Thursday, August 13, 2015

களப்பிரர் கால ஸ்ரீசிகாரி பல்லவேசுவரம் - மேலச்சேரி

பிரம்மாண்ட பாறைக்கு அடியில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது சிகாரி பல்லவேசுவரம் எனப்படும் மத்திளேசுவரர்க் கோயில்.



மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் கருவறை என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது இக்கோயில்.  அர்த்த மண்டபத்தில் இருந்து கருங்கற் குடைவரைத் தொடங்குகிறது.

4.9 அடி உயரம், 7அடி சுற்றளவில் எண் கோணத்திலான (எட்டுப் பட்டை) ஆவுடையார்மேல் பிரம்மாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பீடமும் லிங்கமும் அதே (தாய்ப்) பாறையில் அமைக்கப்பட்ட உருவங்கள் ஆகும். கூரையில் தாமரை காட்டப்பட்டுள்ளது.



“கருவறையில் தாய்ப் பாறையிலான இலிங்கத் திருமேனியும் கூரையில் தாமரையும் அமைந்திருப்பது தமிழ்நாட்டிலேயே சிகாரி பல்லவேசுவரத்திலும் (மேலச்சேரி) சித்தன்ன வாசலிலும்தான்” என்பர் ஆய்வாளர்கள் மு.நளினி, இரா.கலைக்கோவன்.    (நூல்: மகேந்திரர் குடைவரைகள்)

இக்கோயிலின் வடக்குப் பகுதி தூண் ஒன்றில் வடமொழிச் சாசனம் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.  இதனைத் தமிழப்படுத்தியுள்ள மயிலை சீனி.வேங்கடசாமி “சாசனத்தில் கூறப்பட்டுள்ள சந்திராதித்யன் என்பவன் பல்லவ குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசனாக  இருக்கக்கூடும். இக்கோயிலின் அமைப்பு முதலாம் மகேந்திர வர்மன் காலத்து அமைப்பை போன்றிருக்கிறது. இதனால் இக்கோயில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது” என தெரிவித்துள்ளார். (நூல்: மகேந்திர வர்மன்)

“மேலச்சேரி குடைவரை சிம்ம விஷ்ணு காலத்தில் களப்பிரரால் அமைக்கப்பட்டது” என்று தமது களப்பிரர் குடைவரைக் கோயில் எனும் கட்டுரையில் தெரிவிக்கிறார் நடன.காசிநாதன். (நூல்: வரலாற்றுத்  தடயம்)

கருவறைக்கு வெளியே அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகசாமி ஆகியோர் காட்சி தருகின்றனர். இச்சிற்பங்கள் 14,15ஆம் நூற்றாண்டு காலத்திய தாகும்.

கோயிலுக்கு வெளியே கிழக்குப் பார்த்து, கழுத்தில் முறுக்கிய மாலைகளுடன், கால்களை மடக்கிய நிலையில் சோழர் காலத்து நந்தி காணப்படுகிறது. அதன் மடக்கிய கால்களுக்கிடையே சிறிய வடிவிலான லிங்கம் இடம்பெற்றுள்ளது.  “இதுபோல் லிங்கமணைத்த சோழர் கால நந்தியை இதுநாள் வரை பார்த்ததில்லை” என்கின்றனர் ஆய்வாளர்கள் மு.நளினி, இரா.கலைக்கோவன்.



இக்கோயில் தற்போது ஸ்ரீபிரஹன்நாயகி உடனுறை மத்தளேசுவரர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

மிகவும் சிதைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீசிகாரி பல்லவேசுவரம் புனரமைப்புக்காக காத்திருக்கிறது.

மேலச்சேரியின் தெற்கில் வனப்பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபச்சையம்மன் ஆலயம். மூலவர் சொக்கநாதர்.


ஆலயத்தின் வெளியே முனிவர் எழுவரின் சிலைகள் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன. இக்கோயில் ஏராளமானோருக்கு குல தெய்வக் கோயிலாகும்.



மேலச்சேரி:
செஞ்சி – செவலப்புரை சாலையில் 5ஆவது கி.மீ.இல் இருக்கிறது.
Melacherry, Tamil Nadu 604202, India
Coordinates:
PiraganNayaki Temple: 12.288315, 79.395321
Pachaiamman Temple: 12.270637, 79.377868
Google Map: https://goo.gl/maps/2FDkv



 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment