Monday, November 4, 2019

எங்கள் கனவு

—  வித்யாசாகர்


எங்கள் கனவுகளுக்குச் சிறகுகள் முளைப்பதில்லை
வானில் பறப்பவையோ
வண்ணங்களால் ஆனதுவோ
இல்லையெங்கள் கனவுகள்;

உறக்கத்தில் வருவதோ
வண்ணந் தீட்டிய அழகோகூட இல்லையெங்கள்
கனவிற்கு, எங்களின் கனவுகளெல்லாம்
நிர்வாணம் இழக்காதவை;
 
நினைவில் ததும்பும் எண்ணக் குழந்தைகள்
போலே; எண்ணியதை எண்ணியாங்கு
செய்யவிழையும் சிந்தனையின் சிலிர்ப்புகள்
அருஞ்செயல்களின் முதலெழுத்துகள் அவை;

எளியோர்க்குத் திறக்காத கதவும், எதிர்வீட்டில்
மூடாத கூரையும், இன்னும்
கிழிசல் மூட்டாத கால்சட்டையையும் மாற்றும்
கனமான கனவுகள் அவை;

ஒரு செங்கோல் கேட்டு அதை அறத்தொடு
போற்றும் கனவும், பசுந்தோட்கள் அன்றி
பணிவிடைச்செய்யும் அரசுமாய் நாடிய
வாழ்வியல் கனவு அது;

பெண் ஆண் ஏற்றயிறக்கமின்றி, பாசமிகு உறவும்
பழி வீண் வஞ்சமெழாது மக்கள்
பண்பிலும் அன்பிலும் நெருங்கி இரத்தக்கோடுகள் அழித்து
ஒரு கூட்டிற்குள் அடங்கும் உயரிய கனவு அது;

இரவில் நம்பிக்கையை உடுத்திக்கொண்டு
பகலில் சாதிகளை சோற்றுக் கல்லென அகற்றி
மனிதத்துள் மறுநாட்களைத் தரிசிக்கும்
எளியோரின் 'இன்பக் கனவு' எங்கள் கனவு;

உலகை ஒரு சிறு புள்ளியெனவும்
மனதிற்குள் இவ்வுலக நேயர்களைத் தேடும்
அறிவோடும், பிறப்பை அறங்கொண்டு சலிக்கும்
புனிதர்களின் கனவு எங்கள் கனவு;

பணத்தால் உறவு கிழிவதையும்
பொருட்களால் மட்டுமே ஆன உலகை
அன்பிட்டுத் தைக்கவும், ஒரு ஊசி வேண்டும் என்றனர்
பலநாள் கனவு கண்டோர்;

ஊசி என்னவோ
வள்ளுவத்துள் விழுந்துகிடக்கிறது
வாருங்கள், ஊசியை எடுக்க வள்ளுவத்தைப் படிப்போம்
வள்ளுவத்தின் வழியே தமிழமுது குடிப்போம்;

தமிழமுதின் தனிச்சுவையில் இனி
அறத்தின் கதவுகள் அதவாகத் திறந்துகொள்ளும்,
எங்களின் கனவுகளுக்கும் இனி
சிறகுகள் முளைக்கும்; வண்ணங்கள் தீட்டப்படும்!!






தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)






No comments:

Post a Comment