Friday, July 10, 2020

சிறு புன் மாலை

சிறு புன் மாலை

-- முனைவர். ப.பாண்டியராஜா


            சங்கப் புலவர்கள் சிலவேளைகளில் மாலை நேரத்தைக் குறிக்கும்போது ‘சிறு புன் மாலை’ என்கிறார்கள். அதென்ன சிறு புன் மாலை? மாலை எப்படிச் சிறியது ஆகும்? புன் மாலை புரிகிறது. புல்லிய மாலை, அதாவது பொலிவிழந்த மாலை. பளீரென்று விடிகிற காலைப்பொழுதில் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்குவர். ஆனால் நாளெல்லாம் வெளியில் உழைத்து வீடுதிரும்பும் வேலையாட்கள் மாலையில் களைத்துச் சோர்ந்து வீடு திரும்புவர். பகலெல்லாம் இரைதேடித் திரிந்த பறவைகள் மாலையில் தத்தம் கூடுகளைத் தேடிப் பறந்து செல்லும். மேயப்போன மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ப்பர்கள் களைப்புடன் வீடு திரும்பும் நேரம் மாலை.
            வெளியூர் சென்றிருக்கும் தலைவன் வீடு திரும்ப மாட்டானா என்று கவலையுடன் வீட்டில் தலைவி காத்திருக்கும் புல்லிய மாலை. போதாக்குறைக்கு அந்நேரத்தில் மழைவேறு பெய்தால்? ’பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை’ என்கிறது முல்லைப்பாட்டு(6). ஒரே அடியில் தொடக்கத்தில் ’பெரும்’, என்றும் இறுதியில் ‘சிறு’ என்றும் புலவர் கொடுத்திருக்கிற முரண்தொடையின் அழகை ரசித்துப் பார்க்கலாமேயொழிய, அதென்ன ‘சிறு’ புன் மாலை? அந்தச் ‘சிறு’ எதற்கு?

            சங்க மரபுப்படி, மாலை என்ற சிறுபொழுது இன்றைய மாலை 6 மணி முதல் 10 வரையில் உள்ள பொழுது ஆகும்.  இந்த மாலையைத்தான் சில நேரங்களில் ‘சிறு புன் மாலை என்கிறார்கள் சங்கப் புலவர்கள். இந்தச் ’சிறு புன் மாலை’ என்ற தொடர் சங்க இலக்கியத்தில் நான்குமுறை வருகிறது.

                        பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை - முல் 6
                        பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை - நற் 54/5
                        சிறு புன் மாலை உண்மை - குறு 352/5
                        சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என - அகம் 114/6

            முல்லைப்பாட்டில் இத்தொடருக்கு, ’சிறுபொழுதாகிய வருத்தம் செய்கிற மாலை’ என்று பொருள்கொள்கிறார் நச்சினார்க்கினியர். உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் இந்தத் தொடருக்கு இதே பொருள்கொள்கிறார். அடுத்து நற்றிணையில், ‘பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை என்ற அடியில் வரும் இத்தொடருக்குப் பின்னத்தூரார் ‘சிறிய புல்லிய மாலைப் பொழுதானது’ என்று பொருள் கூறுகிறார். இதே அடிக்கு உரையாசிரியர் ஔவை சு.து.அவர்கள் ‘சிறிது போதில் கழியும் புல்லிய மாலை’ என்று பொருள் கொள்கிறார். அடுத்து, குறுந்தொகையில் வரும் சிறு புன் மாலை என்ற தொடருக்கு, ’சிறிய புல்லிய மாலை’ என்றே உரையாசிரியர்கள் உ.வே.சா. அவர்களும், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் பொருள் கொள்கிறார்கள். அடுத்து அகநானூற்றுப் பாடலில் வரும் ’சிறு புன் மாலை’ என்ற தொடருக்கு, சிறுமையுடைய புல்லிய மாலை என்று, பொ.வே.சோ. அவர்களும், சிறிய புல்லிய மாலை என்று நாட்டார் அவர்களும் பொருள்கொள்கிறார்கள். ஆக பொ.வே.சோ அவர்கள், முல்லைப்பாட்டிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும் வரும் இந்தத் தொடருக்கு, சிறுபொழுதாகிய, சிறிய, சிறுமையுடைய என்று மூன்றுவிதமான பொருள்களைக் கொண்டிருக்கிறார்.

            இப்பொழுது இத் தொடர் பாடலில் வருகின்ற இடங்களைப் பார்ப்போம்.

            முல்லைப்பாட்டில், இத்தொடர், மேயப்போன தம் தாய்ப்பசுக்கள் வீடு திரும்புவதை எதிர்நோக்கி வீட்டில் ஆவலுடன் கன்றுக்குட்டிகள் காத்துக் கொண்டிருக்கும் நேரமான மாலைப்பொழுதைக் குறிக்கப்பயன்படுகிறது. பொதுவாக மேயப்போன பசுக்கள் பொழுதுசாயும் நேரத்தில் வீடு திரும்பும். ஏறக்குறைய இன்றைய நேரப்படி மாலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் அவை திரும்பிவிடும்.

            நற்றிணையில், பறவைகள் இரையருந்தி வீடுதிரும்பும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிப்பிடுகிறார்.
            குறுந்தொகையில், பகலெல்லாம் மரத்தில் தங்கியிருந்துவிட்டு, இருட்டப்போகும் நேரத்தில் வௌவால்கள் வெளியே இரைதேடப் போகும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிக்கிறார்.
            அகநானூற்றில் இந்நேரம் இன்னும் மிகத்தெளிவாகக் குறிக்கப்படுகிறது.

                        உரவுக்கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
                        அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
                        சிறு புன் மாலையும் - அகம் 114/4-6
            ஆக, சூரியன் மறைகின்ற, மறைந்து சிறிதளவு நேரமே ஆன மாலைப்பொழுதே சிறு மாலை எனப்படுகிறது.  அதாவது, இன்றைய நேரப்படி மாலை 6 முதல் 6 1/2 வரையுள்ள நேரம் எனக் கொள்ளலாம்.
            இதனை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இதற்கு இணையான ஆங்கில வழக்கைப் பார்க்கலாம். ஆங்கில முறைப்படி, நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் அந்நேரத்தை a.m என்றே குறிப்பிடுவர். நள்ளிரவு தாண்டி 5 நிமிடங்களை 00.05 a.m என்றே குறிப்பிடுவர். இதனை ஆங்கிலத்தில் the small hours in the morning என்று குறிப்பிடுவர். அதாவது சிறு காலைப் பொழுது!! அப்படியெனில் சிறு மாலை என்று சங்கப் புலவர்கள் குறிப்பது the small hours of the evening.

No comments:

Post a Comment