Wednesday, July 14, 2021

வீரக்குடி கரைமேல் முருக அய்யனார் கோயில் கல்வெட்டுக்கள்

-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



ஏரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் வீரக்குடி என்னும் கிராமத்தில் அருள்மிகு கரைமேல் முருக அய்யனார் கோயில் என்ற பெயரில் உள்ளது.   ஐந்து நிலை இராஜகோபுரம் மற்றும் இருதள விமானத்துடனான கருவறையில் கல் சிலை உருவத்துடன் முருகன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள் புரிகிறார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், முக மண்டபம் அதனை அடுத்து வாகனம், கொடிமரம், பலிபீடம் என அமைக்கப்பட்டிருக்கிறது.

கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை போன்ற தெய்வங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  கோயில் வளாகத்தினுள் சோனை கருப்பசாமி, லாடசன்னாசி, பத்திரகாளி, பேச்சியம்மன், ராஜா மந்திரி, கிழவன் கிழவி (நடுக்கல்) என இவர்கள் பரிவாரத் தெய்வங்களாக தனித்தனிச் சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள். மேலும் பத்தடி உயரம் உள்ள சுதையால் ஆன யானை வாகனமும், குதிரை வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு வலது புறத்தில் அரசமரத்தடி விநாயகர் வீற்றிருக்கிறார்.
devi.jpg

வாகன மண்டபத்தில் முருகனுக்கு உரித்தான மயில் வாகனத்துடன், நந்தி மற்றும் யானை வாகனமும் ஒரே மண்டபத்தில் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு வெளியே கருவறையை நோக்கி கல்லாலான மயில்வாகனம் ஒன்றும் காணப்படுகிறது. கோயிலின் இடது பக்கவாட்டில் அருள்மிகு அரியவன், தூண் உருவமாக காணப்படுகிறார். சிவராத்திரி, வைகாசி விசாகம் தைப்பூசம் , கார்த்திகை ,மாசி களரி எனத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலானது பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. 

கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் கல்வெட்டுக்கள்:
1.1950களில் அம்மிக்கல் ஒன்று இக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட செய்தியுடன் அம்மி கல் ஒன்று உள்ளது.
2. ஏழு வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டு ஒன்று எங்களால் கண்டறியப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. 
devi1.jpg
கல்வெட்டு செய்தி:
            1. உ முறுக அய்ய துணை
            2. அருகபட்டி
            3. யிறுக்கும் பகவன்
            4. புசாறி மேபடி கோல்வ
            5. மூப்பன் மேபடி கோல்வ
            6. டுகறன் முருக அண்டி
            7. மூப்பன்

இந்தக் கல்வெட்டு செய்தியினை வாசித்துத் தெரிவித்தவர் திரு. இராஜகோபால் சுப்பையா, மூத்த தொல்லியல் அறிஞர். 


----

No comments:

Post a Comment