Thursday, January 14, 2021

எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல

 
-- ருத்ரா இ.பரமசிவன்

            எல் உமிழ்  இரும்பொறை  அம்பொறி கனல
            கடுங்கண் காட்டும் முள்படர் இலவ‌ம்
            அவிழ் இலை செறிந்த அழற்பெருங்கானம்
            எரியூர் தோற்றியும் ஓவா நடையின்
            மீமிசை ஊக்கி செல்வம் நசைஇ
            ஆறு படுத்த நெடும்பணைத்தோள!
            இவண் ஓர் இறைநெகிழ்ந்த வளையள் ஆங்கு
            கொல் அலரி படுத்த கொடுநோய் வீழ்ந்த
            நிலைகண்டு அன்னை எவன் ஆங்கு
            "ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை"
            ஓரை ஆடி ஒள் மணல் தெள்ளினை
            எனவாங்கு
            பொய்ச்சொல் பெண்டிர் முருகு வெறியாடல்
            நின் நோய் ஆற்றும் கண்டிசின் தெளினே
            என்று ஊக்கிய அன்னைக்கு சொல்லும்:
            அவன் மின்னல் அகலம் யான் தோயும் காலை
            முருகன் என்னை அவன் அய்யன் என்னை
            நத்தம் இல்லா அத்தமும் ஏகுவன்
            அவனை ஓர்ந்து யான் சேரும் மாட்டே.

__

தலைவன் பொருள் தேடி கொடிய பாலையின் காட்டுவழியில் செல்ல தலைவியோ பிரிவுத்துயரில் மிகவும் வாடுகிறாள்.  இதைக்கண்ட அன்னை அவளுக்கு முருகன் வெறியாடல் என்னும் "சாமியாட்டம்" ஏற்பாடு செய்ய தலைவியோ முருகன் வந்தாலும் சரி அவன் அப்பனே வந்தாலும் சரி நான் என் தலைவன் வழி தான் ஏகுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை தோழி தலைவனுக்குச் சொல்வது போல் அமைந்துள்ளது இப்பாடல்.

அகநானூற்றுப் பாடல் (எண் 60) குடவாயிற்கீரத்தனார் எனும் புகழ்மிக்க புலவரால் பாடப்பட்டது.
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை" என்ற வரியை அப்பாடலில் எழுதியுள்ளார்.ஆழம் செறிந்த சொல்லழகு மிக்கது இவ்வரி. கடற்கரையை அடுத்த நீர்ப்பரப்பில் எழும் வாடைக்காற்று வேகமாக வீசி கரையில் மணல் மேடுகளை உருவாக்குகிறது என்று இங்கே பொருள்படும். இதில் ஓரை என்பது கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாய் பெண்கள் வண்டல் மண்ணில் பாவை செய்து விளையாடுவதைக்குறிக்கும். தலைவி இப்படியெல்லம் விளையாடியதால் தான் இந்த நோய் வந்ததோ என்று அந்த வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள் அன்னை .தலைவியோ காதலனின் முன் எந்தக்கடவுளும் பொருட்டு இல்லை என்பதாய் காதல் பற்றி உறுதியாக இருக்கிறாள்.

இந்த சங்கத்தமிழ்க்காட்சியையே நான் சங்கத்தமிழ் நடைச்செய்யுட் கவிதை ஆக்கி இங்கு எழுதியுள்ளேன்.

No comments:

Post a Comment