Thursday, October 8, 2020

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம்

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம் 

-- முனைவர் தி.சுரேஷ்சிவன்


கல்லினைக்  குடைந்து பல கலை வண்ணங்களைக் கண்டவர்கள் தமிழர்கள்.  கல்லினால் பல அரிய சிற்பங்களை, கோயில்களைக் கட்டிய பெருமையில் இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களுக்குப் பங்கு உள்ளது என்றாலும், தென்னிந்தியா கல் சிற்பங்கள், கல்தூண்கள், கட்டிடங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது. பாறை என்று குறிக்கப்படும் கல்லில் தமது மதிநுட்பத்தால் பல்வேறு கலைத்திறன் மிக்க சிற்பங்களை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். குறிப்பாக இசைத் தூண்கள் மிக அரியதாகக் கருதப்படுகிறது.

இசைத்தூண்கள்
பொதுவாக சிற்பிகள் மனதில் உதித்த சிந்தனையைச் சிற்பமாக ஆக்குபவர். உரிய பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பணிகளைச் செய்வது சிற்பிகளின் வேலைத்திறமைகளைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணமுடியும். இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் இரு அம்சமாகவும், அமைவதால் செய்வதற்கும், கேட்பதற்கும் மிக நுட்ப அறிவு இதற்குப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டை சேர்ந்த ஊர்களில் இசைத்தூண்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான இசைத்தூண்கள் ஒரே கல்லிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். பருமன் குறைவான தூண்கள் நான்கு, ஐந்து பருமன் அதிகம் உள்ள இரு தூணைச் சுற்றியுள்ளதாக இவை அமைக்கப்பட்டிருப்பதை நாம் இன்று காண முடியும். தென்னிந்தியாவில் பல்வேறு கோயில்களில் இசைத்தூண்களைக் கொண்ட நாட்டிய அரங்குகளும் உள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் கோயில், அழகர்கோயில், ஆழ்வார்திருநகரி, நெல்லையப்பர் கோயில், தாடிக்கொம்புசுசீந்தரம்ஹம்பி, ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் இன்றும் இசைத்தூண்கள் உள்ளன.

கோயில் கட்டடக்கலை மரபு: 
கட்டடக்கலையின் வாயிலாக இரு நாட்டின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் சிறப்பை அறியமுடியும். தமிழக கட்டடக்கலையில் சிறப்பிடம் பெறுவது திருக்கோயில் கட்டடங்களாகும். பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில் கட்டடக்கலையின் தூண்கள் என்பன தொன்மையான கலை வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கின்ற பகுதியாகும். திராவிடக்கலை எனப் பேசப்படும் தமிழகக் கோயில் தூண்களின் அமைப்பு தனித்துவம் உடையது எனக் கருதலாம். திராவிடக் கலையில் 16ம் நூற்றாண்டில் போற்றுதற்குரிய இரண்டு வளர்ச்சி நிலைகள் ஏற்பட்டன. இன்று வெளியமைப்பிலுள்ள கோபுரம் மற்றொன்று உட்பகுதியில் இடம் பெற்ற தூண்களாகும். தமிழகக் கட்டடக்கலை அமைப்பில் போற்றுதலுக்குரிய இருவகைத் தொழில்நுட்பம் தூண் நிர்மாணக் கலையாகும். இதன் அமைப்பும் கலைநுட்பமும் நாயக்கர்களுடைய காலத்தில் சிறப்பு பெற்றன. அத்தகைய கலைத்திறனுடைய படைப்பில் இன்று இசைத்தூண்களாகும்.

