Thursday, July 22, 2021

எழுத்துப் பிழையற!



- சொ.வினைதீர்த்தான்


பாடல்:-
          அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
          எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
          விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
          கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
        (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்,  பாடல் - 2

பொருள்:-
தன்னால் அழிந்தவர்களுக்குப் பிறப்பின்மையை வழங்கும்  முருகனின் பெருமைகளைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழை இல்லாமல் இன்று கற்பதை விடுத்துக் கொடியவனாகிய எமன் வீசுகின்ற பாசக் கயிறு நம் கழுத்தைச் சுருக்குப்  போட்டு இழுக்கின்ற அன்று கற்பதால் என்ன பயன்? 
நான் பக்திப் பாடல்களை இன்றைய வாழ்வியல் நெறிகளுடன் பொருத்திப் (Correlate) பார்த்து எண்ணிப்பார்ப்பதுண்டு.
பாடலில் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும் அதுவும் இன்றே கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வலியுறுத்துகிறார்.   ஏன் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும்? ஒலிப் பிழை, சொற்பிழை, எழுத்துப் பிழை இம்மூன்றும் பொருட் பிழைக்கு வழிவகுக்கும் பொருள் புரியாமல் படித்தால் தெளிவு பிறக்குமா? கற்றதானால் ஆய பயன் விளையுமா? சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவாரே உய்தி அடைவார்!
அடுத்துக்  "கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?" "சாகப் போறபோது சங்கரா சங்கரா என்றால் என்ன பயன்?" "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்றெல்லாம் கூறுவார்கள். எதனையும் உரிய காலத்தில் செயலாற்றினாலே தகுந்த பயன் விளையும்.
"ஒன்றே செய்; நன்றே செய்; இன்றே செய் என்கிறது தமிழ். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். "பருவத்தே பயிர் செய்" என்பதும் ஆன்றோர் வாக்கு.

          அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
          பொன்றுங்கால் பொன்றாத் துணை
        (குறள் எண்:36)
பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தினை உடனடியாகச் செய்யவேண்டும் என்கிறது வள்ளுவம். நாளை, நாளையென்றால் நாளை நம்முடையதா அல்லது நமனுடையதா என்று தெரியாத வாழ்வு இது.  எனவே கற்கவேண்டியதை உரிய காலத்தில் கற்க வேண்டும். 
முருகன் ஞானம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, மன நிம்மதி, இக பர சௌபாக்கியம் ஆகியவற்றின் குறியீடு என்பார்கள். எனவே
எழுத்துப் பிழையின்றிக் கற்பதும் உரிய காலத்தில் கற்பதும் அளவில்லா ஞானத்தையும் செல்வத்தையும் அனைத்தையும் அடைகிற வழி!






No comments:

Post a Comment