Monday, June 28, 2021

இறக்கும் எனது மனசாட்சி

-- கி.ரமேஷ்

இறக்கும் எனது மனசாட்சி

அது கொஞ்சம் செத்துக் கொண்டிருக்கிறது:



இரவின் இருளில் சிலநேரம்
என் மனசாட்சியைத்
திரும்பிப் பார்க்கிறேன்
அதற்கு இன்னும் மூச்சிருக்கிறதா என்று.
ஏனெனில் தினமும்
அது மெதுவாய் செத்துக் கொண்டிருக்கிறது.

நவநாகரீகமான ஓரிடத்தில்
ஒருவேளை உணவுக்கு
நான் பணம் கொடுக்கையில்
அங்கு கதவு திறந்துவிடும்
காவலாளியின்
ஒரு மாத ஊதியமாக
அது இருக்கலாம்
அச்சிந்தனையை உடனே விலக்குகையில்

அது கொஞ்சம் சாகிறது.

காய்கறிக் கடையில்
காய்களை வாங்குகையில்
பள்ளி செல்ல வேண்டிய
கடைக்காரரின் பொடியன்
புன்சிரிப்புடன் நிறுத்துப் போடுகிறான்
நான் திரும்பிக் கொள்கிறேன்

அது கொஞ்சம் சாகிறது

வடிவமைத்த உடையை
நான் அணிகையில்
ஊதி வெடிக்கும்
அதன் விலை.
சாலைமுனை சந்திப்பில்
மானத்தை மறைக்கவும் முடியாமல்
கந்தலாடை அணிந்த 
பெண்ணைப் பார்க்கையில்
உடனே கண்ணாடியை ஏற்றி விடுகிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

என் குழந்தைகளுக்கு
விலையுயர்ந்த பரிசு
வாங்கித் திரும்புகையில்
வெற்று வயிறுடனும்
கண்களில் பசியுடனும்
அரைகுறை ஆடையணிந்து
சிகப்பு விளக்கு நிறுத்தத்தில்
சிறுவர்கள்
பொம்மை விற்பதைப் பார்க்கிறேன்
கொஞ்சம் பொம்மை வாங்கி
மனசாட்சியை
அமைதிப்படுத்த முயல்கிறேன்
எனினும்

அது கொஞ்சம் சாகிறது.

பள்ளி செல்ல வேண்டிய
மகளை நிறுத்தி
என் வேலைக்காரி 
வேலைக்கு அனுப்பும்போது
அவளைத் திருப்பி அனுப்ப வேண்டுமென
எனக்குத் தெரியும்
பாத்திரங்கள் நிறைந்து 
அசுத்தத் தட்டுக்களுடன்
கிடக்கும் தொட்டியைப்
பார்க்கையில்
சில நாட்கள்தானே என்று
சமாதானப்படுத்திக் கொள்கிறேன்

அது கொஞ்சம் சாகிறது

ஒரு குழந்தையின் வன்புணர்வு
அல்லது கொலையைக் கேட்கையில்
சோகமாகிப் போனாலும்
அது என் குழந்தையில்லையென
அமைதி கொள்கிறேன்
என் உருவைக் கண்ணாடியில்
பார்க்க முடியவில்லை.

அது கொஞ்சம் சாகிறது.

சாதி மத இன வேறுபாட்டில்
மக்கள் மோதிக் கொள்கையில்
காயப்பட்டுப் போகிறேன்
ஆதரவற்றுப் பார்க்கிறேன்
என் நாடு நாசமாகிறதென
எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்
ஊழல் அரசியல்வாதிகளை
குற்றம் சொல்கிறேன்.
என் பொறுப்புக்களிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

என் நகரம்
மூச்சுத் திணறும்போது
புகைமண்டிய நகரத்தில்
மூச்சுவிடுவதே ஆபத்தானபோது
நான் என் காரில்
தினம் பணிக்குச் செல்கிறேன்
ஒரு காரால் என்ன
மாறிவிடும் என
நினைத்துக் கொள்கிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

இரவின் இருளில்
என் மனசாட்சியைப்
பார்க்கும்போது
அது இன்னும் உயிருடன் இருக்கிறது
நான் ஆச்சரியமடைகிறேன்.
ஏனெனில் தினம் தினம் நான்
அதை என் கையாலேயே
கொன்று புதைக்கிறேன்.


ஆங்கிலத்தில்:  ரஷ்மி திரிவேதி 
தமிழில்: கி.ரமேஷ்






No comments:

Post a Comment