மரபில் தோன்றியவை: 
தமிழகத் தூண்களின் அலங்காரமும் வகைகளும் பொதுவாக மரபில் தோன்றியவையாகும். சங்க காலத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. தூண்களில் காணப்படும் சிற்பங்கள், நடனம், இசை, வாத்தியம், அலங்கார சிற்பம், தெய்வத் திருமேனி சிற்பம், ஆண், பெண் சிற்பமென அனைத்தும் பலதரப்பட்ட சைவ, வைணவ கோயில்களில் காண முடிகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல இடங்களில் இசைத் தூண்கள் உள்ளன. வடக்கு கோபுர வாசல் இறங்கிச் செல்லும் இரு புறங்களில் இசைத்தூண்களில் ஸரிகமப என்ற ஐந்து ஸ்வரங்கள் கேட்கும். கோயிலுக்குள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இசைத்தூண்கள் ஏழு ஸ்வரங்களையும் சொல்லும். சுவாமி சன்னதியில் கொடி மரம் உள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சிற்பத்தின் கீழே ஐந்து சிறிய தூண்கள் இசையைப் பேசுகின்றன. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தாயார் சன்னதியின் மண்டப முன்பகுதியில் இருபுறமும் இசைத்தூண்கள் ஸ ரி க ம என்ற நான்கு ஸ்வரங்களைச் சொல்லுகிறது. அழகர் கோவில் தூண்கள் இத்தகைய  இசையை எழுப்பக் கூடியன. நடுவில் இரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன.

48 இசைத்தூண்கள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னிதியில் உள்ள தூண்கள் மிக அருமையாக இசை எழுப்பக்கூடியன. நடுவில் பெரிய தூணும் அதைச் சுற்றிலும் 48 சிறிய இசைத்தூண்களைத் தட்டினால் இனிய இசையைக் கேட்க முடிகிறது. பாண்டியர் கால கோயிலான ஆழ்வார்திருநகரியில், இரண்டு வகையான இசைத்தூண்கள் உள்ளன. இன்று தட்டும் போது ஒலியெழுப்பக்கூடியது. (இசைத்தூண்களைத் தட்டுவதற்கு மரத்தில் ஆன உருண்டை வடிவ சுத்தி போன்ற அமைப்பில் உள்ள கருவி தேவை), மற்றொன்று, துளை இசைத்தூண்கள். மிக நுட்பமாகக் கையாள வேண்டியவை இரண்டு துளைகள் உள்ள இத்தூணில் வாய் வைத்து ஊதினால் இசை பிறக்கிறது.

திருவாரூரில் உள்ளது போல இங்கேயும் "கல் நாதசுரமும்" உள்ளது. அபூர்வமான வேலைப்பாடுகள்நிறைந்த ஆழ்வார்திருநகரியைப் போலவே சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் இசைத் தூண்கள் காணக்கிடைக்கின்றன. குணசேகர மண்டபத்தில் வடக்கு பக்கம் 24 சிறிய தூண்களும், தெற்கு பக்கத்தில் 33 சிறிய இசைத்தூண்களும் உள்ளன.

இளைய தலைமுறைக்கு நாம் நேரில் சென்று பார்த்து உணர்ந்து இது போன்ற கலை வடிவங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் சிறிய சுற்றுலா ஏற்பாடு செய்து இசைத்தூண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தலங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது முக்கிய அங்கமாகவே இருந்தது. தற்போது குறைந்து விட்டது. திருக்கோயில் தல யாத்திரை சென்றால் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாகச் சிற்பம், ஓவியம், இசை பற்றிய அறிவு கிடைக்கும்.

கும்பகோணம் தாராசுரம் கோயில் இரு சிற்ப கலைக்களஞ்சியமாக உள்ள இடம். கோயிலின் நுழைவு வாசலில் சிறு மண்டபம் போன்ற வடிவத்தில் இசை படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஒலி  எழுப்பினால் சங்கராபரணம் எனும் ராகத்தின் ஸ்வர ஸ்தானங்கள் பேசுகின்றன. சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹம்பி என்ற ஊர் கர்நாடகாவில் உள்ளது. முழுவதும் செந்நிற பாறைகள் நிறைந்த இவ்விடத்தில் விட்டல கோயில் ரங்க மண்டபத்தில் 56 தூண்களில் இசை பிறக்கிறது. இப்படி தென்னிந்தியா முழுவதும் சிற்பக்கலைக்கும் கட்டிடக் கலைக்கும் எடுத்துக் காட்டாய் திகழ்கின்றது. மனம் பண்பட கலைகளே உறுதுணை. கண் வழி சிற்பங்களைக் கண்டு ரசித்து செவி வழி இசையைக் கேட்கும் நம் தமிழ் மண்ணின் மரபுகளைப் பாதுகாப்போம்.


முனைவர் தி.சுரேஷ்சிவன்,  செம்மொழி இசைத்தமிழ் அறிஞர். 

நன்றி - தினமலர் 

No comments:

Post a Comment