Friday, January 26, 2018

விவேகானந்தர்: புத்தர் ஓர் உன்னத மனிதர்


——   சி.  ஜெயபாரதன்




    உலகத்திலே உன்னத மனிதராக நான் மதிப்பவர் இருவர் : கௌதம புத்தர், ஏசு கிறிஸ்து. ஏசு நாதரின் மலை உபதேசத்தையும், கீதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை எத்தகைய எளிமையாக உள்ளன ! தெருவில் நடக்கும் சாதாரண மனிதருக்கும் அவை புரிகின்றன !   எத்தகைய மகத்தான படைப்புகள் அவை ! அவற்றில் மெய்ப்பாடுகள் தெளிவாக, எளிதாகக் கூறப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

    புத்தர் மேன்மையான மெய்ப்பாடுகளை உபதேசித்தார். வேத நெறிகளை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் போதித்தார். உலக மாந்தருக்கு அவற்றை எடுத்துக் கூறினார். அவரது உன்னத போதனை நெறிகளில் ஒன்று மனித சமத்துவம் ! மனிதர் சம மதிப்புள்ளவர். அந்த கருத்தில் எவருக்கும் தனிச்சலுகை இல்லை. புத்தரே சமத்துவத்தைப் போதித்த ஓர் மகத்துவக் குரு ! ஒவ்வொரு மனிதருக்கும், மாதருக்கும் ஆன்மீக உன்னதம் அடைவதில் ஒரே தர உரிமை உள்ளது. அதுதான் புத்தரின் போதனை. குருமாருக்கும், பிற மானிடருக்கும் இருந்த வேற்றுமை புத்தரால் நீக்கப்பட்டது.


    புத்தரின் வாழ்க்கை ஒரு மகத்தான கவர்ச்சி கொண்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் புத்தரைப் போற்றி வந்தேன். யார் மீதும் இல்லாத ஒரு தனி மதிப்பு அவர் மீது எனக்கிருந்தது : அவருக்கிருந்த அந்த மன உறுதி, அந்த அச்சமற்ற தன்மை, அந்த அளவில்லா அன்பு . . . (என்னைக் கவர்ந்தது.)

    ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்தவர். அப்போது வாழ்ந்த இந்திய மக்கள் உயர்ந்த கல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும். ஆழ்ந்த விடுதலை மனத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். பெருவாரியான மக்கள் புத்தரைப் பின்பற்றினர். அரசர்கள் தமது அரச பீடத்தை விட்டகன்றனர் ! நாட்டு அரசிகள் தம் அரசாங்கத்தை விட்டுச் சென்றார். பல யுகங்களாக மதக் குருமார்கள் போதித்த நெறிமுறைகளுக்கு மாறாகப் புரட்சிகரமாக இருந்த புத்தர் உரைமொழிகளைப் பின்பற்றினர். ஆதலால் மக்களின் மனது அக்காலத்தில் சுதந்திரமாக விரிந்திருக்க வேண்டும்.

    புத்தர் மானிட நன்னெறி படைப்புக்காகப் பிறந்தவர். எப்படி மக்களுக்கு உதவுவது என்பது மட்டுமே புத்தரின் சிந்தனையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் தனக்கென அவர் எதுவும் கருதியது கிடையாது. அவரது உன்னத மூளையைப் பற்றிச் சிந்திப்பீர். எதிலும் உணர்ச்சி வசப்படுவது அவரது வழிமுறையன்று. அவரது பூதகரமான மூளையில் மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்கள் எவையும் கிடையா.

    புத்தர் வாழ்ந்த போதும் உன்னதமாய் இருந்தார். இறந்த பிறகும் உன்னதமாய் ஒளிர்ந்தார். தான் இறக்கும் போது தனக்காக அவர் எந்த மதிப்புச் சின்னத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வில்லை ! புத்தரை அதனால் நான் போற்றி வழிபடுகிறேன்.

    குருவுக்குச் சீடராக இருப்பது எளியதன்று. அதற்கு அநேகச் சுயத் தயாரிப்புகள் அவசியம். பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். உலகளாவிய சகோதரத்துவ உணர்ச்சி மட்டுமில்லாது, உலகளாவிய ஒற்றுமைக்கு நம் வேத நெறிகள் விளக்கம் அளிக்கின்றன. உலக வரலாறு என்பது புத்தரின் சரிதையும், ஏசுவின் சரிதையும் கொண்டிருக்க வேண்டும்.

    வயதாக வயதாக எனக்கு ஒவ்வொன்றும் மனித உறுதியில்தான் அடங்குகிறது என்று தெரிகிறது. என்னுடைய புதிய உபதேசம் இதுதான்.

    புத்தரின் பணியாட்களின் பணியாட்களுக்கு நானொரு பணியாள் ! புத்தரைப் போலோர் தனக்கென வாழா ஓர் உத்தமரை நான் இதுவரைக் கண்டதில்லை.அவரது உன்னத சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் பரவிச் சென்றன. இரக்கக் குணம் மிக்க இளவரசராகவும், துறவியாகவும் வாழ்ந்து ஓர் ஆட்டின் உயிரைக் காக்கத் தன்னுயிரை அளிக்கவும் தயாராக இருந்தவர்.

    உன்னத ஆன்மீக மெய்ப்பாடுகளை உபதேசிக்க ஒருவர் மிக்க இளைய வயதிலே துவங்கக் கூடாது ! கீதையையும், மற்ற வேதாந்தத்தில் உள்ள உன்னத படைப்புகளையும் படிக்க வேண்டும்.

    புத்தரிடம் உலக நாடுகள் போற்றும் உன்னத இதயம் இருந்தது. மதத்தை ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டுவந்து அதனை மனித நடைமுறைக்கு அமைத்த எல்லையற்ற பொறுமை அவரிடம் இருந்தது. . . . . ஞானச் சூரியன் புத்தர் இதயத்தோடு சேர்ந்து வரையறை யில்லா அன்பும் பரிவும் மேலோங்குவது இன்றைய உலகில் நமக்குத் தேவை. அத்தகைய சேர்க்கை நமக்கு உன்னத வேதாந்த சிந்தனை அளிக்க வல்லது. . . . . விஞ்ஞானமும், மதமும் சந்தித்துக் கைகுலுக்க வேண்டும்.

-----கர்மயோகி விவேகானந்தா (1863-1902)


பெர்னார்ட் ஷாவின் தமிழாக்கம்,  "உன்னத மனிதன்" நாடக நூலில்  சி.  ஜெயபாரதன்









________________________________________________________________________
தொடர்பு: சி.  ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)











No comments:

Post a Comment