவங்கியது. பத்தாம் நூற்றாண்டில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் செம்பியன் மாதேவி.  உயர்ந்த எண்ணிக்கையில், 16 தேவகோட்டங்கள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.  உத்தம சோழர் காலத்திற்குப் பிறகு கோயில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்தாலும், அவற்றின் எழிலும் நளினமும் முந்தைய கால சிலைகளின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து விட்டது என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதற்குக் கற்களைத் தேர்வு செய்த முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் ஐயுறுகிறார்கள். 

          சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.  இவர் காலத்தில் செப்புத் திருமேனிகள் வடிக்கும் கலை மிதமிஞ்சிய வேகத்தில் வளர்ச்சியடைந்தது. பலவகை தெய்வங்களின் உருவங்களும் செப்பு வடிவம் பெற்றனர். கோயிலில் மூலவர் சிற்பங்கள் கருங்கற்களால் ஆன நிலையான சிற்பங்கள் என்பதால், விழாக் காலங்களில் இறைவனைப் பல்லக்கிலும்,  வீதியுலாவிற்காகக் கொண்டு செல்ல பஞ்சமூர்த்திகள் (ஐந்து இறைவர்கள் - சிவன், உமை, பிள்ளையார், முருகன், சண்டிகேசுவரர் என்று குடும்பமாக) தனித்தனியாகத்  தேர்களிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் தோன்றியதால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகிய ஐம்பொன்களின் உலோகக் கலவைகளில் சிலைகள் உருவாக்கப்பட்டன.  ஒவ்வொரு கோயிலும் குறைந்த அளவு இந்த ஐவர் செப்புச் சிலைகளையாவது  கொண்டிருப்பது வழக்கம்.  



          நெடிய ஒடிசலான உருவத்துடன்,  குறைந்த அணிகலன்களும், இடையில் மட்டும் உடையணிந்து திறந்த மார்புடன், தலையில் உயர்த்தி முடியப்பட்ட கொண்டையுடன், நீண்ட துளையுள்ள காதுகளுடன் கையில் தாமரை மலர் பிடிப்பது போன்ற முத்திரையுடன் உடைய புகழ் பெற்ற செப்புச் சிலை செம்பியன் மாதேவிக்கும் உண்டு. அது அவரது மகன் உத்தமசோழனால் தனது தாய் பிறந்த சித்திரைத் திங்கள் கேட்டை நட்சத்திர நாள் விழாவில் வீதியுலா செல்ல உருவாக்கப்பட்ட சிலை எனப்படுகிறது. இச்சிலையின்  அமைப்பில்தான்  இறைவி பார்வதியின் சிலைகளும் வடிக்கப்படுவது வழக்கம். இறைவிக்கு இணையாக இவர் கருதப்பட்டிருப்பதை இதனால் அறிய முடிகிறது. சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்றும் கருதப்படுகிறது. 

          கோயில்களைப் புதிதாகக் கட்டுவதையும் புதுப்பித்துக் கட்டுவதையும் கடந்து;  அக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், விழாக்கள் நடக்கவும், விளக்குகள் தொடர்ந்து எறியவும் என எண்ணிறைந்த கொடைகளையும், செல்வங்களையும், பொற்கழஞ்சுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புச் சிலைகளையும், அணிமணிகளையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்  செம்பியன் மாதேவி.  மங்கலநாண் அல்லது தாலி அணிவது தமிழர் மரபிலிருந்ததா என்ற வினா சென்ற நூற்றாண்டில் ம.பொ.சி., மற்றும் மா. இராசமாணிக்கனார் போன்ற பெரும் தமிழறிஞர்களை இரு பிரிவுகளாக விவாதத்தில் இறக்கியது.  மா. இராசமாணிக்கனார் பிரிவினர் தாலி திருமணத்தில் மரபு வழக்கானது  பிற்காலமே என்ற கருத்தை முன்வைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோனேரிராஜபுரம்  கோயிலின் துர்கை சிலையில் கழுத்தில் மங்கலநாண் அணிந்துள்ளவராகக் காட்டப்படுகிறார். அதுமட்டுமின்றி, விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தின் பழமலைநாதர் கோயிலின் இறைவிக்கு அரைகழஞ்சு எடையுள்ள பொற்றாலி, மூன்று  குண்டுமணிகள் ஆகியவற்றைக் கூரைப்புடவையுடன் செம்பியன் மாதேவி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியும் கிடைக்கிறது. இதிலிருந்து நாம்  உறுதியாக 10 ஆம் நூற்றாண்டில் திருமணமான பெண்கள் தாலி அணிந்தனர் எனவும்  அறிய முடிகிறது. 

          சோழர் காலத்தில் அரச மகளிரின் ஆளுமை, கொடைத்தன்மை, செல்வ நிலை ஆகியன எந்த அளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்பதற்குச் சான்று செம்பியன் மாதேவியின் வாழ்வு.   அறப்பணி மற்றும் கலைப்பணிகளுடன், செம்பியன் மாதேவியின் சிறப்பாக நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது அவருடைய வரலாறு காக்கும் செயல்கள்.  அதன் காரணமாகவே இவர் ஒரு வரலாற்று நாயகி என அழைக்கப்பட வேண்டியவர். இவர் தாம் புதுப்பித்த செங்கற் கோயில்களின் பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றைப் புதுப்பிக்கப்பட்ட கற்றளிகளின் கட்டுமானங்களில் இடம் பெறச் செய்தார். அவ்வாறு  (26 கல்வெட்டுப் படிகள்) பொறிக்கப்படுகையில் இது 'ஒரு பழங்கல்படி' என்ற வரியையும் அவற்றில்  வெட்டுவித்தார்.  அவ்வாறு பழங்கல்படி எடுக்கையில் ஆடுதுறைக் கோயிலிலிருந்த வரகுணபாண்டியனின் கல்வெட்டையும், அவர் ஓர் எதிரி நாட்டு அரசனான பாண்டியனாக இருந்தாலும் கூட அவரது கல்வெட்டையும் படியெடுத்துப் பாதுகாத்து வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவே செம்பியன் மாதேவி போற்றப்படவேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை என்றால் அது மிகையல்ல. 




நூல் விவரம்:
செம்பியன் மாதேவி (வாழ்வும் பணியும்)
பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு 
செப்டெம்பர் 2019 
பக்கங்கள்:120
விலை: ரூ. 100/-
ISBN: 978-93-89146-75-2

நன்றி: கண்டராதித்தர் சிற்பம் - கல்வெட்டு பட உதவி, திரு. மாரிராஜன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்

 
நன்றி:  "சிறகு" மின்னிதழ் 





தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)